Sunday, September 27, 2020

மன்னா - வானத்து அப்பம் (Manna - Food From Heaven), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 8

 KINDER (பாலர் வகுப்பு) 

வயது – 4 & 5     

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை. 
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.   

பாடம் – 8

மன்னா – வானத்து அப்பம்

                        இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து என்கிற தேசத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பி செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் எகிப்தின் மன்னனான பார்வோன் அவர்களை தன்னுடைய நாட்டிலேயே அடிமைகளாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான். ஆனால் ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவியாக பல அற்புதங்களை செய்து எகிப்து தேசத்தை விட்டு வெளியே கொண்டு வந்தார்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                    அவர்கள் தங்கள் சொந்த தேசமாகிய கானான் தேசத்தை நோக்கி பிரயாணம் செய்ய ஆரம்பித்தார்கள். கானான் தேசம் வெகு தொலைவில் இருந்தது. அவர்கள் ஒரு பெரிய வனாந்திரம் வழியாக கால்நடையாகவே செல்ல வேண்டியிருந்தது. அந்த நாட்களில் இப்பொழுது நமக்கு இருப்பதைப் போல வாகன வசதிகளோ, உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கடைகளோ இல்லை. தங்களுக்கு வேண்டிய உணவை அவர்களே தேட வேண்டியிருந்தது. அது வனாந்திரமான இடமாயிருந்ததால் உணவு கிடைக்கக்கூடிய மரங்களோ, செடிகளோ இல்லை.

Sweet Publishing / FreeBibleimages.org.

                    இஸ்ரவேலருடைய தலைவனான மோசே ஆண்டவரிடத்தில் உணவுக்காக விண்ணப்பம் செய்தான். ஆண்டவர் அவனுடைய விண்ணப்பத்தைக் கேட்டு வானத்திலிருந்து அப்பத்தை மழை போல பொழியப் பண்ணினார். இஸ்ரவேல் ஜனங்கள் தினந்தோறும் ஓய்வு நாளை தவிர மற்ற நாட்களில் காலையில் அதை சேகரித்தார்கள். 

Sweet Publishing / FreeBibleimages.org.

அது ஒரு விசேஷமான உணவு. அதற்கு மன்னா என்று பெயர். அது வெள்ளை நிறமாயும், கொத்தமல்லி அளவாயும் இருந்தது. அதன் ருசி தேனிட்ட பணியாரம் போல இருந்தது. மன்னா இஸ்ரவேல் ஜனங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆண்டவர் தம்முடைய ஜனங்களுக்கு உணவு கொடுத்து வனாந்திரத்தில் அவர்கள் பசியை ஆற்றினார்.

Sweet Publishing / FreeBibleimages.org.

வேத பகுதி: யாத்திராகமம் 16: 1-18

மனப்பாட வசனம்: தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார். (சங்கீதம் 78:25)

ஆபிரகாமுடன் தேவனுடைய உடன்படிக்கை (God's Covenant With Abraham), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 7

                                   மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது
வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose. 

பாடம்- 7

ஆபிரகாமுடன் தேவனுடைய உடன்படிக்கை


ஆபிரகாம் தேவனால் அழைக்கப்படுதல்:

ஆபிராம் தேராகின் மகன். ஆபிராம் தான் பின்னர் தேவனால் “ஆபிரகாம்” என்று அழைக்கப்பட்டான். ஆபிராம் தன்னுடைய மனைவியாகிய சாராயுடன், ஊர் என்கிற கல்தேயருடைய தேசத்தில் (தற்போதைய ஈராக்) குடியிருந்தான். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தேவன் ஆபிராமிடம், அவன் வசிக்கிற இடத்தைவிட்டு, தான் காண்பிக்கும் தேசத்திற்கு போகும்படியாகக் கூறினார். தேவன் ஆபிரகாமோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.

உடன்படிக்கை (Covenant):

உடன்படிக்கை என்பது இரு நபர்கள் தங்களுக்கிடையே ஒப்பந்தம் செய்வதற்கு ஈடாகும் எனலாம். (ஒப்பந்தம் என்ற வார்த்தை இந்த பாடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதைப் பற்றி மேலும் அறிய, இந்த பாடத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை பார்க்கவும்). இந்த உடன்படிக்கைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று நிபந்தனைகளுக்குட்பட்ட உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம், இன்னொன்று நிபந்தனைகளற்ற ஒப்பந்தம். நிபந்தனைகளற்ற உடன்படிக்கை என்றால், ஒரு மனிதன் தானே முன்னின்று எல்லாவற்றையும் நிறைவேற்றுவது, மற்ற மனிதனிடமிருந்து எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.

நிபந்தனைகளுக்குட்பட்ட உடன்படிக்கை என்றால், அந்த உடன்படிக்கை நிறைவேறுவதற்கு, உடன்படிக்கை செய்துகொண்ட இருவரும் நிறைவேற்றவேண்டிய சில கடமைகள் உண்டு, அந்த கடமைகளை ஒருவர் நிறைவேற்றாமற் போனாலும், அந்த உடன்படிக்கை முறிக்கப்பட்டு செல்லுபடியாகாமல் போய்விடும். இப்படி ஒரு உடன்படிக்கைக்கான எடுத்துகாட்டைத் தான் லாபானுக்கும், யாக்கோபுக்கும் இடையே நடைபெற்ற உடன்படிக்கையில் பார்க்கிறோம் (ஆதியாகமம் 31:44-54). பழைய காலங்களில் உடன்படிக்கை செய்யும்பொழுது செய்யப்பட்ட சில சடங்காச்சாரங்களை மேலே கொடுக்கப்பட்டுள்ள வேதபகுதியிலிருந்து பார்க்கலாம்.

