Thursday, November 23, 2023

தாவீதும் ஒரு கூழாங்கல்லும் (David and Goliath), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 16

மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

வயது: 8 - 9 வயது

வகுப்பு: III & IV

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

Click this link to visit the English Sunday School Lessons Blog

பாடம் – 16

தாவீதும் ஒரு கூழாங்கல்லும்

Click this link to get this lesson in English

மிக--இளநிலை வகுப்பின் மற்ற பாடங்களைப் பெற்றுக்கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

இதற்கு முந்தின பாடத்தில் இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதியான சாமுவேலைப் பற்றி அறிந்துகொண்டோம். நியாயாதிபதிகளின் காலத்திற்குப் பின் ராஜாக்கள் இஸ்ரவேல் தேசத்தை ஆளுகை செய்யத் தொடங்கினார்கள். சவுல் இஸ்ரவேல் தேசத்தின் முதல் ராஜாவாகத் தெரிந்தெடுக்கப்பட்டார். சவுல் ராஜா சிறிதுநாட்கள் நல்ல முறையில் ஆட்சிசெய்தார். ஆனால் அதன்பின்னர் அவர் ஆண்டவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியவில்லை. அதனால் ஆண்டவர் அவர்மேல் கோபங்கொண்டு அவரைப் புறக்கணித்தார். பின்னர் கர்த்தர் சாமுவேல் தீர்க்கதரிசியை பெத்லெகேம் என்ற ஊரில் வாழ்ந்து வந்த தாவீது என்ற ஆடு மேய்க்கும் சிறுவனை இஸ்ரவேல் தேசத்தின் அடுத்த ராஜாவாக அபிஷேகிக்கும்படியாக அனுப்பினார். தாவீது சுரமண்டலம் என்கிற இசைகருவியை வாசிப்பதில் தேறினவனாகவும் இருந்தான்.

தாவீதின் தகப்பனார் ஈசாய், வயதுசென்ற மனிதராயும், பெத்லெகேமிலே மதிக்கப்பட்ட ஒரு மனிதராகவும் இருந்தார். சாமுவேல் தீர்க்கதரிசி அவர்கள் வீட்டிற்கு சென்று, தாவீதை இஸ்ரவேல் தேசத்தின் அடுத்த ராஜாவாக அபிஷேகம் பண்ணினார். தாவீது சிறுவயதிலேயே ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டிருந்தாலும், சவுல் ராஜாவின் ஆட்சி நிறைவடைந்தபின்னரே அவன் இஸ்ரவேல் தேசத்தை ஆளுகை செய்யத் தொடங்கினான்.

இந்த பாடத்தில் நாம் கற்கப் போகும் சம்பவம், தாவீது ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டு சில காலம் கழித்து சம்பவித்தது.

ஒருமுறை பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல் தேசத்திற்கு எதிராக யுத்தத்திற்கு வந்தார்கள். அவர்களை எதிர்த்து போரிடும்படி சவுல் ராஜாவும், அவருடைய போர்வீரர்களும் சென்றார்கள். தாவீதின் மூத்த சகோதரர்கள் சவுல் ராஜாவின் படையில் இருந்தார்கள். அதனால் அவர்களும் கூடசென்றார்கள். இரண்டு படைகளும் இரண்டு மலைஉச்சியின் மேல் நின்றார்கள். அவர்களுக்கு நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. இரண்டு படைகளும் உடனே யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை. அதன் காரணம் என்னவென்றால், பெலிஸ்திய படையிலே கோலியாத் என்கிற பெயருள்ள ஒரு இராட்சதன் இருந்தான். அவன் தன்னுடைய படைக்கு முன்பாக வந்து நின்று இஸ்ரவேலரையும், அவர்களுடைய தேவனையும் ஏளனமாகப் பேசினான்.

கோலியாத்தின் உயரம் ஆறுமுழம் (சில மொழிபெயர்ப்புகளில் ஒன்பது அடி என்றும் கொடுக்கப்பட்டுள்ளது). அவன் தலைக்கு பாதுகாப்பிற்காக ஒரு வெண்கல தலைகவசமும், உடலை பாதுகாத்து கொள்வதற்காக போர்கவசமும்  அணிந்திருந்தான். அவன் கால்களை பாதுகாப்பதற்காகவும் ஒரு வெண்கல கவசம் அணிந்திருந்தான். அவன் ஒரு ஈட்டியையும் வைத்திருந்தான். அவனுடைய ஈட்டியின் முனை இரும்பாயிருந்தது.

