Sunday, August 16, 2020

என்னைக் காண்பவரை கண்டேன் (Hagar & Ishmael), இளநிலை வகுப்பு (Junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 5

                                      இளநிலை வகுப்பு (JUNIOR) 

பாடம் – 5
என்னைக் காண்பவரை கண்டேன் 

ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்கு (இவளுடைய பெயர் பின்னர் சாராள் என்று மாற்றப்பட்டது) ஆகார் என்ற பெயருடைய ஒரு அடிமைப்பெண் இருந்தாள். பழங்காலங்களில் தங்களுடைய வீட்டு வேலைகளில் உதவி செய்வதற்காக பணிப்பெண்களாக அடிமைகளை வைத்திருப்பது வழக்கம்.  தேவன் ஆபிராமிடம் அவனுடைய சந்ததி வானத்து நட்சத்திரங்களைப் போல திரளாயிருக்கும் என்று வாக்கு கொடுத்திருந்தார். ஆனால் சாராய்க்கு பிள்ளை இல்லாதிருந்தது. அதனால் அவள் தன்னுடைய அடிமைப் பெண்ணின் மூலமாவது தங்களுக்கு ஒரு சந்ததி கிடைக்க வேண்டும் என்று எண்ணி அதை ஆபிராமிடம் கூறினாள். ஆபிரகாமும் அதை ஏற்றுக் கொண்டார். 

Art by James Tissot

ஆனால் ஆகாருக்கு குழந்தை பிறக்கும் நேரம் வந்த பொழுதோ, அது மிகவும் துயரமான ஒன்றாக இருந்தது. ஆகார் சாராயுடைய அடிமைப் பெண்ணாய் இருந்த பொழுதும் தன்னால் ஆபிரகாமுக்கும், சாராய்க்கும் ஒரு சந்ததி வரப் போகிறது என்கிற காரணத்தினால், அவள் தன் எஜமாட்டியாகிய சாராளை அற்பமாக எண்ணினாள். இதனால் சாராள் ஆகாரை மிகவும் கடினமாக நடத்தத் தொடங்கினாள். ஆகவே ஆகார் தன்னுடைய எஜமாட்டியினுடைய வீட்டைவிட்டு ஓடிப் போனாள். 

பாலைவனத்தில் உள்ள ஒரு நீரூற்றின் படம்

ஆகார் வனாந்திரமான ஒரு இடத்தை வந்தடைந்து தனிமையாய் அலைந்து கொண்டிருந்தாள். ஆகார் தனிமையாய் இருந்தபொழுதிலும் கர்த்தர் அவளை கவனித்துக் கொண்டே இருந்தார். கர்த்தருடைய தூதனானவர் அவளை ஒரு நீர் ஊற்றின் அருகில் கண்டு “ஆகாரே நீ எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார். ஆகார் உண்மையைக் கூறி, தான் தன் எஜமாட்டியாகிய சாராளை விட்டு ஓடிப் போவதாகக் கூறினாள். 

அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் ஆகாரிடம், சாராளிடத்திற்கே திரும்பப் போய் அவளுக்கு கீழ்ப்படிந்து அடங்கி இருக்கும்படியாகக் கூறினார். அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு “இஸ்மவேல்” என்று பெயர் வைக்கும்படியாகக் கூறினார். இஸ்மவேலுக்கும் அவனைச் சுற்றி இருக்கிற ஜனங்களுக்கும் எப்பொழுது பிரச்சனைகள் எழுந்து கொண்டே இருக்கும் என்றும் கூறினார். ஆகார் கர்த்தருடைய தூதன் சொன்னதை ஏற்றுக்கொண்டு சாராளிடம் திரும்பிப் போனாள். 

யாரும் தன்னைக் காணாத இடத்திலும் தன்னைக் கண்டு தேடி வந்த தேவனுக்கு ஆகார் “நீர் என்னைக் காண்கிற தேவன்” (எபிரெய பாஷையிலே “எல் ரோயி”) என்று பெயரிட்டாள். எனவே தேவனுடைய தூதன் அவளைக் கண்டு சந்தித்த நீர் ஊற்று “லகாய்ரோயீ” என்று அழைக்கப்படுகின்றது. பின்னர் ஆகாருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஆகார் “இஸ்மவேல்” என்று பெயரிட்டாள். ஆபிரகாமுக்கு அப்பொழுது வயது எண்பத்தாறு. 

ஆபிரகாம் இஸ்மவேல் மூலமாக தனக்கு ஒரு சந்ததி கிடைத்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, தேவன் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி சாராள் மூலமாக ஆபிரகாமுக்கு ஒரு வாக்குத்தத்ததின் மகன் நிச்சயமாகப் பிறப்பான் என்றும் அவனுக்கு “ஈசாக்கு” என்று பெயர் வைக்கும்படிக்கும் கூறினார். தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் ஈசாக்கு நிறைவேற்றவேண்டிய பங்கு இருந்தது. ஈசாக்கின் வம்சாவளியில் தான் இயேசுகிறிஸ்து மேசியாவாக உலகத்திற்கு வெளிப்பட்டார்.

