Sunday, April 24, 2022

தெபொராள் - நான் எழும்புமளவும்! (Deborah - Until I arose!),இடைநிலை வகுப்பு (Intermediate) , ஞாயிறு பள்ளி வேதபாடம் - 13

 இடைநிலை வகுப்பு (INTERMEDIATE) 

வயது: 12 - 13 வயது
வகுப்பு: VII & VIII

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.



Please click the link to visit the English Blog for Sunday School Lessons in English
For Sunday School activities and stories in English

தெபொராள் – நான் எழும்புமளவும்!

இதற்கு முந்தின பாடத்தில் இஸ்ரவேல் ஜனங்கள், கானான்

தேசத்திற்குள் நுழைந்தபின், அதை தங்களுடைய சொந்த தேசமாக மாற்றுவதற்கு முன்பாக, எவ்வாறு கானானிய பட்டணங்களை ஒவ்வொன்றாக பிடிக்க வேண்டியிருந்தது என்று பார்த்தோம். இஸ்ரவேல் ஜனங்கள் தாங்கள் பிடித்த பட்டணங்களில் வீடுகளைக் கட்டி, பயிரிட்டு, மிருக ஜீவன்களை வளர்த்தி, சுதந்திரமான மக்களாக வாழத் தொடங்கினார்கள். சில வருடங்கள் கழித்து, அவர்களை கானான் தேசத்திற்குள் வழிநடத்தின அவர்களுடைய தலைவனாகிய யோசுவா வயதாகி இறந்து போனார். அந்த நாட்களிலே இஸ்ரவேலரின் தலைவர்களை “நியாயாதிபதி” என்று அழைத்தார்கள்.

நியாயாதிபதிகள்

இஸ்ரவேல் தேசத்தில் யார் நியாயாதிபதியாய் வரவேண்டும் என்பதை தேவனே தீர்மானித்து, அதை ஜனங்களுக்கு வெளிப்படுத்துவார். மற்ற தேசங்களை ராஜாக்கள் ஆண்டது போல இஸ்ரவேல் தேசத்தை நியாயாதிபதிகள் ஆளுகை செய்தார்கள். இவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்குள் ஏற்படும் வழக்குகள், சண்டை, சச்சரவுகளை விசாரித்து தீர்ப்பு கொடுத்தார்கள். மேலும், எதிரிகள் இஸ்ரவேல் தேசத்தை எதிர்த்து படை எடுத்து வந்தால், எதிரிகளுக்கு எதிராக படையைத் திரட்டி, யுத்தத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பும் இவர்களைச் சார்ந்ததே ஆகும். இவர்கள் தேவன் பேசுவதைக் கேட்டு அதை தேசத்திலே செயல்படுத்தும் தீர்க்கதரிசிகளாகவும் இருந்தார்கள்.

இஸ்ரவேலரின் மீறுதலும் மீட்பும்

இஸ்ரவேலருடைய தலைவனாகிய யோசுவா இறந்து போனபின், இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை மறந்து, பாவம் செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் அவர்கள் அருகிலே இருந்த பிற தேசங்கள், இஸ்ரவேலரை துன்புறுத்தி, அவர்களை ஒடுக்கினார்கள். எப்பொழுதெல்லாம் இவ்வாறு சம்பவிக்கிறதோ அப்பொழுதெல்லாம் இஸ்ரவேலர் ஆண்டவரிடம் மனந்திரும்பி விண்ணப்பம் செய்வார்கள். ஆண்டவரும் அவர்களை விடுவிக்கும்படி ஒரு நியாயாதிபதியை எழும்பப்பண்ணுவார். யோசுவாவின் காலத்திற்குப் பின் தேவன் இவ்வாறு பல நியாயாதிபதிகளை எழுப்பியிருந்தார். இவர்களுடைய வரலாற்றை வேதாகமத்திலுள்ள நியாயாதிபதிகள் புஸ்தகத்திலே வாசிக்கலாம். இவ்வாறு தேவன் எழும்பப்பண்ணின நியாயாதிபதிகளில் ஒருவர் தான் ஏகூத். இவருடைய காலத்திற்கு பின் இஸ்ரவேல் ஜனங்கள் மறுபடியும் பாவஞ்செய்யத் தொடங்கினார்கள்.

