இளநிலை வகுப்பு (JUNIOR)
வயது: 10 - 11 வயது
வகுப்பு: V &
VI
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for
free distribution among Sunday School children.
No part of this document can be
modified, sold or used for any commercial purpose.
பாடம் –17
சாலொமோன் ராஜா கட்டின தேவாலயம்
நாம் இதற்கு முந்தின பாடங்களில், தேவனுடைய மனிதனாகிய மோசே, இஸ்ரவேல் மக்கள் தேவனை ஆராதிப்பதற்காக ஏற்படுத்தின ஆசரிப்புக் கூடாரத்தைப்பற்றி படித்தோம். ஆசரிப்புக் கூடாரத்திற்குள்ளே உடன்படிக்கைப் பெட்டி என்ற ஒரு விசேஷமான பெட்டி இருந்தது. ஆசரிப்புக் கூடாரம் சீலோ என்ற இடத்திலே நிறுவப்பட்டிருந்தது (யோசுவா 18:1). இங்கு இஸ்ரவேலர்கள் சென்று தேவனைத் தொழுது கொண்டு வந்தனர். (ஆசரிப்புக் கூடாரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த லின்க்கை கிளிக் செய்யவும்)
இஸ்ரவேல் மக்களை ஏலி என்ற நியாயாதிபதி விசாரித்து வந்த காலத்தில்
பெலிஸ்தருக்கு எதிராக ஒரு யுத்தம் உண்டானது. உடன்படிக்கைப்பெட்டியை
யுத்தகளத்திற்கு எடுத்துச் சென்றால் யுத்தத்தில் வென்றுவிடுவோம் என்று நம்பின ஏலியின்
மகன்கள் அதை எடுத்துச் சென்றனர். ஆனால் உடன்படிக்கைப் பெட்டியை பெலிஸ்தர்களால் பிடிக்கப்பட்டு
அவர்களுடைய தேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனால் அங்கு கொடூரவியாதி ஒன்று
பரவினது. பெலிஸ்தர்கள் பயந்து உடன்படிக்கைப் பெட்டியை உடனே இஸ்ரவேல் தேசத்திற்கு
திருப்பி அனுப்பினார்கள். அப்பொழுது உடன்படிக்கைப் பெட்டி சீலோவிற்கு எடுத்துச்
செல்லப்படாமல் கீரியாத்-யெயாரீம் என்ற இடத்திலிருந்த அபினதாப் என்பவருடைய
வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
தாவீது ராஜா உடன்படிக்கைப்பெட்டியைத் திரும்ப எருசலேமிற்கு
கொண்டுவருவதற்கு முன்பாக சுமார் நூறு வருடங்கள் உடன்படிக்கைப் பெட்டி அபினதாபின்
வீட்டிலேயே இருந்தது. உடன்படிக்கைப் பெட்டி எருசலேமிற்கு திரும்ப கொண்டுவரப்பட்ட
போது, தாவீது ராஜா அதற்காக விசேஷமாக ஏற்படுத்தியிருந்த கூடாரத்திலே வைக்கப்பட்டது.
தாவீது ராஜா ஆண்டவரிடம் மிகவும் அன்பு செலுத்தினார். அதனால் உடன்படிக்கைப்
பெட்டியை வைப்பதற்காக மிகவும் அழகான ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று
விரும்பினார். ஆனால் ஆண்டவரோ தாவீது ராஜா தனக்கு ஆலயத்தைக் கட்டமாட்டார் என்றும்
அவருடைய மகனாகிய சாலொமோனே அதைக் கட்டுவார் என்றும் கூறினார்.
ஆனால் தேவனுக்கு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று தாவீது
ராஜாவிற்கு இருந்த மனவிருப்பம் ஆண்டவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதனால் அந்த
ஆலயத்தை எவ்விதம் கட்ட வேண்டும் என்ற திட்டத்தை தாவீது ராஜாவுக்கு காண்பித்துக்
கொடுத்தார் (1 நாளாகமம் 28:19). தாவீதுராஜா தேவாலயத்தைக் கட்டுவதற்காக பொன்னையும்,
வெள்ளியையும், விலையேறப்பெற்ற கற்களையும் சேகரிக்கத் தொடங்கினார்.
