Sunday, August 22, 2021

ராகாபின் சிகப்பு கயிறு (Rahab and the Scarlet Thread), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 12

 KINDER (பாலர் வகுப்பு) 

வயது – 4 & 5     

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை. 
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.   

பாடம் – 12

ராகாபின் சிகப்புக் கயிறு

                    இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து கானான் தேசத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தார்கள். கானான் தேசத்தை இஸ்ரவேலருடைய சொந்த தேசமாக கொடுப்பதாக ஆண்டவர் வாக்குக் கொடுத்திருந்தார். கானான் தேசத்தை வேறு பல ராஜாக்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். அதனால் இஸ்ரவேல் ஜனங்கள் போர் செய்து கானான் தேசத்தைப் பிடிக்க வேண்டியிருந்தது.

                      இஸ்ரவேல் மக்களை நடத்தி வந்த தலைவனுடைய பெயர் யோசுவா. இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தைப் பிடிப்பதற்காக சென்று கொண்டிருந்தபொழுது முதலாவதாக எரிகோ பட்டணத்தைப் பிடிக்க வேண்டியிருந்தது. யோசுவா இஸ்ரவேலரில் இரண்டு மனிதரை அனுப்பி எரிகோ பட்டணத்தைப் பார்த்து வரச் சொன்னார். எரிகோ பட்டணத்தில் ராகாப் என்கிற ஒரு பெண் வசித்து வந்தாள்.  யோசுவா அனுப்பின மனிதரை ராகாப் தன் வீட்டில் தங்க வைத்தாள்.

Sweet Publishing / Freebibleimages.org

                          இதை எரிகோ பட்டணத்தின் ராஜா கேள்விப்பட்டான். அதனால் அந்த இரண்டு மனிதர்களையும் பிடித்துக் கொண்டு வருவதற்கு, தன்னுடைய சேவகரை அனுப்பினான். ஆனால் ராகாபோ அவர்களை தன்னுடைய வீட்டின் மாடியில் கயிறு செய்வதற்கு பயன்படும் பொருட்களுக்கு அடியில் மறைத்து வைத்தாள். பின்னர் ராஜாவின் ஆட்கள் சென்ற பின், அந்த இரண்டு இஸ்ரவேலரும் தப்பித்துக் கொண்டார்கள்.

Sweet Publishing / Freebibleimages.org

                    அவர்கள் தப்பித்துப் போவதற்கு முன் ராகாபிடம்,  எரிகோ பட்டணத்தைப் பிடிப்பதற்கு இஸ்ரவேலர் திரும்பி வரும் பொழுது ராகாப் தன்னுடைய ஜன்னலில் ஒரு சிகப்புக் கயிற்றைக் கட்ட வேண்டும் என்றும், அந்த அடையாளத்தை வைத்து அந்த வீட்டில் உள்ள அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் கூறினார்கள். ராகாப் அந்த மனிதர் தன்னோடு கூறினபடியே ஒரு சிகப்புக் கயிற்றை தன்னுடைய ஜன்னலில் கட்டி வைத்தாள். இதனால் இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோ பட்டணத்தைப் பிடித்த பொழுது அவள் தப்புவிக்கப்பட்டாள்.

Sweet Publishing / Freebibleimages.org 

வேத பகுதி: யோசுவா 2, 6:22-25

மனப்பாட வசனம்: அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். (சங்கீதம் 145:19)

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/

பஸ்கா ஆட்டுக்குட்டி (The Passover Lamb), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 11

மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது

வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.


பாடம்- 11

பஸ்கா ஆட்டுக்குட்டி

இதற்கு முந்தின பாடத்திலே தேவன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து விடுவிப்பதற்காக, எகிப்தியர் மேல் அனுப்பின பத்து வாதைகளை பற்றி பார்த்தோம். அதில் கடைசியாக அனுப்பப்பட்ட தலைப்பிள்ளை சங்காரம் என்ற கொடூர வாதைக்குப் பின்னரே பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே விட்டான் என்பதை நாம் அறிவோம். எகிப்தியரின் தலைப்பிள்ளைகள் சங்கரிக்கப்பட்ட அந்த இராத்திரியிலே, இஸ்ரவேலர் செலுத்தும்படி தேவன் கட்டளையிட்ட பலி தான் பஸ்கா ஆட்டுக்குட்டி. பஸ்கா என்பது எபிரெய மொழியின் “பெஸஹா (Pesacha)” என்ற வார்த்தையைக் குறிக்கும். இதற்கு “கடந்து போகுதல் (Passover)” என்று அர்த்தமாகும்.