இஸ்ரவேலரை ஒடுக்கின கானானிய ராஜா

இதனால் இஸ்ரவேல் ஜனங்களை ஆத்சோர் என்கிற இடத்தை ஆண்ட கானானிய ராஜாவாகிய யாபீன் என்பவன் ஒடுக்கும்படியாக தேவன் விட்டுவிட்டார். அவனுடைய படைத்தளபதியின் பெயர் சிசெரா. 

தற்போது "டெல்ஹசோர்" என்று அழைக்கப்படும் ஆத்சோர் என்ற இடத்தின் பண்டையகால கட்டிடங்களின் சிதைவுகள்
யாபீனிடம் 9000 இரும்பு இரதங்கள் இருந்தது. பண்டைய காலத்திலேயே இரும்புக் கருவிகளையும், ஆயுதங்களையும் உருவாக்கக்கூடிய தொழில்நுட்பம் அவர்களிடம் இருந்ததால், கானானியர்கள் பலம் வாய்ந்தவர்களாயிருந்தார்கள். அவர்கள் இஸ்ரவேலரை கொடுமையாய் ஒடுக்கினார்கள்.

தெபொராள்

இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் தான் தேவன் தெபொராளை இஸ்ரவேலிலே நியாயாதிபதியாக எழுப்பினார்.  அவள் தெபொராளின் பேரீச்சமரம் என்கிற பேரீச்ச மரத்தின் அடியிலே நியாயம் விசாரித்தாள். லபிதோத் என்பவருடைய மனைவியாகிய தெபொராள் தீர்க்கதரிசியாகவும் இருந்தாள். தேவன், மக்களுக்கு கொடுக்க நினைக்கும் செய்திகளை தேவனிடமிருந்து பெற்று மக்களுக்கு கொடுக்கும் நபர் தான் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவார்.

தெபொராளைப் போலவே தேவன் தீர்க்கதரிசிகளாக பயன்படுத்தின வேறு சில பெண்களைப் பற்றியும் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மிரியாம் (யாத்திராகமம் 15:20), உல்தாள் (1 இராஜாக்கள் 22:14), அன்னாள் (லூக்கா 2:36) மற்றும் பிலிப்புவின் குமாரத்திகள் (அப்போஸ்தலர் 21:9) ஆகியோர் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பெண் தீர்க்கதரிசிகள். கானானியர் இஸ்ரவேலரை ஒடுக்குவதற்கு முன்பாக எண்பது வருட காலம் இஸ்ரவேல் தேசத்திலே சமாதானம் நிலவியிருந்தது (நியாயாதிபதிகள் 3:30). அந்த நாட்களை பயன்படுத்தி தேசத்தை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் ஏற்ற வேலைகளை செய்யாமல், அவரவர் சொந்த வேலைகளை செய்வதிலே கவனமாய் இருந்தனர். இதனால் இஸ்ரவேலின் கிராமங்கள் பாழடைந்து, பெரும்பாதைகளும் பாழாய்ப் போயின (நியாயாதிபதிகள் 5:6 – 8). இந்த சூழ்நிலையில் தான் தேவன் தெபொராளை இஸ்ரவேலை நியாயம் விசாரிப்பதற்காக ஏற்படுத்தினார்.