Sweet Publishing / FreeBibleimages.org.

1.    ஒரு கற்தூண் நாட்டப்பட்டது (31:45)

2.    கற்களின் குவியல் வைக்கப்பட்டது (31:46 – 49), அதற்கு கண்காணிப்புக்கோபுரம் என்று அர்த்தம் கொள்ளும் மிஸ்பா என்றும் கலயெத் மற்றும் ஜெகர்சகதூதா என்றெல்லாம் பெயரிட்டார்கள்.

3.    அந்த உடன்படிக்கைக்கு சாட்சியாக மற்றும் உறுதிபடுத்துபவராக தேவனுடைய நாமம் அழைக்கப்பட்டது (31:49)

4.    யாக்கோபிடத்திலிருந்து, தன்னுடைய மகள்களை தவறாக நடத்தக்கூடாது என்கிற உறுதியை லாபான் பெற்றுக் கொண்டான்.

5.    சமாதான உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் செய்தல்(31:51-52)

6.    தேவனுடைய நாமத்தில் ஆணையிடுதல் (31:53)

7.    பலியிட்டு, போஜனம் செய்தல் - போஜனம் செய்தல் என்றால் விருந்து உண்ணுதல் என்று அர்த்தம் (31:54)

பரிசுத்த வேதாகமத்தில் இன்னும் பல இடங்களிலும் உடன்படிக்கை செய்துகொள்ளுவதைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. அவ்விடங்களில் இதற்கு இணையான படிகள் சுட்டிகாட்டப்பட்டிருக்கிறது.

ஆபிரகாமிய உடன்படிக்கை (Abrahamic Covenant):

John Paul Stanley / YoPlace.com.

தேவன் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கைத்தான் ஆபிரகாமிய உடன்படிக்கை என்று அழைக்கிறோம். தேவன் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கை ஆதியாகமம் 12:1-3, மற்றும் 15ஆம் அதிகாரத்தின் அடிப்படையில் நிபந்தனைகளற்றது என்று கருதப்பட்டாலும், ஆதியாகமம் 17ஆம் அதிகாரத்தில், உடன்படிக்கை நிறைவேறுவதற்கு தேவன் ஆபிரகாமிடத்தில் எதிர்பார்த்தவைகளை பார்க்கலாம். அதில் தேவன் ஆபிரகாமிடம் தனக்குமுன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிருக்கும்படி கூறினதைப் பார்க்கலாம். இந்த உடன்படிக்கையின் அடிப்படையிலே தேவன் விருத்தசேதனம் என்கிற சடங்காச்சாரத்தை ஏற்படுத்தினதையும் பார்க்கலாம்.

விருத்தசேதனம் (Rite of circumcision):

விருத்தசேதனம் என்பது தமிழில் சுன்னத்து செய்தல் என்று அழைக்கப்படுகின்றது. இந்த விருத்தசேதனம் ஆபிரகாமிய உடன்படிக்கையின் ஒரு பகுதியாகவே எற்படுத்தப்பட்டது (ஆதியாகமம் 17:9-14). ஆபிரகாமின் வம்சாவளியில் பிறந்த அனைத்து ஆண்மக்களும், தேவன் தங்களோடு ஏற்படுத்தின உடன்படிக்கையின் ஒரு அடையாளத்தை தங்கள் சரீரத்தில் தரித்திருக்கவேண்டும் என்பதற்காகவே விருத்தசேதனம் என்கிற அடையாளம்  கொடுக்கப்பட்டது. தங்கள் சரீரத்தில் விருத்தசேதனத்தை தரித்திருக்காத எவரும் ஆபிரகாமின் உடன்படிக்கைக்கு பங்கில்லாதவர்களாகவே கருதப்பட்டனர்.

ஆபிரகாமிய உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள்:

1.    தேசத்தைப் பற்றிய வாக்குறுதி – தேவன் ஆபிரகாமுக்கு ஒரு தேசத்தைக் கொடுக்கப்போவதாக வாக்குக்கொடுத்தார்

2.    சந்ததியாரைப் பற்றிய வாக்குறுதி – தேவன் ஆபிரகாமிடம் அவனை ஒரு ஒரு பெரிய இனமாக்கப்போவதாக வாக்குக் கொடுத்தார். ஆபிரகாம் 75 வயதாயிருந்து அவனுக்கு குழந்தைகள் எதுவும் இல்லாதபோது இந்த வாக்குக் கொடுக்கப்பட்டது. இந்த வாக்குறுதியை தேவன் பின்னும் பெரிதாக்கி, ஆதியாகமம் 17:6ல் ராஜாக்கள் அவனுடைய சந்ததியாரிலிருந்து உருவாகுவார்கள் என்று வாக்குக் கொடுத்தார்.

3.    ஆசீர்வதிக்கப்படுவதையும், ஆசீர்வாதமாயிருப்பதையும் பற்றிய வாக்குறுதி – தேவன் ஆபிரகாமிடம் தாம் அவனை ஆசீர்வதிப்பதாகவும், அவன் பல தேசங்களுக்கும், இனங்களுக்கும் ஆசீர்வாதமாக மாறப்போவதாகவும் வாக்கு கொடுத்தார் (ஆதியாகமம் 12:3).

ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான்:

தேவன் ஆபிராமிடம் அவன் பல இனங்களுக்கு தந்தையாக மாறப்போவதால் அவனுடைய பெயரை “ஆபிரகாம்” என்று மாற்றினார். அவனுடைய மனைவியின் பெயரை இளவரசி என்று அர்த்தம் கொள்ளும் “சாராய்” என்கிற பெயரிலிருந்து “அநேக இனங்களின் தாய்” என்று அர்த்தம் கொள்ளும் “சாராள்” என்கிற பெயருக்கு மாற்றினார். தேவன் ஆபிரகாமுக்கோ, சாரளுக்கோ குழந்தைகள் எதுவும் இல்லாதபொழுதே அவர்களுடைய பெயரை மாற்றினார். ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பற்றி எந்தவித சந்தேகமும் இல்லாமல் அதை விசுவாசித்தார். அதனால் தான் ஆபிரகாம் ஆண்டவருடைய சிநேகிதன் என்று அழைக்கப்பட்டார்.

 தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுதல்:

தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தின் மகனாகிய ஈசாக்கை அவனுக்கு 100 வயதாயிருக்கும்பொழுதும், சாராளுக்கு 75 வயதாயிருக்கும்பொழுதும் கொடுத்தார். ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குறுதியின்படியே, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அநேக தேசங்களுல், இஸ்ரவேல் தேசமும் ஆபிரகாமின் மூலமாய் தோன்றின. உலகத்தின் இரட்சகரான “இயேசு கிறிஸ்துவும்” ஆபிரகாமின் சந்ததியில் தோன்றினவரே!

 புறஜாதிகளுக்கு ஆபிரகாமின் ஆசீர்வாதம்:

ஆபிரகாமுக்கும், வாக்குத்தத்தத்தின்படி அவனுடைய வம்சாவளியில் பிறந்தவர்களுக்கென்று பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட இந்த ஆசீர்வாதங்களை புறஜாதிகளும் சுதந்தரித்துக் கொள்ளமுடியும். ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தின்படி பிறந்த ஈசாக்கிற்கும், அவனுடைய சந்ததியில் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட யாக்கோபின் வம்சாவளியை சேராத அனைவருவே புறஜாதிகள் (Gentiles) என்றே அழைக்கப்பட்டனர். இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலமாக யூதர்களும், இஸ்ரவேலரும் ஒன்றாக்கப்பட்டனர். இயேசு கிறிஸ்துவின் மேல் யார்யாரெல்லாம் தங்கள் விசுவாசத்தை வைக்கிறார்களோ அவர்கள் எல்லாரும் ஆபிரகாமின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளமுடியும். கலாத்தியர் 3:29ல் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள், கிறிஸ்துவினுடையவர்களாயும், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளுபவர்களாகவும் இருக்கிறோம் என்று கூறுகிறது. ஆபிரகாமுக்கு தேவன் உடன்படிக்கையின் மூலமாய் கொடுத்த ஆசீர்வாதங்களை புறஜாதியாராகிய நாமும் விசுவாசத்தின் மூலமாய் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆசிரியர் குறிப்பு: இந்த பாடங்கள் ஞாயிறு பள்ளி குழந்தைகளுக்காக இயற்றப்பட்டவை. பரிசுத்த வேதாகமத்தில் உள்ள சில வார்த்தைகள் குழந்தைகள் புரிந்து கொள்ளுவதற்கு சிரமமாக இருப்பதால், அப்படிப்பட்ட வார்த்தைகளின் தொடர்புடைய வேறே வார்த்தைகளை பயன்படுத்தி புரிய வைக்க முயற்சிக்கிறோம். எடுத்துக்காட்டாக இந்த பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒப்பந்தம் என்ற வார்த்தைக்கு 'Contract" என்றும் உடன்படிக்கை என்ற வார்த்தைக்கு 'Covenant" என்றும் பொருள்படும் என்று நடைமுறை தமிழில் சொல்லப்பட்டாலும், தமிழில் இவை இரண்டும் இணையாக பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அகராதித் தமிழில் "ஒப்பந்தம், உடன்படிக்கை" ஆகிய இரண்டு வார்த்தைகளும் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருப்பதை விட வித்தியாசமான அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்துவதற்கு பரிசுத்த வேதாகமம் முழுவதும் சில விசேஷித்த சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையிலே பரிசுத்த வேதாகமத்திலே "உடன்படிக்கை" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்). 

வேதபகுதி: ஆதியாகமம் 12,15,17,21:1-8

மனப்பாட வசனம்: விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான். விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான் (எபிரெயர் 11:8,9).

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    “…………………………..” தான் பின்னர் தேவனால் “ஆபிரகாம்” என்று அழைக்கப்பட்டான்.

2.    ஆபிரகாமுக்கு 75 வயதாயிருந்து, குழந்தைகள் எதுவும் இல்லாதபோது ……………………… பற்றிய வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

3.    ………………………………. ஆபிரகாமிய உடன்படிக்கையின் ஒரு பகுதியாகவே எற்படுத்தப்பட்டது

4.    ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தின்படி பிறந்த ஈசாக்கின் வம்சாவளியை சேராத அனைவருவே ……………………………….. என்றே அழைக்கப்பட்டனர்.