Art by Grant Romney Clawson

ஆபிரகாம் இஸ்மவேலுக்காகவும் தேவனிடம் வேண்டிக்கொண்டார். தேவன் ஆபிரகாமுடைய வேண்டுதலை ஏற்றுக் கொண்டு இஸ்மவேல் ஒரு பெரிய ஜாதியாகப் பெருகுவான் அவனிடமிருந்து பன்னிரண்டு பிரபுக்கள் தோன்றுவார்கள் என்று வாக்குக் கொடுத்தார். 

ஆபிரகாம் நூறு வயதாயிருக்கும்பொழுது, தேவனுடைய வாக்குத்தத்ததின்படி சாராள் மூலமாக அவனுக்கு ஈசாக்கு என்னும் மகன் பிறந்தான். அதன் பிறகு ஒரு நாள் இஸ்மவேல் ஈசாக்கை கேலி செய்வதை சாராள் பார்த்து ஆகாரையம் அவளுடைய மகனாகிய இஸ்மவேலையும் தன்னைவிட்டு வெளியேற்ற தீர்மானித்தாள். 

அதை ஆபிரகாமுக்கு அவள் சொன்னபொழுது அவனுக்கு மிகவும் துக்கமாயிருந்தது. ஆனால் சாராள் சொன்னபடி செய்யும்படியாக தேவன் ஆபிரகாமிடம் கூறினார். அதனால் ஆபிரகாம் ஆகாருக்கு அப்பத்தையும், ஒரு தோல் துருத்தியிலே தண்ணீரையும் கொடுத்து, அவளை தன்னைவிட்டு அனுப்பி விட்டான். 

ஆகாரும் இஸ்மவேலும் பெயர்செபா என்ற இடத்திலுள்ள வனாந்திரத்திலே அலைந்து கொண்டிருந்தார்கள். அவளிடத்திலிருந்த தண்ணீர் தீர்ந்து போனது. அப்பொழுது ஆகார் தன்னுடைய மகனாகிய இஸ்மவேல் தாகத்தினால் சாகிறதை தான் பார்க்கபோவதில்லை என்று கூறி அவனை ஒரு செடியின் கீழே வைத்து விட்டு, சற்று தூரம் தள்ளிப் போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். தாகத்தினால் அவர்கள் அழுகிற சத்தத்தை தேவன் கேட்டார். 


அப்பொழுது ஆகார் வானத்திலிருந்து பேசுகிற ஓர் தேவ தூதனுடைய சத்தத்தைக் கேட்டாள். தேவதூதன் அவளைப் பார்த்து இஸ்மவேல் சாவதில்லை என்றும், அவன் வளர்ந்து ஒரு பெரிய ஜாதியாகப் பெருகுவான் என்றும் கூறினார். தேவன் ஆகாருடைய கண்களைத் திறந்தார். அப்பொழுது அவள் அங்கே இருந்த ஒரு நீர் ஊற்றைக் கண்டாள். அவள் அதிலிருந்து தண்ணீர் எடுத்து இஸ்மவேலுக்குக் கொடுத்தாள். இவ்வாறு ஆகாரையும் இஸ்மவேலையும் தேவன் உயிரோடே காப்பாற்றினார். பின்னர் இஸ்மவேல் வளர்ந்து வில்வித்தையிலே வல்லவனாயிருந்தான். அவர்கள் பாரான் என்கிற வனாந்திரத்திலே தங்கியிருந்தார்கள். இஸ்மவேலுடைய வம்சாவளியில் ஆண்டவருடைய வாக்குத்தத்ததின்படியே பன்னிரண்டு பிரபுக்கள் தோன்றினார்கள்.

வேத பகுதி: ஆதியாகமம் 16, 21

மனப்பாட வசனம்: ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். (1 பேதுரு 5:6,7) 

  

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    ஆகார் ………………………………. ஒரு இடத்தை வந்தடைந்து தனிமையாய் அலைந்து கொண்டிருந்தாள்.

2.    இஸ்மவேலிடமிருந்து ………………………….. பிரபுக்கள் தோன்றுவார்கள் என்று ஆண்டவர் வாக்குக் கொடுத்தார்.

3.    ஆபிரகாம் …………………………, ஒரு தோல் துருத்தியிலே ………………………. கொடுத்து, ஆகாரை அனுப்பி விட்டான்.

4.    இஸ்மவேல் வளர்ந்து ………………………………… வல்லவனாயிருந்தான். 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  ஆகார் தன் எஜமாட்டியினுடைய வீட்டை விட்டு ஏன் ஓடிப்போனாள்?

 

2.  ஆகார் நீர் ஊற்றிற்கு “லகாய் ரோயீ” என்று பெயரிட காரணம் என்ன?

 

3.  ஆண்டவர் இஸ்மவேலுக்காக ஆபிரகாம் செய்த விண்ணப்பத்தைக் கேட்டு என்ன வாக்கு கொடுத்தார்?

