Tuesday, May 31, 2022

முகங்குப்புற விழுந்த தாகோன் (Dagon Falls Before The Ark of God), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 14

ஆரம்பநிலை வகுப்பு (PRIMARY)

வயது: 6 - 7 வயது

வகுப்பு: I & II

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 14

முகங்குப்புற விழுந்த தாகோன்

இஸ்ரவேல் தேசத்தில் நியாயாதிபதிகள் ஆண்டு வந்த காலத்தைப் பற்றி இதற்கு முன்பாகப் படித்த கிதியோனைப் பற்றிய பாடத்தில் பார்த்தோம். கிதியோன் காலத்திற்கு பின்பாக இஸ்ரவேலிலே பல நியாயாதிபதிகள் இஸ்ரவேல் தேசத்தை ஆளுகை செய்தார்கள். அதில் ஒருவர் தான் ஏலி. ஏலி, சீலோ என்கிற இடத்திலே இருந்த ஆசரிப்புக் கூடாரத்திலே பிரதான ஆசாரியராகவும் இருந்தார். அப்பொழுது ஒருமுறை இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக பெலிஸ்தியர் என்கிற ஒரு தேசத்தினர் யுத்தம் செய்ய வந்தார்கள். யுத்தம் மிகவும் கடினமாயிருந்தது.  இஸ்ரவேல் ஜனங்களால் பெலிஸ்தியரை யுத்தத்தில் தோற்கடிக்கமுடியவில்லை. அப்பொழுது இஸ்ரவேல் தலைவர்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. 

சீலோவில் இருந்த ஆசரிப்புக்கூடாரத்திற்குள் வைக்கப்பட்டிருந்த உடன்படிக்கைப்பெட்டியைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். உடன்படிக்கைப்பெட்டி என்பது சித்தீம் என்கிற ஒருவிதமான மரத்தின் பலகைகளால் செய்யப்பட்டு தங்கத்தினால் மூடப்பட்ட ஒரு பெட்டி. இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் வனாந்திரம் என்கிற ஒரு இடத்தில் தங்கியிருந்தபொழுது, ஆண்டவர் இஸ்ரவேலரின் தலைவராகிய மோசேயிடம், இந்த உடன்படிக்கைப் பெட்டியை செய்து, அதை ஆசரிப்புக்கூடாரத்திற்குள் உள்ள மகாபரிசுத்தஸ்தலம் என்கிற ஒரு முக்கியமான இடத்தில் வைக்கும்படி கூறினார். இன்று நாம் தேவனை ஆராதிப்பதற்கு தேவாலயத்திற்கு செல்லுவது போல, அக்காலத்திலே இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை ஆராதிப்பதற்கு சென்ற இடம் தான் ஆசரிப்புக்கூடாரம். அங்கு தான் உடன்படிக்கைப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. 

ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரி

உடன்படிக்கைப்பெட்டி வைக்கப்பட்டிருந்த மகாபரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரதானஆசாரியன் மாத்திரமே வருடத்திற்கு ஒருமுறை செல்லமுடியும். உடன்படிக்கைப்பெட்டி தேவனுடைய மகிமை நிறைந்த பெட்டி. அதனால் அந்த பெட்டி கொண்டுசெல்லப்படுகிற இடங்களிலெல்லாம் அற்புதம் நடைபெறும். ஆகவே அந்த உடன்படிக்கைப்பெட்டியை பெலிஸ்தியரோடு யுத்தம் நடைபெறுகிற யுத்தகளத்திற்கு கொண்டு வந்தால் வெற்றி கிடைக்கும் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆகவே உடன்படிக்கைப்பெட்டியை யுத்தகளத்திற்கு கொண்டுவரும்படியாக, ஆசரிப்புக்கூடாரத்திலிருந்த ஆசாரியர்களுக்கு செய்தி அனுப்பினார்கள். 

உடன்படிக்கைப்பெட்டியின் மாதிரி

ஏலி பிரதான ஆசாரியனாயிருந்தார். அவருக்கு வயதாகிவிட்டபடியால், அவருடைய இருமகன்களாகிய ஓப்னியும், பினெகாசும் ஆலயத்திலே ஆசாரியர்களாயிருந்து ஆசரிப்புக்கூடாரத்தின் வேலைகளை கவனித்து வந்தார்கள். அப்பொழுது உடன்படிக்கைப்பெட்டியை யுத்தகளத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்கிற தகவல் அவர்களுக்கு வந்தது. ஓப்னியும், பினெகாசும் ஆசாரியர்களாயிருந்த பொழுதும் அவர்கள் தேவனை அறியவில்லை. அதனால் அவர்கள் நீதியான செயல்களைச் செய்யாமல், தேவன் விரும்பாத செயல்களையே செய்து வந்தார்கள். இந்த தருணத்திலும், உடன்படிக்கைப் பெட்டியை யுத்த களத்திற்கு கொண்டு செல்லலாமா என்று தேவனிடம் விசாரிக்காமல், தங்களுடைய சொந்த விருப்பத்தின்படி உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் சென்றார்கள்.

