மேல்நிலை வகுப்பு (SENIOR)
வயது: 14 - 15 வயது
வகுப்பு: IX & X
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission
is granted only for free distribution among Sunday School children.
No part of
this document can be modified, sold or used for any commercial purpose.
பாடம்-
13
கானானைக் கைப்பற்றிய யோசுவா
நூனின்
குமாரனாகிய யோசுவா
தேவனுடைய மனிதனாகிய
மோசேயின் காலத்திற்கு பின் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்துவதற்கு தெரிந்துகொள்ளப்பட்டவர்
தான் நூனின் குமாரனாகிய யோசுவா. இவருக்கு பெற்றோரால் கொடுக்கப்பட்ட பெயர் ஓசேயா (எண்ணாகமம்
13:8) என்பதாகும். மோசே இவருக்கு “யோசுவா” என்று பெயரிட்டார் (எண்ணாகமம் 13:16). யோசுவா
என்ற பெயர் எபிரெய மொழியில் “யெஹொஷுவா (Yehoshua)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு
என்ற பெயரும் கூட எபிரெய மொழியில் “யெஹொஷுவா (Yehoshua)” என்றே அழைக்கப்படுகின்றது.
யோசுவா மோசேக்கு உதவிக்காரராய் ஊழியம் செய்து வந்தார். யோசுவா, “ஆவியைப் பெற்ற மனிதன்”
என்று அழைக்கப்பட்டார் (எண்ணாகமம் 27:18). மோசே, இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து
கானான் தேசத்துக்கு வழிநடத்தி சென்றபொழுது, கானானிற்குள் செல்லுவதற்கு முன்பாக, கானான்
தேசத்தை சுற்றி பார்த்து வரும்படி, 12 தலைவர்களை கோத்திரத்துக்கு ஒருவராக தெரிந்தெடுத்து
அனுப்பினார். அதில், எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து யோசுவா தெரிந்தெடுத்து அனுப்பப்பட்டார்.
இஸ்ரவேலரின்
தலைவனான யோசுவா
கானானை சுற்றி
பார்த்து விட்டு, பன்னிரண்டு தலைவர்களும் இஸ்ரவேலின் பாளயத்திற்கு திரும்பி வந்த பொழுது,
பாளயத்தில் பெருங்கலகம் உண்டானது. அதன் காரணம் என்னவென்றால், கானானை சுற்றி பார்க்க
சென்ற தலைவர்களில் பத்து பேர் கானான் தேசத்தை கைப்பற்றுவது கடினம், அதனால் அதை சுதந்தரிக்கமுடியாது
என்று அந்த தேசத்தைக் குறித்து தவறான செய்திகளை இஸ்ரவேல் மக்கள் மத்தியில் பரவச் செய்தார்கள்.
ஆனால் யோசுவாவும், இன்னொரு தலைவராகிய காலேபும், மிகவும் நம்பிக்கையோடு கானானை எளிதாகப்
பிடித்துக்கொள்ளலாம் என்று உறுதியாகக் கூறினார்கள். இதனால் தேவகோபம் அந்த இடத்தில்
மூண்டு, இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்தை உடனே சுதந்தரிப்பதில்லை, நாற்பது வருடங்கள்
வனாந்திரத்தில் அலைந்து திரிய வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல், இஸ்ரவேல் ஜனங்களில்
யோசுவாவும், காலேபும், வனாந்திரத்தில் பிறந்த குழந்தைகளுமே கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பார்கள்
என்றும் கூறினார். சில காலம் கழித்து, தேவனுடைய மனிதனாகிய மோசே, தனது 120வது வயதில்
மரணமடைந்தார். அதன் பின்னர், யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தி சென்றார். கானான் தேசத்தைக்