 

4.  சாராள் ஏன் ஆகாரையும், இஸ்மவேலையும் வெளியேற்றத் தீர்மானித்தாள்? 

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1. ஆபிரகாம் ஆகாரை அனுப்பின பின்பு ஆகார் எங்கு சென்றாள்? அதன்பின்பு என்ன நடந்தது?

 

தேவனுக்குப் பயந்த மருத்துவச்சிகள் (Shiphrah & Puah), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 5

                       மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

பாடம் – 5

தேவனுக்குப் பயந்த மருத்துவச்சிகள்

                       எகிப்தில் அடிமையாய் விற்கப்பட்ட யோசேப்பு தேசத்தின் இரண்டாவது முக்கியமான நபராக மாறினதை முந்தின பாடத்தில் பார்த்தோம். பின்னர் எகிப்திற்கு தானியம் வாங்க வந்த யோசேப்பின் சகோதரர்களுக்கு, யோசேப்பு எகிப்தில் இரண்டாவது இடத்தில் இருப்பது தெரிய வந்தது. யோசேப்பு தன் சகோதரர்களை மன்னித்து அவர்களை ஏற்றுக்கொண்டான். பின்னர் அவனுடைய குடும்பத்தினர் எகிப்தில் குடியேறினார்கள். ஏறக்குறைய எழுபது பேராய் எகிப்திற்கு போன இஸ்ரவேலர் நானூறு ஆண்டுகளில் சுமார் இருபது லட்சமாய் மாறினார்கள்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                       யோசேப்பின் நாட்களில் எகிப்தில் அரசாட்சி செய்த பார்வோன் இறந்து போனார். அதன் பின்னர் எகிப்தில் பார்வோனாய் வந்தவர்களுக்கு யோசேப்பு எகிப்திற்கு செய்த நன்மைகளைப் பற்றி தெரியவில்லை. பார்வோனுக்கு இஸ்ரவேல் ஜனங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது பயத்தைக் கொடுத்தது. ஒருவேளை ஏதாவது யுத்தம் வந்தால் அவர்கள் தங்கள் பகைவரோடு சேர்ந்து தங்களை எதிர்த்து விடுவார்கள் என்று அவன் நினைத்தான். ஆகையால் இஸ்ரவேல் ஜனங்களை ஒடுக்க நினைத்தான்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                       இஸ்ரவேல் ஜனங்களை அடிமைகளாக்கி, பார்வோனுக்காக பிக்தோம், ராமசேஸ் என்னும் இரண்டு பண்டக சாலை பட்டணங்களை கட்ட வைத்தார்கள். அவர்களுக்கு மிகவும் கடினமான வேலைகளைக் கொடுத்து அவர்களை ஒடுக்கினார்கள். அவர்கள் மேல் வைக்கப்பட்ட ஆளோட்டிகள் அவர்களை அடித்து துன்புறுத்தினார்கள். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களை எவ்வளவாய் ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பெருகினார்கள்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                    அதனால் பார்வோன் மிகவும் எரிச்சலடைந்து, இஸ்ரவேல் ஜனங்களை ஒழிக்க இன்னொரு திட்டம் தீட்டினான். பழைய நாட்களில் குழந்தை பிறக்கும் பொழுது, பெண்களுக்கு உதவி செய்வதற்கு மருத்துவச்சிகள் இருப்பார்கள். அப்படி இஸ்ரவேல் பெண்களுக்கு உதவி செய்யும்படி சிப்பிராள், பூவாள் என்கிற இரண்டு எபிரெய மருத்துவச்சிகள் (இஸ்ரவேல் ஜனங்களை எபிரெயர் என்றும் அழைப்பார்கள்) இருந்தார்கள். பார்வோன் அவர்களை அழைத்து இஸ்ரவேல் பெண்களுக்கு குழந்தை பிறக்கும்பொழுது, அது ஆண்பிள்ளையாக இருந்தால் அதை நைல் நதியில் (ஆற்றில்) போட்டுவிடும்படியாக கூறினான்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                  ஆனால் மருத்துவச்சிகளோ தேவனுக்கு பயந்தபடியால் அவர்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றினார்கள். பார்வோன் அவர்களை அழைத்து அவர்கள் ஏன் ஆண்பிள்ளைகளை நைல் நதியில் போடவில்லை என்று கேட்டான். அப்பொழுது மருத்துவச்சிகள், “எபிரெய பெண்கள் எகிப்தின் பெண்களைப் போல அல்ல, அவர்கள் பலம் மிகுந்தவர்கள். அதனால் மருத்துவச்சிகள் அவர்களிடம் போவதற்கு முன்பதாகவே குழந்தை பெற்று விடுகிறார்கள்” என்று கூறினார்கள். 

Sweet Publishing / FreeBibleimages.org.

                 பார்வோன் அதை நம்பினபடியால் அவர்கள் உயிர் பிழைத்தார்கள். மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்தபடியால் தேவன் அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்தார்.