 

        ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  உடன்படிக்கை என்றால் என்ன?

 

2.  விருத்தசேதனம் எதற்காக கொடுக்கப்பட்டது?

 

3.  தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை ஆபிரகாமுக்கு எவ்வாறு நிறைவேற்றினார்?


4.  ஆபிரகாமுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள புறஜாதிகள் என்ன செய்யவேண்டும் ?


 கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1. ஆபிரகாமிய உடன்படிக்கையைப் பற்றியும் அதின் மூன்று முக்கிய அம்சங்களைப் பற்றியும் எழுதவும்?

 

ஆரோன் – இஸ்ரவேலின் முதல் பிரதானஆசாரியன் (Aaron - The First High Priest), இடைநிலை வகுப்பு (Intermediate), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 7

                 இடைநிலை வகுப்பு (INTERMEDIATE) 

வயது: 12 - 13 வயது
வகுப்பு: VII & VIII

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 7

ஆரோன் – இஸ்ரவேலின் முதல் பிரதானஆசாரியன்

மோசேயின் மூத்த சகோதரன் தான் ஆரோன். ஆண்டவர் முட்செடியில் மோசேக்கு தரிசனமாகி இஸ்ரவேல் மக்களை விடுவிப்பதற்காக எகிப்து தேசத்திற்கு போகும்படி சொன்னபொழுது மோசே தயங்கினார். அதனால் மோசேயோடுகூட போகும்படியாக தேவன் ஆரோனை அனுப்பினார். அப்பொழுது மோசேக்கு எண்பது வயது, ஆரோனுக்கு எண்பத்து மூன்று வயது. ஆண்டவர் எகிப்திலே பல அற்புதங்களை செய்து தன்னுடைய வல்லமையை பார்வோனுக்கு முன் காட்டிய பின் அவன் இஸ்ரவேல் ஜனங்களை போகவிட்டான். மோசேயுடன் கூட ஆரோனும் இஸ்ரவேல் மக்களை வழிநடத்துவதில் உறுதுணையாக இருந்தார்.

 மோசேக்கு துணைநின்ற ஆரோன்:

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து கானான் நோக்கி பிரயாணம் செய்தபொழுது, அவர்கள் ரெவிதீம் என்கிற இடத்திலே தங்கியிருந்தார்கள். அப்பொழுது பக்கத்தில் இருந்த அமலேக்கியர் என்கிற ஜனங்கள் இஸ்ரவேலரைத் தாக்கினார்கள். அதனால் மோசேயின் உதவியாளராயிருந்த யோசுவா, இஸ்ரவேல் மக்களை அமலேக்கியருக்கு எதிரான ஒரு யுத்தத்தில் தலைமை தாங்கி நடத்தி சென்றார். அப்பொழுது மோசே அருகில் இருந்த ஒரு மலையில் நின்று கொண்டு, தன்னுடைய கோலை கையில் பிடித்துக் கொண்டு, நடந்த யுத்தங்களை கவனித்துக் கொண்டே இருந்தார். மோசே தன்னுடைய கையை உயர்த்தி வைத்திருந்தபொழுது, இஸ்ரவேலர் அமலேக்கியரை வீழ்த்தினார்கள். நேரம் ஆகஆக மோசேக்கு சோர்வு ஏற்பட்டது. அதனால் மோசேயினுடைய சகோதரனான ஆரோனும், இன்னொரு தலைவனான ஊரும் ஒரு கல்லைக் கொண்டுவந்து அதில் மோசேயை உட்கார வைத்து, இருவரும் இரு கரங்களையும் தாங்கிக் கொண்டார்கள். அப்பொழுது இஸ்ரவேலர் அமலேக்கியரை வெற்றிக் கொண்டார்கள்.

 ஆரோன் செய்த பாவம்:

சிறிது நாட்கள் கழித்து, இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணம் செய்து சீனாய் வனாந்திரத்திலே தங்கியிருந்தார்கள். அப்பொழுது பத்து கற்பனைகளை கொடுக்கும்படியாக ஆண்டவர் மோசேயை சீனாய் மலையிலே ஏறி வரும்படியாகக் கூறினார். மோசே சீனாய் மலையில் ஏறி நாற்பது நாட்கள் தங்கியிருந்தார். மோசே சீனாய் மலையின் மேல் ஏறி போன பொழுது, இஸ்ரவேல் மக்களை ஆரோன், ஊர் என்பவர்களின் பொறுப்பிலே விட்டுவிட்டு சென்றிருந்தார். மோசே திரும்பி வருவதற்குள்ளாக இஸ்ரவேல் ஜனங்கள் ஆரோனைப் பார்த்து, எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்த மோசேக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஆகையால் எங்களை வழி நடத்தக்கூடிய தெய்வங்களை எங்களுக்கு உருவாக்கிக்கொடும் என்று கூறினார்கள். ஆகவே ஆரோன் இஸ்ரவேல் மக்களிடம் அவர்களுடைய பொன் காதணிகளை கொண்டுவரும்படி கூறினார். அவர்கள் அதைக் கொண்டு வந்தபொழுது, இஸ்ரவேல் மக்கள் வழிபடுவதற்காக அவர் ஒரு பொன் கன்றுகுட்டியை செய்து கொடுத்தார். மோசே மலையிலிருந்து திரும்பி வந்தபொழுது, அதைப் பார்த்து மிகவும் கோபங்கொண்டார். ஆண்டவரும் இஸ்ரவேல் மக்களை அழிக்க வேண்டும் என்று இருந்தார். மோசே ஆண்டவரிடம் மன்றாடினபடியால் இஸ்ரவேல் மக்கள் தப்புவிக்கப்பட்டார்கள்.

