Thursday, October 15, 2020

கோராகின் கலகம் (Korah and Followers Rebel Against Moses), இடைநிலை வகுப்பு (Intermediate), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 9

 இடைநிலை வகுப்பு (INTERMEDIATE) 

வயது: 12 - 13 வயது
வகுப்பு: VII & VIII

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 9

கோராகின் கலகம் 

முந்தைய பாடம் ஒன்றில் ஆரோன் பிரதான ஆசாரியனாக அபிஷேகம் செய்யப்பட்டதைப் பார்த்தோம். அதன் பின்னர் கானான் தேசத்தை சுற்றிப் பார்க்க சென்ற சில தலைவர்கள் அந்த தேசத்தைக் குறித்து கெட்ட செய்தியை பரப்பினதையும், இஸ்ரவேல் மக்கள் ஆண்டவருடைய வார்த்தையை விசுவாசிக்காமல் கலகம் செய்ததையும், அதனால் இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் நாற்பது வருடங்கள் அலைந்து திரிய வேண்டும் என்ற தண்டனை பெற்றதையும் பார்த்தோம். அதன் பின்னர் பல வருடங்களாக இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்கள். ஆரோன் பிரதான ஆசாரியனாக அபிஷேகிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்தபின், இஸ்ரவேல் தலைவர்களில் வேறு சிலர் இந்த ஆசாரியப்பட்டம் தங்களுக்கு கிடைத்திருக்க வேண்டும் என்று எண்ணினார்கள். அதனால் அவர்கள் மோசேயையும், ஆரோனையும் எதிர்த்தார்கள். அந்த கலகத்திற்கு தலைவனாக செயல்பட்டது கோராகு.

Sweet Publishing / FreeBibleimages.org.
கோராகின் கலகம்:

கோராகு லேவி கோத்திரத்தை சேர்ந்தவன், மோசேக்கும், ஆரோனுக்கும் மிக நெருங்கிய உறவினன். ஆரோனுக்கும், அவன் வம்சாவளியை சார்ந்தவர்களுக்கும் ஆசாரியப்பட்டம் கொடுக்கப்பட்டது. அவனுடைய கோத்திரமாகிய லேவி கோத்திரத்தை சேர்ந்த மற்றவர்களுக்கு லேவியர் பட்டம் கொடுக்கப்பட்டது. அவர்களுடைய வேலை, ஆசாரியர்களுக்கு உதவி ஊழியம் செய்வதாகும். ஆசரிப்புக்கூடாரத்தை காவல் காப்பது, ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள பொருட்களை சுமப்பது ஆகியவை அவர்களுடைய ஊழியம். கோராகோ லேவியனாக ஊழியம் செய்வதை விடவும், ஆசாரிய ஊழியம் செய்வதையே விரும்பினான். அதனால் அவன் ரூபன் கோத்திரத்தை சேர்ந்த தாத்தான், அபிராம், ஓன் ஆகிய வேறு சில தலைவர்களையும், இஸ்ரவேலிலே பிரபலமான 250 தலைவர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாகக் கலகம் செய்தான். அவர்கள் மோசேயையும் ஆரோனையும் பார்த்து நீங்கள் உங்களை மற்றவர்களுக்கு மேலாக உயர்த்துகிறீர்கள் என்று குற்றஞ்சாட்டினார்கள். மோசே அதைக் கேட்டபொழுது முகங்குப்புற விழுந்தான்.

Sweet Publishing / FreeBibleimages.org.
மோசேயின் சவால்:

மோசே கோராகைப் பார்த்து, ஆண்டவர் தம்முடையவர்கள் இன்னார் என்று காட்டுவார் என்று சவால் விட்டான். மோசே கோராகிடமும் அவனுடைய கூட்டத்தாரிடமும், அவர்களுடைய தூபகலசத்திலே (தூபவர்க்கத்தை எரிக்கிற சட்டி), நெருப்பைப் போட்டு, அதில் தூபவர்க்கத்தைப் போட்டு கர்த்தருடைய சந்நிதிக்கு கொண்டு வரும்படியாகவும், அப்பொழுது கர்த்தர் தாம் யாரைத் தெரிந்து கொண்டிருக்கிறார் என்று காண்பிப்பார் என்றும் கூறினான். அதுமட்டுமல்லாமல் தாத்தான், அபிராம் என்பவர்களை தம்மை வந்து சந்திக்கும்படியாகவும் கூறினான். ஆனால் அவர்களோ மோசேயை இழிவாகப் பேசி, மோசே இஸ்ரவேல் ஜனங்களின் மேல் அதிகாரம் செலுத்த முயற்சிப்பதாகவும், அவர்களை பாலும், தேனும் ஓடுகிற தேசத்திற்கு கொண்டு செல்லாமல் வழியிலே கொல்ல முயற்சிப்பதாகவும் வீண்பழி சுமத்தினார்கள். மோசே இந்த வார்த்தைகளை கேட்டபொழுது மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவரிடம் அவர்களுடைய காணிக்கையை அங்கீகரிக்க வேண்டாம் என்று கூறினார். கோராகையும், அவனுடைய கூட்டத்தார் 250 பேரையும், மறுநாளிலே அவர்களுடைய தூபகலசத்தை எடுத்துக் கொண்டு கர்த்தருடைய சந்நிதிக்கு வரும்படியும் கூறினார்.

Sweet Publishing / FreeBibleimages.org.

ஆண்டவருடைய கோபாக்கினை (நியாயத்தீர்ப்பு):

கோராகும், அவனுடைய கூட்டத்தாரும் தங்கள் தூபகலசத்தை எடுத்துக் கொண்டு அதிலே தூபவர்க்கத்தை இட்டு ஆசரிப்புக் கூடார வாசலிலே வந்து நின்றார்கள். அவர்கள் இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக கூட்டம் கூடும்படியாக தூண்டினார்கள். மறுபடியும் ஆண்டவர் மோசேயைப் பார்த்து இஸ்ரவேல் ஜனங்களை தான் அழிக்கப் போவதாகக் கூறினார். ஆனால் மோசேயோ ஆண்டவரிடம் இஸ்ரவேல் ஜனங்களுக்காக மன்றாடினான். ஆண்டவர் மோசேயிடம் இஸ்ரவேல் ஜனங்களை கோராகு, தோத்தான், அபிராம் என்பவர்களுடைய கூடாரத்தை விட்டு தள்ளிபோகும்படியாக கூறும்படியாக சொன்னார்.

கோராகு, தோத்தான், அபிராம் விழுங்கப்படுதல்:

மோசே அதை ஜனங்களிடம் சொன்னபொழுது, இஸ்ரவேல் மக்கள் அவர்களை விட்டு தள்ளிப் போனார்கள். அப்பொழுது மோசே ஜனங்களைப் பார்த்து, எல்லாருக்கும் நடப்பது போல இவர்களுக்கு நடந்தால், அது கர்த்தரால் வந்தது அல்ல என்றும், அவர்களுக்கு ஒரு புதுவிதமான தன்டனை கிடைக்கப் போவதாகவும் கூறினார். உடனே பூமி இரண்டாக பிளந்து கோராகு, தோத்தான், அபிராம் என்பவர்களை விழுங்கிப் போட்டது. மக்கள் அதைப் பார்த்து பயந்து விலகி ஓடினார்கள்.

Illustrator: Unknown

பலிபீடத்துக்கான வெண்கல மூடி:

அதுமட்டுமல்லாமல், அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து வந்து தூபம் காட்டின 250 பேரையும் எரித்துப் போட்டது. ஆண்டவர் மோசேயைப் பார்த்து, ஆரோனுடைய மகனாகிய எலெயாசாரிடம் தூபம் காட்டி ஆண்டவரால் தண்டிக்கப்பட்ட 250 பேருடைய தூபகலசங்களையும், நெருப்பிலிருந்து எடுக்கும்படியாகக் கூறினார். அவைகள் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரப்பட்டபடியால் பரிசுத்தமாகிவிட்டன. அதனால் அவைகளை எடுத்து பலிபீடத்தை மூடுவதற்கான ஒரு மூடியை அந்த வெண்கலத்தை வைத்து செய்யும்படியாகக் கூறினார். அது எதற்கென்றால் ஆரோனின் வம்சாவளியை சாராத யாரும் பலிபீடத்தில் தூபத்தைக் காட்டுவதற்கு அனுமதி இல்லை என்று இஸ்ரவேல் மக்களுக்கு நினைப்பூட்டுதலாய் இருக்குப்படியாகவே! மோசே கூறினபடியே ஆரோனுடைய மகனாகிய எலெயாசார் அந்த 250 வெண்கல தூபகலசத்தில் இருந்த வெண்கலத்தை தகடுகளாய் அடித்து அதை வைத்து பலிபீடத்திற்கு ஒரு வெண்கல மூடியை செய்தார்.

தேவ கோபமும் ஆரோனுடைய மத்தியஸ்தமும்:

மறுநாள் காலமே இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் முறுமுறுக்கத் தொடங்கினார்கள். தேவ கோபம் கோராகின் மேல் வெளிப்பட்டு, பூமி அவனை விழுங்கினதை மக்கள் பார்த்திருந்த பொழுது அவர்கள் மோசேயையும் ஆரோனையும் பார்த்து, நீங்கள் தேவனுடைய ஜனங்களைக் கொன்றுபோட்டீர்கள் என்று குற்றஞ்சாட்டினார்கள். அதனால் தேவ கோபம் ஜனங்கள் மேல் வந்தது. மறுபடியும் தேவனுடைய பிரசன்னத்தின் மேகம் ஆசரிப்புக் கூடாரத்தில் காணப்பட்டது. ஆண்டவர் மேசேயிடம் தாம் இஸ்ரவேல் மக்களை அழித்து மோசேயை ஒரு பெரிய நாடாக உருவாக்குவதாக வாக்குக் கொடுத்தார். ஆனால் மோசேயோ அதற்கு சம்மதிக்காமல் இஸ்ரவேல் மக்களை மன்னிக்கும்படி ஆண்டவரிடம் கெஞ்சினான். ஆனால் அதற்குள்ளாக தேவ கோபம் இறங்கினது. இஸ்ரவேல் மக்கள் ஒரு கொடிய கொள்ளைநோயினால் தாக்கப்பட்டு உயிரிழக்க ஆரம்பித்தார்கள். அதைக் கண்ட மோசே ஆரோனிடம், தூபகலசத்தில் தூபவர்க்கத்தைப் போட்டு, இஸ்ரவேல் மக்களுக்காக ஆண்டவரிடம் பாவநிவிர்த்தி செய்யும்படியாகக் கூறினார். ஆரோன் மோசே சொன்னது போலவே எடுத்துக்கொண்டு இஸ்ரவேல் மக்களின் நடுவே ஓடினான். பின்னர் அவன் போய், உயிரோடிருக்கிறவர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் நடுவே நின்று கொண்டான். அதனால் கொள்ளை நோய் நிறுத்தப்பட்டது. ஆண்டவருக்கு விரோதமாக முறுமுறுத்ததினால் அன்றைய தினம் 14,700 பேர் தண்டிக்கப்பட்டு உயிரிழந்தார்கள்.

ஆரோனுடைய கோல் துளிர்த்தல்:

ஆண்டவர் மோசேயிடம் இஸ்ரவேல் மக்களிடம், ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு கோலாக, பன்னிரண்டு கோல்களை வாங்கி அவைகளை ஆசரிப்புக்கூடாரத்திலே உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக வைக்கக் கூறினார். லேவி கோத்திரத்தின் சார்பாக ஆரோனுடைய கோலை வைக்கும்படியாகக் கூறினார். கோல் என்றால் பழங்காலங்களிலே பெரும்பாலாக ஆடுமேய்ப்பவர்கள் பல்வேறு வேலைகளுக்கு பயன்படுவதற்காக ஒரு மரக்கம்பை வைத்திருப்பார்கள்.. அது தான் கோல் என்று அழைக்கப்பட்டது. வேதாகமம் முழுவதும் இந்த கோலைப் பற்றி பல இடங்களில் வாசிப்போம். மோசே கூறினது போலவே எல்லா கோத்திரத் தலைவர்களும் கோல்களை கொண்டு வந்தார்கள். 

