Tuesday, February 18, 2020

பரிசுத்த வேதாகமத்தின் புஸ்தகங்கள் (The Books of the Holy Bible), இடைநிலை வகுப்பு (Intermediate), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 1

இடைநிலை வகுப்பு (Intermediate)

12 - 13 வயது

ஞாயிறுபள்ளி பாடங்கள்

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 1

பரிசுத்த வேதாகமத்தின் புஸ்தகங்கள் 

பரிசுத்த வேதாகமத்தில் 66 புஸ்தகங்கள் உள்ளன. இவை பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 66 புஸ்தகங்களும் பரிசுத்த வேதாகமத்தில் சேர்க்கப்படுவதற்கு “கேனான்” (canon) என்கிற விதிமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கேனான் என்கிற கிரேக்க வார்த்தையின் அர்த்தம் ‘விதிமுறை’ அல்லது ‘அளவுகோல்’ என்பதாகும். கேனான் விதிமுறைப்படி பரிசுத்த வேதாகமத்தின் தரத்தை அடைந்த 66 புத்தகங்களே பரிசுத்த வேதாகமத்தில் இணைக்கப்பட்டுள்ளன. (கேனான் (Canon) என்றால் என்ன என்பது இப்பாடத்தின் இறுதியில் விளக்கப்பட்டுள்ளது)

வேதாகமப் புஸ்தகங்களின் வரிசைமுறை:

வேதாகமப் புஸ்தகங்கள் எழுதப்பட்ட அல்லது அவைகளிலுள்ள சம்பவங்கள் நடைபெற்ற காலங்களின் அடிப்படையில் அடுக்கப்படாமல், புஸ்கங்கள் எழுதப்பட்ட மொழிநடை மற்றும் அவைகளின் வகைகளின் (வரலாற்றுப் புஸ்தகங்கள், கவிதைகள், தீர்க்கதரிசனங்கள்) அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளன. ஆகவே ஒரு பழைய சம்பவத்தை விளக்கும் புஸ்தகம் வேதாகமத்தில் முதலில் வைக்கப்படாமல், பின்பதாக வைக்கப்பட்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக – யோபு புஸ்தகத்தின் சம்பவங்கள் மோசே காலத்திற்கு முன்பதாகவே நடந்ததாகக் கருதப்பட்டாலும், அது கவிதை வடிவில் இருப்பதால் வேதாகமத்தில் முதலில் வைக்கப்படாமல், கவிதை புஸ்தகங்களின் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. 

பழைய ஏற்பாடு:

பரிசுத்த வேதாகமத்தின் பழைய ஏற்பாடு எழுதப்பட்ட மூலபாஷை “எபிரெய மொழி” ஆகும். கிறிஸ்தவர்களின் “பழைய ஏற்பாடும்”, யூதர்களின் வேதமாகிய “தனாக் (Tanakh)” என்பதும் ஒன்றேயாகும். இவை ஏறத்தாழ கிமு 1600 ஆவது ஆண்டு முதல் கிமு 400 ஆவது ஆண்டு வரை எழுதப்பட்டவை. பழைய ஏற்பாட்டின் எல்லா புஸ்தகங்களும் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே எழுதப்பட்டவை.

பழைய ஏற்பாட்டில் 39 புஸ்தகங்கள் உள்ளன. இவை 5 முக்கியமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1.    பஞ்சாகமங்கள் (மோசேயின் ஐந்து புஸ்தகங்கள்)

2.    வரலாற்றுப் புஸ்தகங்கள்

3.    ஞானம் / கவிதை புஸ்தகங்கள்

4.    பெரிய தீர்க்கதரிசிகள்

5.    சிறிய தீர்க்கதரிசிகள்

(பெரிய / சிறிய தீர்க்கதரிசிகள் என்பது இவர்கள் எழுதிய தீர்க்கதரிசன புஸ்தகங்களின் அளவை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது)


எண்

பிரிவுகள்

புஸ்தகங்கள்

1.