பிரதான ஆசாரியனாக அபிஷேகிக்கப்பட்ட ஆரோன்:

ஆரோன் மிகப்பெரிய ஒரு தவறை செய்திருந்தபொழுதிலும் ஆண்டவர் அவனை மன்னித்து, மோசேயிடம் ஆரோனை பிரதான ஆசாரியனாக அபிஷேகிக்க சொன்னார். இஸ்ரவேலில் அபிஷேகிக்கப்பட்ட முதல் பிரதான ஆசாரியன் ஆரோன். ஆரோனும் அவனுடைய வம்சாவளியில் பிறந்தவர்களும் ஆசாரிய ஊழியத்திற்கென்று தனியே பிரித்தெடுக்கப்பட்டனர். ஆரோன் ஆசாரியனாக அபிஷேகிக்கப்படுவதற்கு முன் இஸ்ரவேலில் ஆசாரியர்கள் என்று யாரும் இல்லை. ஒவ்வொரு குடும்பத்தின் தலைவர்களும் ஆசாரியர்கள் போல செயல்பட்டனர். அவர்கள் பலிபீடத்தைக் கட்டி, பலிகளை செலுத்தி தேவனை தொழுதுகொண்டனர். பிரதான ஆசாரியனாக அபிஷேகிக்கப்பட்ட ஆரோனுக்கு அவன் செய்யவேண்டிய பல பிரதான ஆசாரியனுக்குரிய கடமைகள் இருந்தன.

பிரதான ஆசாரியன் என்பவன் யார்?

பிரதான ஆசாரியன் என்பவன் அவனுடைய மக்களுக்கடுத்த காரியங்களை தேவனிடம் கொண்டுசென்று அதற்கான தீர்வுகளை பெற்றுத் தருபவன். தேவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒரு மத்தியஸ்தன் போல செயல்படுபவன். அவனுடைய முக்கியமான வேலைகளில் ஒன்று மக்களுக்காக பாவநிவிர்த்தி செய்வது. ஒவ்வொரு ஏழாம் மாதத்தின் பத்தாம் நாளும், விசேஷமான பாவ நிவிர்த்தி நாளாக ஆசரிக்கப்பட்டது. அந்த நாளில் மட்டும் பிரதான ஆசாரியன் ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள மகாபரிசுத்த ஸ்தலத்தில் நுழைவதற்கு அனுமதி உண்டு. அங்கு உள்ளே போவதற்கு முன்பாக அவன் ஒரு பலி செலுத்தி, அந்த பலியின் இரத்தத்தை எடுத்துக் கொண்டு போய், அந்த இரத்தத்தை கிருபாசனத்திலே தெளித்து, ஜனங்களுக்காக பாவ நிவிர்த்தி செய்வான். இது அவனுடைய முக்கியமான ஒரு கடமையாகும். பிரதான ஆசாரியனுக்கென்று சிறப்பாக தயாரிக்கப்பட்ட ஒரு அலங்காரமான ஆசாரிய வஸ்திரமும்  இருந்தது. அதை அணிந்து கொண்டு தான் அவன் ஆசாரிய ஊழியத்தை நிறைவேற்ற வேண்டும்.

ஆரோனுடைய மகன்கள் தண்டிக்கப்படுதல்:

ஆண்டவர் மோசேயிடம் சொன்னபடியே, ஆரோனும் அவனுடைய மகன்களும் ஆசாரியர்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அவர்கள் அபிஷேகிக்கப்பட்ட மறுநாளிலே, ஆரோனின் இரண்டு மகன்களாகிய நாதாபும், அபியூவும் அவர்களுடைய தூபகலசத்தை எடுத்துக் கொண்டுவந்து, அதிலே நெருப்பையும், தூபத்தையும் போட்டு, ஆண்டவர் கட்டளையிடாத வேறுவிதமான அந்நிய அக்கினியை தேவ சமூகத்தில் கொண்டுவந்தார்கள். அதனால் ஆண்டவர் அவர்கள் மேல் கோபமடைந்தார். அதனால் அவர்கள் ஆண்டவருடைய பிரசன்னத்திலிருந்து வந்த நெருப்பினால் அழிக்கப்பட்டார்கள்.