Sweet Publishing/Freebibleimages.org

பஸ்கா ஆட்டுக்குட்டி

தேவன் இஸ்ரவேல் ஜனங்களை பஸ்காவை ஆசரிக்கக் கூறினபொழுது அதை எவ்வாறு ஆசரிக்க வேண்டும் என்கிற முறைமைகளையும் கற்றுக் கொடுத்தார். இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கென்று ஒரு ஆட்டுக்குட்டியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த ஆட்டுக்குட்டி ஆணும், ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும். அதில் எந்த ஒரு ஊனமோ, பழுதோ இருக்கக் கூடாது. அந்த ஆட்டுக்குட்டியை நிசான் மாதம் பத்தாம் தேதியே தேர்ந்தெடுத்து வீட்டிற்கு கொண்டுவர வேண்டும். யூத நாட்காட்டியின் அடிப்படையில் நிசான் மாதம் யூதர்களின் முதலாம் மாதமாகும். வீட்டிலே அதை நான்கு நாட்கள் வைத்த பின்னர் குடும்பத்தலைவர்கள், அந்த ஆட்டுக்குட்டியை பதினான்காம் தேதி சாயங்காலத்திலே பலி செலுத்த வேண்டும். பலி செலுத்தும்பொழுது அந்த ஆட்டுக்குட்டியின் எந்த ஒரு எலும்பையும் முறிக்கக் கூடாது. அந்த பலியின் மாம்சத்தை வீட்டிலிருந்து வெளியே கொண்டு போகக் கூடாது (யாத்திராகமம் 12:46). 

பஸ்கா – “வாதை கடந்து போகுதல்”

பஸ்கா ஆட்டுக்குட்டியை பலியிட்டு முடித்தவுடன், அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை ஈசோப்புக் கொழுந்தின் கொத்தில் தோய்த்து, வீட்டுவாசலின் நிலைக்கால்களிலும், நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டும். (ஈசோப்பு என்பது மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் ஒரு மூலிகைச் செடியாகும். இதற்கு மருத்துவ தன்மை, சுத்திகரிக்கும் தன்மை மற்றும் உணவிற்கு சுவையூட்டும் தன்மை இருப்பதாகக் கருதப்படுகிறது. வேதாகமக் காலத்தில் மக்களையும், வீடுகளையும் சுத்திகரிப்பு செய்வதற்கு இது பயன்படுத்தப்பட்டது). 

எபிரெய மொழியில் "ஈஸோவ்" என்று அழைக்கப்பட்ட ஈசோப்பு செடி

பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் வீட்டின் நிலைக்காலில் பூசப்பட்ட பின், மறுநாள் காலை வரைக்கும் இரத்தம் பூசப்பட்ட வீட்டை விட்டு வெளியே செல்லுவதற்கு ஒருவருக்கும் அனுமதி இல்லை. அந்த நாள் இராத்திரியிலே, சங்கரிக்கும் வாதை தேசத்திலே கடந்து செல்லும்பொழுது, வீட்டின் நிலைக்கால்களிலே இரத்தம் பூசப்பட்டிருக்கிறதைக் காணும்பொழுது தேவன் சங்காரக்காரனை அந்த வீடுகளில் வரவிடாமல் அந்த வீடுகளைக் கடந்து போவார். ஆட்டுக்குட்டியின் இரத்தம் நிலைக்கால்களில் பூசப்படாமல் இருக்கும் வீடுகளில் உள்ள தலைப்பிள்ளைகள் சங்கரிக்கப்படும். ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களிடம், பஸ்கா பலியை எகிப்திலிருந்து புறப்படும்பொழுது மாத்திரமல்ல, அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தேவன் தங்கள் வீடுகளை கடந்து போனதை நினைவு கூறும்படி அதை ஆசரிக்க வேண்டும் என்று கூறினார். 