தாவீது ராஜாவிற்கு வயதானபொழுது அவருடைய மகனாகிய சாலொமோன்
இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டார். (சாலொமோன் ராஜாவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த லின்க்கை கிளிக் செய்யவும்) தாவீது ராஜா அவருடைய மகனாகிய
சாலொமோனை அழைத்து ராஜாங்க முறைகளை சொல்லிக் கொடுத்ததுமல்லாமல் தேவாலயத்தைக் கட்டும் பொறுப்பையும் அவரிடம்
ஒப்புவித்தார். தேவன் தனக்குக் கொடுத்த தேவாலயத்தின் திட்டத்தையும், தான்
தேவாலயத்திற்கென்று சேகரித்து வைத்திருந்த வெள்ளி, பொன் மற்றும் விலையேறப்பெற்ற
கற்களையும் சாலொமோனிடம் கொடுத்தார். மோரியா மலையில் தேவாலயம் கட்ட வேண்டும் என்று
தீர்மானித்திருந்த, தான் வாங்கின இடத்தையும் காட்டிக் கொடுத்தார்.
சாலொமோன் ராஜா தான் இஸ்ரவேலின் ராஜாவான நான்காம் வருஷம்
தேவாலயத்தைக் கட்ட தொடங்கினார். அந்த வருடம் இஸ்ரவேலர்கள் எகிப்தின்
அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட நானூற்றுஎண்பது வருடம் ஆகும் (1 இராஜாக்கள் 6:1).
சாலொமோன் ராஜா தேவாலயத்தை சீவ் மாதம் என்கிற இரண்டாம் மாதத்திலே கட்ட ஆரம்பித்தார்.
தேவாலயத்தைக் கட்டுவதற்கு பயன்படுத்தின கற்கள் அருகிலிருந்த
ஓரு குவாரியிலிருந்து கொண்டு வரப்பட்டது. இந்த கற்கள் எடுக்கப்பட்ட இடத்தில்
வைத்தே வெட்டி, ஒன்றோடொன்று பொருந்துமாறு செதுக்கிக் கொண்டு வரப்பட்டது. இதனால்
தேவாலயம் கட்டப்பட்ட இடத்தில் சுத்திகள், மற்றும் வேறெந்த இரும்பு ஆயுதங்களின்
சத்தமும் கேட்கப்படவில்லை.
சாலொமோன் ராஜாவிற்கு தேவாலயத்தைக் கட்டுவதற்கு மரங்களும் தேவைப்பட்டது. அவர் தேவாலயத்தைக் கட்டுவதற்கு லீபனோன் (லெபனான்) தேசத்திலிருந்து கொண்டுவந்த கேதுருமரங்களையே பயன்படுத்தினார். இந்த மரங்கள் நல்ல பலம் வாய்ந்தவை மட்டுமல்ல, அதிக காலம் நிலைக்கக்கூடியவை. தீரு என்ற பட்டணத்தில் இவை அதிக அளவில் காணப்பட்டன. தீரு பட்டணத்தின் ராஜாவான ஈராம் தாவீது ராஜாவின் நண்பர். அதனால் தேவாலயத்திற்கு தேவைப்பட்ட எல்லா கேதுரு மரங்களையும் சாலொமோன் ராஜா ஈராமிடமிருந்து வாங்கினார். இதற்கு கிரயமாக கோதுமையையும், வாற்கோதுமையையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும் கொடுத்தார்.
சாலொமோன் ராஜா இந்த வேலைகளை செய்வதற்காக 1,50,000 பேருக்கும் அதிகமான
ஆட்களை நியமித்தார். ஈராம் ராஜாவின் ஆட்களும்
கேதுருமரங்களை வெட்டி அவற்றைத் தெப்பங்களாகக் கட்டி கடல் வழியாக யோப்பா மட்டும்
கொண்டு வந்தார்கள். பின்னர் அவைகள் எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டன. தேவாலயத்தின் உட்பகுதிகள் கேதுருமரங்களால் பொருத்தப்பட்டு
பசும்பொன்னினால் மூடப்பட்டன.