அதனால் அந்த யுத்தத்திலே தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவி செய்யவில்லை. பெலிஸ்தியர் இஸ்ரவேல் ஜனங்கள் மேல் வெற்றிக்கொண்டார்கள். அதுமட்டுமல்லாமல், உடன்படிக்கைப்பட்டியையும் கைப்பற்றி அதை தங்களுடைய பட்டணமாகிய அஸ்தோத் என்கிற இடத்திற்கு கொண்டு சென்றார்கள். 

பெலிஸ்தியர் தேவனுடைய உடன்படிக்கைப்பட்டியை தங்களுடைய தெய்வமாகிய “தாகோன்” என்கிற மீன் கடவுளுடைய கோவிலிலே கொண்டு போய் வைத்தார்கள். கிதியோன் பாடத்தில் நாம் பார்த்த பாகால் என்கிற கடவுளின் தந்தையாக கருதப்படுவது தான் இந்த தாகோன் கடவுள். 

தாகோன் என்னும் மீன் கடவுள்

மறுநாள் காலமே அஸ்தோத் ஊர் மக்கள் தாகோன் கோவிலிலே வைக்கப்பட்டிருந்த உடன்படிக்கைப் பெட்டியைப் பார்ப்பதற்காக சென்றார்கள். அப்பொழுது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்தது. ஊர் மக்கள் தாகோனை எடுத்து அதை மறுபடியும் அதன் இடத்திலே நிறுத்தி வைத்துவிட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். 

மறுநாளும் அதேபோல உடன்படிக்கைப் பெட்டியைப் பார்ப்பதற்கு ஊர்மக்கள் வந்தார்கள். அப்பொழுது தாகோன் மறுபடியும் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடப்பதைப் பார்த்தார்கள். அதுமட்டுமல்லாமல் தாகோனின் தலையும், அதின் இரண்டு கைகளும் உடைபட்டு கோவிலின் வாசற்படியின்மேல் கிடந்தது. தாகோனின் உடல் மாத்திரம் உடையாமல் இருந்தது. இதைப்பார்த்த எல்லாருக்கும் பயம் உண்டாயிற்று. கோவில் பூஜாரிகளும் இதைப்பார்த்து பயந்தார்கள். அந்நாளிலிருந்துஆந்த கோவில் பூஜாரிகள் யாரும் அந்த வாசற்படியை மிதிப்பதில்லை. 

பெலிஸ்தரின் பிரச்சனை அதோடு நின்றுவிடவில்லை. அஸ்தோத் ஊர் மக்களை ஒரு கொடிய நோய் தாக்க ஆரம்பித்தது. அப்பொழுது அந்த ஊர் மக்கள் தங்கள் தவறை உணர்ந்தார்கள். தாங்கள் கர்த்தருடைய பெட்டியை எடுத்துக் கொண்டு வந்ததினால் தான் தங்களுக்கு இவ்வாறு சம்பவிக்கிறது என்று உறுதிபடுத்திக்கொண்டார்கள். அதனால் உடன்படிக்கைப் பெட்டியை இஸ்ரவேலரிடமே திரும்பிக் கொடுப்பதற்கு தீர்மானித்தார்கள். அதன்படியே அவர்கள் உடன்படிக்கைபெட்டியை, ஒரு புது வண்டியில் ஏற்றி, அதில் இரண்டு பசுக்களைக் கட்டி, அந்த வண்டியில் தாங்கள் செய்த குற்றத்திற்கு நிவாரணமாக குற்றநிவாரணபலியையும் ஏற்றி, உடன்படிக்கைப் பெட்டியை இஸ்ரவேல் மக்களிடத்திற்கே திரும்ப அனுப்பினார்கள். 

வேதபகுதி: 1 சாமுவேல் 4 – 6

மனப்பாட வசனம்: உபாகமம் 32:39


Please click the link to visit the English Blog for Sunday School Lessons in English

For Sunday School activities and stories in English

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்:

1.    பெலிஸ்தியர் இஸ்ரவேலரிடமிருந்து எதை எடுத்துச்         சென்றார்கள்?  ……………………………………..

2.    உடன்படிக்கைப் பெட்டி எங்கு வைக்கப்பட வேண்டும்?    …………..............................