ஆரோனுடைய மரணமும், எலெயாசாரின் அபிஷேகமும்:

ஒருவிசை இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் இருக்கும்பொழுது, தங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்று முறுமுறுத்தார்கள். அப்பொழுது ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் பார்த்து, மோசேயின் கோலை எடுத்துக் கொண்டுபோய், இஸ்ரவேல் மக்களையும் வரவழைத்து, அவர்களுக்கு முன் இருந்த கன்மலையைப் பார்த்து பேசும்படியாகக் கூறினார். மோசேயும், ஆரோனும் ஜனங்களைக் கூட்டினார்கள். ஆனால் மோசேயோ இஸ்ரவேல் மக்கள் தன்னை மிகவும் கோபப்படுத்தினபடியால், தன்னுடைய கோலை எடுத்து கன்மலையை அடித்தார். அப்பொழுது கன்மலையிலிருந்து தண்ணீர் புரண்டு வந்தது. ஆனால் ஆண்டவர் மோசேயின் மீதும், ஆரோனின் மீதும் கோபங்கொண்டார். அவர்கள் கன்மலையிடம் பேசாமல், கன்மலையை அடித்து, தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனதினால் அவர்கள் கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பதில்லை என்று கூறினார். யோசுவாவே இஸ்ரவேல் மக்களை கானானுக்குள் நடத்தி செல்வான் என்றும் கூறினார். அதன்படி ஆரோன் ஓர் என்கிற மலையிலே வைத்து தன்னுடைய 123ஆவது வயதில் மரணமடைந்தார். அவருக்குப் பின் அவருடைய மகனான எலெயாசார் பிரதான ஆசாரியனாக அபிஷேகிக்கப்பட்டார்.

 வேத பகுதி: யாத்திராகமம் 4:14, 27-30; 17:8-13; 32 அதிகாரம்; லேவியராகமம் 8 & 9; எண்ணாகமம் 20:8-13, 23-29

மனப்பாட வசனம்: எபிரெயர் 5:1-4

 

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    ஆரோன் இஸ்ரவேல் மக்கள் வழிபடுவதற்காக ஒரு ………………………………. கன்றுகுட்டியை செய்து கொடுத்தார்.

2.        இஸ்ரவேலில் அபிஷேகிக்கப்பட்ட முதல் பிரதான ஆசாரியன் ………………………..

3.        ………………………, ………………………… ஆண்டவர் கட்டளையிடாத அந்நிய அக்கினியை கொண்டுவந்தார்கள்

4.        ஆரோனுக்குப்பின் அவருடைய மகனான …………………………….. பிரதான ஆசாரியனாக அபிஷேகிக்கப்பட்டார்.

 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.    அமலேக்கியரோடு நடந்த யுத்தத்தின் போது ஆரோனும், ஊரும் மோசேக்கு எவ்வாறு உதவி செய்தார்கள்?

 

2.    ஆரோன் ஏன் பொன் கன்றுகுட்டியை செய்தான்  ?

 

3.      ஆண்டவர் ஏன் நாதாபையும், அபியூவையும் தண்டித்தார்?

 

4.      தேவன் ஆரோனை ஏன் கானான் தேசத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை?

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  பிரதான ஆசாரியன் என்பவர் யார்? அவருடைய கடமைகள் என்ன ?

 

பார்வோனின் கனவு (Pharaoh's Dreams), இளநிலை வகுப்பு (Junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 7

  இளநிலை வகுப்பு (JUNIOR) 

பாடம் – 7
பார்வோனின் கனவு

இதற்கு முந்தின பாடத்தில் யாக்கோபு ஆரானிலே தங்கியிருந்ததைப் பற்றியும், தன்னுடைய தகப்பன் வீட்டிற்கு திரும்புவதற்காக புறப்பட்டதையும் பார்த்தோம்.  யாக்கோபுக்கு பன்னிரண்டு மகன்கள் இருந்தார்கள். யாக்கோபுக்கு பதினோறாவது மகனாகப் பிறந்தவன் தான் யோசேப்பு. யோசேப்பினுடைய வாழ்க்கை அவனுடைய சிறு வயதிலிருந்தே சற்று வித்தியாசமானதாகவே இருந்தது. யோசேப்பு இரண்டு கனவுகளைக் கண்டான். அந்தக் கனவில் அவனுடைய சகோதரர்கள் அவனை வணங்குவது போலிருந்தது. அதனால் அவன் சகோதரர்கள் அவன் மேல் பொறாமை கொண்டு அவனை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினார்கள். அதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு கிடைத்தது.

 

ஒருமுறை யோசேப்பின் சகோதரர்கள் ஆடு மேய்ப்பதற்காக தொலைவான ஒரு இடத்திற்கு சென்றிருந்தார்கள். அப்பொழுது யோசேப்பின் தந்தை அவனை அவனுடைய சகோதரர்களிடம் நலம் விசாரித்து வரும்படி அனுப்பினார். அவன் சகோதரர்களோ அவன் தூரத்தில் வரும்பொழுதே அவனைக் கொலை செய்யும்படி திட்டமிட்டார்கள். யோசேப்பின் மூத்த சகோதரனாகிய ரூபன் அவர்களைத் தடுத்தான். அதனால் அவர்கள் அவனைக் கொல்லாமல், எகிப்திற்கு வியாபாரத்திற்காக சென்று கொண்டிருந்த மீதியானிய வியாபாரிகளிடம் அவனை விற்றுப் போட்டார்கள்.