கைப்பற்றும் பெரிய பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi19bavn4IcDyNlKQ0iIy_7t-_FEosvHsTusvF2-AUkYAsL-kujm0vD4q-ja3fNekDqh_qZjno7x8ydHs3Nez4W3MPvnp5KkAj7TPLU7SRVg_DoQlDEhwpiDdanWjaORZTFFd9oFe5u2tPo4ikgpprB24QgAa1k9IcYPpQtr52V5E6P_dUUAj6DRFjY/s320/0_TAA6-fGfHv4BDalR.jpg)
வாக்குத்தத்த தேசமாகிய கானான்
பாடம் எண் – 7ல் தேவன் ஆபிரகாமை அழைத்தத்தைப் பற்றியும், தேவன் ஆபிரகாமோடு செய்த
உடன்படிக்கையைப் பற்றியும் பார்த்தோம். தேவன் ஆபிரகாமை அவன் அறியாத ஒரு தேசத்திற்கு
போகும்படியாக அழைத்தார். ஆபிரகாம் தேவனை விசுவாசித்து, தான் போகும் இடம் இன்னதென்று
அறியாமல் புறப்பட்டு போனான். தேவன் ஆபிரகாமை கானான் தேசத்திற்கு நடத்தி சென்றார். ஆபிரகாம்
அங்கு ஒரு “அந்நியனாகவும், பரதேசியாகவும்” வாழ்ந்தான் (எபிரெயர் 11:8,9). தேவன் ஆபிரகாமிடம்
அவனுடைய சந்ததிக்கு கானான் தேசத்தை, வாக்குத்தத்த தேசமாகவும், அவர்களுடைய சொந்த பூமியாகவும்
கொடுப்பதாக உறுதி அளித்திருந்தார் (ஆதியாகமம் 17:8). ஆபிரகாமின் சந்ததியார் அந்நிய
தேசத்திலே 400 வருடங்கள் அடிமைகளாக இருப்பார்கள் என்று எகிப்தின் அடிமைத்தனத்தைப் பற்றியும்
முன்னறிவித்திருந்தார். கானான் தேசத்திலே குடியிருந்த கானானிய ஜாதிகளாகிய எமோரியரின்
அக்கிரமம் முழுமையடையும் காலத்திலே, இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்தைக் கைப்பற்றி,
தேவனுடைய நியாயத்தீர்ப்பை கானானியரில் நிறைவேற்றி, கானான் தேசத்தை தங்களுடைய வாக்குத்தத்த
தேசமாக சுதந்தரித்துக் கொள்ளுவார்கள் என்றும் கூறியிருந்தார் (ஆதியாகமம் 15:16). யோசுவா
கானானைக் கைப்பற்றியபோது இந்த வாக்குத்தத்தம் நிறைவேறியது.
யோர்தானுக்கு அப்புறமும், இப்புறமும்
யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் கானான் தேசத்தைக் கைப்பற்றுவதற்காக, அதன் எல்லையில்
நுழைவதற்கு முன்பாக, கரைபுரண்டு ஓடிய யோர்தான் நதியைக் கடக்க வேண்டியதிருந்தது. தேவன்
ஒரு அதிசயத்தை நடப்பித்து யோர்தான் நதியை பின்னிட்டு ஓடச் செய்து, ஒரு பாதையை உருவாக்கி,
இஸ்ரவேல் ஜனங்களை உலர்ந்த தரையின் வழியாக யோர்தான் நதியைக் கடக்கசெய்தார் (யோசுவா
3). யோர்தான் ஆற்றைக் கடப்பதற்கு முன்பாக இஸ்ரவேல் ஜனங்கள் தங்கியிருந்த “மோவாப் சமவெளி”
வேதாகமத்திலே “யோர்தானுக்கு அப்புறம் (beyond the Jordan)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது
(யோசுவா 12:1 – 6). இது “ட்ரான்ஸ்ஜார்டன் (Transjordan cities)” என்றும் அழைக்கப்படுகின்றது.
யோர்தான் ஆற்றைக்கடந்து இஸ்ரவேல் ஜனங்கள் சென்றடைந்த
கானான் தேசத்தின் எல்லைக்குட்பட்ட இடங்கள் “யோர்தானுக்கு இப்புறம் (Beside the
Jordan) என்று அழைக்கப்படுகின்றது (யோசுவா 12:7- 24). இந்த இடங்கள் “சிஸ்ஜார்டன்
(Cisjordan cities)” என்ற பெயராலும் அறியப்படுகின்றன.
