Monday, February 17, 2020

மனிதனின் முதல் பாவம் (The First Sin), இளநிலை வகுப்பு (Junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 1

இளநிலை வகுப்பு (JUNIOR) 
வயது: 10 - 11 வயது
வகுப்புV & VI

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 1
மனிதனின் முதல் பாவம் 

தேவன் முதலாவதாக ஆதாமையும், ஏவாளையும் படைத்து அவர்கள் வசிக்கும்படியாக ‘ஏதேன்’ என்கிற தோட்டத்தையும் உண்டாக்கினார். அவர்கள் உண்ணும்படியாக நல்ல பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் அங்கு வைத்திருந்தார். அந்த தோட்டத்தின் நடுவில் ‘ஜீவ விருட்சம்’, ‘நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்’ என்கிற இரண்டு விசேஷமான மரங்கள் இருந்தன. தேவன் மனிதனிடம் எல்லா மரத்தின் பழங்களையும் சாப்பிடலாம், ஆனால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் என்கிற மரத்தின் பழத்தை மாத்திரம் சாப்பிட வேண்டாம். ஏனென்றால் அந்த பழத்தை சாப்பிடும் நாளிலே அவர்களுக்கு சாவு நேரிடும் என்று கூறினார். 


Sweet Publishing / FreeBibleimages.org.

ஒரு நாள் தோட்டத்தில் இருந்த பாம்பு* ஒன்று ஏவாளிடம் வந்து, நீங்கள் தோட்டத்தில் உள்ள எந்த ஒரு பழத்தையும் சாப்பிடுவதற்கு தேவன் உங்களை அனுமதிக்கவில்லையா என்று கேட்டது. ஏவாளுக்கு பாம்பின் மூலமாய் தன்னிடம் பேசுவது சாத்தான் என்று தெரியவில்லை. ஏவாள் பாம்பிடம், தேவன், நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் என்கிற மரத்தின் பழத்தை மாத்திரம் சாப்பிட வேண்டாம் என்றும் ஏனென்றால் அந்த பழத்தை சாப்பிடும் நாளிலே சாவு நேரிடும் என்று கூறினதாகவும் சொன்னாள். 

Sweet Publishing / FreeBibleimages.org.

பாம்பு ஏவாளிடம், நீங்கள் இந்த பழத்தை சாப்பிடும் நாளிலே சாக மாட்டீர்கள் என்று உறுதியாக கூறினது. அதுமட்டுமல்லாமல் நன்மை தீமை அறியத்தக்க பழத்தை சாப்பிட்டால் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு நன்மை எது, தீமை எது என்று பகுத்தறியக்கூடிய திறனைப் பெற்று, அவர்களும் தேவனைப் போல மாறிவிடுவார்கள் அன்று கூறி அவளுடைய ஆசையைத் தூண்டினது. 

ஏவாள் இப்பொழுது அந்த பழத்தைப் பார்த்த பொழுது அது முன்பை விட அழகாகவும், ருசி மிகுந்ததாகவும் தெரிந்தது. ஏவாள் அந்த பழத்தைப் பறித்து சாப்பிட்டு விட்டு, தன்னுடைய கணவனாகிய ஆதாமுக்கும் அதைக் கொடுத்தாள். இப்பொழுது நன்மை எது, தீமை எது என்று அறிந்து கொள்ளக்கூடிய அவர்களுடைய மனக்கண்கள் திறக்கப்பட்டது. அதுவரைக்கும் குழந்தைகளைப் போல களங்கமற்று இருந்த அவர்கள் தாங்கள் ஆடை இல்லாமல் இருப்பதைப் பார்த்து வெட்கப்பட்டு, தங்களுக்கென்று அத்தி மரத்தின் இலைகளைத் தைத்து உடைகளை உண்டுபண்ணிக் கொண்டார்கள். 

Sweet Publishing / FreeBibleimages.org.

அன்று பகல் வேளையிலே, தேவன் ஏதேன் தோட்டத்திற்கு வந்த போது அவர் உலாவுகிற சத்தத்தைக் கேட்டவுடனே ஆதாமும், ஏவாளும் ஓடிப் போய் மரங்களின் நடுவே ஒளித்துக் கொண்டார்கள். தேவன் ஆதாமைக் கூப்பிட்டார். அப்பொழுது ஆதாம் தேவனிடம் தான் ஆடையில்லாமலிருப்பதால் பயந்து ஒளிந்து கொண்டிருப்பதாக கூறினான். தேவன் ஆதாமிடம் தாம் சாப்பிடக் கூடாது என்று சொன்ன பழத்தை அவன் பறித்து சாப்பிட்டானா என்று கேட்டார். அதற்கு அவன் தனக்குத் துணையாயிருக்கும்படியாக தேவன் கொடுத்த ஏவாள் தான் தனக்கு அந்த பழத்தைக் கொடுத்ததாகக் கூறினான். ஏவாளோ பாம்பு தன்னை ஏமாற்றினதாகக் கூறினாள். 

Sweet Publishing / FreeBibleimages.org.

