Thursday, November 3, 2022

எபெனேசர் (Ebenezer Stone), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 15

மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

வயது: 8 - 9 வயது

வகுப்பு: III & IV

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

Click this link to visit the English Sunday School Lessons Blog

பாடம் – 15

எபெனேசர்

முந்தின பாடத்தில் இஸ்ரவேல் தேசத்தின் கடைசி நியாயாதிபதியான சாமுவேலின் பிறப்பைப் பற்றி பார்த்தோம். சாமுவேல் வளர்ந்து வரும்போது ஏலி இஸ்ரவேல் தேசத்தை நியாயம் விசாரித்து வந்தார். ஒருமுறை ஏலி நியாயாதிபதியாய் இருந்தபோது, பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல் தேசத்திற்கு எதிராக யுத்தம் செய்து அநேகரைக் கொன்றுபோட்டார்கள். இஸ்ரவேலின் தலைவர்கள் மிகவும் துக்கமடைந்து, பெலிஸ்தியரை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் பெலிஸ்தியரின் போர்படை பலம் வாய்ந்ததாக இருந்தது.

இஸ்ரவேல் மக்கள் தேவனை தொழுது கொள்ளுவதற்காக சென்ற ஆசரிப்புக் கூடாரத்தின் உட்புறமாக அமைந்திருந்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் புனிதமான உடன்படிக்கைப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து கானான் தேசத்திற்கு பிரயாணம் செய்த போது உடன்படிக்கைப்பெட்டியை சுமந்து சென்ற இடங்களிலெல்லாம் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. ஆகவே இஸ்ரவேல் தேசத்து தலைவர்கள் பெலிஸ்தியருக்கு எதிராக யுத்தம் செய்த இடத்திற்கு உடன்படிக்கைப் பெட்டியை கொண்டுபோக வேண்டும் என்று எண்ணினார்கள். (உடன்படிக்கைப் பெட்டியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள,  பாடம் – 11, உடன்படிக்கைப் பெட்டி வாசிக்கவும்).

ஏலி மிகவும் வயது சென்றவராயிருந்தார். அவருடைய இரு மகன்களாகிய ஓப்னியும் பினெகாசும் ஆசரிப்புக்கூடாரத்தை கவனித்து வந்தார்கள். அவர்கள் கர்த்தருக்குப் பயப்படாதவர்கள். அவர்கள் தேவனையும், தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த கட்டளைகளையும் அறியாதவர்கள். ஆகவே அவர்கள் இஸ்ரவேல் தலைவர்களின் விருப்பப்படி உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் செல்லுவதற்கு விட்டுவிட்டார்கள். உடன்படிக்கைப் பெட்டி யுத்தகளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதை தேவன் விரும்பவில்லை. உடன்படிக்கைப் பெட்டி பரிசுத்தமான தேவனுடைய பிரசன்னத்தை வெளிப்படுத்தினபடியால் அது ஆசரிப்புக்கூடாரத்தின் மகா பரிசுத்தஸ்தலத்திலேயே வைக்கப்பட வேண்டும். அதனால் இஸ்ரவேல் மக்களுக்கு அந்த யுத்தம் தோல்வியிலே முடிந்தது.

பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலரைத் தோற்கடித்தது மட்டுமல்லாமல், யுத்தகளத்திற்கு கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியையும் கைப்பற்றினார்கள். அவர்கள் வெற்றியைக் கொண்டாடி, உடன்படிக்கைப் பெட்டியை, தாங்கள் வணங்கி வந்த தாகோன் என்ற தெய்வத்தின் கோவிலுக்குள் கொண்டுபோய் வைத்தார்கள். உடன்படிக்கைப் பெட்டியை அங்கு வைத்தது முதல் அங்கு பல வித்தியாசமான சம்பவங்கள் நிகழ ஆரம்பித்தது. உடன்படிக்கைப் பெட்டிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த தாகோனின் சிலை கீழே விழுந்து உடைந்தது. அதன்பிறகு பெலிஸ்தியர்கள் கொடூரமான நோயினால் பாதிக்கப்பட்டார்கள். உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவந்ததினால் தான் தங்களுக்கு இவைகள் சம்பவிக்கின்றன என்று அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆகவே உடன்படிக்கைப் பெட்டியை ஒரு மாட்டுவண்டியில் வைத்து, குற்றநிவாரணமாக காணிக்கைப் பொருட்களையும் அதில் ஏற்றி அனுப்பினார்கள்.

