Tuesday, October 6, 2020

யாக்கோபும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களும் (Jacob & The 12 Tribes of Israel), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 8

                                     மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது
வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose. 

Please click the link to visit the English Blog for Sunday School Lessons in English

https://jacobsladdersundayschool.blogspot.com/

For Sunday School activities and stories in English

https://jacobsladderactivity.blogspot.com/

பாடம்- 8

யாக்கோபும்  இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களும்

யாக்கோபும் ஏசாவும் ஈசாக்கின் இரட்டைப் பிள்ளைகள். அவர்கள் வளர்ந்தபொழுது, யாக்கோபு தன்னுடைய சகோதரனாகிய ஏசாவை ஏமாற்றி அவனுடைய ஆசீர்வாதங்களை எடுத்துக்கொண்டான். ஏசா கோபங்கொண்டு யாக்கோபை பழி வாங்க நினைத்தான். யாக்கோபு பயந்து ஆரான் என்கிற பட்டணத்திலே இருந்த லாபான் என்கிற தன்னுடைய மாமனுடைய வீட்டிற்கு ஓடிப் போனான்.

யாக்கோபின் கனவு:

யாக்கோபு ஆரானுக்கு போகிற வழியிலே, இராத்திரியிலே தூங்குவதற்காக ஒரு இடத்திலே படுத்தபொழுது ஒரு கனவு கண்டான். வானத்திற்கும், பூமிக்கும் நடுவே ஒரு ஏணி வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த ஏணியிலே தேவதூதர்கள் ஏறுகிறதாகவும், இறங்குகிறதாகவும் இருந்ததாகவும் கனவு கண்டான். எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் நின்று ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும் கொடுத்த வாக்குத்தத்தத்தை அவனிடம் மறுபடியும் கூறினார். மேலும் அவன் போகிற இடத்திலெல்லாம் அவனைக் காத்து அவனை அந்த தேசத்திற்கு திரும்பி வரப் பண்ணுவதாகவும் வாக்குக் கொடுத்தார். யாக்கோபு “இந்த இடம் தேவனுடைய வீடேயல்லாமல் வேறு அல்ல, இது வானத்தின் வாசல்” என்று சொல்லி, அந்த இடத்திற்கு “பெத்தேல்” என்று பெயரிட்டான். 

John Paul Stanley / YoPlace.com.

 லாபானும், யாக்கோபும்:

யாக்கோபு தன்னுடைய மாமனாகிய லாபானுடைய வீட்டைப் போய் சேர்ந்தான். அங்கு அவன் லேயாளையும், ராகேலையும் திருமணம் செய்தான். அவனுக்கு பன்னிரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். யாக்கோபு தன்னுடைய குடும்பத்திற்காக பொருளீட்ட வேண்டியதிருந்தது. யாக்கோபு தன் மாமனிடம் தன்னுடைய வேலைக்கான கூலியாக புள்ளியும், வரியுமுள்ள ஆடுகளைக் கேட்டான். லாபான் அதற்கு சம்மதித்தான். யாக்கோபுடைய மந்தையின் ஆடுகள் அதிகரிக்க ஆரம்பித்த உடன் பொறாமை கொண்ட லாபான் அவனுடைய சம்பளத்தை பத்து முறை மாற்றினான். யாக்கோபு லாபானுடைய மகள்களை திருமணம் செய்வதற்காக 14 வருடங்களும், தனக்கு பொருளீட்டுவதற்காக 6 வருடங்களும் லாபானிடம் வேலை செய்தான். ஒருநாள் தேவன் யாக்கோபுக்கு தரிசனமாகி, அவனை அவனுடைய தகப்பன் வீட்டிற்கு திரும்ப போகும்படியாகக் கூறினார். அதன்படியே யாக்கோபும் அவன் குடும்பமும் ஆரானை விட்டுப் புறப்பட்டார்கள். 

யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுதல்:

யாக்கோபு ஆரானை விட்டு திரும்பும் பொழுது, இரவு வேளையிலே அவர்கள் யாப்போக்கு என்கிற ஆற்றின் கரையை அடைந்தார்கள். யாக்கோபு தன்னுடைய குடும்பத்தை எல்லாம் ஆற்றை கடக்கப் பண்ணிவிட்டு அவன் மாத்திரம் அங்கே தனியாக இருந்தான். அப்பொழுது ஒரு மனிதன் அங்கே வந்து யாக்கோபோடே போராடினார் (மல்யுத்தப் போராட்டம்). காலை நேரம் விடிந்தபொழுதும் யாக்கோபு தன்னுடைய போராட்டத்தை விடாமல், அந்த மனிதன் தன்னை ஆசீர்வதிக்கவேண்டும் என்றும், அப்பொழுது தான் அவரைப் போகவிடப் போவதாகவும் கூறினான். அப்பொழுது அவர் அவனிடம், “உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டார்?”. அதற்கு அவன் யாக்கோபு என்றான். அப்பொழுது அவர் இனி உன் பெயர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்னப்படும் என்றார். பின்னர் அவர் அவனை ஆசீர்வதித்தார். அப்பொழுது தான் யாக்கோபு தான் தேவனோடு போராடினதை அறிந்துகொண்டான். அதனால் அந்த இடத்திற்கு “பெனியேல்” என்று பெயரிட்டான். பின்னர் தன் தகப்பன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

John Paul Stanley / YoPlace.com.

இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்:

யாக்கோபுக்கு பன்னிரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்திருந்தாள். யாக்கோபுடைய பன்னிரண்டு மகன்களின் பெயர்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, தாண், நப்தலி, காத், ஆசேர், இசக்கார், செபுலோன், பெஞ்சமின். யாக்கோபுடைய மகளுடைய பெயர் தீனாள். இஸ்ரவேல் தேசத்தின் பன்னிரண்டு கோத்திரங்களும் யாக்கோபின் மூலமே உருவாகின. யாக்கோபுடைய பத்து குமாரர்களும் (ரூபன், சிமியோன், யூதா, தாண், நப்தலி, காத், ஆசேர், இசக்கார், செபுலோன், பெஞ்சமின்) ஒவ்வொரு கோத்திரமாக எண்ணப்பட்டனர். லேவி கோத்திரத்துக்கு ஆசாரிய ஊழியம் கொடுக்கப்பட்டதால், இஸ்ரவேலின் ஒரு கோத்திரமாக எண்ணப்படவில்லை. யோசேப்பும் ஒரு கோத்திரமாக எண்ணப்படாமல், அவனுடைய இரண்டு மகன்களும் (எப்பிராயீம், மனாசே) யாக்கோபுடைய மகன்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு (ஆதியாகமம் 48:5 – 6), அவர்கள் இருவரும் ஒவ்வொரு கோத்திரமாக எண்ணப்பட்டனர்.

 இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுடைய பெயர்கள்:

 1.    ரூபன்                   5. நப்தலி                           9. செபுலோன்

2.    சிமியோன்                6. காத்                               10. பென்யமீன்

3.    யூதா                            7. ஆசேர்                           11. எப்பிராயீம்

4.    தாண்                          8. இசக்கார்                      12. மனாசே

இந்த பன்னிரண்டு கோத்திரங்களையும் இணைத்து தான் இஸ்ரவேல் தேசம் உருவாக்கப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்து, கானான் தேசத்தை பெற்றுக் கொண்டபின் யோசுவாவினால் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் தனித்தனியே இடங்கள் கொடுக்கப்பட்டது.

John Paul Stanley / YoPlace.com.
                                                                                                                 

1.    யூதா: இந்த கோத்திரம் இஸ்ரவேலில் மிகவும் பிரபலமான கோத்திரம். இது ராஜாக்களின் கோத்திரமாகவே கருதப்பட்டது. இஸ்ரவேலின் மிகவும் முக்கியமான நகரமான எருசலேம், மற்றும் எருசலேம் தேவாலயம் ஆகியவை யூதா கோத்திரத்தின் பங்கிற்கு உட்பட்டதே. தாவீது ராஜா இந்த கோத்திரத்தை சார்ந்தவரே. அவருடைய வம்சாவளியிலிருந்து பல ராஜாக்கள் தோன்றினர். மாம்சத்தில் அவதரித்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் யூதா கோத்திரத்தை சார்ந்தவரே (மத்தேயு 1:1,2). முக்கியமான நபர்கள்: இயேசு கிறிஸ்து, தாவீது, சாலொமோன், காலேப்