அவர்கள் எந்த காரணத்தைக் கூறினாலும் பாவம் பாவம் தான். அதற்கான தண்டனையை அவர்கள் பெற்றே ஆக வேண்டியிருந்தது. தேவன் பாம்பிற்கு தண்டனையாக அது தன் வயிற்றினால் ஊர்ந்து மண்ணைத் தின்ன வேண்டும். அதுமட்டுமல்லாமல் குறித்த காலம் வரும் பொழுது ஸ்திரீயின் வித்தாக அதாவது பெண்ணின் மூலமாக பிறக்கப் போகிற ஒருவர் பாம்பின் வித்தின் தலையை நசுக்குவார் என்கிற சாபத்தைக் கொடுத்தார். 

ஆதாமின் பாவத்திற்குத் தண்டனையாக தேவன் இந்த பூமியை சபித்தார். அதன் பின்னர் பூமியில் முட்கள் முளைத்தன, மட்டுமல்லாமல் எல்லாத் தீய காரியங்களும், பாவங்களும் மற்றும் மரணமும் பூமியில் நுழைந்தது. ஆதாமிற்கு அவன் செய்த பாவத்திற்கு சாபமாக, அவன் உணவிற்காக பூமியை பயிரிட்டு கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும் என்றும் அவன் காலம் நிறைவேறும் பொழுது அவன் சாவை அடைந்து, அவன் எந்த மண்ணிலிருந்து எடுக்கப்பட்டானோ அதே மண்ணிற்கே அவன் திரும்புவான் என்கிற சாபத்தை அவனுக்குக் கொடுத்தார். 

Sweet Publishing / FreeBibleimages.org.

ஏவாளுக்கு அவள் செய்த பாவத்திற்குத் தண்டனையாக, அவளுக்கு குழந்தை பிறக்கும்பொழுது மிகுந்த வலியை அனுபவிக்க வேண்டியதிருக்கும் என்கிற சாபத்தைக் கொடுத்தார். பின்னர் அவர்களுக்குத் தோல் உடைகளைக் கொடுத்து ஏதேன் தோட்டத்திலிருந்தும் வெளியே அனுப்பி விட்டார். ஆதாமும், ஏவாளும் தவறு செய்தபொழுது அவர்களுடைய உடலில் சாவு உடனே சம்பவிக்காவிட்டாலும், அவர்களுக்கு உள்ளாக இருந்த ஆவியில் ஒரு சாவு அல்லது மரணம் சம்பவித்தது. 

seecheemission.blogspot.com

ஒரு மனிதன் தேவனோடு உறவு வைத்துக் கொள்ளுகிற இடம் அவனுடைய ஆவி தான். அதை வேதம் “உள்ளான மனிதன்” என்றும் அழைக்கிறது. அதனால் மனிதனுடைய ஆவி அல்லது உள்ளான மனிதன் மரித்தவுடன் தேவனுக்கும் மனிதனுக்கும் இருந்த உறவு துண்டிக்கப்பட்டு ஒரு “ஆவிக்குரிய மரணம்” சம்பவித்தது. அதுவரைக்கும் தேவனுடைய ஆளுகையின் கீழிருந்த மனிதன் அதுமுதல் பிசாசின் ஆளுகையின் கீழாக வந்தான். ஆனாலும் பாவம் செய்த மனிதனை தேவன் அப்படியே விட்டுவிடாமல் அவனை இரட்சிக்கும்படியாக தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை ஸ்திரீயின் வித்தாக இந்த பூமிக்கு அனுப்பி மனிதனை திரும்பவும் தன்னுடைய ஆளுகையின் கீழாகக் கொண்டு வருவதற்கான இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றினார். 

பாம்பு* இந்த பாம்பைப் பற்றி தெரிந்து கொள்ள வெளிப்படுத்தின விசேஷம் 12:9 மற்றும் 20:2 வசனங்களை வாசிக்கவும். 

வேத பகுதி: ஆதியாகமம் 3

மனப்பாட வசனம்: அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே…………………………………….. அதிக நிச்சயமாமே (ரோமர் 5:17).

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.      தேவன் மனிதனிடம் ………………….. அறியத்தக்க விருட்சம் என்கிற மரத்தின் பழத்தை மாத்திரம் சாப்பிட வேண்டாம் என்று கூறினார்.

2.    ஆதாமும், ஏவாளும் ……………………………. இலைகளைத் தைத்து உடைகளை உண்டுபண்ணிக் கொண்டார்கள்.

3.    ஏவாளோ ……………………….. தன்னை ஏமாற்றினதாகக் கூறினாள்.

4.    தேவன் மனிதனை இரட்சிக்கும்படியாக தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய …………………………… ஸ்திரீயின் வித்தாக அனுப்பினார். 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  பாம்பு ஏவாளிடம் எவ்வாறு ஆசையைத் தூண்டினது?

 

2.  ஆதாம் பழத்தை சாப்பிட்டவுடன் ஏன் வெட்கம் ஏற்பட்டது?

 

3.  தேவன் தோட்டத்தில் உலாவுகிற சத்தத்தைக் கேட்டு ஆதாமும் ஏவாளும் என்ன செய்தார்கள்?

 

4.  ஆதாமுக்கு கொடுக்கப்பட்ட சாபம் என்ன? 


கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.    ஆதாம் பழத்தை சாப்பிட்டவுடன் சம்பவித்தது என்ன?

 

 

No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...