உடன்படிக்கைப்பெட்டி இஸ்ரவேல் தேசத்தின் பட்டணங்களில் ஒன்றான பெத்ஷிமேசுக்கு வந்து சேர்ந்தது. பெத்ஷிமேஸ் ஆசாரியர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டணமாகும் (யோசுவா 21:16). அதன்பின்னர் அங்கிருந்து கிரியாத்யாரீம் என்கிற ஒரு பட்டணத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அபினதாப் என்கிற மனிதனின் வீட்டிலே வைக்கப்பட்டிருந்தது. அபினதாப் ஒரு ஆசாரியக் குடும்பத்தையோ, லேவியக் குடும்பத்தையோ சார்ந்தவனாக இருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். உடன்படிக்கைப் பெட்டியைப் பார்த்துக்கொள்ளுவதற்காக அபினதாபின் மகனான எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள். உடன்படிக்கைப் பெட்டி கீரியாத்யாரீமிலே இருபது வருடங்கள் இருந்தது.

உடன்படிக்கைப் பெட்டியை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லுவதற்கு நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்டிருந்த விதிமுறைகள் இருந்தன. உடன்படிக்கைப் பெட்டியும் மற்ற பரிசுத்தப் பொருட்களும் தோளில் சுமந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதை லேவி கோத்திரத்தைச் சேர்ந்த கோகாத் குடும்பத்தினர் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். பரிசுத்த பொருட்களை சுமந்து செல்லும்படியாக ஆசாரியர்கள் அவைகளை மூடி ஆயத்தம் செய்ய வேண்டும். லேவியர்களான கோகாத்தியர்களுக்கு பரிசுத்தபொருட்களை உபயோகப்படுத்துவதற்கோ, மூடப்படும்பொழுது அவைகளை பார்ப்பதற்கோ அனுமதியில்லை, அதை சுமந்து செல்லுவது மட்டும் தான் அவர்களுடைய வேலை (எண்ணாகமம் 4:2 – 20). ஏனென்றால் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்த பொருட்களை பரிசுத்தப்படுத்துவது, பரிசுத்தக்குலைச்சல் ஏற்பட்டால் அதற்காக தண்டனையை ஏற்பது ஆகியவை ஆசாரியர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருந்தது (லேவியராகமம் 16:32 – 34). பரிசுத்தக்குலைச்சல் என்றால் தேவன் எதை எவ்விதமாக உபயோகிக்க வேண்டும், அல்லது கடைபிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாரோ, அதை அவ்வண்ணமே கடைபிடிக்காமல் மீறி மனிதனுடைய விருப்பத்தின்படி பயன்படுத்தப்படுவது. அவ்வாறு செய்யப்படும்பொழுது, தேவனுடைய வார்த்தைகள் மீறப்படுவதால், பரிசுத்தக்குலைச்சல் ஏற்படுகிறது.