பஞ்சாகமங்கள்

 (5 ஆகமங்கள் / புஸ்தகங்கள் )

ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்

2.

வரலாற்றுப் புஸ்தகங்கள் 

(12 புஸ்தகங்கள்)

யோசுவா, நியாயாதிபதிகள், ரூத், 1 & 2 சாமுவேல், 1 & 2 இராஜாக்கள், 1 & 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா & எஸ்தர்

3.

ஞானம் / கவிதை புஸ்தகங்கள்

(5 புஸ்தகங்கள்)

யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, உனனதப்பாட்டு

4.

பெரிய தீர்க்கதரிசிகள்

(5 புஸ்தகங்கள்)

ஏசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியேல், தானியேல்

5.

சிறிய தீர்க்கதரிசிகள்

(12 புஸ்தகங்கள்)

ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.


யூத வேதம்:

கிறிஸ்தவர்களின் “பழைய ஏற்பாடும்”, யூதர்களின் வேதமாகிய “தனாக் (Tanakh)” என்பதும் ஒன்றேயாகயிருந்தாலும் அவைகள் வித்தியாசமாக முறைபடுத்தப்பட்டுள்ளன. யூத வேதம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

         1.    நியாயப்பிரமாணம் – இது தோரா (Torah) என்று அழைக்கப்படுகிறது

   2.    தீர்க்கதரிசனங்கள் – இவை நெவிம் (Nevi’im) என்று

         அழைக்கப்படுகின்றன

   3.   எழுத்துக்கள் - இவை கெத்துவிம் (Ketuvim) என்று

         அழைக்கப்படுகின்றன

தோரா (Torah), நெவிம் (Nevi’im), கெத்துவிம் (Ketuvim) ஆகிய வார்த்தைகளின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து யூத வேதத்தை “தனாக் (Tanakh)” என்று அழைக்கின்றனர்.

புதிய ஏற்பாடு:

புதிய ஏற்பாடு கிறிஸ்தவ வேதாகமத்தில் மட்டுமே உள்ளது. யூத வேதத்தில் இல்லை. புதிய ஏற்பாடு அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு கிபி முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டில் 27 புஸ்தகங்கள் உள்ளன. இவை 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1.    சுவிசேஷம்

2.    சபை வரலாறு

3.    பவுலின் நிருபங்கள் (கடிதங்கள்)

4.    பொதுவான நிருபங்கள் (கடிதங்கள்)

5.    கடைசிக்கால சம்பவங்கள் / தீர்க்கதரிசனம்


எண்

பிரிவுகள்

புஸ்தகங்கள்

1.

சுவிசேஷம்(4 புஸ்தகங்கள்)

மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்

2.

சபை வரலாறு(1 புஸ்தகம்)

அப்போஸ்தலருடைய நடபடிகள்

3.

பவுலின் நிருபங்கள்

(13 புஸ்தகங்கள்)

ரோமர், 1&2 கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், 1 & 2 தெசலோனிக்கேயர், 1 & 2 தீமோத்தேயு, தீத்து, பிலேமோன்

4.

பொதுவான நிருபங்கள் (8 புஸ்தகங்கள்)

எபிரெயர், யாக்கோபு, 1 & 2 பேதுரு, 1,2 73 யோவான், யூதா

5.

கடைசிக்கால தீர்க்கதரிசனம்(1 புஸ்தகம்)

வெளிப்படுத்தின விசேஷம்

பரிசுத்த வேதாகமத்தின் செய்தி:

பழைய ஏற்பாட்டின் புஸ்தகங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளக்கூடிய காரியங்கள்

·         இந்த பிரபஞ்சம் / உலகத்தின் படைப்பு / மனிதனின் வீழ்ச்சி / மனிதன் எவ்வாறு நித்திய ஜீவனை இழந்தான்

·         தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் / இரட்சிப்பின் திட்டத்தைத் தடுக்க சாத்தான் மேற்கொண்ட முயற்சிகள் / சூழ்ச்சிகள்