                 மீதியானியர் அவனை எகிப்தை ஆண்டு வந்த பார்வோனுடைய மந்திரிகளில் ஒருவனாகிய போத்திபார் என்பவனிடத்தில் அடிமையாக விற்றார்கள். போத்திபாரின் மனைவி யோசேப்பின் மேல் பொய்யான குற்றம் சாட்டினதினால் அவன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான். ஆனால் சிறைச்சாலையிலும் ஆண்டவர் யோசேப்போடே இருந்தார். சிறைச்சாலையில் பார்வோனுடைய பானபாத்திரக்காரன், சுயம்பாகி ஆகிய இரண்டு ஊழியக்காரர் அடைக்கப்பட்டிருந்தார்கள். “பானபாத்திரக்காரர்” என்றால் ராஜாவுக்கு நல்ல திராட்சரசத்தை அல்லது பழரசங்களை பிழிந்து சிறந்த முறையில் வழங்கும் பொறுப்பை உடையவர்கள். “சுயம்பாகி” என்றால் பார்வோனுக்கு உணவு தயாரித்து வழங்கும் பொறுப்பில் இருப்பவர். மத்திய கிழக்கு நாடுகளில் ரொட்டி அதிகமாக உண்ணப்படுவதால், ஆங்கிலத்தில் “ரொட்டி சுடுபவர் (Baker)” என்றே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

 

ஒரு நாள் இரவு, பார்வோனுடைய பானபாத்திரக்காரனும், சுயம்பாகியும் கனவு கண்டார்கள். அதனால் மிகவும் பயமடைந்தார்கள். யோசேப்பு அவர்களுடைய கனவின் அர்த்தத்தை அவர்களுக்கு சொன்னான். அவன் சொன்னபடியே அவர்களுக்கு பலித்தது. பானபாத்திரக்காரனை பார்வோன் திரும்பவும் அவனுடைய வேலையில் சேர்த்துக் கொண்டார். ஆனால் அவனோ யோசேப்பை பற்றி மறந்து போனான்.

Picture Credit: Roland Unger, Creative Commons License
கிமு 1334 முதல் 1325 வரை எகிப்து தேசத்தை ஆண்ட பார்வோன் ஒருவருடைய இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க முகமூடி  

அதே சமயத்தில் எகிப்தின் ராஜாவான பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான் (பார்வோன் என்பது எகிப்து தேசத்து ராஜாக்களுக்கு கொடுக்கப்படும் பட்டமேயன்றி அது அவர்களுடைய பெயர் அல்ல, இந்திய தேசத்து மன்னர்களை “மகாராஜா” என்று அழைப்பதைப் போன்று). பார்வோனுடைய கனவில் அவன் நைல் நதியின் /ஆற்றின்* (கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் குறிப்பை பார்க்கவும்) கரையில் நின்று கொண்டிருந்தான். அப்பொழுது நதியிலிருந்து ஏழு கொழுத்த பசுக்கள் ஏறி வந்து புல் மேய்ந்தது. அவன் பார்த்து கொண்டிருக்கும்பொழுதே மெலிந்த உருவத்துடன் மிகவும் அலங்கோலமாய் காணப்பட்ட ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து ஏறி வந்து நதி ஓரத்தில் கொழுத்த பசுக்களின் பக்கத்தில் நின்றது. அந்த மெலிந்த பசுக்கள் கொழுத்த பசுக்களை தின்றுபோட்டது, ஆனாலும் அவைகள் முன்போலவே மெலிந்து அவலட்சணமாகக் காணப்பட்டது. இதைப் பார்த்தவுடன் பார்வோன் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டான்.

  

ஆற்றின் கரையில் நாணற்புற்கள் வளர்ந்து காணப்படும், எகிப்து தேசத்தில் ஓடும் நைல் நதியின் தற்போதைய படம்

               பின்னர் மறுபடியும் உறங்க சென்றான். அப்பொழுது இன்னொரு கனவையும் பார்வோன் கண்டான். அதில் நல்ல நிறைந்த தானியங்களுள்ள ஏழு கதிர்கள் ஒரே காம்பிலிருந்து முளைத்தது. பின்பு கீழ்காற்றினால் காய்ந்து சுருங்கிப் போய் பதராயிருந்த ஏழு கதிர்கள் முளைத்தது. காய்ந்த பதர்கள் நல்ல நிறைந்த தானியங்களாயிருந்த கதிர்களை விழுங்கினதாகவும் கண்டான்.

