Saturday, March 19, 2022

சிம்சோன் – தேவனுக்கென்று நசரேயன் (Samson - A Nazirite unto God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 13

மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

வயது: 8 - 9 வயது

வகுப்பு: III & IV

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 13

சிம்சோன் – தேவனுக்கென்று நசரேயன்

Click the following link to visit the English Sunday School Lessons Blog

இதற்கு முந்தைய பாடத்தில் இஸ்ரவேலருடைய தலைவராகிய யோசுவா அவர்களை கானானுக்கு அழைத்து சென்றதையும், அங்கே அவர்கள் யுத்தம் செய்து கானானிய  பட்டணங்களை கைப்பற்றினதையும் அறிந்தோம். அவர்கள் கைப்பற்றிய கானானிய பட்டணங்களை இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் பங்கிட்டு, வீடுகளைக் கட்டி, பயிர்களை நட்டு, ஆடுமாடுகளை வளர்த்து சுதந்திரமான ஜனங்களாக வாழ்ந்து வந்தார்கள். பல வருடங்களுக்குப் பின் இஸ்ரவேலின் தலைவராகிய யோசுவா, வயதாகி இறந்து போனார். அந்த நாட்களிலே இஸ்ரவேலரின் தலைவர்களை “நியாயாதிபதி” என்றே அழைத்தார்கள். மற்ற நாடுகளை ராஜாக்கள் ஆட்சி செய்தது போல இஸ்ரவேல் தேசத்தை “நியாதிபதிகள்” ஆளுகை செய்தார்கள். அவர்கள் பலவித பொறுப்புகளை நிர்வாகிக்க வேண்டியிருந்தது.  யுத்தம் வந்தால் இஸ்ரவேல் தேசத்தை தலைமையேற்று நடத்திச் செல்லுவது மட்டுமல்லாமல், ஜனங்களுடைய வழக்குகளை விசாரித்து நியாயம் வழங்குவதும் நியாதிபதிகளுடைய வேலையே ஆகும். அவர்கள் தீர்க்கதரிசிகளாகவும் செயல்பட்டார்கள்.

இஸ்ரவேலரின் தலைவராகிய யோசுவா இறந்துபோன பின் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை மறந்து பாவம் செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் அவர்கள் அருகே குடியிருந்த பிற தேசங்கள் இவர்களுடன் சண்டையிட்டு, தேசத்தை கொள்ளையிட்டார்கள். எப்பொழுதெல்லாம் இவ்வாறு நடக்கிறதோ அப்பொழுதெல்லாம், இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவரிடம் மன்றாடுவார்கள், ஆண்டவர் அவர்கள் மேல் இரக்கமுற்று அவர்களை காப்பாற்றுவதற்காக நியாயாதிபதிகளை எழுப்பப்பண்ணுவார். இவ்வாறே ஒருமுறை பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலரை நாற்பது வருடங்கள் கொடுமையாய் ஒடுக்கினார்கள்.

கானான் தேசத்தின் சோரா என்ற ஊரிலே மனோவா என்ற மனிதனும் அவனுடைய மனைவியும் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. ஒருநாள் ஆண்டவருடைய தூதன் மனோவாவின் மனைவிக்கு தரிசனமாகி (காட்சி கொடுத்து) அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தார். அந்த மகன் அவன் வாழும் நாட்களெல்லாம் தேவனுக்கென்று நசரேயனாக இருப்பான்.  (நசரேயன் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள எண்ணாகமம் 6:1-21ஐ வாசிக்கவும்). 

அதனால் மனோவாவின் மனைவியும், பிறக்கப் போகிற குழந்தையும் தீட்டான எந்த ஒரு உணவையும், திராட்சைச் செடியிலிருந்து தயாரிக்கப்படுகின்ற எந்த ஒரு பொருளையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது என்றும் தேவதூதன் கூறினார். (இஸ்ரவேல் ஜனங்களுக்கு தீட்டு என்று விலக்கப்பட்ட உணவுகளை பற்றி அறிந்து கொள்ள லேவியராகமம் 11ஐ வாசிக்கவும்). குழந்தை நசரேயனாய் வாழ்ப்போவதால், அவனுடைய தலைமுடி வெட்டப்படவும் கூடாது. அவன் இஸ்ரவேலின் நியாதிபதியாய் இருப்பான் என்றும் அறிவித்தார்.

திராட்சை செடி

மனோவாவின் மனைவி, தேவதூதன் தனக்கு தரிசனமானதையும், அவர் தன்னுடன் கூறின எல்லாவற்றையும் மனோவாவிற்கு அறிவித்தாள். மனோவா தேவனிடம், அந்த தேவதூதனை இன்னொருமுறை அனுப்பி, தங்களுடைய மகனை வளர்க்கும் முறையை கற்பிக்குமாறு விண்ணப்பம் செய்தார்.