·         மேசியாவின் வருகைக்காக (இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்காக) இந்த உலகம் எவ்வாறு ஆயத்தமாக்கப்பட்டது

புதிய ஏற்பாட்டின் புஸ்தகங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளக் கூடிய காரியங்கள்

·         மேசியாவின் (இயேசு கிறிஸ்துவின்) பிறப்பு

·         இயேசு கிறிஸ்துவினுடைய பரிகார மரணத்தின் மூலமாக தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் நிறைவேற்றப்படுதல்

·         மனிதன் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளுவது எப்படி

·         இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும், உலகத்தின் முடிவும் / தேவனோடு நித்திய காலமாய் வாழ்வது


 பரிசுத்த வேதாகமத்தின் நம்பகத்தன்மைக்கான சான்றுகள்:

பரிசுத்த வேதாகமத்தின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க பலர் முயற்சித்தபொழுதும், காலத்தின் சோதனைகளைக் கடந்து ஒரு தன்னிகரற்ற புஸ்தகமாகவே பரிசுத்த வேதாகமம் திகழ்ந்துள்ளது. அச்சு இயந்திரம் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்பான காலங்களில் பரிசுத்த வேதாகமத்தின் பிரதிகள் கைகளாலேயே எழுதப்பட்டு உருவாக்கப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்ட பிரதிகளில் 24,000 பிரதிகள் இன்னும் உள்ளன, அவைகளில் 5300 பிரதிகள், கிரேக்க புதிய ஏற்பாடு பிரதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆகவே பரிசுத்த வேதாகமம் இன்று உலகத்தில் அதிக பிரபலமாய் கருதப்பட்டு வாசிக்கப்படும் ஹோமர் (Homer), ப்ளேட்டோ (Plato) ஆகியோருடைய புஸ்தகங்களுக்கு உள்ளவைகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான பழையகால பிரதிகளோடு மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், கிறிஸ்தவத்திற்குப்பின் பல நூற்றாண்டுகளுக்குப் பின் துவங்கப்பட்ட மதங்களில்கூட இத்தகைய பழங்கால பிரதிகளோ, இவ்வளவு எண்ணிக்கையிலான பிரதிகளோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே பரிசுத்த வேதாகமம் நம்பகமற்றது என்றோ, திருத்தப்பட்டது என்றோ சொல்லுவது ஆதாரமற்றது. (1)

பரிசுத்த வேதாகமம் பல கண்டங்களுக்கும், தேசங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு ஆயிரக்கணக்கான மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. மொழி மற்றும் கலாச்சாரங்களில் உள்ள வித்தியாசங்கள் காரணமாக பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பல வார்த்தைகளை வருணிக்கக்கூடிய வார்த்தைகள் பல மொழிகளில் இல்லாத காரணங்களினால் பரிசுத்த வேதாகமத்தை மொழிபெயர்ப்பதில் சிரமங்கள் ஏற்பட்டாலும், தேவன் பரிசுத்த வேதாகமத்தின் மூலமாக மனிதனுக்கு கூறமுற்பட்ட எல்லா தகவல்களும் எந்தவித மாற்றமும் இன்றி, எல்லா மொழிகளிலும் கூறப்பட்டிருக்கிறது. 

தேவனுடைய பரிசுத்தமான வார்த்தைகளை தன்னகத்தே கொண்டுள்ள பரிசுத்த வேதாகமம், ஆயிரக்கணக்கான வருடங்களாக, தலைமுறை தலைமுறையாக, எல்லா கண்டங்களிலும், தேசங்களிலும் வாழும் வித்தியாசமான மொழிகளையும், கலாச்சாரத்தையும் உடைய மக்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் கொடுத்துவருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

மனப்பாட வசனம்: மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி அவ்விடத்துக்குத் ………………………… நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும் (ஏசாயா 55:10,11).