கோலியாத் இரு படைகளும் யுத்தம் செய்வதை விரும்பவில்லை. அதற்கு பதிலாக இஸ்ரவேலிலிருந்து ஒரே ஒரு வீரன் தன்னிடம் வந்து போரிட வேண்டும் என்று சத்தமிட்டு கூறினான். தான் இஸ்ரவேலனிடம் தோற்றுவிட்டால் பெலிஸ்தர்கள் அனைவரும் இஸ்ரவேலர்களுக்கு அடிமைகளாகிவிடுவார்கள் என்றும், தான் இஸ்ரவேலனை தோற்கடித்தால் இஸ்ரவேலர்கள் அனைவரும் பெலிஸ்தியர்களுக்கு அடிமைகளாக வேண்டும் என்றும் கூறினான். இவ்வாறு அவன் நாற்பது நாட்கள் செய்தான். சவுல் ராஜாவும் அவனுடைய படைவீரர்களும் கோலியாத்தைக் கண்டு பயந்து ஒளிந்துகொண்டார்கள்.

இந்த சமயத்தில் தாவீதின் தகப்பனான ஈசாய் சவுலுடைய படையில் இருக்கும் தன்னுடைய மூத்த மகன்களை நலம் விசாரிக்க வேண்டும் என்று எண்ணினார். அவர் தன்னுடைய இளைய மகனான தாவீதை அழைத்து, அவனிடத்தில் வறுத்த பயிற்றையும், பத்து அப்பங்களையும் (ரொட்டிகள்) கொடுத்து அவர்களிடத்தில் நலம் விசாரித்து வர அனுப்பினார். தாவீதின் சகோதரர்கள் மேல் அதிகாரிகளாயிருந்த ஆயிரம் பேருக்கு அதிபதிகளுக்கு கொடுப்பதற்கு பத்து பால்கட்டிகளையும் (Food item similar to cheese) கொடுத்து அனுப்பினார். தாவீது தான் மேய்த்துவந்த ஆடுகளை ஒரு மனிதனிடம் ஒப்படைத்துவிட்டு தன்னுடைய சகோதரர்களை பார்க்க சென்றார்.

தாவீது படைவீரர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று தன்னுடைய சகோதரர்களை சந்தித்தார். அப்பொழுது கோலியாத் முன்போலவே வந்து நின்று இஸ்ரவேலரை நிந்தித்து தன்னுடைய சவாலை கர்ஜித்தார். தாவீது இதை கேட்டான். இஸ்ரவேலரின் படைவீரர்கள் கோலியாத்தைக் கண்டி ஓடிஒளிவதையும் பார்த்தான். தாவீதால் அதை நம்ப முடியவில்லை. கோலியாத்திடம் சண்டையிடுவதற்கு வேறுயாரும் போக முன்வரவில்லையென்றால் தானே போய் அவனிடம் கண்டையிடுவதாக தீர்மானித்தான்.

தாவீது சவுல் ராஜாவிடம் தன்னை கோலியாத்திடம் சண்டையிட அனுப்புமாறு கேட்டுக்கொண்டான். ஆனால் சவுலோ தாவீதால் கோலியாத்தை எதிர்நிற்க முடியாது என்று எண்ணி அவனை தடுக்க முயற்சித்தான். ஆனால் தாவீதோ தான் ஆடுகளை மேய்க்கும்பொழுது சிங்கத்தையும், கரடிகளையும் கொன்றிருப்பதாகவும் ஆகவே கோலியாத்தைப் பார்த்து தனக்கு பயமில்லை என்றும் கூறினான். 