                  st-takla.org
மோசே அதை தேவ சமூகத்திலே வைத்தார். அடுத்த நாள் பார்க்கும்பொழுது, ஆரோனுடைய கோல் துளிர்த்திருந்தது. அதுமட்டுமல்லாமல் அது பூப்பூத்து, வாதுமைப்பழங்களையும் கொடுத்திருந்தது. மோசே அதை வெளியே கொண்டு வந்து அதை இஸ்ரவேல் மக்களிடம் காட்டினார். இஸ்ரவேல் மக்கள் ஆரோனைப் பற்றி முறுமுறுக்காதபடி அடையாளமாக அந்த கோலை ஆசரிப்புக்கூடாரத்திலே, உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக வைத்தார்.

                st-takla.org
வேத பகுதி: எண்ணாகமம் 16, 17

மனப்பாட வசனம்: ரோமர் 13:1, 2


பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    கோராகு ………………………………… கோத்திரத்தை சார்ந்தவன்.

2.    கோராகு இஸ்ரவேலிலே பிரபலமான …………………… தலைவர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாகக் கலகம் செய்தான்

3.    ஆரோனுடைய மகனாகிய …………………………… 250 வெண்கல தூபகலசங்களை வைத்து பலிபீடத்திற்கு ஒரு வெண்கல மூடியை செய்தார்.

4.        ஆரோனுடைய கோல் துளிர்த்து, பூப்பூத்து, …………………………………….. கொடுத்திருந்தது.

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.    மோசே கோராகையும் அவனுடைய கூட்டத்தாரையும் ஆண்டவருடைய சமூகத்திலே எதைக் கொண்டு வரச் சொன்னார்?

 

2.    எது பலிபீடத்தின் மூடிக்கான தகடுகளாய் அடிக்கப்பட்டது?

 

3.      ஆரோன் மக்களுக்காக எப்படி பாவநிவிர்த்தி செய்தார்?

 

4.      ஆரோனுடைய கோல் தேவ சமூகத்தில் வைக்கப்பட்டவுடன் என்ன நடந்தது ?

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  கோராகு மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக ஏன் கலகம் செய்தான்? அவன் மேல் வந்த நியாயத்தீர்ப்பு என்ன?

 

 

தேவனுடைய மகிமையைக் கண்ட மோசே (God Reveals His Glory to Moses), இளநிலை வகுப்பு (Junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 9

  இளநிலை வகுப்பு (JUNIOR) 

பாடம் – 9
தேவனுடைய மகிமையைக் கண்ட மோசே

 

இதற்கு முந்தின பாடத்திலே ஆரோன் பொன் கன்றுகுட்டியை செய்ததைப் பார்த்தோம். மறுநாள் மோசே, இஸ்ரவேல் ஜனங்களின் பாவத்தை மன்னிப்பதற்காக கேட்கும்படி திரும்பவும் மலையின் மேல் ஏறிப் போனார். மோசே ஆண்டவரிடம் ஜனங்களின் பாவத்தை மன்னியும் இல்லாவிட்டால், உம்முடைய புஸ்தகத்திலிருந்து என்னுடைய பெயரை கிறுக்கிப் போடும் என்று கூறினார். ஆண்டவர் மோசேயிடம் யார் தனக்கு எதிராக பாவஞ்செய்கிறார்களோ அவர்களுடைய பெயரே கிறுக்கப்படும் என்று கூறினார். இஸ்ரவேல் ஜனங்கள் திரும்பதிரும்ப பாவஞ்செய்வதால் தாம் இனி அவர்கள் முன் செல்லப் போவதில்லை என்றும், தம்முடைய தூதனே அவர்கள் முன் செல்லப்போவதாகவும் கூறினார் (யாத்திராகமம் 32:30 – 33:3).