வேத பகுதி: யாத்திராகமம் 1: 15-21

மனப்பாட வசனம்: மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; ………………………………… கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். (மீகா 6:8)

                     பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில் 

1.    யோசேப்பின் குடும்பத்தினர் எந்த தேசத்தில் குடியேறினார்கள்?   ………………………………………

2.    இஸ்ரவேலர் கட்டின எகிப்தின் பண்டக சாலைப் பட்டணங்களின் பெயர் என்ன?  .…………………………….

3.    எபிரெய மருத்துவச்சிகளின் பெயர் என்ன?

………………………………….

4.    பார்வோன் யாரை நைல் நதியில் போடும்படியாகக் கூறினான்? ………………………………

5.    பார்வோன் மருத்துவச்சிகள் கூறினதை நம்பினானா?

…………………………………

சரியா தவறா

1. புதிய பார்வோனுக்கு யோசேப்பு எகிப்திற்கு 

     செய்தவைகளைப் பற்றி தெரியவில்லை ( சரி / தவறு)

2. ஆளோட்டிகள் இஸ்ரவேலரை அன்போடு நடத்தினார்கள்.

     ( சரி / தவறு)

3.    பார்வோன் இஸ்ரவேலரை பெருக அனுமதித்தான்.

(சரி / தவறு)

4.    மருத்துவச்சிகள் தேவனுக்கு பயப்படவில்லை (சரி / தவறு)

5.    தேவன் மருத்துவச்சிகளையும், குடும்பத்தையும் ஆசீர்வதித்தார் (சரி / தவறு)

 

சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசா (Esau Sells His Birthright), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 5

                           ஆரம்பநிலை வகுப்பு(PRIMARY )

வயது: 6 - 7 வயது 
வகுப்பு: I & II 
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 5

சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசா

                   ஏசா, யாக்கோபு ஆகிய இருவரும் சகோதரர்கள். அவர்கள் ஈசாக்குக்கும், ரெபெக்காளுக்கும் பிறந்த இரட்டைப் பிள்ளைகள். அவர்கள் வளர்ந்தபொழுது ஏசா வனவிலங்குகளை வேட்டையாடுவதில் திறமைசாலியாய் இருந்தான். அவன் வனத்திற்கு சென்று விலங்குகளை வேட்டையாடுவதில் தன்னுடைய நேரத்தை செலவழித்தான். யாக்கோபோ தன்னுடைய கூடாரத்தில் தங்கி, அங்குள்ள வேலைகளை கவனிப்பதையே விரும்பினான். (பழைய காலங்களில் மக்கள் வசிப்பதற்கு கூடாரங்களையே பயன்படுத்தினர்). 

Sweet Publishing / FreeBibleimages.org.

                ஒரு நாள் யாக்கோபு சிவப்பான பயற்றங் கூழ் சமைத்து கொண்டிருந்தான். அப்பொழுது ஏசா வனத்திலிருந்து கூடாரத்திற்கு திரும்பிவந்தான். ஏசா மிகவும் களைத்துப் போய் பசியோடே வந்திருந்தான். அவனுக்கு வனத்தில் வேட்டையாட எந்த ஒரு மிருகமும் கிடைக்கவில்லை. வனத்தில் மிருகங்களை வேட்டையாடி உணவு சமைப்பது அவ்வளவு எளிதானதல்ல. ஏசா கூடாரத்திற்கு வந்தவுடன் தன்னுடைய தம்பியாகிய யாக்கோபு சிவப்பான கூழ் சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவனிடத்தில் தனக்கு சாப்பிடுவதற்கு கொஞ்சம் கூழ் கொடுக்கும்படியாக கூறினான். ஆனால் யாக்கோபோ அவ்வளவு எளிதாக தன்னுடைய உணவை பகிர்ந்து கொடுப்பதற்கு ஆயத்தமாயில்லை.

Sweet Publishing / FreeBibleimages.org.

                    யாக்கோபு ஏசாவிடம் சிவந்த கூழிற்கு பதிலாக அவனுடைய சேஷ்ட புத்திரபாகத்தை விற்கும்படியாக கூறினான். சேஷ்ட புத்திரபாகம் என்றால் ஒரு குடும்பத்தில் முதல் பிறந்த மகனிற்கு அவனுடைய தகப்பனுடைய செல்வங்களில் எல்லாம் இரட்டிப்பான பங்கு கிடைக்கும். அதன் பெயர் தான் சேஷ்ட புத்திரபாகம். ஏசா சற்றும் யோசிக்காமல் தன்னுடைய சேஷ்ட புத்திரபாகத்தை யாக்கோபுக்கு விற்றுப் போட்டான். யாக்கோபு அதை வாங்கிக் கொண்டு  ஏசாவிற்கு அப்பத்தையுய்ம், பயற்றங்கூழையும் கொடுத்தான். ஏசா அப்பத்தையும், பயற்றங்கூழையும் சாப்பிட்டுவிட்டு தன்னுடைய சேஷ்ட புத்திரபாகத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் போய்விட்டான்.