சவுல் ராஜா இதை கேட்டவுடன், அவன் தாவீதிற்கு தன்னுடைய வஸ்திரத்தைக் கொடுத்து, ஒரு வெண்கல தலைகவசத்தையும், உடலைப் பாதுகாப்பதற்காக ஒரு கவசத்தையும் அணிவித்தான். தாவீது சவுலுடைய பட்டயத்தை அந்த வஸ்திரத்தில் கட்டிக் கொண்டு நடந்து பார்த்தான். அதிலே அவனுக்கு பழக்கமில்லாததினால் அவன் அதையெல்லாவற்றையும் கழற்றி வைத்துவிட்டான். தாவீது சவுலுடைய வஸ்திரத்தின்மேல் தன்னுடைய நம்பிக்கையை வைக்காமல் ஆண்டவர் மேல் தன்னுடைய நம்பிக்கையை வைத்தான்.

தாவீது தனக்கு நன்கு பழக்கப்பட்ட ஒரு ஆயுதத்தை கையில் எடுக்க தீர்மானித்தான். அவன் தன்னுடைய மேய்ப்பனின் கோலை எடுத்துக் கொண்டு, அருகில் இருந்த ஒரு ஆற்றிற்கு சென்றான். அந்த ஆற்றிலிருந்து ஐந்து கூழாங்கற்களை எடுத்துக் கொண்டான். அவன் யுத்தகளத்திற்கு சென்று கோலியாத்திற்கு நேரே ஓடினான். கோலியாத் சிறுவனான தாவீது தன்னுடன் யுத்தத்திற்கு வருவதைக் கண்டு எரிச்சலடைந்தான். அவன் தாவீதிடம் நீ என்னுடன் சண்டையிட கம்போடு வருவதற்கு நான் ஒரு நாயைப் போன்று இருக்கிறேனா என்று கேட்டான். அதுமட்டுமல்லாமல் தாவீதைக் கொன்று அவனுடைய உடலை பறவைகளுக்கு உணவாகக் கொடுக்கப்போவதாகவும் கூறினான்.

ஆனால் தாவீது அவனுடைய மிரட்டல்களுக்கு பயப்படவில்லை. தாவீது கோலியாத்தைப் பார்த்து நீ உன்னுடைய ஆயுதங்களை நம்பி என்னிடம் சண்டையிட வருகிறாய், நான் நீ அவமதித்த இஸ்ரவேலின் தேவனுடைய பெயரில் உன்னிடம் சண்டையிட வருகிறேன் என்று கூறினான். அதுமட்டுமல்லாமல் ஆண்டவர் கோலியாத்தை தனக்கு முன்பாக வீழ்த்துவார் என்றும், கோலியாத் எதை தாவீதிற்கு செய்ய நினைத்தானோ, அதை தாவீது கோலியாத்திற்கு செய்து, அவனுடைய உடலை பறவைகளுக்கு உணவாக கொடுக்கப்போவதாகவும் கூறினான்.

கவணும் கூழாங்கற்களும்.

பின்னர் தாவீது தாமதிக்காமல், கோலியாத்திற்கு நேரே ஓடிப் போய், தன்னுடைய பையில் வைத்திருந்த ஒரு கூழாங்கல்லை எடுத்து, அதை கவணிலே வைத்து சுற்றி, அது கோலியாத்தின் நெற்றியில் பட எறிந்தான். அந்த கல் குறிதவறாமல் கோலியாத்தின் நெற்றியில் பதிந்ததினால், அவன் கீழே சரிந்து விழுந்தான். இவ்வாறு தாவீது என்கிற ஒரு சிறுவன் ஒரு கவணினாலும், ஒரு கல்லினாலும் கோலியாத் என்கிற ஒரு பெரிய ராட்சதனை வீழ்த்தினான். பெலிஸ்தியர்கள் தங்களுடைய மாவீரன் கொல்லப்பட்டதைப் பார்த்து பயந்து தங்கள் பட்டணத்திற்கு ஓடிப் போனார்கள். தாவீது இஸ்ரவேலின் தேவன் மேல் மாத்திரம் நம்பிக்கை வைத்து, துணிந்து செயல்பட்டதினால் கோலியாத்தை எளிதாக வீழ்த்தினான்.

வேதபகுதி: 1 சாமுவேல் 16, 17

மனப்பாட வசனம்: என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். (சங்கீதம் 144:1)

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்

1.    தாவீதின் தகப்பன் யார்?

……………………………..