3.    பெலிஸ்தியர் உடன்படிக்கைப் பெட்டியை எங்கு கொன்டு சென்றார்கள்?  ……………………………….

     4.    பெலிஸ்தியருடைய கடவுளின் பெயர் என்ன? ..............................…..

     5.    தாகோன் இரண்டாம் முறை விழுந்தபொழுது, அதினுடைய தலையும், கால்களும் எங்கு கிடந்தது? ……………………………… 

பொருத்துக:    

1.     பெலிஸ்தியர் யுத்தத்திற்கு பின் பிடித்துச் சென்றது

(உடன்படிக்கைப் பெட்டி / நாணற்பெட்டி)

2.    பெலிஸ்தியர் உடன்படிக்கைப் பெட்டியை வைத்தது

(தாகோனின் அருகில் / மரத்தின் அருகில்)

3.    தாகோனின் எது மாத்திரம் உடையாமல் இருந்தது?

(தலை / உடல்)

4.    பெலிஸ்தியர் உடன்படிக்கைப் பெட்டியை

(திரும்பக் கொடுத்தார்கள் / உடைத்தார்கள்).

5.    பெலிஸ்தியர் உடன்படிக்கைப் பெட்டியை அனுப்பின   வண்டியில் எது பூட்டப்பட்டிருந்தது? (குதிரை / பசு).







Monday, May 30, 2022

சிம்சோனுக்குக் கிடைத்த ஊற்றுநீர் (Spring water for Samson), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 14

 KINDER (பாலர் வகுப்பு) 

வயது – 4 & 5     

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை. 
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.   

பாடம் – 14

சிம்சோனுக்குக் கிடைத்த ஊற்றுநீர் 

உங்களுக்கு தாகம் எடுக்கும்பொழுது என்ன செய்வீர்கள்?

நாம் குடிக்கும் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறதென்று தெரியுமா?

 

இந்த பாடத்தில் சிம்சோனுக்கு குடிப்பதற்காக தண்ணீரை ஆண்டவர் எங்கிருந்து கொடுத்தார் என்பதைத் தான் பார்க்கப் போகிறோம்! இஸ்ரவேல் தேசத்திலே சிம்சோன் என்பவர் வாழ்ந்து வந்தார். இந்த உலகத்திலே வாழ்ந்தவர்களிலே மிகவும் பலசாலி அவர் தான். சிம்சோன் மிகவும் விசேஷமானவர் ஏனென்றால் அவர் பிறப்பதற்கு முன்பதாகவே ஆண்டவர் அவரைப் பற்றி அவர் பெற்றோரிடம் கூறியிருந்தார். ஆண்டவர் சிம்சோனுக்கு மற்ற எந்த மனிதனைக் காட்டிலும் அதிகமான பலத்தைக் கொடுத்திருந்தார். அதனால் மற்ற மனிதர்களால் செய்ய முடியாத பல வேலைகளை சிம்சோனால் எளிதாக செய்ய முடிந்தது.

 

சிம்சோன் இஸ்ரவேலின் நியாயாதிபதியாக இருந்தார். நியாயாதிபதி என்றால் இஸ்ரவேல் ஜனங்கள் யாருக்குள்ளாவது, ஏதாவது சண்டையோ, பிரச்சனையோ ஏற்பட்டால், அதை தீர்த்து வைத்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பவர்கள். சிம்சோன் வாழ்ந்த நாட்களிலே இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக பெலிஸ்தியர் என்கிற ஒருகூட்ட ஜனங்கள் போரிட வந்தார்கள். அவர்கள் இஸ்ரவேலரின் அதிக பலம் வாய்ந்த அவர்கள் தலைவனாகிய சிம்சோனைப் பிடித்துவிட்டால் இஸ்ரவேலரை எளிதில் தோற்கடித்துவிடலாம் என்று நினைத்தார்கள். அதனால் சிம்சோனைப் பிடிப்பதற்காக காத்திருந்தார்கள். அந்த நேரத்தில் சிம்சோன் லேகி என்ற இடத்தில் இருந்தார்.

 அப்பொழுது சிம்சோனுக்கு மிகவும் தாகம் ஏற்பட்டது. அந்த இடத்தில் அருகில் தண்ணீர் எங்கும் கிடைக்கவில்லை. பண்டைய காலங்களில் இப்பொழுது இருப்பது போல கடைகளும் கிடையாது.