பாடப் பின்குறிப்பு: 

புதிய ஏற்பாட்டின் கேனான் சட்டம்:

கிறிஸ்து பரமேறிச் சென்றபின், அவருடைய அப்போஸ்தலர்களும், சீடர்களும் பல்வேறு இடங்களுக்கு சென்று நற்செய்தியை அறிவித்தார்கள். பின்னர் இவர்கள் மூலமாக நடத்தப்பட்ட கிரியைகளும், இவர்களின் போதனைகளும், இவர்களுடைய நிருபங்களும் புஸ்தக வடிவிலாக்கப்பட்டு கிறிஸ்தவ விசுவாசிகளின் பக்திவிருத்திக்காக சபைகளில் வாசிக்கப்பட்டது. ஆரம்ப நூற்றாண்டுகளில் இவ்வாறு எழுதப்பட்ட அநேக புஸ்தகங்கள் பழக்கத்தில் இருந்தன. அதனால் இந்த புஸ்தகங்களை முறைபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்வாறு முறைபடுத்தப்பட்டு ஆதி அப்போஸ்தலர்களாலும், சபை பிதாக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட 66 புஸ்தகங்களே பரிசுத்த வேதாகமத்தோடு இணைக்கப்பட்டன. 

ஒரு புஸ்தகம் பரிசுத்த வேதாகமத்தின் தரத்தை அடைகிறதா என்பதை நிருணயிக்க கிறிஸ்தவ சபையின் ஆதிபிதாக்கள் கடைபிடித்த கோட்பாடுகளே “கேனான் (canon)” என்று அழைக்கப்படுகின்றது. பரிசுத்த வேதாகமத்தில் புஸ்தகத்தை இணைப்பதற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்ட 4 கோட்பாடுகள்

அப்போஸ்தல ஆரம்பம்: அந்த புஸ்தகங்கள் இயேசு கிறிஸ்துவுடன் நேரடி தொடர்பிலிருந்த அப்போஸ்தலர்களாலோ, அல்லது அவர்களுடைய நெருக்கமான சீடர்களாலோ எழுதப்பட்டிருக்க வேண்டும்

சர்வ அங்கீகாரம்: இந்த கேனான் சட்டம் கிபி 4ஆம் நூற்றாண்டிற்கு முன்பாக வரையறுக்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டபடியால், அந்த கால கட்டங்களில் செயல்பட்டுவந்த எல்லாக் கிறிஸ்தவ சபைகளாலும், சமூகத்தாலும் இந்த புஸ்தகங்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்

சபை / பொது வழிபாட்டில் பயன்பாடு: இந்த புஸ்தகங்கள் ஆதிகால கிறிஸ்தவர்களால் (கிபி 4ஆம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்கள்) கர்த்தருடைய நாளுக்காக கூடிவரும்பொழுது வாசிக்கப்பட்ட புஸ்தகங்களாய் இருக்க வேண்டும்

மாறுபடாத செய்திகள்: இந்த புஸ்தகங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்ற எந்த ஒரு தகவலும் மற்ற அங்கீகரிக்கப்பட்ட புஸ்தகங்களிலிருந்து மாறுபாடானதாகவோ, முரண்பாடாகவோ இருக்கக் கூடாது. (2)

இந்த நான்கு முக்கியமான கேனான் கோட்பாடுகளை நிறைவு செய்த புஸ்தகங்களே பரிசுத்த வேதாகமத்தோடு இணைக்கப்பட்டன. இந்த கோட்பாடுகளை நிறைவு செய்யாத வேறு பல புஸ்தகங்கள் பரிசுத்த வேதாகமத்தோடு இணைக்கப்படவில்லை. இந்த புஸ்தகங்கள் அபோகிரிப்பல் புஸ்தகங்கள் (apocryphal books) அல்லது தள்ளுபடி ஆகமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகளை ஆக்கியோர்களின் பெயர்கள் நிச்சயமாக அறியப்படாத காரணங்களினால், இவை அப்போஸ்தலர்களால் எழுதப்படாமல் இருக்கலாம் என்கிற சந்தேகத்தினாலும் இவைகள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

ஆதார நூற்களின் பட்டியல்:

1.      Slick M. (2008, October 12). Manuscript evidence for superior New Testament Reliability (Retrieved 5th August 2020 from https://carm.org/manuscript-evidence)

2.     Felix Just S. J., The New Testament Canon (Retrieved 5th August 2020 from http://catholic-resources.org/Bible/NT_Canon.htm#Stages)

(மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களிலிருந்து, இந்த புஸ்தகத்தை ஆக்கியோர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது)

For Sunday School activities and stories in English


பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    பரிசுத்த வேதாகமத்தின் 66 புஸ்தகங்கள் “………………….” விதிமுறையின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

2.    …………… ஏற்பாட்டின் எல்லா புஸ்தகங்களும் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே எழுதப்பட்டவை.

3.    யூத வேதம் …………………….. என்று அழைக்கப்படுகின்றது.

4.    ……………………  கிரேக்க புதிய ஏற்பாடு பிரதிகள் இன்னும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  பரிசுத்த வேதாகமத்தின் புஸ்தகங்கள் எவ்வாறு அடுக்கப்பட்டுள்ளன?

 

2.  பழைய ஏற்பாட்டின் ஐந்து முக்கிய பிரிவுகள் என்ன?

 

3.  பழைய ஏற்பாட்டிற்கும், யூத வேதத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

 

4.  புதிய ஏற்பாட்டு புஸ்தகங்கள் மூலம் நாம் எவைகளை அறிந்து கொள்ளலாம்? 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.    பரிசுத்த வேதாகமத்தின் நம்பகத்தன்மையை நாம் எவ்வாறு அறியலாம்?



Monday, February 17, 2020

மனிதனின் முதல் பாவம் (The First Sin), இளநிலை வகுப்பு (Junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 1

இளநிலை வகுப்பு (JUNIOR) 
வயது: 10 - 11 வயது
வகுப்புV & VI

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 1
மனிதனின் முதல் பாவம் 

தேவன் முதலாவதாக ஆதாமையும், ஏவாளையும் படைத்து அவர்கள் வசிக்கும்படியாக ‘ஏதேன்’ என்கிற தோட்டத்தையும் உண்டாக்கினார். அவர்கள் உண்ணும்படியாக நல்ல பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் அங்கு வைத்திருந்தார். அந்த தோட்டத்தின் நடுவில் ‘ஜீவ விருட்சம்’, ‘நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்’ என்கிற இரண்டு விசேஷமான மரங்கள் இருந்தன. தேவன் மனிதனிடம் எல்லா மரத்தின் பழங்களையும் சாப்பிடலாம், ஆனால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் என்கிற மரத்தின் பழத்தை மாத்திரம் சாப்பிட வேண்டாம். ஏனென்றால் அந்த பழத்தை சாப்பிடும் நாளிலே அவர்களுக்கு சாவு நேரிடும் என்று கூறினார். 


Sweet Publishing / FreeBibleimages.org.

ஒரு நாள் தோட்டத்தில் இருந்த பாம்பு* ஒன்று ஏவாளிடம் வந்து, நீங்கள் தோட்டத்தில் உள்ள எந்த ஒரு பழத்தையும் சாப்பிடுவதற்கு தேவன் உங்களை அனுமதிக்கவில்லையா என்று கேட்டது. ஏவாளுக்கு பாம்பின் மூலமாய் தன்னிடம் பேசுவது சாத்தான் என்று தெரியவில்லை. ஏவாள் பாம்பிடம், தேவன், நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் என்கிற மரத்தின் பழத்தை மாத்திரம் சாப்பிட வேண்டாம் என்றும் ஏனென்றால் அந்த பழத்தை சாப்பிடும் நாளிலே சாவு நேரிடும் என்று கூறினதாகவும் சொன்னாள். 

Sweet Publishing / FreeBibleimages.org.