பஸ்கா பண்டிகை / பஸ்கா விருந்து

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த இராத்திரியிலே ஆசரித்த விருந்து தான் பஸ்கா விருந்து. இஸ்ரவேல் ஜனங்கள் பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட வேண்டும். அதை புளிப்பில்லாத அப்பத்தோடும், கசப்பான கீரைகளோடும் சாப்பிட வேண்டும் என்று கூறினார். புளிப்பில்லாத அப்பம் என்றால் புளிப்பு முகவர் (Leavening agents like yeast) எதுவும் சேர்க்கப்படாமல் செய்யப்படும் அப்பமாகும். இஸ்ரவேலர் பஸ்கா உணவை சாப்பிடும்பொழுது தங்களுடைய ஆடையில் உள்ள கச்சைகளைக் (Belt) கட்டிக் கொண்டும், காலணிகளை அணிந்து கொண்டும், அவர்களுடைய தடிகளை (கைக்கோல்களை) பிடித்துக் கொண்டும் இருக்க வேண்டும். சற்று நேரத்தில் எகிப்திலிருந்து விடுதலையாகி நீண்ட பிரயாணம் செய்ய இருக்கிறோம் என்பதை குறிப்பதற்காகவே இவ்வாறு செய்தார்கள்.

பஸ்கா பண்டிகையின்போது உண்ணப்பட்ட, "மட்ஸோ" அல்லது "மட்ஸா" என்று அழைக்கப்பட்ட புளிப்பில்லாத அப்பம்

பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் பஸ்கா ஆட்டுக்குட்டி

பழைய ஏற்பாட்டிலே முன்னடையாளமாகவும், குறியீடாகவும் காட்டப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியின் நிஜமான மற்றும் முழுமையான வெளிப்பாடாக தேவ ஆட்டுக்குட்டியாக இயேசு கிறிஸ்து புதிய ஏற்பாட்டு காலத்திலே வெளிப்பட்டார். இதனால் தான் இயேசு கிறிஸ்துவை, யோவான் ஸ்நானகன் “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) என்றும் அப்போஸ்தலனாகிய பேதுரு “ குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டி” (1 பேதுரு 1:19) என்றும் அழைத்தனர்.

Agnus Dei (The Lamb of God), தேவ ஆட்டுக்குட்டி என்று பொருள்படும் "ஆன்யூஸ் தே" என்கிற ஓவியம் பிரான்ஸிஸ்கோ டே ஸுர்பரான் என்பவரால் 1635 - 1640ல் வரையப்பட்டது, இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்குவதை விளக்குவதற்காக கால்கள் கட்டி கிடத்தப்பட்டிருக்கிற ஒரு ஆட்டிக்குட்டியை இந்த ஓவியம் சித்தரிக்கிறது, பொது வலைகளம்.

பஸ்கா ஆட்டுக்குட்டி, இயேசு கிறிஸ்து – ஒரு ஒப்பீடு

1)     பஸ்கா ஆட்டுக்குட்டி பழுதற்றதாக இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவும் குற்றமற்றவராகவும் மாசற்றவராகவும் இருந்தார் (1 பேதுரு 1:19; எபிரெயர் 4:15).

2)     பஸ்கா பண்டிகை ஆசரிக்கப்பட்ட சமயத்திலேயே இயேசு கிறிஸ்துவும் சிலுவையில் அறையப்பட்டார் (யோவான் 18:28)

3)     பஸ்கா ஆட்டுக்குட்டியின் எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படவில்லை, அதேபோலவே சிலுவையில் அறையப்பட்ட மற்றவர்களுடைய எலும்புகள் முறிக்கப்பட்ட போதிலும் இயேசுகிறிஸ்துவின் எலும்புகள் முறிக்கப்படவில்லை (யோவான் 19:31-36).

4)     பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் வீட்டுவாசலின் நிலைக்கால்களில் தெளிக்கப்பட்டது போல இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அவரை விசுவாசிக்கிறவர்களுடைய இருதயத்தில் தெளிக்கப்பட்டிருக்கிறது (எபிரெயர் 9:12,13).

5)     வாசல் நிலைக்கால்களில் தெளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தம் சங்காரக்காரனை கடந்து போகப் பண்ணினது போல, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தேவனுடைய நியாயத்தீர்ப்பை நம்மிலிருந்து கடந்து போகப் பண்ணியிருக்கிறது (ரோமர் 5:9)

6)     முதலாவது பலியிடப்பட்ட பஸ்கா இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டதை குறித்தது போல இயேசுகிறிஸ்துவின் மரணம் நாம் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டதைக் குறிக்கிறது (ரோமர் 6:18; 8:3).