கில்கால்
இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் ஆற்றைக் கடந்து, கானான் தேச எல்லைக்குட்பட்ட இடத்திலே
தங்கள் கூடாரங்களை அமைத்து தங்கியிருந்தார்கள். அப்பொழுது தேவன் அவர்களை நோக்கி “எகிப்து
தேசத்தின் நிந்தையை உங்கள் மேல் இராதபடி புரட்டிப்போட்டேன்” என்றார். அதனால் அந்த இடம்
“கில்கால்” என்று அழைக்கப்பட்டது. கானான் தேசத்தின் எல்லைக்குட்பட்ட இந்த இடத்தில்
தான் இஸ்ரவேல் ஜனங்கள் முதலாவதாக பஸ்காவை ஆசரித்தார்கள். பஸ்கா
பண்டிகையை ஆசரித்த மறுநாளிலே கானான் தேசத்தில் விளைந்த தானியத்தினால் செய்யப்பட்ட புளிப்பில்லாத
அப்பங்களையும், சுட்ட தானியங்களையும் சாப்பிட்டார்கள். அவர்கள் கானான் தேசத்தில் விளைந்தவைகளை
சாப்பிட ஆரம்பித்தபொழுது, மன்னா வானத்திலிருந்து பொழிவது நிறுத்தப்பட்டது (யோசுவா
5:10 – 12).
யோசுவாவின் மூன்று படையெடுப்புகள்
யோசுவா கில்காலிலிருந்து மேற்கு நோக்கி கானான் தேசத்திற்குள் மூன்று முக்கியமான
படையெடுப்புகளை நிகழ்த்தினார்.
Ø முதலாம் படையெடுப்பு
கானான் தேசத்தின் நடுப்பகுதியில் அமைந்திருந்த மலைப்பகுதிக்கு நேராக எரிகோ பட்டணம்
துவங்கி நடத்தப்பட்டது
Ø இரண்டாம் படையெடுப்பு
தென்பகுதியை நோக்கி செய்யப்பட்டது (யோசுவா 10:1)
Ø மூன்றாம் படையெடுப்பு
வடபகுதியை நோக்கி செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் தன்னுடைய
அண்டைய நாட்டின் ராஜாக்களை ஒன்றுதிரட்டி யோசுவாவிற்கு எதிராக அணிவகுத்தார்கள். யோசுவா
அவர்கள் எதிர்பார்த்திராத நேரத்தில் திடீர் தாக்குதலை நடத்தி அவர்களை வென்றார்.
வரைபடம்: Garry Stevens, historyinthebible.com
இந்த மூன்று படையெடுப்புகளின் மூலமாக யோசுவா மொத்தம்
31 ராஜாக்களை தோற்கடித்து அவர்களுடைய பட்டணங்களைக் கைப்பற்றினார் (இந்த 31 பட்டணங்களின்
பட்டியல் யோசுவா 12:7–24 ல் கொடுக்கப்பட்டுள்ளது). யோசுவா கானான் தேசத்தில் இந்த யுத்தங்களை
நடத்தினபொழுது, கானான் ஒரு தேசமாக இராமல், பல குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்த பல
பட்டணங்கள் அடங்கிய ஒரு நிலப்பரப்பாகவே இருந்தது. இஸ்ரவேலர் கானானியரை முற்றிலும் அழிக்காமல்,
சிறுசிறு கூட்டங்களாக ஆங்காங்கே விட்டுவைத்திருந்தனர். இவ்வாறு விட்டுவைக்கப்பட்ட கானானியர்
பின்நாட்களிலே இஸ்ரவேலருக்கு முள்ளுகளாகவும், கண்ணிகளாகவும் இருந்தார்கள் என்று வேதாகமத்தில்
கொடுக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலர் கானானியருடைய பழக்கங்களைக் கடைபிடித்து, ஆண்டவரால்