இவ்வாறு ஏதோ ஓரு காரணத்தினால் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி, சீலோவிலிருந்த ஆசரிப்புக் கூடாரத்திற்கு கொண்டுவரப்படாமல், கீரியாத்யாரீமிலே இருபது வருடங்கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நாட்களில் பிரதான ஆசாரியனாகிய ஏலியும், அவருடைய இருமகன்களான ஓப்னியும், பினெகாசும் இறந்து போய் விட்டார்கள். சாமுவேல் இஸ்ரவேலை நியாயம் விசாரிக்கத் தொடங்கினார். இஸ்ரவேல் ஜனங்கள் ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து உடன்படிக்கைப் பெட்டி எடுக்கப்பட்டதை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தார்கள். உடன்படிக்கைப் பெட்டி, தேவன் இஸ்ரவேல் ஜனங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுபடுத்தும் ஒரு இன்றியமையாத புனிதமான கருவியாக இஸ்ரவேல் ஜனங்களால் கருதப்பட்டது. ஆகவே உடன்படிக்கைப் பெட்டி ஆசரிப்புக்கூடாரத்தில் இல்லாமல் இருந்தது தேவனோடு அவர்களுக்கு இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டு, தேவனுடைய உதவி அற்றுப்போனது போன்ற உணர்வைக் கொடுத்தது. அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களிடம், அவர்கள் தேவனுடைய வாக்கை மீறி செய்கின்ற பாவங்களை சுட்டிக்காட்டினார். அவர்கள் வழிபட்டு வந்த அஸ்தரோத் மற்றும் பிற தெய்வங்களை அகற்றும்படி கூறினார். இஸ்ரவேல் ஜனங்கள் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்தார்கள்.

அப்பொழுது சாமுவேல், இஸ்ரவேல் ஜனங்களுக்காக தான் கர்த்தரிடம் மன்றாடும்படி, அனைவரும் மிஸ்பா என்ற இடத்திலே கூடி வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இஸ்ரவேல் ஜனங்களும் அதுபோலவே மிஸ்பாவிலே ஒன்று கூடி, உணவு உண்ணாமல் உபவாசம் இருந்து, பாவ அறிக்கை செய்தார்கள். பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் ஒன்றாக மிஸ்பாவிலே கூடியிருப்பதை கேள்விப்பட்டார்கள். அப்பொழுது அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக போர் தொடுப்பதற்கு ஆயத்தமானார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் சாமுவேலிடம் வந்து, பெலிஸ்தியரிடமிருந்து தேவன் தங்களை பாதுகாக்கும்படி தங்களுக்காக தேவனிடம் வேண்டிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.

சாமுவேல் ஒரு ஆட்டுக்குட்டியை எடுத்து, அதை சர்வாங்கதகனபலியாக பலியிட்டு இஸ்ரவேல் ஜனங்களுக்காக தேவனிடம் மன்றாடினார். உடனே தேவன் அவர்களுக்கு பதில் கொடுத்தார். பெலிஸ்தியர்கள் யுத்தம் செய்ய நெருங்கும்பொழுது பலத்த இடிமுழக்க சத்தங்களை தேவன் கேட்கப்பண்ணினதினால், அவர்கள் கலக்கமடைந்து சிதறிப்போனார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அவர்களை எளிதாக தோற்கடித்தார்கள். 

அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, அதை மிஸ்பாவிற்கும், சேண் என்ற இடத்திற்கும் நடுவாக நிறுத்தி, இதுவரைக்கும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் என்று சொல்லி அதற்கு “எபெனேசர்" என்று பெயரிட்டார். பின்நாட்களிலே இஸ்ரவேல் ஜனங்களுக்கு யுத்தங்களோ, ஆபத்துக்களோ நேரிட்டால், அதுவரை அவர்களுக்கு உதவி செய்து, பாதுகாத்து, வழிநடத்தின தேவன் இனிமேலும் நடத்துவார் என்று தேவனுடைய உடன்படிக்கையை ஞாபகப்படுத்தும்படியாக “எபெனேசர்” என்ற அடையாளக்கல்லை சாமுவேல் அங்கு நிறுத்தி வைத்தார். 

பல வருடங்கள் கழித்து தாவீது ராஜா தேவனுடைய பெட்டியை கொண்டுவந்து அதை எருசலேமிலே தான் அதற்கென்று விசேஷமாக செய்து வைத்திருந்த கூடாரத்திற்குள் கொண்டு வந்து வைத்தார் (2 சாமுவேல் 6:17; 1 நாளாகமம் 16:1). பின்னர் சாலொமோன் ராஜா தேவனுக்கென்று மிகவும் பிரமாண்டமான ஒரு ஆலயத்தை எருசலேமிலே கட்டினார். அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் எதிர்பார்த்து காத்திருந்தபடியே தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி கூடாரத்திலிருந்து மாற்றப்பட்டு தேவாலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்திலே வைக்கப்பட்டது (1 இராஜாக்கள் 8:1-8).