சிம்சோன் அங்குமிங்கும் அலைந்தும் அவருக்கு தண்ணீர் எங்கும் கிடைக்கவில்லை. அதனால் மிகவும் சோர்வுற்ற சிம்சோன் ஆண்டவரிடம் வேண்டினார். தன்னை பிடிப்பதற்காக பெலிஸ்தியர் தேடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தான் தண்ணீர் தாகத்தினால் சோர்பாயிருந்தால் பெலிஸ்தியர் தன்னை பிடித்துக் கொண்டு போய் விடுவார்களே என்று ஆண்டவரிடம் கூறினார்.

அப்பொழுது ஒரு அதிசயம் நடந்தது. ஆண்டவர் அந்த இடத்தில் ஒரு பள்ளத்தை தோன்றப்பண்ணினார். சிம்சோன் கண்களுக்கு முன்பாக ஒரு ஊற்றுத்தண்ணீர் உருவானது. பூமிக்கடியிலிருந்து தண்ணீர் அந்த பள்ளத்தின் வழியாக பெருக்கெடுத்து ஓடினது. அந்த தண்ணீரைக் குடித்து சிம்சோன் மறுபடியும் பெலனடைந்தார். தேவன் அதிசயமாய்  தனக்கு தண்ணீர் கொடுத்த ஊற்றுக்கு “எந்நக்கோரி” என்று பெயரிட்டார். அது இப்பொழுதும் இஸ்ரவேல் தேசத்திலே இருக்கிறது.

ஊற்றுத்தண்ணீர்

வேதபகுதி: நியாயாதிபதிகள் 15:17 - 19

மனப்பாட வசனம்: தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறார் (சங்கீதம் 107:9)

 

 

Thursday, May 5, 2022

கானானைக் கைப்பற்றிய யோசுவா(Joshua & The Conquest of Canaan), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 13

மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது

வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம்- 13

 கானானைக் கைப்பற்றிய யோசுவா 

நூனின் குமாரனாகிய யோசுவா

தேவனுடைய மனிதனாகிய மோசேயின் காலத்திற்கு பின் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்துவதற்கு தெரிந்துகொள்ளப்பட்டவர் தான் நூனின் குமாரனாகிய யோசுவா. இவருக்கு பெற்றோரால் கொடுக்கப்பட்ட பெயர் ஓசேயா (எண்ணாகமம் 13:8) என்பதாகும். மோசே இவருக்கு “யோசுவா” என்று பெயரிட்டார் (எண்ணாகமம் 13:16). யோசுவா என்ற பெயர் எபிரெய மொழியில் “யெஹொஷுவா (Yehoshua)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு என்ற பெயரும் கூட எபிரெய மொழியில் “யெஹொஷுவா (Yehoshua)” என்றே அழைக்கப்படுகின்றது. யோசுவா மோசேக்கு உதவிக்காரராய் ஊழியம் செய்து வந்தார். யோசுவா, “ஆவியைப் பெற்ற மனிதன்” என்று அழைக்கப்பட்டார் (எண்ணாகமம் 27:18). மோசே, இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து கானான் தேசத்துக்கு வழிநடத்தி சென்றபொழுது, கானானிற்குள் செல்லுவதற்கு முன்பாக, கானான் தேசத்தை சுற்றி பார்த்து வரும்படி, 12 தலைவர்களை கோத்திரத்துக்கு ஒருவராக தெரிந்தெடுத்து அனுப்பினார். அதில், எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து யோசுவா தெரிந்தெடுத்து அனுப்பப்பட்டார். 

இஸ்ரவேலரின் தலைவனான யோசுவா

கானானை சுற்றி பார்த்து விட்டு, பன்னிரண்டு தலைவர்களும் இஸ்ரவேலின் பாளயத்திற்கு திரும்பி வந்த பொழுது, பாளயத்தில் பெருங்கலகம் உண்டானது. அதன் காரணம் என்னவென்றால், கானானை சுற்றி பார்க்க சென்ற தலைவர்களில் பத்து பேர் கானான் தேசத்தை கைப்பற்றுவது கடினம், அதனால் அதை சுதந்தரிக்கமுடியாது என்று அந்த தேசத்தைக் குறித்து தவறான செய்திகளை இஸ்ரவேல் மக்கள் மத்தியில் பரவச் செய்தார்கள். ஆனால் யோசுவாவும், இன்னொரு தலைவராகிய காலேபும், மிகவும் நம்பிக்கையோடு கானானை எளிதாகப் பிடித்துக்கொள்ளலாம் என்று உறுதியாகக் கூறினார்கள். இதனால் தேவகோபம் அந்த இடத்தில் மூண்டு, இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்தை உடனே சுதந்தரிப்பதில்லை, நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிய வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல், இஸ்ரவேல் ஜனங்களில் யோசுவாவும், காலேபும், வனாந்திரத்தில் பிறந்த குழந்தைகளுமே கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பார்கள் என்றும் கூறினார். சில காலம் கழித்து, தேவனுடைய மனிதனாகிய மோசே, தனது 120வது வயதில் மரணமடைந்தார். அதன் பின்னர், யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தி சென்றார். கானான் தேசத்தைக் கைப்பற்றும் பெரிய பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. 