2.    தாவீது படையிலிருந்த தன் மூத்த சகோதரர்களுக்கு எடுத்து சென்றது என்ன?  

………………………………………

3.    தாவீது ஆற்றிலிருந்து எதை எடுத்தான்? …………………………

4.    தாவீது கோலியாத்திடம் என்ன கூறினான்? ………………………………………

5.    தாவீது கோலியாத்தை வீழ்த்துவதற்கு எத்தனை கற்களை பயன்படுத்தினான்? …………………………

 

சரியான பதிலைத் தெரிந்தெடுக்கவும் 

1.  கர்த்தர் சாமுவேல் தீர்க்கதரிசியை தாவீது என்ற ஆடு மேய்க்கும் சிறுவனை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகிக்கும்படியாக ………………………… என்ற ஊருக்கு அனுப்பினார்.

2. தாவீது ………………………….. வாசிப்பதில் தேறினவன்.

3. தாவீது சவுலுடைய ……………………….. அந்த வஸ்திரத்தில் கட்டிக் கொண்டு நடந்து பார்த்தான்.

4. கோலியாத்,, தாவீதைக் கொன்று அவனுடைய உடலை ………………………….. உணவாகக் கொடுக்கப்போவதாக கூறினான்.

5. தாவீது எறிந்த கல் குறிதவறாமல் கோலியாத்தின் …………………………. பதிந்தது.

 

Thursday, November 16, 2023

உதவ மறுத்த நாபால் (Nabal Refuses to Help), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 16

ஆரம்பநிலை வகுப்பு (PRIMARY)

வயது: 6 - 7 வயது

வகுப்பு: I & II

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

Click this link to visit the English Sunday School Lessons Blog

பாடம் – 16

உதவ மறுத்த நாபால்

இதற்கு முந்தின ஆரம்பவகுப்பு பாடங்களைப் பெற்றுக்கொள்ள இந்த லின்க் ஐ கிளிக் செய்யவும்

Click this link to get this lesson in English

இஸ்ரவேல் தேசத்தில் மாகோன் என்ற ஊரில் நாபால் என்ற செல்வந்தர் ஒருவர் இருந்தார். அப்பொழுது சவுல் ராஜா இஸ்ரவேல் தேசத்தை ஆண்டு வந்தார். நாபாலிடம் ஆயிரம் வெள்ளாடுகளும், மூவாயிரம் செம்மறியாடுகளும் இருந்தன. அவருடைய மனைவியின் பெயர் அபிகாயில். நாபால் கஞ்சத்தனமான குணமற்ற மனிதராகக் காணப்பட்டார். அபிகாயிலோ தாராள குணமுள்ள நல்ல பெண்ணாக இருந்தாள்.

ஆட்டு மேய்ப்பன்

          
                             செம்மறி ஆடு (Sheep)                                   வெள்ளாடு (Goat)

ஆடுகளை வளர்க்கும் மேய்ப்பர்கள் ஆண்டிற்கு ஒருமுறை ஆடுகளின் ரோமத்தை வெட்டுவார்கள். ஆட்டின் ரோமம் குளிர்காலங்களில் பயன்படும் பலவிதமான கம்பளி உடைகள் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது. ஆட்டின் ரோமத்தை வெட்டுவது என்பது மனிதர்களுக்கு முடியை வெட்டுவது போன்றது. ஆடுகளின் ரோமம் வெட்டப்பட்டபின் திரும்பவும் முளைக்கும். பொதுவாக குளிர்காலம் முடிந்து, வசந்தகாலமும் முடியும் நேரத்தில் தான் ரோமங்களை கத்தரிப்பார்கள். அது கோடை காலங்களில் ஆடுகளின் உடல்நலன் சீராக இருக்க உதவும்.

ஆடுகளின் ரோமங்களை வெட்டுவது

ஆட்டுரோமங்களை கம்பளிநூலாகத் திரிப்பது

உலர்ந்த கம்பளி நூல்

கம்பளி ஆடை

பண்டைய காலங்களில் ஆடுகளுக்கு ரோமம் கத்தரிப்பதை விழாவாகக் கொண்டாடுவார்கள். ஆயிரக்கணக்கான ஆடுகளுக்கு ரோமம் கத்தரிக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு அதிகமான உதவிகள் தேவைப்படும். ஆகவே, உதவிக்காக உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் கூலியாட்கள் பயன்படுத்தப்படுவார்கள். ஆடுகளின் ரோமம் கத்தரிக்கப்பட்டு முடிந்தவுடன் அதை ஆடல், பாடல் மற்றும் விருந்துடன் கொண்டாடுவார்கள்.