ஆசிரியர் குறிப்பு

சீலோவிலே ஆசாரியனாகிய ஏலி பணிவிடை செய்த ஆசரிப்புக்கூடாரம், உடன்படிக்கைப் பெட்டி எடுத்துச் செல்லப்பட்டபின், எண்ணமற்றுபோய் அழிக்கப்பட்டுப்போயிருக்கலாமென்று வேதாகம தீர்க்கதரிசனங்களின் அடிப்படையில் (எரேமியா 7:12 – 15; 26:9) வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது. அதனால் தாவீது ராஜா தேவனுடைய பெட்டியை கொண்டுவந்து எருசலேமிலே வைப்பதற்காக விசேஷமாக இந்த ஆசரிப்புக்கூடாரத்தை செய்திருக்கலாம் (2 சாமுவேல் 6:17; 1 நாளாகமம் 16:1).

வேதபகுதி: 1 சாமுவேல் 6, 7:1 - 13

மனப்பாட வசனம்: நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக. (சங்கீதம் 20:5)

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/

இதற்கு முந்தின பாடத்தைப் பெற இந்த லின்க்-ஐ கிளிக் செய்யவும் (மிக-இளநிலை பாடம் - 14, சாமுவேல்: கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன்)

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்

1.    சாமுவேல் வளர்ந்து வரும்போது இஸ்ரவேலை நியாயம் விசாரித்தது யார்?   ……………………………………… 

2.     உடன்படிக்கைப் பெட்டி கீரியாத்யாரீமிலே யார் வீட்டிலே வைக்கப்பட்டது?  

     ………………………………………

3.    சாமுவேல் எதை சர்வாங்கதகனபலியாக செலுத்தினார்? …………………………

4.    இஸ்ரவேலர்கள் தேவனிடம் விண்ணப்பம் செய்யும்படி எங்கு கூடினார்கள்? ………………………………………

5.    எபெனேசர் என்ற பெயரின் அர்த்தம் என்ன? ………………………… 

சரியான பதிலைத் தெரிந்தெடுக்கவும்

   1.    இஸ்ரவேலின் கடைசி நியாயதிபதி.

          ( சாமுவேல் / சவுல் )

  2.        ஓப்னியும், பினெகாசும் உடன்படிக்கைப் பெட்டியை 

          (வீட்டிற்கு / யுத்தகளத்திற்கு ) கொண்டுசென்றார்கள்.

  3.         பெலிஸ்தியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ( தாகோன் / பாகால்) அருகில் வைத்தார்கள்.

  4.        பெலிஸ்தர் உடன்படிக்கைப் பெட்டியை ( குற்றநிவாரண / ஸ்தோத்திர ) பலியோடு சேர்த்து அனுப்பினார்கள்.

  5.        சாமுவேல், இதுவரைக்கும் ( கர்த்தர் / ஏலி) தங்களுக்கு உதவி செய்தார் என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் நினைவு கூற வேண்டும் என்று விரும்பினார்.

 

 

Monday, October 31, 2022

கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் (Samuel Hears the Voice of God), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 15

ஆரம்பநிலை வகுப்பு (PRIMARY)