வாக்குத்தத்த தேசமாகிய கானான்

பாடம் எண் – 7ல் தேவன் ஆபிரகாமை அழைத்தத்தைப் பற்றியும், தேவன் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையைப் பற்றியும் பார்த்தோம். தேவன் ஆபிரகாமை அவன் அறியாத ஒரு தேசத்திற்கு போகும்படியாக அழைத்தார். ஆபிரகாம் தேவனை விசுவாசித்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டு போனான். தேவன் ஆபிரகாமை கானான் தேசத்திற்கு நடத்தி சென்றார். ஆபிரகாம் அங்கு ஒரு “அந்நியனாகவும், பரதேசியாகவும்” வாழ்ந்தான் (எபிரெயர் 11:8,9). தேவன் ஆபிரகாமிடம் அவனுடைய சந்ததிக்கு கானான் தேசத்தை, வாக்குத்தத்த தேசமாகவும், அவர்களுடைய சொந்த பூமியாகவும் கொடுப்பதாக உறுதி அளித்திருந்தார் (ஆதியாகமம் 17:8). ஆபிரகாமின் சந்ததியார் அந்நிய தேசத்திலே 400 வருடங்கள் அடிமைகளாக இருப்பார்கள் என்று எகிப்தின் அடிமைத்தனத்தைப் பற்றியும் முன்னறிவித்திருந்தார். கானான் தேசத்திலே குடியிருந்த கானானிய ஜாதிகளாகிய எமோரியரின் அக்கிரமம் முழுமையடையும் காலத்திலே, இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்தைக் கைப்பற்றி, தேவனுடைய நியாயத்தீர்ப்பை கானானியரில் நிறைவேற்றி, கானான் தேசத்தை தங்களுடைய வாக்குத்தத்த தேசமாக சுதந்தரித்துக் கொள்ளுவார்கள் என்றும் கூறியிருந்தார் (ஆதியாகமம் 15:16). யோசுவா கானானைக் கைப்பற்றியபோது இந்த வாக்குத்தத்தம் நிறைவேறியது.

யோர்தானுக்கு அப்புறமும், இப்புறமும்

யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் கானான் தேசத்தைக் கைப்பற்றுவதற்காக, அதன் எல்லையில் நுழைவதற்கு முன்பாக, கரைபுரண்டு ஓடிய யோர்தான் நதியைக் கடக்க வேண்டியதிருந்தது. தேவன் ஒரு அதிசயத்தை நடப்பித்து யோர்தான் நதியை பின்னிட்டு ஓடச் செய்து, ஒரு பாதையை உருவாக்கி, இஸ்ரவேல் ஜனங்களை உலர்ந்த தரையின் வழியாக யோர்தான் நதியைக் கடக்கசெய்தார் (யோசுவா 3). யோர்தான் ஆற்றைக் கடப்பதற்கு முன்பாக இஸ்ரவேல் ஜனங்கள் தங்கியிருந்த “மோவாப் சமவெளி” வேதாகமத்திலே “யோர்தானுக்கு அப்புறம் (beyond the Jordan)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது (யோசுவா 12:1 – 6). இது “ட்ரான்ஸ்ஜார்டன் (Transjordan cities)” என்றும் அழைக்கப்படுகின்றது. யோர்தான் ஆற்றைக்கடந்து  இஸ்ரவேல் ஜனங்கள் சென்றடைந்த கானான் தேசத்தின் எல்லைக்குட்பட்ட இடங்கள் “யோர்தானுக்கு இப்புறம் (Beside the Jordan) என்று அழைக்கப்படுகின்றது (யோசுவா 12:7- 24). இந்த இடங்கள் “சிஸ்ஜார்டன் (Cisjordan cities)” என்ற பெயராலும் அறியப்படுகின்றன.