பாம்பு ஏவாளிடம், நீங்கள் இந்த பழத்தை சாப்பிடும் நாளிலே சாக மாட்டீர்கள் என்று உறுதியாக கூறினது. அதுமட்டுமல்லாமல் நன்மை தீமை அறியத்தக்க பழத்தை சாப்பிட்டால் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு நன்மை எது, தீமை எது என்று பகுத்தறியக்கூடிய திறனைப் பெற்று, அவர்களும் தேவனைப் போல மாறிவிடுவார்கள் அன்று கூறி அவளுடைய ஆசையைத் தூண்டினது. 

ஏவாள் இப்பொழுது அந்த பழத்தைப் பார்த்த பொழுது அது முன்பை விட அழகாகவும், ருசி மிகுந்ததாகவும் தெரிந்தது. ஏவாள் அந்த பழத்தைப் பறித்து சாப்பிட்டு விட்டு, தன்னுடைய கணவனாகிய ஆதாமுக்கும் அதைக் கொடுத்தாள். இப்பொழுது நன்மை எது, தீமை எது என்று அறிந்து கொள்ளக்கூடிய அவர்களுடைய மனக்கண்கள் திறக்கப்பட்டது. அதுவரைக்கும் குழந்தைகளைப் போல களங்கமற்று இருந்த அவர்கள் தாங்கள் ஆடை இல்லாமல் இருப்பதைப் பார்த்து வெட்கப்பட்டு, தங்களுக்கென்று அத்தி மரத்தின் இலைகளைத் தைத்து உடைகளை உண்டுபண்ணிக் கொண்டார்கள். 

Sweet Publishing / FreeBibleimages.org.

அன்று பகல் வேளையிலே, தேவன் ஏதேன் தோட்டத்திற்கு வந்த போது அவர் உலாவுகிற சத்தத்தைக் கேட்டவுடனே ஆதாமும், ஏவாளும் ஓடிப் போய் மரங்களின் நடுவே ஒளித்துக் கொண்டார்கள். தேவன் ஆதாமைக் கூப்பிட்டார். அப்பொழுது ஆதாம் தேவனிடம் தான் ஆடையில்லாமலிருப்பதால் பயந்து ஒளிந்து கொண்டிருப்பதாக கூறினான். தேவன் ஆதாமிடம் தாம் சாப்பிடக் கூடாது என்று சொன்ன பழத்தை அவன் பறித்து சாப்பிட்டானா என்று கேட்டார். அதற்கு அவன் தனக்குத் துணையாயிருக்கும்படியாக தேவன் கொடுத்த ஏவாள் தான் தனக்கு அந்த பழத்தைக் கொடுத்ததாகக் கூறினான். ஏவாளோ பாம்பு தன்னை ஏமாற்றினதாகக் கூறினாள். 

Sweet Publishing / FreeBibleimages.org.

அவர்கள் எந்த காரணத்தைக் கூறினாலும் பாவம் பாவம் தான். அதற்கான தண்டனையை அவர்கள் பெற்றே ஆக வேண்டியிருந்தது. தேவன் பாம்பிற்கு தண்டனையாக அது தன் வயிற்றினால் ஊர்ந்து மண்ணைத் தின்ன வேண்டும். அதுமட்டுமல்லாமல் குறித்த காலம் வரும் பொழுது ஸ்திரீயின் வித்தாக அதாவது பெண்ணின் மூலமாக பிறக்கப் போகிற ஒருவர் பாம்பின் வித்தின் தலையை நசுக்குவார் என்கிற சாபத்தைக் கொடுத்தார். 

ஆதாமின் பாவத்திற்குத் தண்டனையாக தேவன் இந்த பூமியை சபித்தார். அதன் பின்னர் பூமியில் முட்கள் முளைத்தன, மட்டுமல்லாமல் எல்லாத் தீய காரியங்களும், பாவங்களும் மற்றும் மரணமும் பூமியில் நுழைந்தது. ஆதாமிற்கு அவன் செய்த பாவத்திற்கு சாபமாக, அவன் உணவிற்காக பூமியை பயிரிட்டு கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும் என்றும் அவன் காலம் நிறைவேறும் பொழுது அவன் சாவை அடைந்து, அவன் எந்த மண்ணிலிருந்து எடுக்கப்பட்டானோ அதே மண்ணிற்கே அவன் திரும்புவான் என்கிற சாபத்தை அவனுக்குக் கொடுத்தார். 

