Wednesday, June 24, 2020

பஞ்சாகமங்கள் (The Pentateuch), இடைநிலை வகுப்பு (Intermediate), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 2

இடைநிலை வகுப்பு (INTERMEDIATE) 
வயது: 12 - 13 வயது
வகுப்பு: VII & VIII
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 2
பஞ்சாகமங்கள் 

Please click the link to visit the English Blog for Sunday School Lessons in English

பரிசுத்த வேதாகமத்தின் முதல் ஐந்து புஸ்தகங்களான ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகிய புஸ்தகங்களை “பஞ்சாகமங்கள்” என்று அழைக்கிறோம். பஞ்சாகமங்கள் என்கிற தமிழ் வார்த்தை, “பென்டாட்யூக்” என்கிற கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பாகும். அதற்கு “ஐந்து சுருள்களின் பெட்டி” என்று அர்த்தம். (1) இவற்றை நியாயப்பிரமாண புஸ்தகங்கள் என்றும் அழைக்கிறோம். பஞ்சாகமங்களின் எபிரெயப் பெயர் “தோரா” என்பதாகும். தோரா என்பதற்கு “நியாயப்பிரமாணம்” என்று அர்த்தம். இவை “மோசேயின் நியாயப்பிரமாணம் அல்லது மோசேயின் ஐந்து புஸ்தகங்கள்” என்றும் அழைக்கப்படுகின்றன. உலகத்தின் வரலாறு மற்றும் தேவன் இஸ்ரவேலருக்கு கொடுத்த வெவ்வேறு சட்டங்கள் ஆகியவை அடங்கிய ஐந்து புஸ்தகங்களின் தொகுப்பே பஞ்சாகமம். 

தோரா என்று அழைக்கப்படும் எபிரெய வேதாகமத்தின் பஞ்சாகமங்கள் எழுதப்பட்ட தொன்மைவாய்ந்த தோல்சுருள்

ஆக்கியோன்:

பஞ்சாகமத்தை எழுதினது மோசே என்று எல்லாராலும் அங்கீகரிக்கப்படுகிறது. இந்த புஸ்தகங்களை எழுதினது மோசே என்று இந்த புஸ்தகங்களில் தெரியப்படுத்தப்படாவிட்டாலும், வேதத்தின் பல பகுதிகளில் அதற்கான ஆதாரத்தை நம்மால் பார்க்கமுடியும். (2)

1.    பஞ்சாகமங்களிலிருந்து கிடைக்கக்கூடிய ஆதாரம்: தேவன் தனக்கு கற்றுக் கொடுத்தவைகளை மோசே எழுதிவைத்தார் என்று நாம் பார்க்கமுடியும் (யாத்திராகமம் 24:4; உபாகமம் 31:9).

2.    பழைய ஏற்பாட்டின் மற்ற புஸ்தகங்களிலிருந்து கிடைக்கக்கூடிய ஆதாரம்: பழைய ஏற்பாட்டின் மற்ற புஸ்தகங்கள் மோசே நியாயப்பிரமாணத்தை எழுதினதாகக் கூறுகின்றன (யோசுவா 8:32; II நாளாகமம் 35:6)

3.      புதிய ஏற்பாட்டிலிருந்து, இயேசு கிறிஸ்துவின் வாக்குகளிலிருந்தும் கிடைக்கக்கூடிய ஆதாரம் (மத்தேயு 19:7, 8; லூக்கா 24:27, 44; யோவான் 5:46, 47) 

பஞ்சாகமப் புஸ்தகப் பெயர்களின் அர்த்தங்கள்:

ஆதியாகமம்: ஆதி + ஆகமம். ஆதி என்றால் ஆரம்பம் அல்லது துவக்கம் என்று அர்த்தம். இந்த உலகத்தின் எல்லா நிகழ்வுகளின் துவக்கமும் இந்த புஸ்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால் இதை ஆதியாகமம் என்று அழைக்கிறோம். இந்த புஸ்தகத்தில் உலகத்தின் துவக்கம், முதல் மனிதன் உருவாக்கப்பட்டது, முதல் பாவம், மொழிகளின் தோற்றம், இனங்கள் மற்றும் நாடுகளின் தொடக்கம் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. 