7)     பஸ்கா விருந்தின் போது, பலியிடப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் புளிப்பில்லாத அப்பத்தோடு சாப்பிடப்பட்டது. பஸ்கா ஆசரிக்கப்படும்போது வீட்டில் உள்ள புளிப்பு முகவர்களை(Leavening agents like yeast) வீடுகளிலிருந்து அகற்றுவது வழக்கம். அதைப் போலவே இயேசு கிறிஸ்துவின் தியாக பலியை விசுவாசிக்கிற யாவரும் தங்கள் இருதயங்களிலிருந்து புளிப்பூட்டுகிற செயல்களாகிய துர்குணம், பொல்லாப்பு ஆகியவற்றை அகற்றி விட்டு, புளிப்பில்லாத அப்பமாகிய துப்புரவு, உண்மை ஆகியவற்றோடு கிறிஸ்தவ வாழ்க்கையை ஆசரிக்க வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் (1 கொரிந்தியர் 5:7,8). 

பழைய ஏற்பாட்டின் பஸ்கா ஆட்டுக்குட்டி, புதிய ஏற்பாட்டின் நிஜமான மற்றும் முழுமையான தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறிஸ்துவின் முன்னடையாளமாகவே கொடுக்கப்பட்டது. இயேசுகிறிஸ்து தன்னுடைய பரிகார பலியின் மூலமாக ஜனங்களை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, நித்திய ஜீவனைக் கொடுத்து பரம கானானை அடைவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

வேத பகுதி: யாத்திராகமம் 12: 21 – 23, 42 - 49

மனப்பாட பகுதி: ஏசாயா 53:10,11

பயிற்சி

பஸ்கா ஆட்டுக்குட்டி கிறிஸ்துவின் ஒரு முன்னடையாளம். இது போல பல “கிறிஸ்துவின் முன்னடையாளங்கள்” பழைய ஏற்பாட்டில் உள்ளன. கொடுக்கப்பட்டுள்ள வசன ஆதாரத்தின் அடிப்படையில் அவற்றைக் கண்டு பிடிக்கவும். 

1.    முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். (1 கொரிந்தியர் 15:47)

பதில்: ஆதாம் 

2.    ………………………… இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். (எபிரெயர் 12:24)

பதில்:     

3.    அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை (எபிரெயர் 5:4,5)

பதில்: 

4.    ……………………… மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். (யோவான் 3:14)

பதில்: 

5.    இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். (எபிரெயர் 7:3)

பதில்: 

6.    ………………………. தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். (எபிரெயர் 3:2)

பதில்: 

7.    பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷராலல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற …………………………….. நமக்கு உண்டு. (எபிரெயர் 8:2)

பதில்:  

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    அந்த ஆட்டுக்குட்டி ஆணும், ………………………. வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்.

2.    ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை ……………………….. கொழுந்தின் கொத்தில் தோய்த்து, தெளிக்க வேண்டும்.

3.    பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை புளிப்பில்லாத அப்பத்தோடும், ……………………………….. சாப்பிட வேண்டும்

4.    ஆட்டுக்குட்டியின் இரத்தம் நிலைக்கால்களில் பூசப்படாமல் இருக்கும் வீடுகளில் உள்ள ………………………………. சங்கரிக்கப்படும். 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும் 

1.  பஸ்கா ஆட்டுக்குட்டி என்றால் என்ன?

 

2.  பஸ்கா விருந்தை எவ்வாறு ஆசரிக்க வேண்டும்?

 

3.  “கடந்து போகுதல்” என்ற பெயர் எதனால் கொடுக்கப்பட்டது?

 

4.  தேவன் பஸ்காவை ஒவ்வொரு வருடமும் எதற்காக ஆசரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்? 

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  பஸ்கா ஆட்டுக்குட்டியையும் இயேசுகிறிஸ்துவையும் ஒப்பிட்டு விளக்கவும்.  