Sweet Publishing / FreeBibleimages.org.

ஏவாளுக்கு அவள் செய்த பாவத்திற்குத் தண்டனையாக, அவளுக்கு குழந்தை பிறக்கும்பொழுது மிகுந்த வலியை அனுபவிக்க வேண்டியதிருக்கும் என்கிற சாபத்தைக் கொடுத்தார். பின்னர் அவர்களுக்குத் தோல் உடைகளைக் கொடுத்து ஏதேன் தோட்டத்திலிருந்தும் வெளியே அனுப்பி விட்டார். ஆதாமும், ஏவாளும் தவறு செய்தபொழுது அவர்களுடைய உடலில் சாவு உடனே சம்பவிக்காவிட்டாலும், அவர்களுக்கு உள்ளாக இருந்த ஆவியில் ஒரு சாவு அல்லது மரணம் சம்பவித்தது. 

seecheemission.blogspot.com

ஒரு மனிதன் தேவனோடு உறவு வைத்துக் கொள்ளுகிற இடம் அவனுடைய ஆவி தான். அதை வேதம் “உள்ளான மனிதன்” என்றும் அழைக்கிறது. அதனால் மனிதனுடைய ஆவி அல்லது உள்ளான மனிதன் மரித்தவுடன் தேவனுக்கும் மனிதனுக்கும் இருந்த உறவு துண்டிக்கப்பட்டு ஒரு “ஆவிக்குரிய மரணம்” சம்பவித்தது. அதுவரைக்கும் தேவனுடைய ஆளுகையின் கீழிருந்த மனிதன் அதுமுதல் பிசாசின் ஆளுகையின் கீழாக வந்தான். ஆனாலும் பாவம் செய்த மனிதனை தேவன் அப்படியே விட்டுவிடாமல் அவனை இரட்சிக்கும்படியாக தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை ஸ்திரீயின் வித்தாக இந்த பூமிக்கு அனுப்பி மனிதனை திரும்பவும் தன்னுடைய ஆளுகையின் கீழாகக் கொண்டு வருவதற்கான இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றினார். 

பாம்பு* இந்த பாம்பைப் பற்றி தெரிந்து கொள்ள வெளிப்படுத்தின விசேஷம் 12:9 மற்றும் 20:2 வசனங்களை வாசிக்கவும். 

வேத பகுதி: ஆதியாகமம் 3

மனப்பாட வசனம்: அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே…………………………………….. அதிக நிச்சயமாமே (ரோமர் 5:17).

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.      தேவன் மனிதனிடம் ………………….. அறியத்தக்க விருட்சம் என்கிற மரத்தின் பழத்தை மாத்திரம் சாப்பிட வேண்டாம் என்று கூறினார்.

2.    ஆதாமும், ஏவாளும் ……………………………. இலைகளைத் தைத்து உடைகளை உண்டுபண்ணிக் கொண்டார்கள்.

3.    ஏவாளோ ……………………….. தன்னை ஏமாற்றினதாகக் கூறினாள்.

4.    தேவன் மனிதனை இரட்சிக்கும்படியாக தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய …………………………… ஸ்திரீயின் வித்தாக அனுப்பினார். 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  பாம்பு ஏவாளிடம் எவ்வாறு ஆசையைத் தூண்டினது?

 

2.  ஆதாம் பழத்தை சாப்பிட்டவுடன் ஏன் வெட்கம் ஏற்பட்டது?

 

3.  தேவன் தோட்டத்தில் உலாவுகிற சத்தத்தைக் கேட்டு ஆதாமும் ஏவாளும் என்ன செய்தார்கள்?

 

4.  ஆதாமுக்கு கொடுக்கப்பட்ட சாபம் என்ன? 


கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.    ஆதாம் பழத்தை சாப்பிட்டவுடன் சம்பவித்தது என்ன?

 

 

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...