யாத்திராகமம்: யாத்திரை + ஆகமம். ஆங்கிலத்தில் இதன் பெயர் “எக்ஸோடஸ் (Exodus)” என்பதாகும். “எக்ஸோடஸ்” என்கிற வார்த்தை “எக்ஸோடோஸ் (exodos)” என்கிற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்ததாகும். அதற்கு “வெளியே புறப்படுதல்” என்று அர்த்தம். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கானான் தேசத்தை நோக்கி செய்த பயணத்தை விளக்குவதால் இதை யாத்திராகமம் என்று அழைக்கிறோம். 

லேவியராகமம்: லேவியர் + ஆகமம். தேவனுக்கு முன்பாக பலி செலுத்துவதற்கும், தூபம் காட்டுவதற்கும் தேவன் ஆரோனின் சந்ததியாரைத் தெரிந்தெடுத்தார். அவர்கள் “ஆசாரியர்” என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு உதவியாக ஆசரிப்புக் கூடாரத்தின் பொருட்களை சுமப்பது, காவல் காப்பது போன்ற உதவி ஊழியங்களை செய்வதற்கு தனியாகப் பிரித்தெடுக்கப்பட்ட கோத்திரம் தான் லேவி கோத்திரம். இவர்களை லேவியர் என்று அழைக்கிறோம். அவர்களுக்குரிய சட்டதிட்டங்கள் இந்த புஸ்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால், இதை லேவியராகமம் என்று அழைக்கிறோம். 

எண்ணாகமம்: எண் + ஆகமம். இஸ்ரவேல் கோத்திரங்களின் ஜனத்தொகை எடுக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறபடியால் இது எண்ணாகமம் என்று அழைக்கப்படுகிறது. 

 
 எருசலேமிலுள்ள கெதேஃப் ஹின்னோம் (Ketef Hinnom) என்கிற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட  கிமு 600ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வெள்ளி தாயத்து, இதன் உள்ளில் எண்ணாகமம் 6:24 - 26 பொறிக்கப்பட்டுள்ளது, Biblicalarcheology.org

உபாகமம்: உப + ஆகமம். இந்த புஸ்தகத்தின் ஆங்கிலப் பெயர் “ட்யூட்ரானமி (Deuteronomy)” என்பது ட்யூட்டராஸ் (Deuteros) மற்றும் நோமோஸ் (Nomos) ஆகிய இரண்டு கிரேக்க வார்த்தைகளின் அடிப்படையில் உருவானதாகும். இதற்கு அர்த்தம் “இரண்டாம் சட்டம் (Second Law) “ என்பதாகும். மோசே மரணமடையுமுன்பாக முதல் நான்கு புஸ்தகங்களில் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் ஒரு சுருக்கமான உரையாக மறுபடியும் எடுத்து கூறினபடியால். இதை “உப” ஆகமம் என்று அழைக்கிறோம். அதாவது மறுபடியும் கூடுதலாகக் கொடுக்கப்பட்ட சட்டம் என்று அர்த்தம் ஆகும். (3) 

பஞ்சாகமத்தின் பொருளடக்கம்:

பஞ்சாகமப் புஸ்தகங்கள் உலக சிருஷ்டிப்பு (படைப்பு) முதல் மோசேயின் மரணம் (யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை கானான் தேசத்திற்கு அழைத்து செல்லுவதற்கு சில நாட்கள் முன், கி.மு. 1406) வரை உள்ள சம்பவங்களை விளக்குகின்றன. மொத்தமாக 2760 வருட சரித்திரம் வேதாகமத்தின் முதல் ஐந்து புஸ்தகங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. 

ஆதியாகமம்

உலக சிருஷ்டிப்பு முதல் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திற்கு குடிபெயர்ந்த யோசேப்பின் காலம் வரை

யாத்திராகமம்1 அதிகாரம் முதல் 12:40,41 வரை

இஸ்ரவேல் ஜனங்களின் 430 வருட எகிப்திய அடிமைத்தனத்தைப் பற்றியும் அதிலிருந்து வெளியே வருவதைப் பற்றியும்

யாத்திராகமம்12:40,41 முதல் எண்ணாகமம்14:34 வரை

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து கானான் நோக்கி செய்த ஒரு வருட பயணத்தைப் பற்றி கொடுக்கப்பட்டிருக்கிறது

எண்ணாகமம்14:34 முதல் கடைசி அதிகாரம் வரை

இஸ்ரவேல் ஜனங்களின் 40 வருட வனாந்திர பயணம்

உபாகமம்

மோசே மரிப்பதற்கு முன் கொடுத்த இறுதி உரை. இதை உரைப்பதற்கு ஒன்று இரண்டு வாரங்கள் மட்டுமே எடுத்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்