 

 

Thursday, August 12, 2021

பிலேயாம் - குறிசொல்லுகிறவனாய் மாறின தீர்க்கதரிசி (Balaam - From a Prophet to a Soothsayer),இடைநிலை வகுப்பு (Intermediate) , ஞாயிறு பள்ளி வேதபாடம் - 11

இடைநிலை வகுப்பு (INTERMEDIATE) 

வயது: 12 - 13 வயது
வகுப்பு: VII & VIII

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் –11

பிலேயாம் – குறி சொல்லுகிறவனாய் மாறின தீர்க்கதரிசி 

முந்தைய பாடத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் நாற்பது வருட வனாந்திர வாழ்க்கையைப் பற்றி பார்த்தோம். இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணம் செய்து கானான் தேசத்தின் அருகே வந்து விட்டார்கள். கானான் தேசத்தில் நுழைவதற்கு முன்பாக எரிகோ தேசத்திற்கு அருகில் இருந்த யோர்தான் ஆற்றின் கரையில் மோவாப் சமவெளியில் தங்கியிருந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தன்னுடைய தேசத்தின் அருகே கூடாரங்களை அமைத்து தங்கியிருப்பதைப் பார்த்த ‘பாலாக்’ என்கிற மோவாப் தேசத்தின் ராஜாவிற்கு இது மிகுந்த கலக்கத்தைக் கொடுத்தது. இஸ்ரவேல் ஜனங்களின் பலத்தை அறிந்திருந்த மோவாபிய ராஜா, யுத்தத்தின் மூலமாக அல்ல, இஸ்ரவேல் ஜனங்கள் மேல் சாபங்களை கூறுவதன் மூலமே அவர்களை பலவீனப்படுத்த முடியும் என்று எண்ணினான்.

தீர்க்கதரிசியாகிய பிலேயாம்

பிலேயாம் என்கிற ஒரு தீர்க்கதரிசி ஐபிராத்து ஆற்றின் (யூப்ரடீஸ் ஆறு) அருகே இருந்த பெத்தூர் என்கிற ஊரிலே வாழ்ந்து வந்தான். தேவன் தன்னிடம் கூறுகிற வார்த்தைகளைக் கேட்டு அதை அப்படியே மக்களிடம் எடுத்து கூறுபவன் தான் தீர்க்கதரிசி. மோவாப் தேசத்தின் ராஜாவாகிய பாலாக் பிலேயாமிடம் ஆட்களை அனுப்பி தனக்கு உதவி செய்யும்படியாக இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க வேண்டும் என்றும் அதற்கு கூலி கொடுப்பதாகவும்  கூறினான். பிலேயாம் தன்னிடம் அனுப்பப்பட்ட ஆட்களிடம், அதைப்பற்றி தான் சுயமாக முடிவெடுக்க முடியாதென்றும், தேவனிடம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறினான். பின்பு பிலேயாம் தேவனிடம் விசாரித்த போது அவர்களுடன் செல்ல வேண்டாம் என்றும் இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க வேண்டாம் என்றும் கூறினார். அதனால் பாலாக் ராஜாவின் ஆட்களை பிலேயாம் திரும்ப அனுப்பி விட்டான்.

மோவாபிற்கு சென்ற பிலேயாம்

அதன்பின்னர், பாலாக் ராஜா மறுபடியும் மிகவும் மதிப்பிற்குரிய தன்னுடைய மந்திரிகளையும், மிகவும் விலை உயர்ந்த பரிசுப்பொருட்களையும் அனுப்பி பிலேயாமை அழைத்தான். பிலேயாம் அவர்களுடன் செல்ல வேண்டும் என்று மிகவும் விரும்பினான். அதனால் மறுபடியும் ஆண்டவரிடம் சென்று அவர்களுடன் போகலாமா என்று விசாரித்தான். ஆண்டவர் அவன் விருப்பப்பட்டபடி அவனை சென்று வரச் சொன்னார். ஆனால் பிலேயாம் மோவாபிற்கு செல்லுவது ஆண்டவருக்கு விருப்பமில்லாதிருந்தது.

