Tuesday, May 31, 2022

முகங்குப்புற விழுந்த தாகோன் (Dagon Falls Before The Ark of God), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 14

ஆரம்பநிலை வகுப்பு (PRIMARY)

வயது: 6 - 7 வயது

வகுப்பு: I & II

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 14

முகங்குப்புற விழுந்த தாகோன்

இஸ்ரவேல் தேசத்தில் நியாயாதிபதிகள் ஆண்டு வந்த காலத்தைப் பற்றி இதற்கு முன்பாகப் படித்த கிதியோனைப் பற்றிய பாடத்தில் பார்த்தோம். கிதியோன் காலத்திற்கு பின்பாக இஸ்ரவேலிலே பல நியாயாதிபதிகள் இஸ்ரவேல் தேசத்தை ஆளுகை செய்தார்கள். அதில் ஒருவர் தான் ஏலி. ஏலி, சீலோ என்கிற இடத்திலே இருந்த ஆசரிப்புக் கூடாரத்திலே பிரதான ஆசாரியராகவும் இருந்தார். அப்பொழுது ஒருமுறை இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக பெலிஸ்தியர் என்கிற ஒரு தேசத்தினர் யுத்தம் செய்ய வந்தார்கள். யுத்தம் மிகவும் கடினமாயிருந்தது.  இஸ்ரவேல் ஜனங்களால் பெலிஸ்தியரை யுத்தத்தில் தோற்கடிக்கமுடியவில்லை. அப்பொழுது இஸ்ரவேல் தலைவர்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. 

சீலோவில் இருந்த ஆசரிப்புக்கூடாரத்திற்குள் வைக்கப்பட்டிருந்த உடன்படிக்கைப்பெட்டியைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். உடன்படிக்கைப்பெட்டி என்பது சித்தீம் என்கிற ஒருவிதமான மரத்தின் பலகைகளால் செய்யப்பட்டு தங்கத்தினால் மூடப்பட்ட ஒரு பெட்டி. இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் வனாந்திரம் என்கிற ஒரு இடத்தில் தங்கியிருந்தபொழுது, ஆண்டவர் இஸ்ரவேலரின் தலைவராகிய மோசேயிடம், இந்த உடன்படிக்கைப் பெட்டியை செய்து, அதை ஆசரிப்புக்கூடாரத்திற்குள் உள்ள மகாபரிசுத்தஸ்தலம் என்கிற ஒரு முக்கியமான இடத்தில் வைக்கும்படி கூறினார். இன்று நாம் தேவனை ஆராதிப்பதற்கு தேவாலயத்திற்கு செல்லுவது போல, அக்காலத்திலே இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை ஆராதிப்பதற்கு சென்ற இடம் தான் ஆசரிப்புக்கூடாரம். அங்கு தான் உடன்படிக்கைப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. 

ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரி

உடன்படிக்கைப்பெட்டி வைக்கப்பட்டிருந்த மகாபரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரதானஆசாரியன் மாத்திரமே வருடத்திற்கு ஒருமுறை செல்லமுடியும். உடன்படிக்கைப்பெட்டி தேவனுடைய மகிமை நிறைந்த பெட்டி. அதனால் அந்த பெட்டி கொண்டுசெல்லப்படுகிற இடங்களிலெல்லாம் அற்புதம் நடைபெறும். ஆகவே அந்த உடன்படிக்கைப்பெட்டியை பெலிஸ்தியரோடு யுத்தம் நடைபெறுகிற யுத்தகளத்திற்கு கொண்டு வந்தால் வெற்றி கிடைக்கும் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆகவே உடன்படிக்கைப்பெட்டியை யுத்தகளத்திற்கு கொண்டுவரும்படியாக, ஆசரிப்புக்கூடாரத்திலிருந்த ஆசாரியர்களுக்கு செய்தி அனுப்பினார்கள். 

உடன்படிக்கைப்பெட்டியின் மாதிரி

ஏலி பிரதான ஆசாரியனாயிருந்தார். அவருக்கு வயதாகிவிட்டபடியால், அவருடைய இருமகன்களாகிய ஓப்னியும், பினெகாசும் ஆலயத்திலே ஆசாரியர்களாயிருந்து ஆசரிப்புக்கூடாரத்தின் வேலைகளை கவனித்து வந்தார்கள். அப்பொழுது உடன்படிக்கைப்பெட்டியை யுத்தகளத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்கிற தகவல் அவர்களுக்கு வந்தது. ஓப்னியும், பினெகாசும் ஆசாரியர்களாயிருந்த பொழுதும் அவர்கள் தேவனை அறியவில்லை. அதனால் அவர்கள் நீதியான செயல்களைச் செய்யாமல், தேவன் விரும்பாத செயல்களையே செய்து வந்தார்கள். இந்த தருணத்திலும், உடன்படிக்கைப் பெட்டியை யுத்த களத்திற்கு கொண்டு செல்லலாமா என்று தேவனிடம் விசாரிக்காமல், தங்களுடைய சொந்த விருப்பத்தின்படி உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் சென்றார்கள்.