பாராக்

தெபொராள், பாராக் என்கிற மனிதனை வரவழைத்து, இஸ்ரவேலிலிருந்து பத்தாயிரம் யுத்த வீரர்களைக் கூட்டிகொண்டு தாபோர் என்கிற மலைக்கு போகும்படி கூறினார். தாபோர் மலை சிசெராவின் வீட்டருகே இருந்தது. ஆண்டவர் பாராக்கிடம் சிசெராவை யுத்தத்திற்கு வரவழைத்து, அவனை பாராக்கின் கையில் ஒப்புக்கொடுக்கப்போவதாகக் கூறினார். ஆனால் பாராக்கோ தெபொராள் தன்னுடன் வரவில்லையென்றால் தான் யுத்தத்திற்கு போகப் போவதில்லையென்று கூறினான். தெபொராள் அவனுடன்கூட யுத்தத்திற்கு செல்லுவதற்கு ஒப்புக்கொண்டாள். ஆனால் அந்த யுத்தத்தில் சிசெராவைக் கொன்று, வெற்றி தேடி தந்ததற்கான புகழ் அவனுக்கு கிடைக்காதென்றும், அது ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் என்றும் தெபொராள் கூறினாள். பாராக் அதை பொருட்படுத்தவில்லை.

www.cefeurope.com / www.teachkids.eu
சிசெராவின் படை தோற்கடிக்கப்படுதல்

பாராக், இஸ்ரவேலிலிருந்து 10,000 பேரை அழைத்துக் கொண்டு சிசெராவிற்கு எதிராக யுத்தத்திற்கு போனான். தெபொராள் பாராக்கை யுத்தத்தை தொடங்குவதற்கு கூறின பொழுது, பாராக்கும், யுத்த வீரர்களும் தாபோர் மலையிலிருந்து கீழே இறங்கினார்கள். 

www.cefeurope.com / www.teachkids.eu
சிசெராவும், அவனுடைய யுத்த சேனையும் பாராக்கினால் தாக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டார்கள். அவர்களிடம் இரும்பு ரதங்கள் இருந்தபொழுதும், அதை வைத்து அவர்களால் ஜெயிக்கமுடியவில்லை. தேவன் வானத்திலிருந்து மழையை பொழியப் பண்ணினதினால் அவர்களால் இரும்பு இரதங்களை உபயோகப்படுத்த முடியாமல் போனது (நியாயாதிபதிகள் 5:4). சிசெரா தன்னுடைய படை தோற்கடிக்கப்படுவதைக் கண்டு, கால்நடையாக யுத்தகளத்திலிருந்து ஓடிப்போனான்.

தாபோர் மலை (தற்போதைய படம்)
யாகேலுடைய கூடாரத்தில் சிசெரா

சிசெரா ஓடிப் போய், கேனியனான ஏபேர் என்பவனுடைய மனைவியாகிய யாகேலுடைய கூடாரத்திற்கு வந்தான்.

அந்த நாட்களிலே இஸ்ரவேல் ஜனங்களின் நடுவிலே கேனியர் என்கிற ஒரு கூட்டத்தார் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இஸ்ரவேலர் அல்ல. அவர்கள் மோசேயின் மாமனாகிய ரெகுவேலின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அவர்களை மோசே அழைத்ததின் நிமித்தமாக அவர்கள் இஸ்ரவேலருடன் வந்து குடியிருந்தார்கள் (எண்ணாகமம் 10:29; நியாயாதிபதிகள் 1:16). அவர்கள் கானானிய ராஜாவாகிய யாபீனுடன் நல்ல நட்புறவில் இருந்தார்கள். அதனால் சிசெரா அங்கே வந்திருக்கலாம். யாகேல் சிசெராவை தன்னுடைய கூடாரத்திற்குள் அழைத்து சென்றாள். அப்பொழுது அவன் அவளிடம் தண்ணீர் கேட்டான். அவள் அவனுக்கு பாலைக் கொடுத்தாள். அவன் யுத்தத்தில் மிகவும் களைப்படைந்திருந்ததினால் அயர்ந்து உறங்கினான்.