 2.    ரூபன்: இந்த கோத்திரம் யாக்கோபின் முதல் மகனாகிய ரூபனிலிருந்து தோன்றிய கோத்திரம். இவர்கள் வாக்குத்தத்த தேசமாகிய கானானுக்குள் பங்கு பெறாமல், யோர்தானுக்கு அப்புறம் இருக்கிற இடத்தில் பங்கு கேட்டார்கள். இவர்கள் காத் கோத்திரத்தோடும், மனாசேயின் பாதி கோத்திரத்தோடும் அங்கு குடியேறினார்கள். பின்னர் ராஜாக்களின் காலத்தில் இவர்கள் சீரியரால் தோற்கடிக்கப்பட்டனர். (எண்ணாகமம் 32; 2 ராஜாக்கள் 10:32,33).  அதன் பின்னர் அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரினால் சிறை பிடிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் (1 நாளாகமம் 5:18-26). 

3.    சிமியோன்: சிமியோனும் லேவியும் தங்கள் சகோதரியை சீகேம் என்னும் ஒருவன் தவறாக நடத்தினதால், அவர்கள் அந்த பட்டணத்தின் ஆண்களை எல்லாம் கொன்று போட்டார்கள். அதற்காக அவர்கள் தகப்பனால் அவர்களுக்கு சாபம் கொடுக்கப்பட்டது. கானான் தேசத்திலே அவர்களுக்கு யூதா கோத்திரத்தின் பங்கிற்குள்ளாக பங்கு கொடுக்கப்பட்டது (யோசுவா 19:1)

 4.    செபுலோன்: செபுலோனைப் பற்றியும் வேதாகமத்தில் அதிகமாக சொல்லப்படவில்லை. இவர்கள் நியாயாதிபதிகளின் காலத்திலும், தாவீது ராஜாவின் காலத்திலும் யுத்த சேவகராய் மிகவும் உண்மையாய் சேவித்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது (1நாளாகமம் 12:33)

5.    இசக்கார்: இசக்கார் கோத்திரத்தைப் பற்றி வேதாகமத்தில் இன்னும் குறைவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. தாவீது ராஜாக்களின் காலங்களில் இஸ்ரவேலர் செய்ய வேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்கு தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இசக்காரில் இருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது (1 நாளாகமம் 12:32).

 6.    தாண்: தாண் கோத்திரத்தைப் பற்றி வேதாகமத்தில் அதிகம் கொடுக்கப்படவில்லை. தாண் கோத்திரத்தார் யோசுவாவினால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தை சுதந்தரிக்காமல் வடப்புறம் நோக்கி நகர்ந்தனர். பின்னர் தங்களுக்கென்று தெய்வங்களை உருவாக்கி ஆசாரியத்துவத்தையும் ஏற்படுத்தினர் (நியாயாதிபதிகள் 18-20). முக்கியமான நபர்: சிம்சோன்

 7.    காத்: காத் கோத்திரம் ரூபன் கோத்திரத்தோடும், மனாசேயின் பாதி கோத்திரத்தோடும் கூட யோர்தானுக்கு அப்புறத்தில் குடியேறினார்கள். பின்னர் அவர்கள் அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரினால் சிறை பிடிக்கப்பட்டு, வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் (1 நாளாகமம் 5:18-26). அதன் பின்னர் இவர்களைப் பற்றி அதிகமான தகவல்கள் வேதாகமத்தில் இல்லை. 

 8.    ஆசேர்: ஆசேருடைய தகப்பனாகிய யாக்கோபு, ஆசேர் கொழுமையானவைகளை புசிப்பான் என்று அவனை ஆசீர்வதித்தான். அவர்கள் மேற்கு கலிலேயாவின் ஒலிவத்தோட்டங்கள் நிறைந்த ஒரு பகுதியை பெற்றுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

9.    நப்தலி: நப்தலி கோத்திரத்தைப் பற்றியும் அதிகமான தகவல்கள் வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை.