சாலொமோன் ராஜா கட்டின தேவாலயத்தின் அமைப்பு 11ஆம் பாடத்தில்
படித்த ஆசரிப்புக்கூடாரத்தின் அமைப்பிற்கு ஒத்திருந்தது. தேவாலயம் செவ்வக வடிவில்
இருந்தது. தேவாலயத்தைச் சுற்றிலும் அதில் பணிவிடை செய்த ஆசாரியர்கள் தங்கும்
அறைகள் இருந்தன. தேவாலயம் வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு
பகுதிகளிலும் வெவ்வேறு ஆராதனை முறைமைகள் நிறைவேற்றப்பட்டன. ஆலயத்தின் வெளிப்பகுதி
பிரகாரம் என்று அழைக்கப்பட்டது. வெளிப்பிரகாரம் பெரிய பிரகாரம் என்றும் உட்பகுதி
ஆசாரியரின் பிரகாரம் என்றும் அழைக்கப்பட்டது. ஆலயத்தின் உட்பகுதி பரிசுத்தஸ்தலம்
என்றும் மகாபரிசுத்தஸ்தலம் என்றும் பிரிக்கப்பட்டிருந்தது. சாலொமோன் ராஜா கட்டின
தேவாலத்தின் வெளிப்பகுதியாகிய பிரகாரம் ஆசரிப்புக்கூடாரத்தில் இருந்த
பிரகாரத்தைவிட சற்று வித்தியாசமாயிருந்தது. வேதபண்டிதர்கள் சாலொமோன் தேவாலயத்தின்
வெளிப்பகுதி ஒரு திறந்தவெளியாக இராமல் மண்டபவடிவில் இருந்ததாக கருதுகிறார்கள் (1).
வேதாகமத்தில் இது முகப்புமண்டபம் என்றே அழைக்கப்படுகின்றது (2 நாளாகமம் 3:4).
சாலொமோன் ராஜா கட்டின தேவாலயத்தின் பகுதிகள்
(1) பெரிய பிரகாரம் (வெளிப்பிரகாரம்) – இந்தப் பகுதியில் வருவதற்கு
எல்லாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்தப்பகுதி வரை மட்டுமே புறஜாதிகளும்
விருத்தசேதனமில்லாதவர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். (1 இராஜாக்கள் 6:3; 2
நாளாகமம் 3:4; 4:9; 29:7)
(2) ஆசாரியரின் பிரகாரம் / உட்பிரகாரம் – இதில் வெண்கல பலிபீடமும் (2
நாளாகமம் 4:1), வெண்கலக்கடல் என்று அழைக்கப்பட்ட ஒரு கடல்தொட்டியும், நாற்பது குடம் அளவிற்கு தண்ணீர்
பிடிக்கும் பத்து வெண்கலக் கொப்பரைகளும் (1 இராஜாக்கள் 7;38,39)
வைக்கப்பட்டிருந்தன. வெண்கலக்கடல் என்று அழைக்கப்பட்ட கடல்தொட்டி பன்னிரண்டு காளை
உருவங்களால் சுமக்கப்படுவதுபோன்று உருவாக்கப்பட்டிருந்தது. காளை உருவங்கள் வேதாகமத்தில்
ரிஷபங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது (1 இராஜாக்கள் 7:23-26).
(3) தேவாலயத்தின் மாளிகை / பெரிய மாளிகை /
பரிசுத்த ஸ்தலம் Holy Place – (1 இராஜாக்கள் 6:17; 2 நாளாகமம் 3:5). இதில் மூன்று
பரிசுத்தப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன (1 இராஜாக்கள் 7:48,49).