Sweet Publishing / FreeBibleimages.org. 

                   சிறிது காலத்திற்கு பின் தன்னுடைய செல்வங்களை எல்லாம் யாக்கோபிற்கு கொடுக்க வேண்டிய நேரம் வந்தபொழுதுதான் அவனுக்கு தான் செய்த தவறு நினைவிற்கு வந்தது. அதன் பின் அவன் தன் சேஷ்ட புத்திரபாகத்தை திரும்ப பெறுவதற்கு கடினமாக முற்சித்தும், அவனால் அதை திரும்ப பெற முடியவில்லை. நாமும் இதைப் போல நம்முடைய ஆசீர்வாதங்களை அலட்சியப்படுத்தி விடக்கூடாது.

Sweet Publishing / FreeBibleimages.org. 

வேத பகுதி: ஆதியாகமம் 25: 24 – 34

மனப்பாட வசனம்: உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். (நீதிமொழிகள் 3:6) 

 

பாடப் பயிற்சிகள் 

கேள்வி பதில்:

1.    ஈசாக்கு, ரெபெக்காளுடைய இரட்டைப் பிள்ளைகளுடைய பெயர் என்ன? ……………………………… 

2.    யார் வனவிலங்குகளை வேட்டையாடுவதில் திறமைசாலியாய் இருந்தான்?................................................. 

3.    யாக்கோபு என்ன சமைத்துக் கொண்டிருந்தான்?

………………………………………. 

4.    யாக்கோபு ஏசாவிடம் தனக்கு எதை விற்கும்படியாகக் கூறினான்? ……………………………………….. 

5.    யாக்கோபு ஏசாவிற்கு சாப்பிடுவதற்கு எதைக் கொடுத்தான்? ………………………………………… 

காலியான இடத்தை நிரப்பவும்:

1.    ஏசா, யாக்கோபினுடைய தகப்பனாரின் பெயர் ………………………… 

2.    ………………………… தன்னுடைய கூடாரத்தில் தங்கியிருப்பதை விரும்பினான். 

3.    ………………………… மிகவும் களைத்துப் போய் பசியோடே வந்திருந்தான். 

4.    யாக்கோபு ……………………….. கூழ் சமைத்து கொண்டிருந்தான். 

5.    ஏசா தன்னுடைய ……………………………….. பாகத்தை யாக்கோபுக்கு விற்றுப் போட்டான்.


யாக்கோபின் கனவு (Jacob's Dream), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 5

KINDER (பாலர் வகுப்பு) 

வயது – 4 & 5     

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை. 
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.   

பாடம் – 5

யாக்கோபின் கனவு

 ஒருமுறை யாக்கோபு தன் வீட்டை விட்டு ஆரான் என்கிற ஊருக்கு நீண்ட பிரயாணம் செய்யவேண்டியிருந்தது. அந்த காலத்தில் இப்பொழுது நமக்கு இருப்பதைப்போல ரயில் வண்டி, பஸ், கார் போன்ற வாகனங்கள் இல்லை. எவ்வளவு தூரமாயிருந்தாலும் நடந்தோ அல்லது குதிரை, கழுதை போன்ற மிருகங்களின்மீது அமர்ந்தோ தான் பயணம் செய்ய வேண்டும்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                 யாக்கோபு ஆரானுக்கு நடந்தே செல்ல வேண்டியிருந்தது. அவனுடன் வேறு யாரும் இல்லை. தனியே போய்க் கொண்டிருந்தான். இரவு வேளை வந்தது. அவன் மிகவும் களைத்துப் போய் உறங்க சென்றான். அங்கே அவனுக்கு வசதியாக உறங்குவதற்கு தலையணையோ, படுக்கையோ இல்லை. அதனால் அவன் ஒரு கல்லை எடுத்து தன் தலையின் கீழ் வைத்து உறங்கினான். அவன் உறங்கிக் கொண்டிருக்கும்பொழுது ஒரு கனவு கண்டான்.

Sweet Publishing / FreeBibleimages.org.

அந்தக் கனவில் ஒரு ஏணியைப் பார்த்தான். அந்த ஏணியின் நுனி வானத்தை எட்டினது. அந்த ஏணியில் அநேக தேவதூதர்களைப் பார்த்தான். அதில் சில தேவதூதர்கள் வானத்திற்கு நேராக மேலே ஏறிக் கொண்டிருந்தார்கள். சில தேவதூதர்கள் பூமியை நோக்கி கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள். அது எத்தனை அற்புதமான காட்சியாய் இருந்திருக்கும்!

Sweet Publishing / FreeBibleimages.org.

அதுமாத்திரமல்ல, இவை எல்லாவற்றிற்கும் மேலாகக் கர்த்தர் நின்று யாக்கோபுக்கு தைரியமூட்டும் வார்த்தைகளைக் கூறினார். யாக்கோபு போகிற இடத்திலெல்லாம் தான் அவனைப் பாதுகாத்து, அவனுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து, அவனை பத்திரமாக அவனுடைய தகப்பனுடைய வீட்டிற்கு மறுபடியும் அழைத்து வருவதாகவும் வாக்கு கொடுத்தார். யாக்கோபிற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

Sweet Publishing / FreeBibleimages.org.