யாகேலின் ஆயுதங்கள் – கூடார ஆணியும், சுத்தியும்

சிசெரா யாகேலின் கூடாரத்திற்குள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். இப்பொழுது யாகேல் ஒரு முக்கியமான தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது. கேனியனான ஏபேருக்கு கானானிய ராஜாவாகிய யாபீனோடு நல்ல உறவு இருந்தாலும், கானானியர் இஸ்ரவேலை ஒடுக்கினபொழுது அதனால் கேனியரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். யாகேல் தேசத்தின் சமாதானத்திற்காக ஒரு புத்தியான முடிவை எடுத்து, ஒரு தைரியமான செயலையும் செய்தாள். அவள் ஒரு கூடார ஆணியையும், சுத்தியையும் எடுத்து அதினால் சிசெராவின் நெற்றியில் அடித்தாள். அதினால் அவன் அங்கேயே மடிந்தான். சிசெராவை பிடிப்பதற்காக அவனை துரத்திக் கொண்டிருந்த பாராக் அங்கே வந்தான். அப்பொழுது யாகேல் அவனை அழைத்துக் கொண்டு போய், இறந்து கிடந்த சிசெராவை அவனுக்கு காண்பித்தாள். அதோடு இஸ்ரவேலருக்கு கானானியரோடு இருந்த யுத்தம் முடிவுக்கு வந்தது. அதன் பின் தேசம் நாற்பது வருடங்கள் அமைதலாயிருந்தது. தெபொராள் பாராக்கிடம் கூறினது போலவே, யுத்தத்தின் வெற்றிக்கான புகழ் யாகேலை சேர்ந்தது. “கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவள்” என்கிற பெயரையும் யாகேல் பெற்றாள்.

www.cefeurope.com / www.teachkids.eu
பரிசுத்த வேதாகமம் முழுவதும் தேவன் தம்முடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக எதிர்பார்க்கப்படாத, வித்தியாசமான மக்களை பயன்படுத்துவதை நாம் பார்க்க முடியும். இந்த சம்பவத்திலும் இஸ்ரவேலின் வரலாற்றில் அதுவரை நடந்திராத வகையில், தேவன் ஒரு பெண்ணை நியாயாதிபதியாக நியமித்து, யுத்தத்தில் பழக்கமில்லாத, கூடாரத்தில் வாசமாயிருந்த பெண்ணாகிய யாகேலிடம் ஒரு பெரிய யுத்த சேனையின் படைதளபதியை ஒப்புக்கொடுத்தார். இருபது வருடங்கள் கொடுமையான கானானியருடைய ஒடுக்குதலினால் பயமடைந்து, ஒளிந்துகொண்ட மனிதர்களுக்கு நடுவிலிருந்து தேவன் தெபொராளை எழுப்பினார். தேவனுடைய வேலையை செய்வதற்கு தெபொராளும், யாகேலும் தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்தபடியால் தேவன் தம்முடைய திட்டத்தை செயல்படுத்துவதற்கு அவர்களை பயன்படுத்தினார்.

வேதபகுதி: நியாயாதிபதிகள் 4 & 5

மனப்பாட வசனம்: எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை. (ஏசாயா 52:1) 

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/


இதற்கு முந்தின பாடத்தைப் பெற்றுக்கொள்ள இந்த லின்க் ஐ கிளிக் செய்யவும் (இடைநிலை வகுப்பு, பாடம் - 12, இஸ்ரவேலரை கலங்கப் பண்ணின ஆகான்)

 இதற்கு அடுத்த பாடத்தைப் பெற்றுக்கொள்ள இந்த லின்க் ஐ கிளிக் செய்யவும் (இடைநிலை வகுப்பு, பாடம் - 14, தேவனை அறியாத ஏலியின் குமாரர்கள்)

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    யாபீனிடம் 9000 ……………………………………….. இருந்தது

2.    கானானியர் இஸ்ரவேலரை ஒடுக்குவதற்கு முன்பாக ………………………. வருட காலம் இஸ்ரவேல் தேசத்திலே சமாதானம் நிலவியிருந்தது

3.    பாராக், ……………………. தன்னுடன் வரவில்லையென்றால் தான் யுத்தத்திற்கு போகப் போவதில்லையென்றென்று கூறினான்.

4.        சிசெரா கால்நடையாக ஓடி ………………………. கூடாரத்திற்கு வந்தான். 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.    பண்டைய கால இஸ்ரவேலிலே நியாயாதிபதிகளின் பொறுப்பு என்ன?