மனோவாவின் மனைவி வயல்வெளியில் இருக்கும்பொழுது தேவனுடைய தூதன் இன்னொருமுறை தரிசனமானார். அவள் வேகமாய்ப் போய் மனோவாவை அழைத்து வந்தாள். தேவதூதன் தான் முன்கூறின எல்லாவற்றையும் அவர்கள் கடைபிடிக்கும்படி அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். மனோவா அவருக்கு வெள்ளாட்டுக்குட்டியை சமைத்து விருந்தளிக்க விரும்பினார். ஆனால் தேவதூதனோ தான் உணவு உண்ணுவதில்லை என்றும் வேண்டுமானால் தேவனுக்கு தகனபலியிடுமாறும் அறிவுறுத்தினார். மனோவா தேவதூதனிடம், நீர் எங்களுக்கு சொன்னவைகள் எல்லாம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மை கனப்படுத்தும்படி, உம்முடைய பெயர் என்ன என்று கேட்டார். அப்பொழுது தேவதூதன், “அதிசயம்” என்று கூறினார்.

தேவதூதன் கூறினபடியே, அங்கு ஒரு அதிசயம் நடந்தது. மனோவா தேவனுக்கு தகனபலி செலுத்தும்படி, ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் போஜனபலியையும் கொண்டு வந்து அதை ஒரு கன்மலையின்மேல் பலியாகப் படைத்தார். அப்பொழுது பலியிலிருந்து எழும்பின அந்த நெருப்பின் நடுவிலிருந்து தேவதூதன் வானத்திற்கு மேலே ஏறிப்போனார். அதைப்பார்த்த பொழுது மனோவாவும் அவன் மனைவியும் முகங்குப்புற விழுந்தார்கள். 

மனோவா மிகவும் பயந்து தன்னுடைய மனைவியிடம், தாங்கள் தேவனை தரிசித்ததினால் தங்களுக்கு சாவு நேரிடும் என்று கூறினான். ஆனால் அவன் மனைவியோ, ஆண்டவர் அவர்களை கொல்லுவதற்கு எண்ணியிருந்தாரானால், அவர்களுடைய தகனபலியை ஏற்றிருக்க மாட்டார், பின்நாட்களில் நடக்கப்போவதை அறிவித்திருக்கவும் மாட்டார் என்று கூறினாள். அவர்கள் நம்பினபடியே அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு சிம்சோன் என்று பெயரிட்டார்கள். அவன் ஒரு நசரேயனாக இருந்து, தன்னுடைய முடியை வெட்டாமல் நீளமாக வளர்த்தியிருந்தான். சிம்சோன் இயற்கைக்கு அப்பாற்பட்ட பலம் வாய்ந்தவனாயிருந்தான். அவன் இஸ்ரவேலின் நியாதிபதியாயிருந்து இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவர்களை பெலிஸ்தரிடமிருந்து காப்பாற்றினான்.

வேதபகுதி: நியாதிபதிகள் 13

மனப்பாட வசனம்: சங்கீதம் 84:5

For Sunday School activities and stories in English

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில் 

1.    இஸ்ரவேலரை நடத்தின தலைவர்களுக்கு அக்காலத்திலே கொடுக்கப்பட்ட பெயர் என்ன?   ………………………………………

2.    மனோவாவின் மனைவிக்கு தரிசனமானது யார்?  

………………………………………

3.    நசரேயன் எதை சாப்பிடக் கூடாது? ………………………………………..

4.    மனோவா பலியாகப் படைத்தது என்ன? …………………………………

5.    மனோவா பலியிட்ட போது என்ன அதிசயம் நடந்தது? ……………………………………… 

சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:

1.    பெலிஸ்தியர்கள் எத்தனை வருடங்கள் இஸ்ரவேலரை கொடுமையாய் ஒடுக்கினார்கள் (40 / 14)

2.    மனோவாவின் மனைவி சாப்பிடக்கூடாதது (ஒலிவப்பழம் / திராட்சைப்பழம்)

3.    மனோவா தேவதூதனுக்கு எதை சமைத்து விருந்தளிக்க விரும்பினார் (கொழுத்த கன்றை / வெள்ளாட்டுக்குட்டியை)

4.    தேவதூதன் எதிலிருந்து வானத்திற்கு மேலே ஏறிப்போனார் (நெருப்பு / சுழல்காற்று)

5.    சிம்சோன் இயற்கைக்கு அப்பாற்பட்ட எதைக் கொண்டிருந்தான் (ஞானம் / பலம்)





No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...