Ø பொன் விளக்குத்தண்டுகள் (குத்துவிளக்குகள்))
Ø சமுகத்தப்பங்களை வைக்கும் பொன்மேஜை
(இந்த மேஜையில்தான் சமுகத்தப்பங்கள் என்று அழைக்கப்பட்ட பரிசுத்த அப்பங்கள்
அடுக்கி வைக்கப்பட்டிருந்தன)
Ø பொன் தூபபீடம் (2 நாளாகமம் 4:19)
(4) சந்திதி ஸ்தானம் Inner Sanctuary (1 இராஜாக்கள் 6:23) / மகா
பரிசுத்தமான ஆலயம் (2 நாளாகமம் 3:8)- தேவாலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலம் Most Holy
Place சந்நிதி ஸ்தானம் என்றும் மகா பரிசுத்தமான ஆலயம் என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் தரை மற்றும் சுவர் பகுதிகளில் கற்கள்
காணப்படாதபடிக்கு, அவைகளின் மீது கேதுருமரப் பலகைகள் வைக்கப்பட்டு, பின்னர்
பசும்பொன் தகட்டால் மூடப்பட்டது (1 இராஜாக்கள் 6:18-20). தேவனுடைய உடன்படிக்கைப்
பெட்டி இங்கு வைக்கப்பட்டிருந்தது. ஒலிவமரத்தால்
செய்யப்பட்டு பொன்னால் மூடப்பட்ட இரண்டு கேருபீன்களும் இங்கு வைக்கப்பட்டிருந்தது (1
இராஜாக்கள் 6:23 – 28). இந்த பகுதிக்குள் பிரதான ஆசாரியன் மட்டுமே வருடத்திற்கு
ஒருமுறை உள்ளே நுழைய முடியும்.
மகா பரிசுத்தஸ்தலத்தை தேவாலயத்தின் மற்ற பகுதியிலிருந்து பிரிப்பதற்காக ஒரு திரை (Veil) தொங்கவிடப்பட்டிருந்தது. அது இளநீலநூல், இரத்தாம்பரநூல், சிவப்புநூல், மெல்லியநூலால் செய்யப்பட்டிருந்தது. இந்தத்திரையில் கேருபீன்களின் உருவங்கள் விசித்திர நூல்வேலையால் உருவாக்கப்பட்டிருந்தன (2 நாளாகமம் 3:14).
தேவாலயத்தின் முகப்புமண்டபத்தில் இரண்டு வெண்கலத்தூண்கள்
நிறுத்தப்பட்டிருந்தன. தூண்களின் மேல்முனை குமிழ்களைப் போன்ற கும்பங்களாக
இருந்தது. கும்பங்கள் லீலிபுஷ்பம் வடிவில் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு தூணிலும்
இரண்டு வரிசை பின்னல் வேலைகள் இருந்தன. அதில் மாதளம்பழங்களின் வடிவங்கள்
தொங்கவிடப்பட்டிருந்தன. இரண்டு
தூண்களிலும் மொத்தம் நானூறு மாதளம்பழங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. வலதுபுறத்தில்
நிறுத்தப்பட்ட தூணுக்கு யாகீன் என்றும், இடது புறத்தில் நிறுத்தப்பட்ட தூணுக்கு
போவாஸ் என்றும் சாலொமோன் ராஜா பெயரிட்டார் (1 இராஜாக்கள் 7:15-22; 2 நாளாகமம்
4:12,13). இந்த வெண்கல வேலைப்பாடுகள் அனைத்தும் ஈராம் என்னும் ஒருவரால்
செய்யப்பட்டது. தேவாலயத்தைக் கட்டுவதற்கு ஏழு ஆண்டுகள் எடுத்தது.
தேவாலயத்தை பிரதிஷ்டை செய்வதற்காக சாலொமோன் ராஜா ஒரு
பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்தார். இந்த விழாவின் போது தேவனுடைய உடன்படிக்கைப்
பெட்டி தாவீது ராஜா எருசலேமில் அதற்காக ஏற்படுத்தியிருந்த கூடாரத்திலிருந்து
எடுத்துக் கொண்டுவரப்பட்டு தேவாலயத்தின் மகாபரிசுத்த
ஸ்தலத்தில் வைக்கப்பட்டது. அப்பொழுது ஒரு மேகம் இறங்கி தேவாலயம் முழுவதையும்
மூடினது. அந்த மகிமையான மேகம் தேவாலயத்தை தேவன் அங்கீகரிப்பதைக் காட்டினது.