 

2.    சிசெராவின் சேனை இஸ்ரவேலின் சேனையைக் காட்டிலும் எதினால் பலம் வாய்ந்ததாயிருந்தது?

 

3.      தெபொராள் என்பவள் யார்? அவள் எங்கே நியாயவிசாரணை நடத்தினாள்?

 

4.      தெபொராள் எந்த சூழ்நிலையில் நியாயாதிபதியாக எழுப்பப்பட்டாள்?

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  யாகேல் – “கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள்” விளக்கவும். 

 

 

 

 

Monday, April 11, 2022

கர்த்தருடைய பட்டயம், கிதியோனுடைய பட்டயம் (A sword for the Lord and for Gideon), இளநிலை வகுப்பு (Junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 13

 இளநிலை வகுப்பு (JUNIOR) 

பாடம் – 13

கர்த்தருடைய பட்டயம், கிதியோனுடைய பட்டயம்

 

இதற்கு முந்தின பாடங்களில், இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி, கானான் தேசத்திற்கு சென்றடைந்ததையும், அங்குள்ள பட்டணங்களை சொந்தமாக்குவதற்கு முன்பாக அவற்றை கானானிய ஜாதிகளிடமிருந்து கைப்பற்றியதையும் பார்த்தோம். இஸ்ரவேல் ஜனங்கள் அங்கு வீடுகளைக் கட்டி, தொழில்களை செய்து சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்கள். பல வருடங்கள் கழித்து, அவர்களை கானானுக்குள் செல்லுவதற்கு தலைமையேற்று நடத்தின யோசுவா வயதாகி இறந்து போனார். அந்த நாட்களில் இஸ்ரவேலரின் தலைவர்களை “நியாயாதிபதி” என்று அழைத்தார்கள்.

இஸ்ரவேல் தேசத்தில் யார் நியாயாதிபதியாய் வரவேண்டும் என்பதை தேவனே தீர்மானித்து, அதை ஜனங்களுக்கு வெளிப்படுத்துவார். மற்ற தேசங்களை ராஜாக்கள் ஆண்டது போல இஸ்ரவேல் தேசத்தை நியாயாதிபதிகள் ஆளுகை செய்தார்கள். மற்ற ராஜாக்களுக்கு இருந்த பொறுப்புகளோடு சேர்த்து இவர்களுக்கு வேறு பல பொறுப்புகளும் இருந்தது. எதிரிகள் இஸ்ரவேல் தேசத்தை எதிர்த்து படை எடுத்து வரும்பொழுது அவர்களுக்கு எதிராக படையைத் திரட்டி யுத்தங்களை செய்வது, மற்றும் இஸ்ரவேல் ஜனங்களுக்குள் ஏற்படும் வழக்குகள், சண்டை, சச்சரவுகளை விசாரித்து தீர்ப்பு கொடுப்பதும் இவர்களுடைய வேலையே ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் பேசுவதைக் கேட்டு அதை செயல்படுத்தும் தீர்க்கதரிசிகளாகவும் அவர்கள் செயல்பட்டார்கள்.

 

இஸ்ரவேலருடைய தலைவனாகிய யோசுவா இறந்து போனபின், இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை மறந்து, அவரவர் வழியிலே நடந்து, பாவம் செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் அவர்கள் அருகிலே இருந்த பிற தேசங்கள், இஸ்ரவேலரை துன்புறுத்தி, தேசத்தை சேதப்படுத்துவார்கள். எப்பொழுதெல்லாம் இவ்வாறு சம்பவிக்கிறதோ அப்பொழுதெல்லாம் இஸ்ரவேலர் ஆண்டவரிடம் மனந்திரும்பி விண்ணப்பம் செய்வார்கள். ஆண்டவரும் அவர்களை விடுவிக்கும்படி ஒரு நியாயாதிபதியை எழும்பப்பண்ணுவார். ஒருமுறை இஸ்ரவேல் தேசத்திற்கு அருகே இருந்த மீதியானியர் என்கிற புறஜாதிகள் இஸ்ரவேலரை ஏழு வருடங்கள் கொடுமையாய் ஒடுக்கினார்கள். (புறஜாதிகள் – இஸ்ரவேல் தேசத்தை சாராத உலகில் உள்ள எல்லா தேசத்தார்களும் புறஜாதிகள் என்றே அழைக்கப்பட்டார்கள்).