தொன்மைவாய்ந்த (கிபி 2 / 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த) தோரா / பஞ்சாகமங்கள் அடங்கிய என்கேதி தோல்சுருள் (En-Gedi Scroll), வேதாகம பட்டணமாகிய என்கேதியில் ஒரு பண்டையகால யூத தேவாலயத்தை அகழ்வாராய்ந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது
என்கேதி பட்டணத்தில் தோல்சுருள் கண்டுபிடிக்கப்பட்ட யூததேவாலயம்

நியாயப்பிரமாணம் – இனி வெளிப்படப்போகிறவைகளின் நிழல்

நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறது என்று புதிய ஏற்பாட்டில் கொலோசெயர் 2:17 மற்றும் எபிரெயர் 10:1ல் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால், அதன் அர்த்தம் என்ன? நாம் ஒரு நிழலைப் பார்க்கும் பொழுது, அந்த நிழலை ஏற்படுத்துகின்ற ஒரு நிஜமான பொருள் அருகில் எங்கோ இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அதைப் போலவே நியாயப்பிரமாணம் ஒரு நிழல் அதின் நிஜமான பொருள் இயேசு கிறிஸ்துவே. இதை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம். 

பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்கா பண்டிகையின் பொழுது ஒரு பஸ்கா ஆட்டுக்குட்டியை பலியிட்டார்கள். அந்த பஸ்கா ஆட்டுக்குட்டி, புதிய ஏற்பாட்டில் உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும் (1 கொரிந்தியர் 5:7). பழைய ஏற்பாட்டை கவனமாய் வாசிப்பதன் மூலமாக நம்மால் புதிய ஏற்பாட்டை நன்றாக விளங்க முடியும். 

மனப்பாட வசனம்: ரோமர் 7:6,7 

ஆதார நூற்களின் பட்டியல்:

1. Random House Kernerman Webster's College Dictionary, © 2010 K Dictionaries Ltd. Copyright 2005, 1997, 1991 by Random House, Inc. All rights reserved.

2. About the first five books. (Retrieved 5th August 2020 from https://whataboutjesus.com/study-bible/book-by-book/bible-introduction/about-the-first-five-books/)

3. Fleming, D. Entry for 'Deuteronomy'. Bridgeway Bible Dictionary. https://www.studylight.org/dictionaries/bbd/d/deuteronomy.html. 2004.

(மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களிலிருந்து, இந்த புஸ்தகத்தை ஆக்கியோர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது) 

For Sunday School activities and stories in English


 

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    பஞ்சாகமங்களின் எபிரெயப் பெயர் “……………………….”

2.    “இரண்டாம் சட்டம்” என்று அர்த்தமுடைய புஸ்தகத்தின் பெயர் ………………………………

3.    மொத்தமாக …………………….. வருட சரித்திரம் வேதகமத்தின் முதல் ஐந்து புஸ்தகங்களில் விளக்கப்பட்டிருக்கிறது.

4.    …………………… ஆட்டுக்குட்டி, உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும்.

 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும் 

1.    “பஞ்சாகமம்” என்கிற பெயரின் அர்த்தம் என்ன?

 

2.    பஞ்சாகமத்தை எழுதினது யார்?

 

3.      உபாகமத்தில் என்ன கொடுக்கப்பட்டிருக்கிறது? 

4.     “நியாயப்பிரமாணம் இனி வரப்போகிறவைகளின் நிழல்” என்பதன் அர்த்தம் என்ன?  

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.    பஞ்சாகமப் புஸ்தகங்களின் பெயர்களை விளக்கவும்?