ஒருமுறை நாபால், கர்மேல் என்ற இடத்தில் தன்னுடைய ஆடுகளுக்கு ரோமம் கத்தரிக்கும் விழா நடத்திக் கொண்டிருந்தார். ஆடு கத்தரிக்கும் விழா நடத்தும்போது மேய்ப்பர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். வெட்டப்பட்ட ரோமங்களை பக்கத்து ஊர்களிலிருந்து வரும் எதிரிகளோ, திருடர்களோ திருடி சென்றால் மேய்ப்பர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். அவர்களுடைய ஒருவருடத்திற்கான வருமானத்தை இழக்க நேரிடும்.

தாவீது சவுல்ராஜாவின் படைத்தளபதியாக இருந்தார். ஒருமுறை சவுல்ராஜாவிற்கு தாவீதின்மேல் கோபம் ஏற்பட்டு அவரைப் பிடித்து தண்டிக்க வேண்டும் என்று இருந்தார். தாவீது தன்னுடைய ஆட்களுடன் தப்பித்து கர்மேலுக்கு வந்தார். அப்பொழுது நாபால், கர்மேலில் ஆடுகளுக்கு ரோமம் கத்தரித்துக் கொண்டிருந்தார். தாவீதும் அவருடைய ஆட்களும் நாபாலின் ஆட்டு மந்தையருகே தங்கி இருந்தார்கள். அவர்கள் நாபாலுடைய மந்தைக்கு பாதுகாப்பாக இருந்தார்கள்.

ஒருமுறை தாவீதிற்கும் அவருடைய ஆட்களுக்கும் உணவு தேவைப்பட்டது. அவர் நாபாலிடம் உதவி பெறலாமென்று எண்ணினார். தன்னுடைய ஆட்களில் பத்து பேரை அனுப்பி உதவி கோரினார். ஆனால் நாபாலோ அவர்களுக்கு உதவி செய்ய மறுத்து, அவர்கள் தங்கள் எஜமானனை விட்டு ஓடிப்போனவர்கள் என்று கூறி அவமானப்படுத்தி அனுப்பினார்.

தாவீதிற்கு அந்த நேரம் உதவி தேவைப்பட்டிருந்தாலும் அவர் ஒரு சாதாரண நபர் அல்ல. அவர் சவுல் ராஜாவின் படைத்தளபதி. ஒரு நல்ல போர்வீரன். ஆண்டவர் அவரோடு கூட இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஆண்டவர் அவரை இஸ்ரவேல் தேசத்தின் அடுத்த ராஜாவாக தெரிந்தெடுத்தும் இருந்தார். ஆனால் பொல்லாத குணமுள்ள நாபாலோ தன்னுடைய மதியீனமான செயலால் தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும், நண்பர்களையும், வேலையாட்களையும் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளுகிறோம் என்று உணராமல் அவ்வாறு செய்தார்.

தாவீதின் ஆட்கள் திரும்பி வந்து நாபாலின் பதிலை தாவீதிற்கு சொன்னபொழுது, தாவீது நாபாலுக்கு பாடம் புகட்ட விரும்பினார். அதனால் தன்னுடைய நானூறு ஆட்களுடன் நாபால் மேல் படையெடுத்து சென்றார். இதை அறிந்தவுடன் நாபாலின் ஒரு வேலையாள் வேகமாக நாபாலின் மனைவியான அபிகாயிலிடம் போய் அதை கூறினார்.