 
Moody Publishers / FreeBibleimages.org.

மீதியான் தேசத்திலிருந்து ஒரு பெருங்கூட்டமாய் படையெடுத்து வரும் இவர்கள், இஸ்ரவேல் தேசத்தில் அறுவடை செய்து வைத்திருக்கும் உணவு தானியங்களை எல்லாம் கொள்ளை அடித்து சென்று விடுவார்கள். இவ்வாறு உணவு தானியங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு விட்டால், இஸ்ரவேல் ஜனங்கள் பட்டினியால் இறந்து போக நேரிடும். இதனால் பயமடைந்த இஸ்ரவேல் ஜனங்கள் மலைகளிலுள்ள குகைகளில் தஞ்சமடைய தொடங்கினார்கள். இவ்வாறு ஏழு வருடங்கள் கழிந்தபின், இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் தவறை உணர்ந்து, தங்களை விடுவிக்கும்படி ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்தார்கள். ஆண்டவர் அவர்கள் விண்ணப்பத்தை ஏற்று அவர்களுக்காக ஒரு புதிய நியாயாதிபதியை எழும்பப் பண்ணினார்.

 

இஸ்ரவேல் மக்களை விடுவிப்பதற்காக ஆண்டவர் தெரிந்து கொண்டது யோவாசின் மகனான கிதியோன் என்பவரைத் தான். கோதுமை அறுவடை செய்யும் நாட்கள் வந்த போது, கிதியோன் தான் அறுத்து வந்த தானியங்களை மீதியானியரிடமிருந்து காப்பாற்றுவதற்காக அதை தன்னுடைய தந்தையின் திராட்சைரச ஆலைக்கு சமீபமாக போரடித்தான். (போரடிப்பது என்பது கோதுமையை அதன் தாளிலிருந்து பிரித்தெடுப்பது). 

இஸ்ரவேல் தேசத்தில் அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான திராட்சை பழரச ஆலை, Israel Antiquities Authority
கோதுமை போரடிக்கும் களம்

அவன் போரடித்து கொண்டிருந்தபோது, கர்த்தருடைய தூதன் ஒருவர் அங்கு ஒரு கர்வாலி மரத்தின் கீழ் வந்து உட்கார்ந்தார். அவர் கிதியோனிடம் மீதியானியருக்கு எதிராகப் போரிட்டு இஸ்ரவேலரை விடுவிக்கும்படியாகக் கூறினார். அதைக் கேட்டபொழுது, கிதியோன் அதிர்ச்சியடைந்தான். தான் இஸ்ரவேலின் சிறிய கோத்திரங்களில் ஒன்றாகிய மனாசேயை சேர்ந்தவன் என்றும், அதிலும் தன்னுடைய குடும்பம் எளிய குடும்பம் என்றும், தான் எவ்வாறு இஸ்ரவேலை இரட்சிக்க முடியும் என்றும் தூதரிடம் கேட்டான்.

ஆண்டவர் கிதியோனிடம் தான் அவனுடன் இருந்து மீதியானியரை எளிதாக தோற்கடிப்பதற்கு அவனுக்கு உதவுவதாக வாக்களித்தார். கிதியோன் ஒரு அடையாளத்தை பெற விரும்பினான். இஸ்ரவேலருக்கு தலைவனாக ஆண்டவர் தன்னை தெரிந்தெடுத்திருந்தால் தன்னுடைய காணிக்கையை அவர் அங்கீகரிக்க வேண்டும் என்று அவன் விண்ணப்பம் செய்தான். அவன் வெள்ளாட்டுக்குட்டியின் இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பங்களையும் ஒரு கற்பாறையின் மேல் வைத்து அதன் மேல் ஆணத்தை ஊற்றினான். ஆணம் (broth) என்றால் இறைச்சியை வேக வைக்கும்பொழுது கிடைக்கும் சாறு. அப்பொழுது தூதன் தன் கையிலிருந்த கோலின் நுனியினால் அதை தொட்டார். உடனே நெருப்பு அந்த பாறையிலிருந்து எழும்பி இறைச்சியையும், அப்பங்களையும் எரித்து சாம்பலாக்கியது.