 

நோவா காலத்து வெள்ளம் (Noah Makes an Ark), இளநிலை வகுப்பு (Junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 2

இளநிலை வகுப்பு (JUNIOR) 
வயது: 10 - 11 வயது
வகுப்பு: V & VI

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை. 
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 2
நோவா காலத்து வெள்ளம்

தேவன் முதலாவதாக படைத்த ஆதாமுக்கும், ஏவாளுக்கும் அநேகம் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களில் மூன்று பிள்ளைகளின் பெயர்கள் (காயீன், ஆபேல், சேத்) மட்டுமே வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் மூலமாய் ஜனங்களின் எண்ணிக்கை பூமியில் அதிகரிக்க ஆரம்பித்தது. நாம் முதலாவது பாடத்தில் பார்த்தது போல ஆதாமும், ஏவாளும் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் முதலாவது பாவத்தில் விழுந்தார்கள். அவர்களுக்கு ஸ்திரீயின் வித்தாக ஒரு இரட்சகரைத் தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார். சாத்தான் இரட்சகரைப் பிறக்கவிடாமல் தடுப்பதற்காக வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பாவத்தை புகுத்தி அதன்மூலமாக தேவனுடைய கோபத்தினால் மனிதர்கள் அழிக்கப்பட வேண்டும் என்று அவன் நினைத்தான். 

ஆதாமுக்கு பத்தாம் தலைமுறையான நோவாவின் காலத்தில் பூமியில் பாவம் பெருகினது. பூமியில் மனிதனை படைத்ததற்காக தேவன் மனம் வருந்தும் அளவிற்கு பாவம் பெருகினது. தாம் உண்டு பண்ணின மனிதர்களையும், பூமியில் வாழ்ந்த எல்லா உயிரினங்களையும் அழிக்க வேண்டும் என்று தேவன் எண்ணினார். ஆனால் பூமியில் வாழ்ந்த ஒரு மனிதனுக்கு ஆண்டவரிடத்தில் இரக்கம் கிடைத்தது. அவன் பெயர் நோவா. நோவா தேவனுக்குப் பயந்து நீதியாய் நடந்தான். நோவாவுக்கு சேம், காம், யாப்பேத் என்கிற மூன்று மகன்கள் இருந்தார்கள். 

ஆண்டவர் நோவாவிடம் தாம் இந்த பூமியையும் அதில் வாழும் எல்லா உயிரினங்களையும் அழிக்கப் போவதாகவும், அவன் தன்னையும், தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுவதற்காக ஒரு பேழையை (பெரிய கப்பலை) உண்டு பண்ணும்படியாகவும் கூறினார். அந்த பேழையை கொப்பேர் என்கிற மரத்தினால் செய்து, தண்ணீர் புகாதபடிக்கு உள்ளேயும், வெளியேயும் கீல் பூசும்படியாக சொன்னார். அந்த பேழை எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் என்கிற அளவுகளையும் ஆண்டவரே கொடுத்தார். அந்த பேழையை மூன்று அடுக்குகள் (மாடிகள்) உள்ளதாய் செய்ய வேண்டும், அதில் ஜன்னல், கதவுகளை எங்கு அமைக்க வேண்டும் எல்லாவற்றையும் அவரே காட்டிக் கொடுத்தார். 

பூமியில் வாழ்ந்த எல்லா மிருக ஜீவன்களையும் பேழைக்குள் கொண்டு   போகும்படியாகக் கூறினார். சுத்தமான மிருகங்களில் ஆணும், பெண்ணுமாக ஏழு ஜோடி மிருகங்களும், சுத்தமல்லாத மிருகங்களில் ஒரு ஜோடியும் தெரிந்தெடுக்கும்படியாகக் கூறினார். அவைகளுக்கான உணவுப் பொருள்களையும் சேகரித்து வைக்கும்படியாகவும் கூறினார். நோவா ஆண்டவர் தன்னிடம் சொன்ன எல்லாவற்றையும் செய்து முடித்தார். 

எல்லாம் ஆயத்தமானவுடன் ஆண்டவர் நோவாவையும் அவன் குடும்பத்தையும் பேழைக்குள் போகும்படியாகக் கூறினார். நோவாவும், அவன் மனைவியும், நோவாவின் மூன்று மகன்களும், அவர்கள் மனைவிகளும் வரப்போகும் பேராபத்திலிருந்து தப்பும்படியாக பேழைக்குள் போனார்கள். அவர்கள் பேழைக்குள் போனவுடன் ஆண்டவரே பேழையின் கதவை அடைத்தார். 