கைவிடப்பட்டு, எதிரிகளால் துன்புறுத்தப்படுவதும், பின்னர் அவர்கள் ஆண்டவரிடம் திரும்பும்பொழுது
ஆண்டவர் அவர்களை விடுவிக்கும்படி, அவர்களுக்காக நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுவதும்
தொடர்கதையாக நடந்துகொண்டேயிருந்தது. இதை வேதாகமத்தில் உள்ள “நியாயாதிபதிகள்” புஸ்தகத்திலே
வாசிக்கலாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM0L7rei4RjzZ8h_q9qGsUg53somZD29BXL7svoN6Sh5GJqdfWbj59QIV0sCE_mdwDXAVP2kAqzdl18I76Vtt8bz0S71qXkgi9IWptSXyRsRvdgi8_DtGiZbHloxjOZHBxG6rULfvbqjwjfy623w6RBwlyGSTV8TObaPBuXuGKARlMCl-vpk9nsgXJ/w200-h133/four-room-house.jpg)
அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்ட கானான் தேசத்திலே இஸ்ரவேலர் கட்டிய நான்கு அறைகளைக் கொண்ட வீடுகளில் ஒன்று
யோர்தானுக்கு அப்புறமான கோத்திரங்கள்
(Beyond the Jordan – Transjordan Tribes )
யோசுவாவிற்கு முன்பாக இஸ்ரவேலரை வழிநடத்தி வந்த தேவனுடைய மனிதனாகிய மோசேயின்
காலத்திலேயே இஸ்ரவேலின் சில கோத்திரத்தார் அவர்கள் குடிபெயருவதற்கென்று, யோர்தானுக்கு
அப்புறத்திலே பட்டணங்களை தெரிந்தெடுத்துக் கொண்டார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் 40 வருடங்கள்
வனாந்திரத்தில் அலைந்து திரிந்து, கானான் தேசத்தின் எல்லையில் வந்தபொழுது மோவாப் சமவெளியிலே
சீகோன், ஓக் என்கிற இரண்டு ராஜாக்களை வென்று அந்த இடத்தை கைப்பற்றினார்கள். அந்த இடங்கள்
வளம் வாய்ந்ததாயும், ஆடு மாடுகளை வளர்ப்பதற்கு தகுந்த இடமாயிருந்ததினாலும், இஸ்ரவேலின் ரூபன் கோத்திரத்தாரும், காத் கோத்திரத்தாரும்,
மனாசேயின் பாதி கோத்திரத்தாரும் இந்த பட்டணங்களை தங்களுக்கு தர வேண்டும் என்று மோசேயிடம்
கேட்டுக் கொண்டார்கள். அதன்படி மோசே இந்த பட்டணங்களை அவர்களுக்கு கொடுத்தார். இந்த
கோத்திரங்கள், “யோர்தானுக்கு அப்புறமான கோத்திரங்கள் (Transjordan Tribes)” என்று அழைக்கப்படுகின்றன.
யோர்தான் நதி யோர்தானுக்கு அப்புறமான கோத்திரங்கள்
இஸ்ரவேலின் மற்ற கோத்திரங்களின் சுதந்திரம்
யோசுவா கானானியப் பட்டணங்களை கைப்பற்றியபின், இஸ்ரவேலின் சுதந்திரத்தைப் பெறாத
மற்ற ஒன்பதரைக் கோத்திரங்களுக்கு இந்த பட்டணங்கள் சீட்டு இடப்பட்டு பிரித்துக் கொடுக்கப்பட்டன.
கோத்திரங்களுக்கு சீட்டு போட்டு பட்டணங்களை பங்கிடுவதற்கான பொறுப்பு ஆசாரியனாகிய எலெயாசாருக்கும்,
நூனின் குமாரனாகிய யோசுவாவிற்கும், கோத்திரப் பிதாக்களின் தலைவருக்கும் கொடுக்கப்பட்டது.