 

ஆண்டவர் தங்களுக்குமுன் இனி செல்லப் போவதில்லை என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் கேட்டவுடன் தங்கள் ஆபரணங்களை (நகைகளை) போட்டுக் கொள்ளாமல் துக்கித்தார்கள். மோசே இஸ்ரவேல் ஜனங்கள் தங்கியிருந்த பாளயத்தில் இருந்த தன் கூடாரத்தைப் பெயர்த்து எடுத்து, பாளய எல்லைக்கு வெளியே தூரத்தில் அதை வைத்து அதற்கு “ஆசரிப்புக்கூடாரம்” என்று பெயரிட்டார். (பாளயம் என்றால் இஸ்ரவேல் ஜனங்கள் கூடாரங்களை அமைத்து தங்கியிருந்த இடம்). கர்த்தரைத் தொழுது கொள்ளுவதற்கு ஜனங்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்கு போவார்கள். 

Moody Publishers / FreeBibleimages.org.
 மோசே ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழைந்தவுடன் மேகஸ்தம்பம் (தூண் வடிவிலான ஒரு மேகம்) இறங்கி ஆசரிப்புக்கூடார வாசலில் நிற்கும். அதிலிருந்து கர்த்தர் மோசேயோடே பேசுவார். இரு நண்பர்கள் பேசிக்கொள்ளுவது போல மோசேயும், ஆண்டவரும் முகமுகமாக ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளுவார்கள். அதன்பின்னர் மோசே பாளயத்திற்கு திரும்பிவிடுவார். மோசேக்கு உதவி செய்வதற்கு நூனின் மகனான யோசுவா என்கிற இளைஞன் ஒருவன் இருந்தான். அவனோ பாளயத்திற்கு திரும்பி செல்லாமல், ஆசரிப்புக்கூடாரத்தை விட்டுபிரிய மனமில்லாமல் அங்கேயே தங்கியிருந்தான். மேற்கூறிய சம்பவங்களை யாத்திராகமம் 33:7 – 11 வசனங்களில் வாசிக்கலாம்.
 

ஒருநாள் மோசே ஆண்டவரிடம், இந்த ஜனங்களை அழைத்துக் கொண்டு போ என்று சொன்னீர், ஆனால் என்னோடே கூட யாரை அனுப்புவேன் என்று சொல்லவில்லையே என்று கேட்டார். மோசே மறுபடியும் ஆண்டவரிடம், தனக்கு ஆண்டவருடைய கண்களில் கிருபை கிடைத்திருக்கிறதென்று சொன்னதையும் நினைப்பூட்டி தேவனுடைய திட்டங்களை தனக்கு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்பொழுது ஆண்டவர் மோசேயிடம், தன்னுடைய சமுகம் (சமுகம் என்றால் தேவன் தங்களுடன் வருகிறார் என்று ஜனங்களால் உணரக்கூடிய விதத்தில் அவருடைய பிரசன்னம்) மோசேக்கு முன்பாக செல்லுமென்றும், அதனால் மோசேக்கு மனஅமைதல் உண்டாகும் என்றும் வாக்குக் கொடுத்தார். மோசே ஆண்டவரிடம் தேவனுடைய பிரசன்னம் தங்களுக்கு முன் செல்லாவிட்டால், தங்களை அந்த இடத்திலிருந்து கொண்டு போக வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

மோசே ஆண்டவரிடம், அவருடைய மகிமையை (மகிமை என்றால் ஆண்டவருடைய விவரிக்க இயலாத ஒப்பற்ற சிறப்புகள்) தனக்கு காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆண்டவர் மோசேயிடம் தன்னுடைய இரக்கத்தை மோசேக்கு முன்பாக கடந்துபோகப் பண்ணுவதாகவும், அதன்பின்னர் தன்னுடைய நாமத்தை (பெயரை) மோசேக்கு முன்பாகக் கூறுவதாகவும் வாக்குக் கொடுத்தார். (தேவனுடைய நாமம்: நம்முடைய தேவனுக்கு அவருடைய தனிச்சிறப்புகளை விளக்கும் பல பெயர்கள் உண்டு, பழைய ஏற்பாட்டை நாம் வாசிக்கும்பொழுது பல்வேறு காலகட்டங்களில் மற்றும் வித்தியாசமான சூழ்நிலைகளில் தாம் நிறைவேற்றப்போகிற கிரியைகளின் வெளிப்பாடாகவும், அடையாளமாகவும் தேவன் தம்முடைய நாமங்களை அல்லது பெயர்களை வெளிப்படுத்தியிருப்பதை நாம் பார்க்கலாம்). 