தன்னுடைய குடும்பம் ஆபத்தில் இருப்பதை அறிந்த அபிகாயில் வேகமாக ஒரு முடிவெடுத்தாள். அவள் 200 அப்பங்களையும், 2 ஆட்டுத்தோலினால் ஆன பைகளில் திராட்சரசத்தையும், சமைக்கப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயிற்றையும், உலர்த்தப்பட்ட நூறு திராட்சைக்குலைகளையும், 200 உலர்த்தப்பட்ட அத்திப்பழ அடைகளையும் தாவீதிடம் எடுத்துசென்றாள். அவள் தாவீதிடம் ஞானமாய் பேசி தான் கொண்டுவந்த பொருட்களை தாவீதிடம் கொடுத்தாள். ஆகவே தாவீது நாபாலிடம் சண்டையிடவேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு, அபிகாயிலிடம் சமாதானம் கூறி அவளை அனுப்பினார். அபிகாயிலின் நல்ல குணத்தினால் அவளுடைய குடும்பம் தப்புவிக்கப்பட்டது.

வேதபகுதி: 1 சாமுவேல் 25:1 - 35

மனப்பாட வசனம்: ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? (1 யோவான் 3:17)

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்:

1. நாபாலுடைய குணம் எப்படிப்பட்டதாயிருந்தது?  ……………………………………..

2. ஆட்டின் ரோமம் எதற்கு பயன்படும்? ……………………………………..

3. ஆட்டின் ரோமம் கத்தரிப்பதை எவ்வாறு கொண்டாடுவார்கள்? ……………………………….

4. தாவீது நாபாலிடம் எத்தனை ஆட்களை அனுப்பினார் ? ……………………………..

5. அபிகாயில் தாவீதிற்கு கொடுத்த ஏதாவது இரண்டு பொருட்களின் பெயரை எழுதவும். …………………………………………… 

சரியான பதிலைத் தெரிந்தெடுக்கவும்

1. நாபால் ஆடுகளுக்கு ரோமம் கத்தரித்த இடத்தின் பெயர்

    (அ) பெத்தேல்             (ஆ) எரிகோ              (இ) கர்மேல்

2. தாவீது யாரிடமிருந்து உணவு பெறுவதற்காக பத்து ஆட்களை அனுப்பினார்.

    (அ) சாமுவேல்             (ஆ) நாபால்             (இ) சவுல்

3. தாவீது யாருடைய படைத்தளபதி?

   (அ) சவுல்                        (ஆ) யோசுவா         (இ) சாலமோன்

4. தாவீது எத்தனை ஆட்களுடன் நாபால் மேல் படையெடுத்து சென்றார்?

     (அ) 100                           (ஆ) 400                      (இ) 200

5. யாருடைய புத்தியான செயலினால் நாபாலின் குடும்பம் பாதுகாக்கப்பட்டது?

    (அ) ராகாப்                    (ஆ) அன்னாள்          (இ) அபிகாயில்




Thursday, November 2, 2023

சவுலும் தொலைந்துபோன கழுதைகளும் (Saul Goes in search of Donkeys), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 16

பாலர் வகுப்பு (KINDER)

வயது – 4 & 5

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 16

சவுலும் தொலைந்துபோன கழுதைகளும்

இஸ்ரவேல் தேசத்திலே கீஸ் என்ற மனிதன் வாழ்ந்து வந்தார். கீஸ் ஆடுமாடுகள், கழுதைகள் போன்ற மிருகஜீவன்களை வளர்த்து வந்தார். அவருக்கு சவுல் என்கிற ஒரு மகன் இருந்தான். பழங்கால மக்கள் தங்களுக்கு வேண்டிய உணவு, உடை  ஆகியவற்றை மிருகங்களிடமிருந்து பெற்றுவந்தனர். 

மிருகங்களின் உரோமங்கள், தோல் ஆகியவவை மக்கள் அணியும் ஆடைகள், தங்குவதற்கான கூடாரம் போன்றவற்றை உருவாக்க பயன்படுத்தப்பட்டன. ஒட்டகம், கழுதை போன்ற மிருகங்கள் சுமைமிருகங்களாக பயன்பட்டன. ஆகவே மிருகங்களை தங்களுடைய பொக்கிஷங்களாகவே பழங்கால மக்கள் எண்ணி பாதுகாத்தனர்.