கில்கால்

இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் ஆற்றைக் கடந்து, கானான் தேச எல்லைக்குட்பட்ட இடத்திலே தங்கள் கூடாரங்களை அமைத்து தங்கியிருந்தார்கள். அப்பொழுது தேவன் அவர்களை நோக்கி “எகிப்து தேசத்தின் நிந்தையை உங்கள் மேல் இராதபடி புரட்டிப்போட்டேன்” என்றார். அதனால் அந்த இடம் “கில்கால்” என்று அழைக்கப்பட்டது. கானான் தேசத்தின் எல்லைக்குட்பட்ட இந்த இடத்தில் தான் இஸ்ரவேல் ஜனங்கள் முதலாவதாக பஸ்காவை ஆசரித்தார்கள். பஸ்கா பண்டிகையை ஆசரித்த மறுநாளிலே கானான் தேசத்தில் விளைந்த தானியத்தினால் செய்யப்பட்ட புளிப்பில்லாத அப்பங்களையும், சுட்ட தானியங்களையும் சாப்பிட்டார்கள். அவர்கள் கானான் தேசத்தில் விளைந்தவைகளை சாப்பிட ஆரம்பித்தபொழுது, மன்னா வானத்திலிருந்து பொழிவது நிறுத்தப்பட்டது (யோசுவா 5:10 – 12).

யோசுவாவின் மூன்று படையெடுப்புகள்

யோசுவா கில்காலிலிருந்து மேற்கு நோக்கி கானான் தேசத்திற்குள் மூன்று முக்கியமான படையெடுப்புகளை நிகழ்த்தினார்.

Ø  முதலாம் படையெடுப்பு கானான் தேசத்தின் நடுப்பகுதியில் அமைந்திருந்த மலைப்பகுதிக்கு நேராக எரிகோ பட்டணம் துவங்கி நடத்தப்பட்டது

Ø  இரண்டாம் படையெடுப்பு தென்பகுதியை நோக்கி செய்யப்பட்டது (யோசுவா 10:1)

Ø  மூன்றாம் படையெடுப்பு வடபகுதியை நோக்கி செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் தன்னுடைய அண்டைய நாட்டின் ராஜாக்களை ஒன்றுதிரட்டி யோசுவாவிற்கு எதிராக அணிவகுத்தார்கள். யோசுவா அவர்கள் எதிர்பார்த்திராத நேரத்தில் திடீர் தாக்குதலை நடத்தி அவர்களை வென்றார்.

வரைபடம்: Garry Stevens, historyinthebible.com

இந்த மூன்று படையெடுப்புகளின் மூலமாக யோசுவா மொத்தம் 31 ராஜாக்களை தோற்கடித்து அவர்களுடைய பட்டணங்களைக் கைப்பற்றினார் (இந்த 31 பட்டணங்களின் பட்டியல் யோசுவா 12:7–24 ல் கொடுக்கப்பட்டுள்ளது). யோசுவா கானான் தேசத்தில் இந்த யுத்தங்களை நடத்தினபொழுது, கானான் ஒரு தேசமாக இராமல், பல குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்த பல பட்டணங்கள் அடங்கிய ஒரு நிலப்பரப்பாகவே இருந்தது. இஸ்ரவேலர் கானானியரை முற்றிலும் அழிக்காமல், சிறுசிறு கூட்டங்களாக ஆங்காங்கே விட்டுவைத்திருந்தனர். இவ்வாறு விட்டுவைக்கப்பட்ட கானானியர் பின்நாட்களிலே இஸ்ரவேலருக்கு முள்ளுகளாகவும், கண்ணிகளாகவும் இருந்தார்கள் என்று வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலர் கானானியருடைய பழக்கங்களைக் கடைபிடித்து, ஆண்டவரால் கைவிடப்பட்டு, எதிரிகளால் துன்புறுத்தப்படுவதும், பின்னர் அவர்கள் ஆண்டவரிடம் திரும்பும்பொழுது ஆண்டவர் அவர்களை விடுவிக்கும்படி, அவர்களுக்காக நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுவதும் தொடர்கதையாக நடந்துகொண்டேயிருந்தது. இதை வேதாகமத்தில் உள்ள “நியாயாதிபதிகள்” புஸ்தகத்திலே வாசிக்கலாம்.

அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்ட கானான் தேசத்திலே இஸ்ரவேலர் கட்டிய நான்கு அறைகளைக் கொண்ட வீடுகளில் ஒன்று

யோர்தானுக்கு அப்புறமான கோத்திரங்கள் (Beyond the Jordan – Transjordan Tribes )