பிலேயாமிடம் பேசின கழுதை

பிலேயாம் வழியில் செல்லும்போதே கர்த்தருடைய தூதன் அவனுக்கு எதிர்ப்பட்டார். பிலேயாம் ஏறியிருந்த கழுதைக்கு கர்த்தருடைய தூதன் உருவின வாளோடு வழியிலே நிற்பது கண்களுக்கு தெரிந்தது. அதனால் கழுதை தூதனிடமிருந்து பிலேயாமை காப்பாற்றுவதற்காக, மூன்று முறை வழியை விட்டு விலகி சென்றது. ஆனால் பிலேயாமின் கண்களுக்கோ அது தெரியவில்லை. அதனால் அவன் தன்னுடைய கழுதையை மூன்று முறை அடித்தான். ஆண்டவர் கழுதையின் வாயைத் திறந்தார். அது பிலேயாமிடம் பேசி, தன்னைக் காரணமில்லாமல் எதற்காக அடிக்க வேண்டும் என்று கேட்டது. அப்பொழுது பிலேயாமின் கண்கள் திறக்கப்பட்டு, அவன் தூதனைப் பார்த்தான். தூதன் பிலேயாமிடம், இஸ்ரவேல் ஜனங்களைப் பற்றி ஆண்டவர் என்ன உரைக்கிறாரோ அதை மட்டுமே கூற வேண்டும் என்று கூறினார்.

"பிலேயாமும் அவனுடைய கழுதையும்" என்கின்ற இந்த ஓவியம், புகழ்பெற்ற டச்சு ஓவியர் ரெம்ப்ராண்ட் என்பவரால் 1626ஆம் ஆண்டு வரையப்பட்டது (பொதுகளத்திலிருந்து எடுக்கப்பட்டது)

ஆசீர்வாதங்களை உரைத்த பிலேயாம்

பிலேயாம் மோவாப் தேசத்திற்கு வந்த பொழுது, பாலாக் ராஜா அவனுக்கு மிகவும் மரியாதை செலுத்தினான். அவர்கள் இருவரும் சேர்ந்து காளைகளையும், ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள். பின்னர் பாலாக் ராஜா பிலேயாமை, இஸ்ரவேல் ஜனங்களை நன்றாக பார்த்து சபிக்கக்கூடிய சிறந்த இடங்களுக்கு அழைத்து சென்றான். ஆனால் பிலேயாமோ, ஆண்டவர் தன்னிடம் கூறினபடியே, இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதித்தான். அதனால் பாலாக் ராஜா மிகவும் கோபமடைந்தான். பிலேயாமிற்கு கூலி கிடைக்காமல் போனது.

இஸ்ரவேல் ஜனங்களை இடறப்பண்ணின பிலேயாம்

பொருளாசையினால் நிரப்பப்பட்டிருந்த பிலேயாம், தன்னுடைய கூலியை எவ்விதத்திலாவது பெற்று விட வேண்டும் என்று எண்ணினான். தன்னால் இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க முடியாது என்று அவன் அறிந்திருந்த படியால், இஸ்ரவேல் ஜனங்களை பாவம் செய்யும்படி செய்து, தங்களைத் தாங்களே தேவனுடைய சாபத்திற்குள்ளாக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். அதனால் இஸ்ரவேல் ஜனங்களுடைய பலத்தின் இரகசியத்தை அவன் மோவாப் ஜனங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுத்தான். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் யாருடனும் கலப்பதில்லை. அவர்கள் மற்ற ஜனங்களுடைய வழிகளைக் கற்றுக் கொண்டால் தேவனுடைய கோபம் அவர்கள் மேல் மூளும் என்பதை வெளிப்படுத்தினான். அதை அறிந்து கொண்ட மோவாபியர், இஸ்ரவேல் ஜனங்களை பாவம் செய்யப் பண்ணினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் மோவாபியரோடு கலந்து, அவர்கள் வழிகளைக் கற்றுக் கொண்டு மோவாபியருடைய தெய்வமாகிய பாகால்பேயோரை வழிபடத் தொடங்கினார்கள். அதனால் தேவனுடைய கோபம் இஸ்ரவேல் ஜனங்கள் மேல் வந்து, அவர்கள் தண்டிக்கப்பட்டு, 24,000 பேர் மரித்துப் போனார்கள்.


பேயோரின் குமாரனாகிய பிலேயாமைப் பற்றிய தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ள சுவற்றின் பகுதி, டெல் டேர் அல்லா என்கின்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, கிமு 9-8 நூற்றாண்டைச் சார்ந்தது, தற்போது ஜார்டன் நாட்டிலுள்ள அம்மான் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது (பொது களம்)

