Friday, October 2, 2020

அக்கினி ஸ்தம்பமும் மேக ஸ்தம்பமும் (The Pillar of Cloud & The Pillar of Fire), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 8

 ஆரம்பநிலை வகுப்பு(PRIMARY )

வயது: 6 - 7 வயது 
வகுப்பு: I & II 
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 8

அக்கினி ஸ்தம்பமும் மேக ஸ்தம்பமும்

 

                   ஆண்டவர் மோசேயிடம், இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே அழைத்து வந்து, கானான் என்கிற தேசத்திற்கு அழைத்து செல்லும்படி கூறினார்.  எகிப்தின் மன்னனான பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை தன்னுடைய தேசத்திலிருந்து வெளியே விட மறுத்த பொழுது, ஆண்டவர் பத்துவித வாதைகளை (அதாவது தண்டனைகளை) எகிப்தியர் மேல் வரப் பண்ணினார். அதைப் பார்த்து பயந்த பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை தன்னுடைய தேசத்திலிருந்து வெளியே விட்டான்.

Sweet Publishing / FreeBibleimages.org. 

                    இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்திற்கு செல்லுவதற்கு நீண்ட பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் துணையாக அவர்களோடே சென்றார். பகலிலே வெயிலினால் அவர்கள் தாக்கப்படாதபடிக்கு, அவர்களுக்கு முன்பாக மேக ஸ்தம்பமாய் சென்றார். இரவிலே அவர்கள் நடந்து செல்லுவதற்கு அவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கும்படியாகவும், அவர்களுக்கு பாதை காட்டும்படியாகவும் அக்கினி ஸ்தம்பமாய் சென்றார்.

Sweet Publishing / FreeBibleimages.org. 

                    ஸ்தம்பம் என்றால் தூண் என்று அர்த்தம். நாம் கட்டிடங்களைத் தாங்கி நிற்கும் தூண்களைப் பார்க்கிறோம் அல்லவா? அதைப்போலவே தோற்றத்துடன் காணப்பட்டதால் அவை தூணென்று அழைக்கப்பட்டன. மேகம் தூண் வடிவில் காணப்பட்டபொழுது அது மேகஸ்தம்பம் என்று அழைக்கப்பட்டது. அதேபோல அக்கினி தூண் வடிவில் காணப்பட்டபொழுது அக்கினிஸ்தம்பம் என்று அழைக்கப்பட்டது.

 

                  இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து, கானான் நோக்கி பிரயாணம் செய்தபொழுது, அவர்கள் சிவந்த சமுத்திரம் என்று அழைக்கப்பட்ட செங்கடலை கடக்க வேண்டியதிருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலை எப்படி கடப்பது என்று அறியாதபடி நின்று கொண்டிருப்பதைப் பார்த்த பார்வோன் எப்படியாவது அவர்களை மறுபடியும் அடிமைகளாக எகிப்திற்கே அழைத்து வர வேண்டும் என்று நினைத்தான். அதனால் தன்னுடைய சிறந்த இரதங்களுடன் இஸ்ரவேலரைப் பின் தொடர்ந்தான்.

Sweet Publishing / FreeBibleimages.org. 

                   இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குப் பின்னால் பார்வோன் வருவதைப் பார்த்து பயந்துபோனார்கள். அப்பொழுது அவர்களுக்கு முன்பாக சென்ற தூதனானவர் அவர்களுக்குப் பின்னாக சென்றார். அவர்களுக்கு முன்பாக சென்ற மேக ஸ்தம்பமும் அவர்களுக்கு பின் சென்று எகிப்தியரின் இரதங்கள் இஸ்ரவேலரின் அருகில் வர முடியாதபடிக்கு அவர்களுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் நடுவாக நின்றது. அது மாத்திரமல்லாமல், அந்த மேக ஸ்தம்பத்திலிருந்து இஸ்ரவேலருக்கு வெளிச்சம் வந்தது. எகிப்தியருக்கோ அது இருளாய் இருந்தது.

Sweet Publishing / FreeBibleimages.org. 

                 ஆண்டவர் இஸ்ரவேலின் தலைவனாகிய மோசேயைப் பார்த்து அவர் கையிலிருந்த கோலை செங்கடலுக்கு நேரே நீட்டும்படி கூறினார். மோசே தன் கோலை நீட்டினவுடன் ஒரு பெரிய காற்று, செங்கடலின் தண்ணீர்களை இரண்டு பக்கமாகப் பிரித்து, நடுவே உலர்ந்த தரை உருவாகும்படி செய்தது.

Sweet Publishing / FreeBibleimages.org.

 இஸ்ரவேலர் அதன் நடுவே நடந்து செங்கடலைக் கடந்து சென்றார்கள். 

Sweet Publishing / FreeBibleimages.org.

பார்வோனும் அவன் சேனையும் அதுபோலவே செய்ய நினைத்து செங்கடலின் நடுவே அழிந்து போனார்கள்.


வேதபகுதி: யாத்திராகமம் 14

மனப்பாட வசனம்: சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். (சங்கீதம் 20:7)


பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்:

1.    இஸ்ரவேலர் முன் இருந்த சமுத்திரத்தின் பெயர் என்ன?  ……………………………………..

 2.    ஆண்டவர் எகிப்தியர் மேல் எத்தனை விதமான வாதைகளை அனுப்பினார்?  …………………………..

 3.    ஆண்டவர் இரவிலே இஸ்ரவேலருக்கு முன்பாக எவ்விதமாய் சென்றார்? …………………………….

 4.    எகிப்தியரின் சேனையையும், இஸ்ரவேல் ஜனங்களையும் பிரித்தது எது? ……………………………..

 5.    பார்வோனால் சிவந்த சமுத்திரத்தை கடக்க முடிந்ததா?

…………………………………………..

சரியா / தவறா

1.    இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்திற்கு சென்று கொண்டிருந்தனர் ( சரி / தவறு ) 

2.    இஸ்ரவேல் ஜனங்கள் நீல சமுத்திரத்தைக் கடக்க வேண்டியிருந்தது ( சரி / தவறு ) 

3.    பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை தன்னுடைய இரதத்தில் அமர்ந்து துரத்தினான். ( சரி / தவறு ) 

4.    இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு பெரிய பேழையில் செங்கடலைக் கடந்தார்கள் ( சரி / தவறு ) 

5.    பார்வோனும் சமுத்திரத்தைக் கடந்து சென்றான் ( சரி / தவறு )

No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...