கிதியோன் தன்னிடம் பேசினது கர்த்தருடைய தூதன் என்று உறுதிபடுத்திக் கொண்டான். அதினால் அவன் மிகவும் பயமடைந்தான். ஆண்டவர் அவனுக்கு சமாதானம் உரைத்து, அவனுக்கு எதுவும் நேரிடாது என்று கூறினார். அந்த இடத்தில் கிதியோன் ஆண்டவருக்கென்று ஒரு பலிபீடத்தைக்கட்டி அதற்கு “யெகோவா ஷாலோம்” என்று பேரிட்டான். யெகோவா ஷாலோம் என்றால் சமாதானத்தின் கர்த்தர் (The Lord is Peace) என்று அர்த்தம். அந்த ராத்திரியிலே ஆண்டவர் அவனிடம் பேசி, அவனுடைய தகப்பனாகிய யோவாஸ் பாகாலுக்கென்று கட்டி வைத்திருந்த பலிபீடத்தை இடித்து, அதன் அருகே நாட்டப்பட்டிருந்த தோப்பையும் வெட்டி போடும்படி கூறினார். (அந்த நாட்களிலே கானானிய தேவதைகளில் ஒன்றாகிய அஷேரா (Asherah)விற்காக புனித மரங்களை நட்டு தோப்புகளை உருவாக்குவது வழக்கம்). கிதியோன் தன்னுடைய வேலையாட்களில் பத்து பேரை அழைத்து சென்று ஆண்டவர் தனக்கு கட்டளையிட்டபடி செய்தான்.

Sweet Publishing / FreeBibleimages.org.

காலமே அவனுடைய ஊர் மக்கள் பாகாலின் பலிபீடம் இடிந்து கிடப்பதையும், தோப்பு வெட்டப்பட்டு கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள். அவர்கள் விசாரித்தபொழுது, அதை செய்தது கிதியோன் என்று அறிந்துகொண்டார்கள். அதனால் அவனை கொல்ல நினைத்தார்கள். அவர்கள் கிதியோனின் தகப்பனாகிய யோவாசிடம் சென்று, கிதியோனை வெளியே அனுப்பும்படி கூறினார்கள். கிதியோனின் தகப்பனாகிய யோவாஸ் அவர்களிடம், பாகாலின் பலிபீடத்தை இடித்ததற்கு பாகாலே அவனை தண்டிக்கட்டும் என்று கூறினார். அதனால் மக்கள் அவனை விட்டுவிட்டு சென்றார்கள். அதனால் கிதியோனுக்கு “யெருபாகால்” என்ற பெயரும் உண்டு. யெருபாகால் என்றால் “பாகால் தனக்காக வழக்காடட்டும்” என்று அர்த்தம். எதிர்பார்த்தபடியே பாகால் தனக்காக வழக்காடவுமில்லை, கிதியோனுக்கு ஒன்றும் சம்பவிக்கவுமில்லை.