யாக்கோபு ஆரானுக்கு பத்திரமாய் போய் சேர்ந்து, அங்கே பல வருடங்கள் தங்கினான். கர்த்தர் யாக்கோபுக்கு கொடுத்த வாக்கின்படியே அவனுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்து ஆசீர்வதித்தார். அதுமட்டுமல்லாமல், மறுபடியும் அவனுடைய தகப்பன் வீட்டிற்கு திரும்பி வருவதற்கு ஆண்டவர் உதவி செய்தார்.

Sweet Publishing / FreeBibleimages.org.

வேத பகுதி: ஆதியாகமம் 28: 11 - 22

மனப்பாட வசனம்: வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும் (சங்கீதம் 121:2)       

        

Saturday, August 15, 2020

தேவனுடைய நாமங்கள் (The Names of God ), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 4

மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது

வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

                                              பாடம்- 4

தேவனுடைய நாமங்கள்

“நாமம்” என்றால் பெயர் என்று அர்த்தம். பழைய ஏற்பாட்டு காலத்தில் பெயர் என்பது ஒரு மனிதனுடைய அடையாளமாக மாத்திரமல்ல, அது அந்த மனிதனுடைய தனித்துவத்தை விளக்கும் ஒன்றாகவே பார்க்கப்பட்டது. பல வேளைகளில், அந்த மனிதனுடைய பண்புகளை விளக்கும் வார்த்தைகள் அந்த பெயரோடு இணைக்கப்பட்டன. பரிசுத்த வேதாகமம் முழுவதும் தேவன் தம்மை பல்வேறு நாமங்களின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார். தேவன் தம்மை மோசேக்கு எரிகிற முட்செடியில் வெளிப்படுத்தின பொழுது “இருக்கிறவராக இருக்கிறேன்” என்கிற நாமத்தின் மூலமாக வெளிப்பட்டார் (யாத்திராகமம் 3;13,14). பின்பு தேவன், எகிப்தில் வாதைகளை அனுப்புவதற்கு முன் யேகோவா என்கிற நாமத்தில் தம்மை வெளிப்படுத்தினார். அப்பொழுது மோசேயிடம் தாம் அந்த நாமத்தில் இன்னும் அவர்களுக்கு வெளிப்படவில்லை என்று கூறினார் (யாத்திராகமம் 6:2). தேவனுடைய நாமங்கள் அவருடைய தன்மைகளையும், குணாதிசயங்களையும் வெளிப்படுத்துகிறது. தேவனுடைய நாமம் பரிசுத்தமானது. ஆகவே அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். 

எலோஹீம் (Elohim):

“எலோஹீம்” என்கிற நாமம் தான் பரிசுத்த வேதாகமத்தில் முதன்முதலாக தேவனைக் குறிப்பதற்காக ஆதியாகமம் 1:1ல் பயன்படுத்தப்பட்ட நாமமாகும். எபிரெய வேதாகமத்தில் “ஆதியிலே எலோஹீம் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்” என்றே கொடுக்கப்பட்டிருக்கிறது. எலோஹீம் (Elohim) என்பது எலோஹே (Elohay) என்கிற வார்த்தையின் பன்மை (Plural) வார்த்தையாகும். திரியேக தேவனுடைய தன்மையை விளக்குவதற்காகவே இந்த நாமம் பயன்படுத்தப் பட்டிருப்பதை நாம் அறிந்து கொள்ளமுடியும். இந்த நாமம் பழைய ஏற்பாட்டில் 2300 முறை கொடுக்கப்பட்டிருக்கிறது. எலோஹீம் என்கிற நாமம் எபிரெய மொழியில் “பலம்”, “வல்லமை” ஆகிய அர்த்தங்களுடைய வேர்சொற்களிலிருந்து உருவானதாகும். பரிசுத்த வேதாகமம் முழுவதும் இது வேறுபல தேவனுடைய தன்மைகளை குறிக்கும் வார்த்தைகளோடு இணைத்து பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

எலோஹே மௌசி (Elohay Mauzi) – என்னுடைய அரணாகிய தேவன் (சங்கீதம் 43:2)

எலோஹே தெஹிலாட்டி (Elohay Tehilati) – நான் துதிக்கும் தேவன் (சங்கீதம் 109:1)

எலோஹே ஈஷீ (Elohay Yishi) – என் இரட்சிப்பின் தேவன் (சங்கீதம் 18:46)

எலோஹீம் கேதோஷீம் (Elohim Kedoshim) – பரிசுத்தமான தேவன் (லேவியராகமம் 19:2)

எலோஹீம் சாயீம் (Elohim Chaiyim) – ஜீவனுள்ள தேவன் (எரேமியா 10:10) (1)

ஏல் (EL):