குறிசொல்லுகிறவனாய் மாறின பிலேயாம்

பரிசுத்த வேதாகமத்தில், எண்ணாகமம் 24ஆம் அதிகாரம் வரை பிலேயாம் ஒரு தீர்க்கதரிசியாகவே கருதப்பட்டான். அவன் தேவன் சொன்னதையே கூறினான். அவன் எப்பொழுது அநீதியின் கூலியை விரும்பி, தேவனுடைய ஜனங்களுக்கு எதிரான ஆலோசனையைக் கொடுத்தானோ, அப்பொழுதிலிருந்து அவன் குறிசொல்லுகிறவனாகக் கருதப்பட்டான் (யோசுவா 13:22). இஸ்ரவேல் ஜனங்கள் மீதியான் தேசத்தைக் கைப்பற்றினபொழுது, பிலேயாமையும் சேர்த்து கொன்றுபோட்டார்கள். அவன் தேவனுடைய தீர்க்கதரிசியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து குறி சொல்லுகிறவனாக தன்னுடைய வாழ்க்கையை முடித்தான். அதனால் கிறிஸ்தவ விசுவாசிகள் பின்பற்றக்கூடாத ஒரு கெட்டமாதிரியாகவே அவன் புதிய ஏற்பாட்டில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளான் (2 பேதுரு 2:15; வெளிப்படுத்தல் 2:14)

ஆவிகளை சோதித்தறிதல்

நாம் எல்லா ஆவிகளையும் தேவனுடைய பரிசுத்த ஆவி என்று எண்ணாமல் அவைகளை சோதித்தறிய வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது. தீர்க்கதரிசி என்பவன் தேவனால் ஏற்படுத்தப்படுபவன். தீர்க்கதரிசன வரம் என்பது தேவனால் கொடுப்படும் ஒரு வரமாகும். எந்த ஒரு மனிதனாலும் இன்னொருவரை தீர்க்கதரிசியாக ஏற்படுத்த முடியாது. தீர்க்கதரிசன வித்தையை எந்த ஒரு தீர்க்கதரிசன பள்ளியிலும் சென்று கற்றுக் கொள்ளவும் இயலாது. ஆகவே நாம் ஜாக்கிரதை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். சில வேளைகளில் நல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளாய் தங்களுடைய ஊழியத்தை ஆரம்பிப்பவர்களும், பின்னாட்களில் வழிமாறி பிலேயாமைப் போல குறிசொல்லுகிறவர்களாய் மாறுவதுண்டு. தேவனுடைய உண்மையான தீர்க்கதரிகள் தேவனுடைய ஜனங்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் கரிசனை உள்ளவர்களாய், அவர்களை நித்திய ஜீவனுக்கு நடத்துகிறவர்களாய் இருப்பார்கள்.  ஆனால் கள்ள தீர்க்கதரிசிகளோ ஜனங்களை மாம்ச இச்சையை நிறைவேற்றும்படியாக நடத்தி, இம்மைக்குரிய ஆசீர்வாதங்களையே மிகைப்படுத்தி பேசுவார்கள். ஆகவே நாம் ஏமாற்றப்படாதபடிக்கு பிலேயாமின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாக அமைகிறது.

வேதபகுதி: எண்ணாகமம் 22 – 25

மனப்பாட வசனம்: மத்தேயு 7:15,16 

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/ 

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    பிலேயாம் வழியில் செல்லும்போது ………………………………. அவனுக்கு எதிர்ப்பட்டார்.

2.    கழுதை தூதனிடமிருந்து பிலேயாமை காப்பாற்றுவதற்காக, ……………….. முறை வழியை விட்டு விலகி சென்றது.

3.        இஸ்ரவேல் ஜனங்கள் மோவாபியருடைய தெய்வமாகிய ……………………………… வழிபடத் தொடங்கினார்கள்.

4.        பிலேயாம் தேவனுடைய தீர்க்கதரிசியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து ……………………………………………… தன்னுடைய வாழ்க்கையை முடித்தான்.

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.    பாலாக் ராஜா எதற்காக பிலேயாமை அழைத்தனுப்பினான்?

 

2.    பிலேயாமின் கழுதை ஏன் பேசினது?

 

3.      பிலேயாம் இஸ்ரவேல் ஜனங்களை ஏன் சபிக்கவில்லை?

 

4.      பிலேயாமிற்கு பாலாக்கிடத்தில் இருந்து குறிசொல்லுதலுக்கான கூலி கிடைத்ததா? ஏன்?

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  பிலேயாம் இஸ்ரவேலரை எவ்வாறு இடறப் பண்ணினான்?

 

 

  

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...