பின்பு தேவன் மோசேயிடம், தன்னுடைய முகத்தை ஒருவராலும் பார்க்க முடியாது என்றும் தன்னுடைய முகத்தைப் பார்த்தபின் யாரும் உயிரோடு இருக்க இயலாது என்றும் கூறினார். ஆண்டவர் மோசேயிடம், விடியற்காலமே ஆயத்தமாகி, சீனாய் மலையின் மேல் ஏறி வந்து தான் காண்பிக்கிற இடத்தில் நிற்க வேண்டும் என்று கூறினார்.ஆப்பொழுது மோசெக்கு முன்பாக தேவனுடைய மகிமையை கடந்து போகச் செய்வதாகவும், தேவனுடைய மகிமை கடந்து போகும்பொழுது, மோசேயை கன்மலையில் உள்ள ஒரு வெடிப்பிலே வைத்து, தன்னுடைய கையினால் மூடுவதாகவும், பின்பு அவர் தன்னுடைய கையை எடுக்கும்பொழுது மோசேயால் தேவனுடைய பின்புறத்தை பார்க்கமுடியும் என்றும், தன்னுடைய முகத்தையோ பார்க்க முடியாது என்றும் தேவன் கூறினார்.

 

அதுமட்டுமல்லாமல், மோசே சீனாய் மலையில் ஏறி வரும்பொழுது மலை அடிவாரத்தில் உடைத்துப் போட்ட கற்பலகைகளை போலவே இரண்டு கற்பலகைகளை செய்து, எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார். மோசே கர்த்தர் தன்னிடம் சொன்னபடியெல்லாம் செய்தார். அப்பொழுது கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, மோசேயின் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார்.  தேவன் இங்கு தான் முதல்முறையாக தமிழில் தடித்த எழுத்துக்களில் கர்த்தர் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும், எபிரெய வேதாகமத்தில் "YHVH" என்றும் பொதுவாக "யாவே" அல்லது "யெகோவா" என்றும் அழைக்கப்படும் நாமத்தில் வெளிப்பட்டார் (கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் குறிப்பை பார்க்கவும்)*. மோசே தரைமட்டும் குனிந்து தேவனை பணிந்து கொண்டார். மோசே தேவனுடைய மகிமையைக் கண்டார்!

மோசே இரவும் பகலும் நாற்பது நாட்கள் உணவு சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் அந்த மலையின் மேல் இருந்தார். மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கி வந்த பொழுது அவருடைய முகம் ஒளிர்ந்து பிரகாசித்தது. மோசேயினுடைய முகம் பிரகாசிப்பதைப் பார்த்த இஸ்ரவேல் ஜனங்கள் பயந்தார்கள். அதனால் மோசே இஸ்ரவேல் ஜனங்களோடே பேசும்பொழுது ஒரு துணியை எடுத்து தன் முகத்தை மூடி முக்காடு போட்டுக் கொள்ளுவார். மோசே ஆண்டவருடைய சந்நிதியில் போகும்பொழுது முக்காடை எடுத்து விடுவார், இஸ்ரவேல் ஜனங்களோடே பேசும்பொழுது திரும்ப முக்காட்டை போட்டுக் கொள்ளுவார்.

ஆசிரியர் குறிப்பு: YHVH என்ற நாமத்தை பற்றி மேலும் அறிய விரும்பினால் மேல்நிலை வகுப்பில் (Senior Class) தேவனுடைய நாமங்கள் என்ற தலைப்பில் உள்ள பாடம் - 4ஐ வாசிக்கவும்.