“ஏல் (EL)” என்பதும் தேவனைக் குறிப்பதற்கு பரிசுத்த வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற நாமம். இது எலோஹீம் என்கிற வார்த்தையின் வேர்சொல் ஆகும். இது பழைய ஏற்பாட்டில் சுமார் 200 முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவும் தேவனுடைய தன்மைகளை விளக்கும் வேறு பல வார்த்தைகளோடு இணைத்து பல இடங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஏல் எலியோன் (El Elyon) – உன்னதமான தேவன் (ஆதியாகமம் 14:18)

ஏல் ஓலாம் (El Olam) – சதாகாலமுமுள்ள தேவன் (ஆதியாகமம் 21:33)

ஏல் ஏகாத் (El Echad) – ஒரே தேவன் (மல்கியா 2:10)

இம்மானு வேல் (Immanu El) – தேவன் நம்மோடு (ஏசாயா 7:14) (1) 

ஏலாஹ் (ELAH)

ஏலாஹ் (ELAH)” என்பதும் தேவனைக் குறிப்பதற்கு பயன்படுத்தப் பட்டிருக்கும் இன்னொரு நாமமாகும். இது பழைய ஏற்பாட்டில் சுமார் 70 முறை உபயோகிக்கப்பட்டிருக்கிறது. (1)

ஏலாஹ் எருசலேம் (Elah Yerush'lem) – எருசலேமின் தேவன் (எஸ்றா 7:19)

ஏலாஹ் இஸ்ரவேல் (Elah Yisrael) – இஸ்ரவேலின் தேவன் (எஸ்றா 5:1)

ஏலாஹ் ஷ்’மாயா வ்’ஆரா (Elah Sh'maya V'Arah) – பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும்

                                                                                                தேவனாயிருக்கிறவர் (எஸ்றா 5:11) 

கர்த்தர் (YHVH):

தமிழில் “கர்த்தர்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற வார்த்தை ஆங்கிலத்தில் “LORD” என்று முகப்பெழுத்தில் (Capital Letters) கொடுக்கப்பட்டிருக்கும். இந்த நாமம் எபிரெய மொழியில் ஒரு வித்தியாசமான வடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. “யோத் (Yod), ஹேய் (Hey), வாவ் (Vav) மற்றும் ஹேய் (Hey) என்கிற நான்கு வார்த்தைகள் உள்ளடக்குகிற நாமம் தான் தமிழில் கர்த்தர் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதைத் தான் சுருக்கமாக ஆங்கிலத்தில் சுருக்கமாக “YHVH” என்று குறிப்பிடுவார்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வார்த்தைகளின் முதல் எழுத்துகளை இணைத்தே இந்த வார்த்தை உருவாக்கப்பட்டது. ஆகவே இந்த நாமத்தை “நான்கு எழுத்துக்கள்” என்று அர்த்தங்கொள்ளும் “Tetragrammaton” என்றே அழைக்கிறார்கள். (2) யூத பாரம்பரியத்தின்படி இந்த நாமம் மனிதர்களால் உச்சரிக்கக்கூடாத ஒரு நாமமாகவே கருதப்பட்டது. “YHVH” என்ற நாமத்தை பிரதான ஆசாரியன் மாத்திரமே, வருடத்திற்கு ஒருமுறை பாவநிவிர்த்தி செய்யும் நாளின்போது, பலியிடப்பட்ட ஆட்டின் இரத்தத்தோடு மகா பரிசுத்த ஸ்தலத்தில் நுழையும்பொழுது மாத்திரமே இந்த நாமத்தை உச்சரிப்பான். (4)

இன்று பலரும் “YHVH” என்கிற நாமத்தை “யேகோவா (Jehovah) அல்லது யாவே (Yahweh) என்று அழைத்தாலும், அதன் சரியான உச்சரிப்பு யாருக்கும் தெரியாது என்பதே யாவரும் அறிந்திருக்க வேண்டிய உண்மையாகும். எபிரெய மொழியில் உயிர்எழுத்துக்களை (vowel markers) வார்த்தைகளோடு குறிப்பதில்லை அதுமட்டுமல்லாமல் யூதர்கள் இரண்டாம் தேவாலயம் இடிக்கப்பட்டபின் கிபி 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டிற்குபின் இந்த நாமத்தை உச்சரிப்பதற்கு பயந்து, இந்த நாமத்தை உச்சரிப்பதை நிறுத்தினதினிமித்தமாக அதின் சரியான உச்சரிப்பை யாரும் அறிய முடியாமற்போனது. 

யூதர்கள் வேதத்தில் இந்த நாமம் வரும் பொழுதெல்லாம் ஒன்றில் அமைதியாக இருப்பார்கள் அல்லது அதற்கு பதிலாக “அதோனாய்” என்று வாசிப்பார்கள். (3) “YHVH” என்கிற தேவனுடைய நாமத்தை உச்சரிப்பதற்கு வசதியாக வேதபண்டிதர்கள் “அதொனாய் (Adonai)” என்கிற தேவனுடைய நாமத்தில் உள்ள உயிரெழுத்துக்களை “YHVH” என்கிற நான்கு எழுத்துக்களின் நடுவே புகுத்தி “யேகோவா (Jehovah) அல்லது யாவே (Yahweh) என்கிற நாமத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது கிபி 5 முதல் கிபி 15ஆம் நூற்றாண்டுக்கு உட்பட்ட இடைகாலத்தில் (Medieval Period) உருவாக்கப்பட்ட ஒன்றாகும். 