யோசுவாவிற்கு முன்பாக இஸ்ரவேலரை வழிநடத்தி வந்த தேவனுடைய மனிதனாகிய மோசேயின் காலத்திலேயே இஸ்ரவேலின் சில கோத்திரத்தார் அவர்கள் குடிபெயருவதற்கென்று, யோர்தானுக்கு அப்புறத்திலே பட்டணங்களை தெரிந்தெடுத்துக் கொண்டார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் 40 வருடங்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்து, கானான் தேசத்தின் எல்லையில் வந்தபொழுது மோவாப் சமவெளியிலே சீகோன், ஓக் என்கிற இரண்டு ராஜாக்களை வென்று அந்த இடத்தை கைப்பற்றினார்கள். அந்த இடங்கள் வளம் வாய்ந்ததாயும், ஆடு மாடுகளை வளர்ப்பதற்கு தகுந்த இடமாயிருந்ததினாலும்,  இஸ்ரவேலின் ரூபன் கோத்திரத்தாரும், காத் கோத்திரத்தாரும், மனாசேயின் பாதி கோத்திரத்தாரும் இந்த பட்டணங்களை தங்களுக்கு தர வேண்டும் என்று மோசேயிடம் கேட்டுக் கொண்டார்கள். அதன்படி மோசே இந்த பட்டணங்களை அவர்களுக்கு கொடுத்தார். இந்த கோத்திரங்கள், “யோர்தானுக்கு அப்புறமான கோத்திரங்கள் (Transjordan Tribes)” என்று அழைக்கப்படுகின்றன.

           
                                 யோர்தான் நதி                               யோர்தானுக்கு அப்புறமான கோத்திரங்கள்
இஸ்ரவேலின் மற்ற கோத்திரங்களின் சுதந்திரம்

யோசுவா கானானியப் பட்டணங்களை கைப்பற்றியபின், இஸ்ரவேலின் சுதந்திரத்தைப் பெறாத மற்ற ஒன்பதரைக் கோத்திரங்களுக்கு இந்த பட்டணங்கள் சீட்டு இடப்பட்டு பிரித்துக் கொடுக்கப்பட்டன. கோத்திரங்களுக்கு சீட்டு போட்டு பட்டணங்களை பங்கிடுவதற்கான பொறுப்பு ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் குமாரனாகிய யோசுவாவிற்கும், கோத்திரப் பிதாக்களின் தலைவருக்கும் கொடுக்கப்பட்டது. லேவி கோத்திரத்திற்கு மாத்திரம் சொந்தமாக பட்டணங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. லேவி கோத்திரத்துக்கு இஸ்ரவேலின் நடுவே சுதந்திரம் கொடுக்கப்படவேண்டாம், ஏனென்றால் கர்த்தரே அவர்களுடைய சுதந்திரம் என்று அவர்களுக்கு கூறப்பட்டிருந்தது (உபாகமம் 18:1,2). அதற்கு பதிலாக இஸ்ரவேலின் மற்ற கோத்திரங்கள் தங்களுடைய சுதந்திரத்திலிருந்து லேவியர்கள் தங்குவதற்காகவும், பயன்படுத்துவதற்காகவும் பட்டணங்களை தானமாகக் கொடுத்தார்கள். இவ்வாறு அவர்களுக்கு 48 பட்டணங்கள் கொடுக்கப்பட்டன. அதனால் அவர்கள் மற்ற கோத்திரங்களின் நடுவே வசித்தார்கள். யோசுவா ஆசரிப்புக் கூடாரத்தை சீலோ என்கிற இடத்திலே நிறுவினார். (இஸ்ரவேலின் 12 கோத்திரங்களைப் பற்றி மேலும் அறிய “யாக்கோபும்,இஸ்ரவேலின் 12 கோத்திரங்களும்” என்கிற உயர்நிலை வகுப்பு பாடம் எண் – 8 ஐ வாசிக்கவும்).

சீலோவிலே ஆசரிப்புக்கூடாரம் இருந்த நாட்களிலே பயன்படுத்தப்பட்ட கல்லாலான பலிபீடம்

அடைக்கலப் பட்டணம்

லேவி கோத்திரத்தாருக்கு கொடுக்கப்பட்ட பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலப் பட்டணங்களாக குறிக்கப்பட்டன (யோசுவா 20:1-9). அடைக்கலப்பட்டணம் என்றால் முற்பகையின்றி அறியாமல் அல்லது தவறுதலாக இன்னொருவரின் சாவிற்கு காரணமான நபர், பழிவாங்கப்படாமல், முறையான நியாயவிசாரணைக்கு உட்படுத்தப்படும்வரைக்கும், பாதுகாப்பாக தங்கியிருக்கும்படி ஏற்படுத்தப்பட்டதுதான் அடைக்கலப்பட்டணம். ஏதாவது ஒரு நபர் இப்படிப்பட்ட சூழ்நிலையில் அகப்படும்பொழுது, அவன் ஓடிப்போய், அடைக்கலப்பட்டணத்தின் வாசலில் நின்று உள்ளே இருக்கும் ஆசாரியனிடம் நடந்த சம்பவத்தைக் கூறவேண்டும். அப்பொழுது ஆசாரியன் அவனை உள்ளே சேர்த்துக் கொண்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் அவனை பழிவாங்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுக்கக்கூடாது. அவனுக்கு சரியான நீதிவிசாரணை அளிக்கப்படும்வரைக்கும் அவனை பாதுகாப்பது அவர்களுடைய கடமையாகும். இஸ்றவேல் தேசத்திலே குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படக்கூடாது என்பதை வலியுறுத்தி கடைபிடிப்பதற்காக அடைக்கலப்பட்டணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன.