வயது: 6 - 7 வயது

வகுப்பு: I & II

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

Click this link to visit the English Sunday School Lessons Blog

பாடம் – 15

கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்

இந்த பாடத்தில் இஸ்ரவேல் தேசத்தின் கடைசி நியாயாதிபதியாகிய சாமுவேல் சிறு வயதாயிருந்தபொழுது அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம். சாமுவேல் நியாயாதிபதியாக மட்டுமல்லாமல், தீர்க்கதரிசியாகவும் இருந்தார். சாமுவேலுடைய தாயாராகிய அன்னாளுக்கு பல வருடங்களாக பிள்ளைகள் இல்லாமல் இருந்தது. ஒரு முறை அன்னாளுடைய குடும்பம், தேவனை தொழுது கொள்ளுவதற்காக சீலோ என்ற இடத்தில் இருந்த ஆசரிப்புக் கூடாரத்திற்கு சென்றிருந்தார்கள். (ஆசரிப்புக் கூடாரம் என்கிற விசேஷமான கூடாரத்தைப் பற்றி நாம் ஏற்கெனவே இதற்கு முந்தைய பாடங்களில் படித்திருக்கிறோம்). அப்பொழுது அன்னாள் தேவனிடம் ஒரு சிறப்பான விண்ணப்பத்தை ஏறெடுத்தாள். அது என்னவென்றால், தேவன் தனக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால் அதை தேவனுடைய பணிக்கென்று அர்ப்பணித்து விடுவதாகக் கூறினாள். 

அன்னாள் ஜெபித்ததுபோலவே தேவன் அவளுக்கு ஒரு மகனைக் கொடுத்தார். அன்னாள் அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள். சாமுவேல் சற்று வளர்ந்தவுடன், அன்னாள் தான் தேவனிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படியாக சிறுவன் சாமுவேலை, சீலோவிலே ஆசாரியனாயிருந்த ஏலி என்பவரிடம் அழைத்துக் கொண்டு வந்தாள். 

அதன்பின், சிறுவன் சாமுவேல் ஆசாரியன் ஏலியால் வளர்க்கப்பட்டான். ஆனால் அவனுடைய தாயார் அவனை மறக்கவில்லை. வருடந்தோறும் ஆசரிப்புக்கூடாரத்திற்கு பலி செலுத்த வரும்பொழுதெல்லாம் சாமுவேலுக்கு ஒரு சிறிய சட்டையை தைத்து எடுத்துக் கொண்டு வந்தார்கள்.

ஆசாரியனாகிய ஏலிக்கு மிகவும் வயதாகிவிட்டது. சாமுவேல், ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைகளை கவனிப்பதற்கு ஏலிக்கு உதவி செய்து கொண்டு வந்தான். சாமுவேல் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்யும்பொழுதெல்லாம் சணல்நூல் ஏபோத்தை அணிந்து கொண்டிருந்தான். ஏபோத் என்பது ஆசரிப்புக் கூடாரத்தில் ஊழியம் செய்பவர்கள் அணியும் ஒரு பரிசுத்தமான அல்லது புனிதமான உடையாகும். பிரதான ஆசாரியர்கள் அணியும் ஏபோத், பல வண்ணங்கள் கொண்ட மற்றும் விலைமிகுந்த நூற்களினால் செய்யப்பட்ட அலங்காரமான வேலைப்பாடுகள் கொண்டதாகும். சாமுவேல், தாவீது ராஜா ஆகியோர் சணல் நாரினால் நெய்யப்பட்ட சணல்நூல் ஏபோத்தை அணிந்திருந்ததாக வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரவேல் தேசத்தின் வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவன் தீர்க்கதரிசிகளை எழுப்பி அவர்கள் மூலமாய் பேசுவதுண்டு. ஆனால் சாமுவேல் பிறந்த சமயத்தில் தேவன் அவ்வாறு யாரோடும் பேசவில்லை. ஒரு நாள் சாமுவேல் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிகளை முடித்து உறங்கச் சென்றான். அவன் தூங்கிக்கொண்டிருந்தபொழுது யாரோ தன்னுடைய பெயரை அழைப்பதைக் கேட்டான். அவன் ஆசாயனாகிய ஏலி தன்னை அழைப்பதாக நினைத்து, அவரிடம் சென்று, “இதோ இருக்கிறேன், என்னைக் கூப்பிட்டீரே” என்றான். அப்பொழுது ஏலி சாமுவேலிடம், தான் அவனை அழைக்கவில்லை என்றும், திரும்பப்போய் உறங்குமாறும் கூறினார். சிறிது நேரம் கழித்து மறுபடியும் யாரோ தன்னுடைய பெயரை அழைப்பதைக் கேட்டான். மறுபடியும் அவன் ஏலியிடம் சென்றான். ஆனால் ஏலி சாமுவேலை அழைக்கவில்லை. அதனால் திரும்பிச் சென்று உறங்குமாறு கூறினார்.