                  மறுநாள் காலமே பார்வோனுடைய மனம் கலங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது அவன் எகிப்திலுள்ள மந்திரவாதிகளையும், ஞானிகளையும் அழைத்து தன்னுடைய கனவைக் கூறி, அதன் விளக்கத்தைக் கேட்டான். ஆனால் அவனுடைய ஞானிகள், மந்திரவாதிகள் யாராலும் அவனுடைய கனவின் அர்த்தத்தை சொல்ல முடியவில்லை. அப்பொழுதுதான், பானபாத்திரக்காரனுக்கு யோசேப்பைப் பற்றிய நினைவு வந்தது. பானபாத்திரக்காரன் பார்வோனிடம் யோசேப்பைப் பற்றி கூறினான். யோசேப்பு பார்வோனுக்கு முன்பாக கொண்டுவரப்பட்டான். பார்வோன் யோசேப்பிடம் கனவுகளின் அர்த்தத்தை வெளிப்படுத்தக் கூடிய திறமை அவனுக்கு இருப்பதால் தன்னுடைய கனவின் அர்த்தத்தை அவன் சொல்ல வேண்டும் என்று கூறினான். ஆனால் யோசேப்போ தான் அல்ல, தேவனே அதன் அர்த்தத்தை சொல்லிக் கொடுப்பவர் என்று கூறினான்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                  பார்வோன் தான் கண்ட கனவை யோசேப்பிடம் கூறினான். யோசேப்பு பார்வோனிடம், அவன் கண்ட இரண்டு கனவுகளின் அர்த்தமும் ஒன்று தான். தேவன் தாம் செய்யப் போகிறதை பார்வோனுக்கு காண்பித்திருப்பதாகவும் கூறினான். பார்வோனுடைய கனவுகளின் அர்த்தம் என்னவென்றால் கொழுத்த ஏழு பசுக்களும், நிறைந்த ஏழு கதிர்களும் ஏழு வளமான வருடங்களாம். அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மிகவும் அதிகமான விளைச்சலைக் கொடுக்கும் செழிப்பான ஏழு வருடங்கள் உண்டாயிருக்கும். மெலிந்த ஏழு பசுக்களும், தீய்ந்த ஏழு கதிர்களும் பஞ்சமுள்ள ஏழு வருடங்களாம். அந்த கொடுமையான பஞ்ச வருடங்களில் எகிப்தில் முந்தின ஏழு வருடங்களில் இருந்த செழிப்பு எல்லாம் மறக்கப்பட்டு போகும் என்று கனவின் அர்த்தத்தை கூறினான். இந்த காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதை வலியுறுத்துவதற்காகவே இரண்டு விதமான கனவுகளில் அது காட்டப்பட்டிருப்பதாகவும் அவன் கூறினான்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                  அதுமட்டுமல்லாமல் பஞ்சத்திலிருந்து எகிப்து தேசத்தை காப்பாற்றும் தீர்வையும் யோசேப்பே சொல்லிக் கொடுத்தான். அதன்படி எகிப்து தேசமெங்கும் தானியங்களை சேர்த்து வைக்கும் தானியக்கிடங்குகளை உண்டாக்கி அதில் செழிப்பான வருடங்களில் விளையும் தானியங்களில் ஐந்தில் ஒரு பங்கை சேமித்து வைக்க வேண்டும் என்று கூறினான். பார்வோனுக்கு இந்த ஆலோசனை மிகவும் நன்றாய் இருந்ததினால் அவன் யோசேப்பை கனப்படுத்தி எகிப்து தேசத்திலே பார்வோனுக்கு அடுத்த இரண்டாவது இடத்தை அவனுக்கு கொடுத்தான். பார்வோன் அவனுடைய பெயரை “சாப்நாத்பன்னேயா” என்று மாற்றி அவனுக்கு அதிகாரமும் கொடுத்தான்.

Sweet Publishing / FreeBibleimages.org.

               யோசேப்பு செழிப்பான வருடங்களில் விளைந்த தானியங்களை பட்டணங்களிலே கட்டி வைத்து, பஞ்ச காலத்திலே எகிப்தியரின் உயிரை காப்பாற்றினான். அதுமட்டுமல்லாமல் யோசேப்பின் சகோதரர்களும் தானியங்களை வாங்குவதற்காக எகிப்து தேசத்திற்கு வந்து, அவன் சிறு வயதில் கண்ட கனவின்படியே அவனை விழுந்து வணங்கினார்கள். இந்த சம்பவத்தின் மூலம் தேவன் நம்முடைய வாழ்க்கையில் வைத்திருக்கும் திட்டங்கள் நிச்சயமானவைகள், அதை எந்த ஒரு நபராலோ, சூழ்நிலைகளாலோ மாற்ற முடியாது என்பதை நாம் அறிகிறோம்.

Sweet Publishing / FreeBibleimages.org.

ஆசிரியர் குறிப்பு:

செப்துவாஜிந்த் (Septuagint) கொய்னே கிரேக்க மொழிபெயர்ப்பில் நைல் நதி என்று குறிப்பிடப்படாவிட்டாலும், எபிரெய பழைய ஏற்பாட்டில் நைல் நதி என்று குறிப்படப்பட்டுள்ளது.


வேத பகுதி: ஆதியாகமம் 40, 41

மனப்பாட வசனம்: யோசேப்பு அவர்களை நோக்கி:……………………… அதை நன்மையாக முடியப்பண்ணினார். (ஆதியாகமம் 50:19,20)

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    ………………………………………. யோசேப்பை பற்றி மறந்து போனான்.

2.    யோசேப்போ தான் அல்ல, ……………………….. கனவின் அர்த்தத்தை சொல்லிக் கொடுப்பவர் என்று கூறினான்.

3.    அலங்கோலமாய் காணப்பட்ட ஏழு பசுக்கள் ……………………….. நதியிலிருந்து ஏறி வந்ததாக பார்வோன் கண்டான்.

4.    பார்வோன் யோசேப்பினுடைய பெயரை “…………………………………” என்று மாற்றினான்.

 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  யோசேப்போடு சிறைசாலையில் அடைக்கப்பட்டிருந்தது யார்?

 

2.  யோசேப்பு பானப்பாத்திரக்காரனின் கனவின் அர்த்தத்தை விளக்கினபின், பானபாத்திரக்காரனுக்கு நடந்தது என்ன?

 

3.  யோசேப்பு ஏன் பார்வோனின் முன் கொண்டு வரப்பட்டான்?

 

4.  பஞ்சத்திலிருந்து எகிப்தை தப்புவிக்க யோசேப்பு கொடுத்த ஆலோசனை என்ன?

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.   பார்வோன் கண்ட கனவுகளையும், அவைகளின் அர்த்தத்தையும் சுருக்கமாக எழுதவும்.

 

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...