வளர்ப்புமிருகங்களின் உணவிற்காக பசுமையான புற்கள் உள்ள மேய்ச்சல்நிலங்களுக்கு அவைகளை அழைத்து செல்வர். அவ்வாறு கீசுடைய கழுதைகள் மேய்ச்சலுக்காக அழைத்துசெல்லப்பட்ட பொழுது, அவைகள் ஒருநாள் காணாமல் போயின. கீஸ் தன்னுடைய மகனான சவுலையும், வேலைக்காரர் ஒருவரையும் அழைத்து காணாமல் போன கழுதைகளை கண்டுபிடித்துவரும்படி அனுப்பினார். சவுலும் வேலைக்காரரும் பல இடங்களில் அலைந்து திரிந்தும் கழுதைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

கழுதைகளை தேட ஆரம்பித்து பல தினங்கள் கடந்துவிட்டதை உணர்ந்த சவுல், தன்னுடைய வேலைக்காரரை வீட்டிற்கு திரும்பி செல்லுவதற்காக அழைத்தார். தன்னுடைய தகப்பனார் கழுதைகள் மேலிருக்கும் கவலையை விட்டுவிட்டு அவர்களைப் பற்றி கவலைப்பட ஆரம்பித்துவிடுவார் என்று கூறினார். ஆனால் வேலைக்காரரோ எப்படியாவது கழுதைகளை கண்டுபிடித்து விடவேண்டும் என்று எண்ணினார். சாமுவேல் தீர்க்கதரிசி என்கிற இஸ்ரவேல் தேசத்தின் ஒரு பெரிய தீர்க்கதரிசி அவர்கள் இருந்த கிராமத்திற்கு அருகில் இருந்த ஒரு கிராமத்திற்கு வருவதை அவர் கேள்விப்பட்டிருந்தார். அந்த நாட்களில் தீர்க்கதரிசிகளை ஞானதிருஷ்டிக்காரர்கள் என்று மக்கள் அழைத்தனர். அவர்களுக்குள் அற்புதமான செயல்களை நிகழ்த்தும் சக்தியை ஆண்டவர் கொடுத்திருந்ததினால் மக்கள் அவர்களை அவ்வாறு அழைத்தனர். ஆகவேதான் சவுலுடைய வேலைக்காரர் தொலைந்து போன கழுதைகள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள சாமுவேல் தீர்க்கதரிசியிடம் செல்ல வேண்டும் என்று கூறினார். சாமுவேல் தீர்க்கதரிசி கழுதைகள் இருக்கும் இடத்தை தெரியப்படுத்திவிடுவார் என்று அவர் நம்பினார்.

சவுலும் வேலைக்காரரும் பக்கத்து கிராமத்தில் இருந்த சாமுவேல் தீர்க்கதரிசியை தேடி சென்று அவரை கண்டுபிடித்தனர். அவர்களைப் பார்த்தவுடனே சாமுவேல் தீர்க்கதரிசி சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன என்றும் அவனுடைய தகப்பனார் சவுலுக்காக கவலைப்படுவதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் சாமுவேல் தீர்க்கதரிசி சவுலுக்காக விசேஷமான விருந்தை ஆயத்தம் செய்தார். 

ஏனென்றால் அவனுக்கு கொடுக்கப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான செய்தி ஒன்று இருந்தது. ஆண்டவர் இஸ்ரவேல் தேசத்தின் இராஜாவாக சவுலை தெரிந்தெடுத்திருந்தார். சாமுவேல் தீர்க்கதரிசி சவுலிடம் அவன் வீட்டிற்கு திரும்பிசெல்லும்போது நடைபெறப்போகிற சில சம்பவங்களை அடையாளமாக முன்கூட்டியே அறிவித்தார். சவுல் தன் வீட்டிற்கு திரும்பி சென்றார். சவுல் தன் வீட்டிற்கு திரும்பி செல்லும் வழியிலே, சாமுவேல் தீர்க்கதரிசி சொன்னபடியெல்லாம் நடந்தது. சிறிது நாட்கள் கழித்து, இஸ்ரவேல் தேசத்தின் முதல் இராஜாவாக சவுல் கிரீடம் சூட்டப்பட்டார்.

வேதபகுதி: I சாமுவேல் 9:1 -10:9

மனப்பாட வசனம்: சங்கீதம் 33:11

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/



தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...