Jan van 't Hoff/Gospelimages.com

அதன்பின்னர், பூமியின்மேல் மழை பெய்யத் தொடங்கினது. இரவும் பகலும் நாற்பது நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. பூமிக்கு அடியில் ஆழத்தில் உள்ள ஊற்றுகளும் திறக்கப்பட்டது. வானத்தின் மதகுகள் திறக்கப்பட்டது போல வெள்ளம் வானத்திலிருந்து ஊற்றினது. நோவாவுக்கு அப்பொழுது 600 வயது. தண்ணீர் அதிகரித்து, பேழையை மேலெழும்பப் பண்ணி அதை மிதக்கப் பண்ணினது. உயர்ந்த மலைகளும் தண்ணீரால் மூடப்பட்டது. பேழைக்கு வெளியே இருந்த எல்லா உயிரினங்களும் வெள்ளத்தால் அழிக்கப்பட்டது. தண்ணீர் நூற்றைம்பது நாட்கள் வரைக்கும் புரண்டோடிக் கொண்டிருந்தது. 

Jan van 't Hoff/Gospelimages.com

ஆண்டவர் நோவாவை நினைத்து காற்றை வீசப் பண்ணினார். அப்பொழுது தண்ணீர் அமர்ந்தது. பேழை அரராத் என்கிற மலையிலே வந்து தங்கினது. தண்ணீர் குறைந்து போயிற்றா என்று அறியும் படியாக நோவா ஒரு புறாவை வெளியே விட்டான். புறா  தன் காலை வைப்பதற்கேற்ற காய்ந்த இடம் இல்லாதபடியால் திரும்பவும் பேழைக்கே வந்து விட்டது. ஏழு நாட்கள் கழித்து நோவா மறுபடியும் புறாவை வெளியே விட்டார். அப்பொழுது அது ஒரு ஒலிவமரத்தின் இலையைக் கொத்தி கொண்டு வந்திருந்தது. ஏழுநாள் கழித்து அவன் புறாவை மறுபடியும் வெளியே விட்டான் அப்பொழுது அது அவனிடத்திற்கு திரும்ப வரவில்லை. 

அவர்கள் பேழைக்குள் சென்ற நாளிலிருந்து, ஒரு வருடம் முடிவடையும் போது, ஆண்டவர் அவர்களை வெளியே வரும்படியாகக் கூறினார். ஆண்டவர் நோவாவையும், அவன் குடும்பத்தையும், எல்லா மிருக ஜீவன்களையும் ஆசீர்வதித்து, மிகவும் திரளாகப் பெருகி பூமியை நிரப்பக்கடவர்கள் என்றும் ஆசீர்வதித்தார். நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான மிருகங்களிலும், பறவைகளிலும் சிலவற்றை பலி செலுத்தினான். ஆண்டவர் நோவாவின் பலியை ஏற்றுக் கொண்டு தாம் மனிதன் நிமித்தமாக இனி பூமியை அழிப்பதில்லை என்று வாக்குக் கொடுத்தார். வெள்ளத்தால் இனி பூமி அழிக்கப்படாதபடிக்கு மனிதனோடு தாம் ஏற்படுத்தும் உடன்படிக்கைக்கு (ஒப்பந்தத்திற்கு) அடையாளமாக “வானவில்லை” வானத்தில் அடையாளமாக வைப்பதாகவும் கூறினார். 

Jan van 't Hoff/Gospelimages.com

வேத பகுதி: ஆதியாகமம் 6 – 9:1-17

மனப்பாட வசனம்: விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான். (எபிரெயர்11:7)               

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    தேவன் நோவாவிடம்  பேழையை ………………………….. என்கிற மரத்தினால் செய்யசொன்னார்.

2.    தண்ணீர் ………………………….. நாட்கள் வரைக்கும் புரண்டோடிக் கொண்டிருந்தது.

3.    பேழை ………………………….. என்கிற மலையிலே வந்து தங்கினது.

4.    வெள்ளத்தால் இனி பூமி அழிக்கப்படாதபடிக்கு தேவன் மனிதனோடு ஏற்படுத்தின உடன்படிக்கைக்கு அடையாளமாக “………………………………” வைத்தார்.

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  நோவாவுடன் எந்த மிருகங்களை பேழைக்குள் கொண்டு போகும்படியாகத் தேவன் கூறினார்?

 

2.  பூமியில் வெள்ளம் உயருவதற்கு எவையெல்லாம் காரணமாயிருந்தன?

 

3.  பூமியில் தண்ணீர் குறைந்திருக்கிறதா என்று அறிவதற்கு நோவா செய்து என்ன?

 

4.  பேழையிலிருந்து வெளியே வந்தவுடன் நோவா செய்தது என்ன? 

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.    நோவா செய்த பேழையின் சிறப்புகளைப் பற்றி எழுதவும்? 





தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...