இந்த அடைக்கலப்பட்டணங்கள், இஸ்ரவேல் பட்டணங்கள் எல்லாவற்றிலுமிருந்து ஒரு நாளுக்குள் பிரயாணம் செய்து எட்டக்கூடிய தூரத்திலிருக்கும்படி தெரிந்தெடுக்கப்பட்டன (யோசுவா 20:9). அடைக்கலப்பட்டணங்களுக்கு செல்லும் பாதைகள் எந்த தடங்கலும் இல்லாமல் விரைவாக பிரயாணம் செய்வதற்கு ஏதுவாக நன்கு பராமரிக்கப்பட்டன. இருவழி சந்திகளில் தெளிவாக பாதை காட்டுவதற்காக, அடைக்கலம் என்று பொருள்படும் “மிக்லாத்” என்னும் பெயர் பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

அடைக்கலப்பட்டணங்களுள் ஒன்றான சீகேமின் சிதைவுகள்
அடைக்கலப்பட்டணங்கள், வரைபடம்: Scott Richardson

யோசுவாவின் கடைசி உரை

இஸ்ரவேலருடைய தலைவனாகிய யோசுவாவின் இறுதி நாட்களிலே, அவர் இஸ்ரவேல் கோத்திரங்களையெல்லாம் ஒன்றாய் கூடி வரச் செய்து, இஸ்ரவேலருக்கு நடந்த சம்பவங்களையெல்லாம் விவரித்துக் கூறி, தானும் தன்னுடைய குடும்பமும் என்றென்றைக்கும் கர்த்தரையே சேவிப்போம் என்றும், இஸ்ரவேல் ஜனங்களும் தாங்கள் யாரை சேவிக்கப்போகிறோமென்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்களும் தாங்களும் கர்த்தரையே சேவிப்பதாக வாக்குக் கொடுத்தார்கள். அப்பொழுது யோசுவா இந்த வார்த்தைகளையெல்லாம் ஒரு நியாயப்பிரமாண புஸ்தகத்திலே எழுதினார். பின்னர் அவர் ஒரு பெரிய கல்லை எடுத்து, கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின் கீழ் அதை சாட்சியாக நாட்டினார்.

  
சீகேமிலே யோசுவா நிறுத்தினதாகக் கருதப்படும் மஸாபா (massabah) என்னும் கல். biblearchaeologyreport.com

தேவனுடைய மனிதனாகிய யோசுவா தனது நூற்றுப்பத்தாவது வயதிலே இறந்து போனார். யோசுவா இறந்தபின் இஸ்ரவேல் தேசத்திலே பல நியாயாதிபதிகள் எழும்பி இஸ்ரவேலரை ஆண்டார்கள்.

வேதபகுதி: யோசுவாவின் புஸ்தகம்

மனப்பாட வசனம்: யோசுவா 24:15 

 

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.     இஸ்ரவேல் ஜனங்கள் ………………………… முதலாவதாக பஸ்காவை ஆசரித்தார்கள்.

2.     யோசுவா மூன்று படையெடுப்புகளின் மூலம் …………………. பட்டணங்களைக் கைப்பற்றினார்

3.     யோசுவா ஆசரிப்புக் கூடாரத்தை …………………. என்கிற இடத்திலே நிறுவினார்.

4.     லேவி கோத்திரத்துக்கு …………………. பட்டணங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டது.

 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும் 

1.  கானான் ஏன் வாக்குத்தத்த தேசம் என்று அழைக்கப்பட்டது?

 

2.  கானானியர் இஸ்ரவேலருக்கு ஏன் முள்ளுகளாகவும், கண்ணிகளாகவும் இருந்தார்கள்?

 

3.  யோர்தானுக்கு அப்புறமான பட்டணங்கள் என்றால் என்ன?

 

4.  லேவி கோத்திரத்தின் சுதந்திரம் எது? 

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  அடைக்கலப்பட்டணம் என்றால் என்ன என்பதைப் பற்றி விவரிக்கவும்.

 

 

 

 

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...