சாலொமோன் ராஜா இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்தார். பின்னர் ஒரு விசேஷித்த ஜெபத்தை
ஏறெடுத்தார். இவ்வாறு தேவாலயப் பிரதிஷ்டை ஏழு நாட்களும், அதன்பின்னர் ஏழு நாட்கள் பண்டிகையும்
கொண்டாடப்பட்டது.
சாலொமோன் ராஜா கட்டின தேவாலயத்தில் இஸ்ரவேல் மக்கள் பெருமிதம்
கொண்டார்கள். இந்த ஆலயத்தின் கட்டமைப்பும், அலங்காரங்களும் உலகெங்கும் பிரசித்திப்
பெற்றது. அதனால் எருசலேம் தேவாலயத்தில் தொழுது கொள்ளுவதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து
மக்கள் வந்து சென்றார்கள். இவ்வளவு சிறப்பாக கட்டப்பட்ட தேவாலயம் இரண்டு
நூற்றாண்டுகளுக்கு அப்புறம் பாபிலோனியர்களால் இடிக்கப்பட்டது. அதன் பின்னர் இரண்டு
முறை தேவாலயம் திரும்ப கட்டப்பட்டது. ஆனால் ஒவ்வொருமுறையும் அது இடிக்கப்பட்டது.
இப்பொழுது எருசலேம் தேவாலயம் கட்டப்பட்டிருந்த மோரியா மலையில் தேவாலயம் இல்லை.
தேவாலயத்தின் மேற்குச் சுவரின் ஒருபகுதி மட்டுமே இடிக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறது.
யூதர்களுக்கு மிகவும் புனிதமான இடங்களில் இதுவும் ஒன்று. அதில் யூதர்கள் சென்று
தங்கள் ஜெபங்களை ஏறெடுப்பதைக் காணமுடியும்.
ஆதாரநூற்களின்
பட்டியல்:
James Orr (Ed), Court of the Sanctuary;
Tabernacle; Temple. International Standard Bible Encyclopedia, Wm. B. Eerdmans
Publishing Co. (1939).
(மேலே கொடுக்கப்பட்டுள்ள
ஆதாரங்களிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது)
வேதப்பகுதி: 1
இராஜாக்கள் 5–8 அதிகாரங்கள்; 1 நாளாகமம் 28, 29 அதிகாரங்கள்; 2 நாளாகமம் 2–7 அதிகாரங்கள்
மனப்பாட வசனம்: கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன்,
அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய
ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய
ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். (சங்கீதம் 27:4)
பாடப் பயிற்சிகள்
கோடிட்ட இடத்தை நிரப்பவும்
1. ஈராம் ராஜாவின் ஆட்கள் கேதுருமரங்களை
வெட்டி அவற்றைத் தெப்பங்களாகக் கட்டி கடல் வழியாக ………………….. மட்டும் கொண்டு
வந்தார்கள்.
2. தேவாலயத்தின் உட்பகுதிகள்
கேதுருமரங்களால் பொருத்தப்பட்டு
……………………………… மூடப்பட்டன.
3. மகா பரிசுத்த ஸ்தலத்தில்
வைக்கப்பட்டிருந்த இரண்டு கேருபீன்களும் …………………… மரத்தால் செய்யப்பட்டு பொன்னால்
மூடப்பட்டிருந்தது.
4. உடன்படிக்கைப்பெட்டி தேவாலயத்தின்
………………………….. ஸ்தலத்தில் வைக்கப்பட்டது.
ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. தேவாலயம் கட்டப்பட்ட இடத்தில் சுத்திகள்
மற்றுன் வேறெந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் எதினால் கேட்கவில்லை?
2. தேவாலயத்தின் வேலைக்குத்
தேவையான மரங்கள் எருசலேமிற்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டது?
3. தேவாலயத்தின் திரைச்சீலை
எவ்வித நூற்களால் நெய்யப்பட்டு, எவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்தது?
4. ஆலயத்தின் முகப்பு மண்டபத்தில் இருந்த வெண்கலத்தூண்கள் எவ்வாறு
செய்யப்பட்டிருந்தன?
கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்
1. தேவாலயத்தின்
பரிசுத்தஸ்தலம், மகா பரிசுத்தஸ்தலத்தைப் பற்றி விவரிக்கவும்.
No comments:
Post a Comment