வேதபகுதி: யாத்திராகமம் 33, 34

மனப்பாட வசனம்: எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த, …………………….. ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்? (II கொரிந்தியர் 3:7,8)

         

                                    

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    மோசே கூடாரத்தை பாளயத்திற்கு வெளியே தூரத்தில் போட்டு அதற்கு “……………………………………..” என்று பெயரிட்டார்.

2.    மோசே ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழைந்தவுடன் ……………………………. இறங்கி ஆசரிப்புக்கூடார வாசலில் நிற்கும்.

3.    மோசே சீனாய் மலையில் ஏறி வரும்பொழுது இரண்டு …………………….. செய்து எடுத்துக் கொண்டு வர தேவன் சொன்னார்.

4.    மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கி வந்த பொழுது அவனுடைய முகம் ………………………………

 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் ஆபரணங்களை கழற்றி ஏன் துக்கித்தார்கள்?

 

2. தேவன் எவ்வாறு மோசேயோடே ஆசரிப்புக் கூடாரத்தில் பேசினார்?

 

3.  மோசே ஏன் தன்னுடைய முகத்தை பார்க்கமுடியாது என்று தேவன் கூறினார்?

 

 

4.  மோசே ஜனங்களோடே பேசும்பொழுது ஏன் முக்காடு போட்டுக் கொண்டார்?


கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.   மோசே தேவனுடைய மகிமையை கண்ட விதத்தை எழுதவும்.





Wednesday, October 14, 2020

பின்னிட்டுத் திரும்பின யோர்தான் நதி (Jordan River Turns Back), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 9

மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

வயது: 8 - 9 வயது
வகுப்பு: III & IV

Please click the link to visit the English Blog for Sunday School Lessons in English

https://jacobsladdersundayschool.blogspot.com/

பாடம் – 9

பின்னிட்டுத் திரும்பின யோர்தான் நதி

இஸ்ரவேலருடைய தலைவனாகிய மோசே மரித்த பின், யோசுவா இஸ்ரவேலருடைய தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டு, வாக்குத்தத்த தேசமாகிய கானான் தேசத்திற்கு இஸ்ரவேலரை அழைத்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் கானான் தேசத்திற்கு மிக அருகில் வந்து விட்டார்கள். ஆனால் அவர்களுக்கு முன்பாக மிகவும் சீற்றத்துடன் பாய்ந்து கொண்டிருந்த “யோர்தான் நதி” என்கிற ஒரு பெரிய ஆறு இருந்தது. யோர்தான் நதி அறுப்புக் காலம் முழுவதும் கரைபுரண்டு ஓடும். இஸ்ரவேல் ஜனங்கள் அதன் கரையிலே மூன்று நாட்கள் தங்கி இருந்தார்கள்.

Sweet Publishing / FreeBibleimages.org

மூன்று நாட்கள் கழித்து, இஸ்ரவேலின் அதிபதிகள் (தலைவர்கள்) பாளயம் முழுவதும் சுற்றி நடந்து, அவர்கள் சீக்கிரமாய் யோர்தானைக் கடக்க போவதாக அறிவித்து, அதைக் கடக்கும்பொழுது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னவென்று கற்பித்தார்கள். உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கிற ஆசாரியர்கள், அதை தோளில் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கும்பொழுது இஸ்ரவேல் ஜனங்களும் புறப்பட வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் கூடாரத்தில் குடியிருந்ததால், அவர்கள் எங்காவது பிரயாணப்படும்பொழுது தங்களுடைய சாமான்களைக் கட்டி, கூடாரத்தையும் பெயர்த்து எடுத்துக் கொண்டு பிரயாணப்படுவார்கள்.