இதைப்போன்றே இன்னொரு விசையும் நடந்தது. அப்பொழுது சாமுவேல் ஏலியிடம் ஓடிச்சென்று, என்னைக் கூப்பிட்டீரா என்று கேட்டபொழுது, ஆசாரியனாகிய ஏலிக்கு சிறுவன் சாமுவேலை கர்த்தர் கூப்பிடுகிறார் என்று புரிந்து விட்டது. அதனால் ஆசாரியனாகிய ஏலி சாமுவேலிடம், நீ போய் படுத்துக் கொள், இன்னொருமுறை உன்னுடைய பெயரை சொல்லி கூப்பிடுவதைக் கேட்டால், “கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்” என்று சொல்லு என்று கூறினான். அதுபோலவே சாமுவேல் மறுபடியும் சென்று படுத்துக் கொண்டான். அப்பொழுது கர்த்தர் அங்கு வந்து நின்று முன்போலவே “சாமுவேலே, சாமுவேலே” என்று கூப்பிட்டார். உடனே சாமுவேல், “கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்” என்று கூறினான். அப்பொழுது கர்த்தர் சாமுவேலிடம் பேசத் தொடங்கினார்.

கர்த்தர் சாமுவேலிடம் கூறின செய்தி மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏலியின் இரு மகன்கள் ஆசரிப்புக்கூடாரத்தில் ஆசாரியர்களாய் இருந்தார்கள். ஆனால் அவர்கள் தேவனை மதிக்கவில்லை. அதனால் தேவன் அவர்களைத் தண்டிக்கப்போகிறார். அதுமட்டுமல்லாமல் அவனுடைய குடும்பத்தில் இனி யாரும் ஆசாரிய ஊழியம் செய்யப்போவதில்லை. சாமுவேலுக்கு இதைக் கேட்டபொழுது, துக்கமாக இருந்தது. 

மறுநாள் ஏலி சாமுவேலை அழைத்து, கர்த்தர் அவனுக்கு அறிவித்த செய்தி எல்லாவற்றையும் தன்னிடம் கூறுமாறு கேட்டுக்கொண்டான். சாமுவேலும் எல்லாவற்றையும் ஏலியிடம் கூறினான். ஏலிக்கு ஆண்டவர் கூறின எதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அவனால் தன்னுடைய மகன்களை சரிப்படுத்தவும் முடியவில்லை. 

சீக்கிரமே ஆண்டவர் சாமுவேல் மூலமாய் கூறின எல்லாம் ஏலியின் குடும்பத்தில் நிறைவேறியது. சாமுவேல் வளர்ந்தான். ஆண்டவர் அவனோடு அடிக்கடி பேசினார். சாமுவேல் தேவனால் எழுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்று இஸ்ரவேல் மக்களுக்கு எல்லாம் உறுதியானது.

வேதபகுதி: 1 சாமுவேல் 3:1-11

மனப்பாட வசனம்: இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். (ஏசாயா 43:1) 

இதற்கு முந்தின பாடத்தைப் பெற்றுக் கொள்ள இங்கு கிளிக் செய்யவும் (ஆரம்பநிலை பாடம் - 14, முகங்குப்புற விழுந்த தாகோன்) 

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்:

1.    எல்லா வருடமும் அன்னாள் சாமுவேலுக்கு என்ன கொண்டு வந்தார்கள்?  ……………………………………..

2.    சாமுவேல் அணிந்திருந்த ஏபோத் எதினால் செய்யப்பட்டது?

   ……………………………………..

3.    தன்னைக் கூப்பிடுகிற சத்தத்தைக் கேட்டு சாமுவேல் யாரிடம்      சென்றான்?

……………………………….