தேவன் மனித புத்திக்கும், மொழிகளின் வருணனைக்கும் அப்பாற்பட்டவர், அவருடைய எல்லாத் தன்மைகளையும் மனிதர்களாகிய நம்மால் புரிந்து கொள்ளமுடியாது என்று உணர்த்துவதற்காகவே இந்த நாமம் இவ்வாறு கொடுக்கப்பட்டிருப்பதாக வேதபண்டிதர்கள் கருதுகின்றனர்.

யேகோவா யீரேகர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் (ஆதியாகமம் 22:14)

யேகோவா ரஃபா – பரிகாரியாகிய (சுகமாக்குகிற) கர்த்தர் (யாத்திராகமம் 15:26)

யேகோவா நிசிகர்த்தர் நாங்கள் உயர்த்துகிற கொடி (யாத்திராகமம் 17:15)

யேகோவா மக்காதேஷ் – பரிசுத்தமாக்குகிற கர்த்தர் (லேவியராகமம் 20:8)

யேகோவா ஷாலோம்கர்த்தர் எங்கள் சமாதானம் (நியாயாதிபதிகள் 6:24)

யேகோவா சித்கேனு – எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் (எரேமியா 33:16)

யேகோவா ரோஹிகர்த்தர் எங்கள் மேய்ப்பர் (சங்கீதம் 23:1)

யேகோவா ஷம்மா – கூடவே இருக்கிற கர்த்தர் (எசேக்கியேல் 48:35) (1)

அதொனாய் (Adonai):

எபிரெய மொழியில் “அதொனாய்” என்று அழைக்கப்படும் தேவனுடைய நாமத்தை ஆங்கில வேதாகமத்தில் “Lord” என்று தாழ்வெழுத்துக்களில் (Small Letters / Lower Case Letters) கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் இது “ஆண்டவர்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தேவனை மட்டும் அல்லாமல் ராஜாக்களையும், பிரபுக்களையும் குறிப்பதற்காகவும் சில வேளைகளில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. (2)

அதொன் (Adon) – (யோசுவா 3:11)

அதொனாய் (Adonai) – (ஏசாயா 6:1)

அதொனாய் ஹா’அதொனிம் (Adonai Ha’adonim) – (சங்கீதம் 136:3)

அதொன் அதொனாய் செவாவோட் (Adon Adonai Tseva’ot) – (ஏசாயா 1:24)

கர்த்தருடைய நாமம் பரிசுத்தமானது. ஆகவே அதை வீணாக பயன்படுத்தக்கூடாது. 

ஆதார நூற்களின் பட்டியல்:

1.      Names of God (Retrieved 13th August 2020 from https://www.allaboutgod.com/names-of-god.htm)

2.     Vine, W. E., Unger, M. F., White, W., & Vine, W. E. (1985). Vine's complete expository dictionary of Old and New Testament words. Nashville: Nelson.

3.     Orr, James, M.A., D.D. General Editor. "Entry for 'ADONAI'”. "International Standard Bible Encyclopedia". 1915. 

4.     Day of Atonement (Retrieved 13th August 2020 from https://www.biblegateway.com/resources/encyclopedia-of-the-bible/Day-Atonement)

(மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதார நூற்களிலிருந்து இந்த புஸ்தகத்தை ஆக்கியோர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது)

மனப்பாட வசனம்: (சங்கீதம் 113:1-3)

 

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    ……………………………. என்றால் “உன்னதமான தேவன்” என்று அர்த்தம்.

2.    ……………………………. என்பதற்கு “தேவன் நம்மோடு” என்று அர்த்தம்.

3.    “நான்கு வார்த்தைகள்” உள்ளடக்குகிற நாமம் தான் தமிழில் “…………………..” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

4.    “YHVH” என்ற நாமத்தை ……………………………… மாத்திரமே, வருடத்திற்கு ஒருமுறை உச்சரிப்பான். 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  ‘எலோஹீம் ’ என்கிற தேவனுடைய நாமத்தைப் பற்றி எழுதவும்? 


2.  “ஏல்” என்கிற தேவனுடைய நாமத்தைப் பற்றி எழுதவும்?

 

3.  யேகோவா அல்லது யாவே” என்கிற நாமம் எவ்வாறு உருவாக்கப்பட்டது? 


4.  “அதொனாய்” என்கிற தேவனுடைய நாமத்தைப் பற்றி எழுதவும்?  

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1. யூதர்களால் உச்சரிக்கக்கூடாது என்று கருதப்பட்ட “கர்த்தர்” என்ற நாமத்தை பற்றி எழுதவும்?

 

 


தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...