அதனால் அந்த யுத்தத்திலே தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவி செய்யவில்லை. பெலிஸ்தியர் இஸ்ரவேல் ஜனங்கள் மேல் வெற்றிக்கொண்டார்கள். அதுமட்டுமல்லாமல், உடன்படிக்கைப்பட்டியையும் கைப்பற்றி அதை தங்களுடைய பட்டணமாகிய அஸ்தோத் என்கிற இடத்திற்கு கொண்டு சென்றார்கள். 

பெலிஸ்தியர் தேவனுடைய உடன்படிக்கைப்பட்டியை தங்களுடைய தெய்வமாகிய “தாகோன்” என்கிற மீன் கடவுளுடைய கோவிலிலே கொண்டு போய் வைத்தார்கள். கிதியோன் பாடத்தில் நாம் பார்த்த பாகால் என்கிற கடவுளின் தந்தையாக கருதப்படுவது தான் இந்த தாகோன் கடவுள். 

தாகோன் என்னும் மீன் கடவுள்

மறுநாள் காலமே அஸ்தோத் ஊர் மக்கள் தாகோன் கோவிலிலே வைக்கப்பட்டிருந்த உடன்படிக்கைப் பெட்டியைப் பார்ப்பதற்காக சென்றார்கள். அப்பொழுது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்தது. ஊர் மக்கள் தாகோனை எடுத்து அதை மறுபடியும் அதன் இடத்திலே நிறுத்தி வைத்துவிட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். 

மறுநாளும் அதேபோல உடன்படிக்கைப் பெட்டியைப் பார்ப்பதற்கு ஊர்மக்கள் வந்தார்கள். அப்பொழுது தாகோன் மறுபடியும் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடப்பதைப் பார்த்தார்கள். அதுமட்டுமல்லாமல் தாகோனின் தலையும், அதின் இரண்டு கைகளும் உடைபட்டு கோவிலின் வாசற்படியின்மேல் கிடந்தது. தாகோனின் உடல் மாத்திரம் உடையாமல் இருந்தது. இதைப்பார்த்த எல்லாருக்கும் பயம் உண்டாயிற்று. கோவில் பூஜாரிகளும் இதைப்பார்த்து பயந்தார்கள். அந்நாளிலிருந்துஆந்த கோவில் பூஜாரிகள் யாரும் அந்த வாசற்படியை மிதிப்பதில்லை. 

பெலிஸ்தரின் பிரச்சனை அதோடு நின்றுவிடவில்லை. அஸ்தோத் ஊர் மக்களை ஒரு கொடிய நோய் தாக்க ஆரம்பித்தது. அப்பொழுது அந்த ஊர் மக்கள் தங்கள் தவறை உணர்ந்தார்கள். தாங்கள் கர்த்தருடைய பெட்டியை எடுத்துக் கொண்டு வந்ததினால் தான் தங்களுக்கு இவ்வாறு சம்பவிக்கிறது என்று உறுதிபடுத்திக்கொண்டார்கள். அதனால் உடன்படிக்கைப் பெட்டியை இஸ்ரவேலரிடமே திரும்பிக் கொடுப்பதற்கு தீர்மானித்தார்கள். அதன்படியே அவர்கள் உடன்படிக்கைபெட்டியை, ஒரு புது வண்டியில் ஏற்றி, அதில் இரண்டு பசுக்களைக் கட்டி, அந்த வண்டியில் தாங்கள் செய்த குற்றத்திற்கு நிவாரணமாக குற்றநிவாரணபலியையும் ஏற்றி, உடன்படிக்கைப் பெட்டியை இஸ்ரவேல் மக்களிடத்திற்கே திரும்ப அனுப்பினார்கள். 

வேதபகுதி: 1 சாமுவேல் 4 – 6

மனப்பாட வசனம்: உபாகமம் 32:39


Please click the link to visit the English Blog for Sunday School Lessons in English

For Sunday School activities and stories in English

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்:

1.    பெலிஸ்தியர் இஸ்ரவேலரிடமிருந்து எதை எடுத்துச்         சென்றார்கள்?  ……………………………………..

2.    உடன்படிக்கைப் பெட்டி எங்கு வைக்கப்பட வேண்டும்?    …………..............................

3.    பெலிஸ்தியர் உடன்படிக்கைப் பெட்டியை எங்கு கொன்டு சென்றார்கள்?  ……………………………….

     4.    பெலிஸ்தியருடைய கடவுளின் பெயர் என்ன? ..............................…..

     5.    தாகோன் இரண்டாம் முறை விழுந்தபொழுது, அதினுடைய தலையும், கால்களும் எங்கு கிடந்தது? ……………………………… 

பொருத்துக:    

1.     பெலிஸ்தியர் யுத்தத்திற்கு பின் பிடித்துச் சென்றது

(உடன்படிக்கைப் பெட்டி / நாணற்பெட்டி)

2.    பெலிஸ்தியர் உடன்படிக்கைப் பெட்டியை வைத்தது

(தாகோனின் அருகில் / மரத்தின் அருகில்)

3.    தாகோனின் எது மாத்திரம் உடையாமல் இருந்தது?

(தலை / உடல்)

4.    பெலிஸ்தியர் உடன்படிக்கைப் பெட்டியை

(திரும்பக் கொடுத்தார்கள் / உடைத்தார்கள்).

5.    பெலிஸ்தியர் உடன்படிக்கைப் பெட்டியை அனுப்பின   வண்டியில் எது பூட்டப்பட்டிருந்தது? (குதிரை / பசு).







No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...