யெருபாகால் என்று கானானிய மொழியில் பொறிக்கப்பட்டிருக்கும் உடைந்த பானையின் ஒரு பகுதி, கிமு 12 - 10 நூற்றாண்டைச் சார்ந்தது, Israel Antiquities Authority

கிதியோனுக்கு இஸ்ரவேலரை விடுவிப்பதற்காக தேவன் தன்னை தான் தெரிந்தெடுத்திருக்கிறார் என்று நம்புவதற்கு கடினமாயிருந்தது. ஆகவே இன்னொரு முறையும் அதை உறுதிபடுத்த விரும்பினான். கிதியோன் ஆண்டவரிடம், தான் ஆட்டுரோமத்தை தரையில் போடுவதாகவும், பனி பெய்யும்பொழுது, பனி ரோமத்தில் மாத்திரம் விழுந்து, தரை காய்ந்திருந்தால், அதை ஒரு அடையாளமாக எடுத்துக் கொள்ளுவதாக கூறினான். அவன் கேட்டுகொண்டபடியே பனி ரோமத்தில் மாத்திரம் விழுந்திருந்தது. திரும்பவும் அவன் ஆண்டவரிடம் விண்ணப்பித்து, இன்னொருவிசை தரை ஈரமாயிருக்கவும், ரோமம் காய்ந்திருக்கவும் வேண்டும் என்று கூறினான். அவன் கேட்ட அடையாளத்தின்படியே அங்கு சம்பவித்தது. அதனால் கிதியோன் இஸ்ரவேலரை விடுவிக்க தேவன் தன்னையே தெரிந்தெடுத்திருக்கிறார் என்று உறுதிபடுத்திக் கொண்டான்.

 

கிதியோன் இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்து 32,000 பேரை யுத்தம் செய்வதிற்கென்று தெரிந்தெடுத்தான். ஆண்டவர் கிதியோனிடம் அவனிடம் அதிக ஆட்கள் இருப்பதாக கூறி, யுத்த விரர்களின் எண்ணிக்கையை குறைக்கும்படி கூறினார். ஆகவே வெறும் 300 பேர் மட்டுமே தெரிந்தெடுக்கப்பட்டனர். மற்ற யுத்தங்களைப் பார்க்கிலும் இந்த யுத்தம் வித்தியாசமானது. ஏனென்றால் கிதியோன் கையிலும், அவன் வீரர்களின் கையிலும் எக்காளமும், வெறும் பானையும், தீவட்டியும் இருந்தது (தீவட்டி என்றால் தீப்பந்தம்). நடுராத்தியிலே அவர்கள் தங்கள் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டார்கள். முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், பாளயத்தில் கூடியிருந்த மீதியானியர் குழப்பமடைந்து ஒருவரையொருவர் பட்டயத்தினால் தாக்கி, அலறியடித்து, அங்கிருந்து ஓடிப்போனார்கள். இவ்வாறு கர்த்தர், கிதியோன் மூலமாய் மீதியானியர் மேல் இஸ்ரவேலருக்கு வெற்றியைக் கொடுத்தார்.

 

வேதபகுதி: நியாயாதிபதிகள் 7

மனப்பாட வசனம்: 2 நாளாகமம் 14:11         

                  Click this link to learn how to organize VBS / Retreats

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/ 

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    மீதியானியர் இஸ்ரவேலரை ………………. வருடங்கள் கொடுமையாய் ஒடுக்கினார்கள்.

2.    மீதியானியரிடமிருந்து கோதுமை தானியங்களை காப்பாற்றுவதற்காக கிதியோன் அதை தன்னுடைய தந்தையின் …………………………….. சமீபமாக போரடித்தான்.

3.    கிதியோன் ஆண்டவருக்கென்று ஒரு பலிபீடத்தைக்கட்டி அதற்கு “…………………………………………..” என்று பேரிட்டான்

4.    கிதியோனுக்கு “………………………………..” என்ற இன்னொரு பெயரும் உண்டு.   

 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  இஸ்ரவேல் தேசத்தின் “நியாயாதிபதி” என்பவர்கள் யார்?

 

2.     மீதியானியர் இஸ்ரவேல் ஜனங்களை எவ்வாறு ஒடுக்கினார்கள்?

 

3.     தேவனுடைய தூதன் கிதியோனை சந்தித்த பொழுது அவன் என்ன செய்து கொண்டிருந்தான்?

 

4.    கிதியோன் தேவனுக்கு கொடுத்த காணிக்கை என்ன? 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  கிதியோன் மீதியானியரை எவ்வாறு வென்றான் என்று எழுதவும். 





தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...