லேவி கோத்திரத்திற்கு மாத்திரம் சொந்தமாக பட்டணங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. லேவி
கோத்திரத்துக்கு இஸ்ரவேலின் நடுவே சுதந்திரம் கொடுக்கப்படவேண்டாம், ஏனென்றால் கர்த்தரே
அவர்களுடைய சுதந்திரம் என்று அவர்களுக்கு கூறப்பட்டிருந்தது (உபாகமம் 18:1,2). அதற்கு
பதிலாக இஸ்ரவேலின் மற்ற கோத்திரங்கள் தங்களுடைய சுதந்திரத்திலிருந்து லேவியர்கள் தங்குவதற்காகவும்,
பயன்படுத்துவதற்காகவும் பட்டணங்களை தானமாகக் கொடுத்தார்கள். இவ்வாறு அவர்களுக்கு
48 பட்டணங்கள் கொடுக்கப்பட்டன. அதனால் அவர்கள் மற்ற கோத்திரங்களின் நடுவே வசித்தார்கள்.
யோசுவா ஆசரிப்புக் கூடாரத்தை சீலோ என்கிற இடத்திலே நிறுவினார்.
(இஸ்ரவேலின் 12 கோத்திரங்களைப் பற்றி மேலும் அறிய “யாக்கோபும்,இஸ்ரவேலின் 12 கோத்திரங்களும்” என்கிற உயர்நிலை வகுப்பு பாடம் எண் – 8 ஐ வாசிக்கவும்).
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU4GnnPcnw9TAgEebAqxm5xUBVeMQqVlOowkJ-bbyY46hNh9A_H2QlXTA0CT-d-M_Ts2bL-Ttz6a_6t7Q2H-ICF1_Lirs1MJoG7p2cTbuPhi4leGahbKkyVeRw323wr6SA8n5xSE-y7mIpvW0yxEw5V7P4fGBbZIFXu-DemR700Zd9o1BtfUIwunzb/w200-h134/shiloh.jpg)
சீலோவிலே ஆசரிப்புக்கூடாரம் இருந்த நாட்களிலே பயன்படுத்தப்பட்ட கல்லாலான பலிபீடம்
அடைக்கலப் பட்டணம்
லேவி கோத்திரத்தாருக்கு கொடுக்கப்பட்ட பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலப்
பட்டணங்களாக குறிக்கப்பட்டன (யோசுவா 20:1-9). அடைக்கலப்பட்டணம் என்றால் முற்பகையின்றி
அறியாமல் அல்லது தவறுதலாக இன்னொருவரின் சாவிற்கு காரணமான நபர், பழிவாங்கப்படாமல், முறையான
நியாயவிசாரணைக்கு உட்படுத்தப்படும்வரைக்கும், பாதுகாப்பாக தங்கியிருக்கும்படி ஏற்படுத்தப்பட்டதுதான்
அடைக்கலப்பட்டணம். ஏதாவது ஒரு நபர் இப்படிப்பட்ட சூழ்நிலையில் அகப்படும்பொழுது, அவன்
ஓடிப்போய், அடைக்கலப்பட்டணத்தின் வாசலில் நின்று உள்ளே இருக்கும் ஆசாரியனிடம் நடந்த
சம்பவத்தைக் கூறவேண்டும். அப்பொழுது ஆசாரியன் அவனை உள்ளே சேர்த்துக் கொண்டு பாதுகாப்பு
அளிக்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் அவனை பழிவாங்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுக்கக்கூடாது.
அவனுக்கு சரியான நீதிவிசாரணை அளிக்கப்படும்வரைக்கும் அவனை பாதுகாப்பது அவர்களுடைய கடமையாகும்.