Sweet Publishing / FreeBibleimages.org

இஸ்ரவேலின் அதிபதிகள் ஜனங்களைப் பார்த்து அவர்கள் உடன்படிக்கைப் பெட்டிக்கு அருகில் வரக் கூடாதென்றும், அவர்களுக்கும் உடன்படிக்கைப் பெட்டிக்கும் இடையில் இரண்டாயிரம் முழம் (அரை மைலுக்கு சற்று அதிகமான தூரம்) இடைவெளி இருக்க வேண்டுமென்றும் கூறினார்கள். இஸ்ரவேலின் தலைவனாகிய யோசுவா ஜனங்களைப் பார்த்து, மறுநாள் கர்த்தர் அற்புதம் செய்யப் போகிறபடியால் ஜனங்கள் தங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளவேண்டும் என்றும் கூறினார். இஸ்ரவேல் ஜனங்கள் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுவதற்காக குளிப்பது, சில உணவுகளை தவிர்ப்பது, பலி செலுத்துவது, உபவாசிப்பது போன்ற பல முறைகளைக் கையாண்டு வந்தார்கள்.

Sweet Publishing / FreeBibleimages.org

அடுத்த நாள் காலையில் ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு யோர்தான் நதியை நோக்கி நடந்தார்கள். கர்த்தர் யோசுவாவை நோக்கி ஆசாரியர்கள் யோர்தான் நதிக்குள் சில அடிகள் மாத்திரம் எடுத்து வைத்து பின்பு நிற்க வேண்டும். ஆசாரியர்களுடைய கால்கள் யோர்தான் நதியில் பட்டவுடனே யோர்தானின் தண்ணீர்கள் ஓடாமல் குவியலாக நிற்கும் என்றார். 

Sweet Publishing / FreeBibleimages.org

ஆசாரியர்கள் தங்களுக்கு கட்டளையிட்டபடியே செய்தார்கள், அப்பொழுது யோர்தானின் தண்ணீர் பின்னிட்டுத் திரும்பினது. மேலேயிருந்து ஓடி வருகிற தண்ணீர் நின்று ஆதாம் என்கிற ஊர் வரைக்கும் குவியலாக நின்றது. உப்புக்கடல் என்று சொல்லப்பட்ட சவக்கடலுக்கு போகிற தண்ணீர் பிரிந்து ஓடினது. அதனால் யோர்தான் நதியின் நடுவில் உலர்ந்த தரை காணப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்கள் அதன் வழியாக யோர்தான் நதியைக் கடந்தார்கள். அவர்கள் எரிகோ என்கிற பட்டணத்தின் அருகே யோர்தான் நதியைக் கடந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் நதியைக் கடக்குமட்டும் உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தான் நதியின் நடுவே நின்றார்கள்.

Sweet Publishing / FreeBibleimages.org
வேத பகுதி: யோசுவா 3: 1-17

மனப்பாட வசனம்: யூதா அவருக்குப் பரிசுத்த ஸ்தானமும், இஸ்ரவேல் அவருக்கு ராஜ்யமுமாயிற்று. கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது. (சங்கீதம் 114:2,3)

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/


                       பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில் 

1.    இஸ்ரவேலருக்கு முன் இருந்த நதியின் பெயர் என்ன?   ………………………………………

2.    ஆசாரியர்கள் எதை சுமந்து சென்றார்கள்?

………………………………………

3.     இஸ்ரவேலருக்கும் உடன்படிக்கைப் பெட்டிக்கும் எத்தனை முழத் தூரம் இடைவெளி இருக்க வேண்டும்? ………………………………………..

4.    யோர்தான் நதி திரும்பி எந்த கடலில் விழுந்தது? …………………………………

5.    இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தானைக் கடக்கும் பொழுது யார் நதியின் நடுவே நின்றார்கள்? ………………………………………


சரியா / தவறா?


1.      மோசேக்குப் பின் ஆரோன் தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டார் (    )

2.     இஸ்ரவேலர் நைல் நதியின் கரையில் தங்கினார்கள் (    )

3.     யோசுவா இஸ்ரவேல் ஜனங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளும்படியாக கூறினான் (    )

4.    ஆசாரியர்களுடைய கால்கள் யோர்தான் நதியில் பட்டவுடனே நதி இரண்டாகப் பிரிந்து ஓடினது (   )

5.     ஆசாரியர்கள் யோர்தான் நதியின் நடுவே உள்ள ஒரு பாறையின் மேல் நின்றார்கள் (    ) 


தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...