4.    கடைசியாக ஆண்டவர் சாமுவேலைக் கூப்பிட்டபோது அவன் கூறினது என்ன? ……………………………..

5.    தேவன் சாமுவேலிடம் கூறின செய்தி யார் குடும்பத்தைப் பற்றியது?

…………………………………………… 

சரியா / தவறா:

1.    அன்னாள் சாமுவேலை தேவனுக்கென்று அர்ப்பணித்தாள். ( சரி / தவறு )  

2.    அரண்மனையில் பணி செய்கிற எல்லாரும் ஏபோத்தை அணிந்திருப்பார்கள். ( சரி / தவறு )

3.    சாமுவேல் தூங்கும்பொழுது ஏலியை யாரோ கூப்பிடுவதைக் கேட்டான். ( சரி / தவறு )

4.    ஆண்டவர் ஏலியின் பிள்ளைகளின் மேல் கோபமாயிருந்தார். (சரி / தவறு ) 

5.    ஆண்டவர் சாமுவேலோடு கூறின யாவும் ஏலியின் குடும்பத்தில் சம்பவித்தது. ( சரி / தவறு ) 

 

 

 

Tuesday, October 25, 2022

ரூத் (Ruth Helps Naomi), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 15

பாலர் வகுப்பு (KINDER)

வயது – 4 & 5

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

Click this link to visit the English Sunday School Lessons Blog

பாடம் – 15

ரூத்

எலிமெலேக்கும், நகோமியும் இஸ்ரவேல் தேசத்திலுள்ள பெத்லெகேம் ஊரிலே வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு மக்லோன், கிலியோன் என்று இரு மகன்கள் இருந்தார்கள். ஒருமுறை பெத்லெகேமிலே பஞ்சம் உண்டாயிருந்தது. பஞ்சம் என்றால் உண்ணுவதற்கு உணவு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுவது தான்.


நமக்கு உணவு எவ்வாறு கிடைக்கின்றது என்று தெரியுமா?

நாம் உண்ணும் உணவு வகைகளை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று சைவம், இன்னொன்று புலால் அல்லது அசைவம். சைவ உணவு மரம், செடி, கொடிகளிலிருந்து கிடைக்கும் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவைகளிலிருந்து கிடைக்கின்றது. அசைவ உணவு மிருகங்களிலிருந்து கிடைக்கும் முட்டை, இறைச்சி போன்றது. ஆகவே மரம், செடி, கொடிகள் மற்றும் உணவு பயிர்கள் நல்ல விதத்தில் பயரிடப்பட்டு வளருவது நமக்கு உணவு கிடைப்பதற்கு முக்கியமான ஒன்றாகும்.


உணவு பயிர்கள் நன்கு செழிப்பாக வளருவதற்கு மழை மிகவும் அத்தியாவசியமானது. ஆகவே ஒரு தேசத்தில் மழை நீண்டகாலம் பெய்யாவிட்டால், உணவுபயிர்கள் சரியாக வளரமுடியாமல் காய்ந்து உணவு பற்றாக்குறை ஏற்படும். இப்படி தான் பெத்லெகேமிலும் பஞ்சம் ஏற்பட்டது. அதனால் எலிமெலேக்கும், நகோமியும் அவர்கள் இரண்டு பிள்ளைகளோடுங்கூட பஞ்சத்திலிருந்து தப்பிக்கும்படியாக மோவாப் என்கிற இன்னொரு தேசத்திற்கு புறப்பட்டு சென்றார்கள்.

அங்கு அவர்கள் தங்கியிருக்கும்பொழுது எலிமெலேக்கு இறந்து போனார். அதன்பின்னர் மக்லோனும், கிலியோனும் மோவாப் தேசத்தை சேர்ந்த ஓர்பாள், ரூத் என்கிற பெண்களை திருமணம் செய்து கொண்டார்கள். கொஞ்சம் வருடங்கள் கழித்து மக்லோனும், கிலியோனும் கூட இறந்து போனார்கள்.