இஸ்றவேல் தேசத்திலே குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படக்கூடாது என்பதை வலியுறுத்தி கடைபிடிப்பதற்காக
அடைக்கலப்பட்டணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZGbmsH3pDmWJ7o69qbBsRUCtbksi_KBUBoiCXA0f1a1MhVf0J5tJxBq-F9dmGVaKCeg-1gVXo3dbSe9MPRLsw8I2lKJmdI24BBnou2DqgdSdLqayrszezeVhSmVPA6URl8H9Es-fVqE5jE0b_6CueQnyxjfR6ol3-MlFA81Mrjkqsbkh5IID7wim8/w178-h200/Cities_of_refuge.jpg)
இந்த அடைக்கலப்பட்டணங்கள், இஸ்ரவேல் பட்டணங்கள் எல்லாவற்றிலுமிருந்து ஒரு நாளுக்குள்
பிரயாணம் செய்து எட்டக்கூடிய தூரத்திலிருக்கும்படி தெரிந்தெடுக்கப்பட்டன (யோசுவா
20:9). அடைக்கலப்பட்டணங்களுக்கு செல்லும் பாதைகள் எந்த தடங்கலும் இல்லாமல் விரைவாக
பிரயாணம் செய்வதற்கு ஏதுவாக நன்கு பராமரிக்கப்பட்டன. இருவழி சந்திகளில் தெளிவாக பாதை
காட்டுவதற்காக, அடைக்கலம் என்று பொருள்படும் “மிக்லாத்” என்னும் பெயர் பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன.
அடைக்கலப்பட்டணங்களுள் ஒன்றான சீகேமின் சிதைவுகள்
அடைக்கலப்பட்டணங்கள், வரைபடம்: Scott Richardson
யோசுவாவின் கடைசி உரை
இஸ்ரவேலருடைய தலைவனாகிய யோசுவாவின் இறுதி நாட்களிலே, அவர் இஸ்ரவேல் கோத்திரங்களையெல்லாம்
ஒன்றாய் கூடி வரச் செய்து, இஸ்ரவேலருக்கு நடந்த சம்பவங்களையெல்லாம் விவரித்துக் கூறி,
தானும் தன்னுடைய குடும்பமும் என்றென்றைக்கும் கர்த்தரையே சேவிப்போம் என்றும், இஸ்ரவேல்
ஜனங்களும் தாங்கள் யாரை சேவிக்கப்போகிறோமென்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்களும் தாங்களும் கர்த்தரையே சேவிப்பதாக வாக்குக் கொடுத்தார்கள்.
அப்பொழுது யோசுவா இந்த வார்த்தைகளையெல்லாம் ஒரு நியாயப்பிரமாண புஸ்தகத்திலே எழுதினார்.
பின்னர் அவர் ஒரு பெரிய கல்லை எடுத்து, கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த
கர்வாலி மரத்தின் கீழ் அதை சாட்சியாக நாட்டினார்.
சீகேமிலே யோசுவா நிறுத்தினதாகக் கருதப்படும் மஸாபா (massabah) என்னும் கல். biblearchaeologyreport.com
தேவனுடைய மனிதனாகிய யோசுவா தனது நூற்றுப்பத்தாவது
வயதிலே இறந்து போனார். யோசுவா இறந்தபின் இஸ்ரவேல் தேசத்திலே பல நியாயாதிபதிகள் எழும்பி
இஸ்ரவேலரை ஆண்டார்கள்.
வேதபகுதி: யோசுவாவின்
புஸ்தகம்
மனப்பாட வசனம்: யோசுவா
24:15
பாடப் பயிற்சிகள்
கோடிட்ட இடத்தை நிரப்பவும்
1.
இஸ்ரவேல் ஜனங்கள் ………………………… முதலாவதாக பஸ்காவை ஆசரித்தார்கள்.
2.
யோசுவா மூன்று படையெடுப்புகளின் மூலம் …………………. பட்டணங்களைக்
கைப்பற்றினார்
3.
யோசுவா ஆசரிப்புக் கூடாரத்தை …………………. என்கிற இடத்திலே
நிறுவினார்.
4.
லேவி கோத்திரத்துக்கு …………………. பட்டணங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டது.
ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. கானான் ஏன் வாக்குத்தத்த தேசம் என்று
அழைக்கப்பட்டது?
2. கானானியர்
இஸ்ரவேலருக்கு ஏன் முள்ளுகளாகவும், கண்ணிகளாகவும் இருந்தார்கள்?
3. யோர்தானுக்கு அப்புறமான பட்டணங்கள் என்றால் என்ன?
4. லேவி கோத்திரத்தின்
சுதந்திரம் எது?
கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்
1. அடைக்கலப்பட்டணம்
என்றால் என்ன என்பதைப் பற்றி விவரிக்கவும்.