10. எப்பிராயீம்: இது யோசேப்பின் மகனான எப்பிராயீமின் கோத்திரம். முக்கியமான நபர்: யோசுவா

11. பென்யமீன்: இந்த சிறிய கோத்திரம் இஸ்ரவேலில் பல முக்கியத்துவங்களை வகிக்கிறது. இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் இந்த கோத்திரத்தை சார்ந்தவன் தான். அது போல தாவீதை ராஜாவாக்குவதற்கும் முனைந்து நின்றவர்கள் இவர்கள் தான் (1 ராஜாக்கள் 12:16-24) முக்கியமான நபர்கள்: சவுல் ராஜா, மொர்தெகாய், அப்போஸ்தலனாகிய பவுல்

12. மனாசே: இது யோசேப்பின் மூத்த மகனாகிய மனாசேயின் மூலமாக உருவான கோத்திரம். இந்த கோத்திரத்தில் பாதி கானான் தேசத்திற்கு உள்ளாகவும், பாதி கோத்திரம் கானான் தேசத்திற்கு வெளியேவும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது (யோசுவா 17:5-6). அதனால் தான் வேதத்தில் இவர்களைப் பற்றி மனாசேயின் பாதி கோத்திரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.ரூபன் கோத்திரத்தோடும், காத் கோத்திரத்தோடும் யோர்தானுக்கு வெளியே சுதந்திரத்தைப் பற்றுக் கொண்ட மனாசேயின் பாதி கோத்திரம், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரினால் சிறை பிடிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் (1 நாளாகமம் 5:18-26). அதன் பின்னர் இவர்களைப் பற்றி அதிகமான தகவல்கள் இல்லை.

 லேவி: ஆசாரியப்பட்டத்தைப் பெற்றுக்கொண்ட கோத்திரம். ஆசாரியன் என்றால் தேவனுக்கு முன்பாக ஊழியம் செய்பவன் என்று அர்த்தம். ஆரோன் பொன் கன்றுகுட்டியை செய்து, ஜனங்களை பாவத்திற்கு நேராக நடத்தினபொழுது, மோசே தேவனுடைய சார்பில் நிற்பவன் யார் என்று கேட்டபொழுது அவனோடு நின்றது லேவி கோத்திரம் தான். லேவி கோத்திரத்துக்கு தனியே தேசங்கள் கொடுக்கப்படவில்லை, மற்ற கோத்திரங்களின் தேசங்களுக்குளேயே நிலங்கள் கொடுக்கப்பட்டன.

முக்கியமான நபர்கள்: மோசே, ஆரோன், சாமுவேல் (1 நாளாகமம் 6:16-28), யோவான் ஸ்நானகன், பர்னபாஸ்

 

வேதபகுதி: ஆதியாகமம் 28 – 31

மனப்பாட வசனம்:  இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம்பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும். இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான். (உபாகமம் 33:28,29).

 

 

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    யாக்கோபும் ஏசாவும் ………………………………. இரட்டைப் பிள்ளைகள்

2.    யாக்கோபு கண்ட கனவிலே வானத்திற்கும், பூமிக்கும் நடுவே ஒரு ……………………………… வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான்.

3.    யாக்கோபு லாபானுடைய மகள்களை திருமணம் செய்வதற்காக ……………………………… வருடங்களும், தனக்கு பொருளீட்டுவதற்காக ……………………………… வருடங்களும் லாபானிடம் வேலை செய்தான்.  

4.    யாக்கோபு தன்னுடைய குடும்பத்தை எல்லாம் ………………………… ஆற்றை கடக்கப் பண்ணிவிட்டு தான் மட்டும் பிந்தி தனித்திருந்தான்.

 

        ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும் 

1. ஏசா தன் சகோதரனை ஏன் பழிவாங்க நினைத்தான்?

 

2. லாபான் யாக்கோபை எவ்வாறு ஏமாற்றினான்?

 

3. யாக்கோபு தான் செய்த வேலைக்கு கூலியாக லாபானிடம் எதைக் கேட்டான்?

 

4. யாக்கோபு தான் பிந்தி தனித்திருந்த இடத்திற்கு “பெனியேல்” என்று பெயரிட காரணம் என்ன?

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1. இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களும் எவ்வாறு உருவானது என்பதைப் பற்றி எழுதவும்.

 

 

 

No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...