ஒருநாள் நகோமி, தன்னுடைய சொந்த ஊராகிய பெத்லெகேமிலே பஞ்சம் முடிவிற்கு வந்து, உணவுப்பொருட்கள் தாராளமாகக் கிடைக்கிறதென்றும், மக்கள் நல்லமுறையில் வாழ்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டாள். அதனால் மோவாப் தேசத்தைவிட்டு தன்னுடைய சொந்த ஊராகிய பெத்லெகேமிற்கு திரும்பி செல்லுவதென்று முடிவெடுத்தாள். ஓர்பாள், ரூத் ஆகிய இருவரும் மோவாப் தேசத்தை சேர்ந்தவர்கள், ஆகவே அவர்களுக்கு பெத்லெகேம் தேசத்தின் பழக்கவழக்கங்கள் வித்தியாசமானதாய் இருக்கும். மேலும் மோவாப் தேசத்திலே அவர்களுடைய உறவினர்கள் இருப்பதால் இவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ளுவார்கள் என்றும் நகோமி எண்ணினாள்.

நகோமி, ஓர்பாள், ரூத் ஆகிய இருவரையும் அழைத்து, அவர்களுடைய பெற்றோரிடத்திற்கு திரும்பி செல்லுமாறு அறிவுரை கூறினாள். ஓர்பாள் சிறிது நேரம் யோசித்து தன்னுடைய மாமியார் கூறினபடியே தன்னுடைய உறவினர்களிடம் திரும்பி சென்று விட்டாள். 

ரூத்திற்கோ தன்னுடைய மாமியாரை தனியே விட மனமில்லை. நகோமி தனியாக சென்றால் தினமும் பல வேலைகளை செய்து மிகவும் கஷ்டப்பட வேண்டியதிருக்கும். தான் தன் மாமியாரோடு கூட சென்றால் அவளுக்கு உதவி செய்யமுடியும் என்று எண்ணினாள். ஆகவே அவளும் நகோமியோடு சேர்ந்து பெத்லெகேமிற்கு சென்றாள். ரூத்தும், நகோமியும் பெத்லெகேமை சென்றடைந்தார்கள். அங்கு அவர்கள் உணவு வாங்குவதற்காக ஏதாவது வேலை கிடைக்குமா என்று ரூத் தேடினாள். அப்பொழுது பெத்லெகேமிலே அறுவடை காலம் நடந்து கொண்டிருந்தது. பயிர்கள் வளர்ந்து, விளையும்பொழுது, அதை அறுவடை செய்வார்கள். அப்படி அறுவடை செய்யும்பொழுது சில தானியங்கள் தரையிலே விழும். அந்த தானியங்களை ஏழைமக்கள் எடுத்துக் கொள்ளும்படியாக விட்டுவிடுவார்கள். ஆகவே ரூத் அங்கு உள்ள ஒரு வயலிலே தானியங்களை பொறுக்கி எடுத்து தங்களுடைய உணவிற்காக பயன்படுத்தும்படியாக சென்றாள்.

ரூத் தானியங்களை பொறுக்கின வயல் நிலம், அவள் அறியாமலேயே அவளுடைய மாமனாரான எலிமெலேக்கின் உறவினர் ஒருவருடையதாக இருந்தது. அவருடைய பெயர் போவாஸ். போவாஸ் ரூத்தின் நல்லகுணங்களைப் பற்றி கேள்விப்பட்டதால் அவளை அன்பாக நடத்தினார். அதுமட்டுமின்றி அவளை நன்றாக நடத்தும்படியாக தன்னுடைய வேலைக்காரர்களுக்கும் கட்டளை கொடுத்தார். சிறிது காலம் கழித்து போவாஸ் ரூத்தை திருமணம் செய்தார். ரூத்தும், போவாஸும் மற்றவகளிடம் அன்பு செலுத்தி, உதவிகளை செய்து, நற்குணத்தை வெளிப்படுத்தினதினால் தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

வேதபகுதி: ரூத் புஸ்தகம்

மனப்பாட வசனம்: எபேசியர் 4:32

 

 

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...