Sunday, August 9, 2020

பரிசுத்த திரித்துவத்தைப் பற்றிய தவறான உபதேசங்களும்,, கிறிஸ்தவ விசுவாசப்பிரமாணங்களும் (Trinity Heresies & The Christian Creeds), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 3

மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது

வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம்- 3

பரிசுத்த திரித்துவத்தைப் பற்றிய

தவறான உபதேசங்களும், 

கிறிஸ்தவ விசுவாசப்பிரமாணங்களும்

“திரித்துவம்” அல்லது “திரியேகத்திற்கு” பரிசுத்த வேதாகமத்தில் ஆதாரம் உண்டா?

பரிசுத்த வேதாகமத்தை கற்றறியாத பலர் திரித்துவம் என்பது மூன்று கடவுள்களை வணங்குவது என்று தவறாகப் போதிக்கின்றனர். ஒருவராய் சாவாமையுள்ளவர், அதரிசனமானவர், நித்தியானந்த ஏக சக்கராதிபதி என்றெல்லாம் சர்வ வல்லமையுள்ள தேவனை பரிசுத்த வேதாகமம் விவரிக்கிறது. அவரைப் பற்றி பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்துவதை வைத்தே அவரைப்பற்றி நாம் அறிந்துகொள்ளமுடியும். நம்முடைய சொற்பமான மூளையினால் அல்லது சொந்த அறிவினால் (Finite mind and understanding) ஒன்றை விளங்குவதற்கு கடினமாக இருக்கிறது என்கிற காரணத்தினால் அதை நிராகரிப்பது ஏற்புடையதல்ல, அது நமக்கே பாதகமாய் அமையும். நம்முடைய நித்தியமான வாழ்க்கையை இழப்பதற்கு கூட அது காரணமாய் அமைந்துவிடலாம். 

பிதாவுக்கும், குமாரனுக்கும் உள்ள தொடர்பை அங்கீகரிப்பது கிறிஸ்தவத்துக்கு ஒரு அடிப்படையாகும். ஏனென்றால் பரிசுத்த வேதாகமம் மிகவும் தெளிவாக சொல்லுகிறது, “இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து” (1 யோவான் 2:22; 4:2,3). கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலத்திலும், ஆதிசபைப் பிதாக்களின் காலத்திலும் பிதாவையும் குமாரனையும் மறுதலிப்பவர்களையும், திரித்துவத்தை மறுப்பவர்களையும் கிறிஸ்தவர்களாய் ஏற்றுக்கொண்டதேயில்லை, அவர்கள் துர்உபதேச கூட்டங்கள் அல்லது வேதபுரட்டர்கள் (Cult Groups or Heretics) என்றே அழைக்கப்பட்டனர் என்பதை நாம் சபை வரலாற்றிலிருந்து அறிந்துகொள்ளமுடியும். (அந்த காலத்தில் கிரேக்க தத்துவ ஞானங்களின் அடிப்படையில் திரித்துவத்தைப் பற்றி பல துர்உபதேசங்கள் பரவி வந்ததை நாம் அறிந்திருக்க வேண்டும்). 

அதுமட்டுமல்லாமல் திரித்துவம் என்பது 3ஆம் அல்லது 5ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை என்பதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் பரிசுத்த வேதாகமம் முழுவதும் பழைய ஏற்பாட்டிலிருந்தே, திரியேக தேவனைப் பற்றிய வெளிப்படுத்தல்களை நம்மால் பார்க்கமுடியும் (சங்கீதம் 2:12; நீதிமொழிகள் 8:22–31;30:4; ஏசாயா 53; மத்தேயு 28:19; 2 கொரிந்தியர் 13:14; 1 யோவான் 5:7). மனிதனை உருவாக்கினபொழுதுகூட தேவன் தம்மைப் பன்மையிலேயே வெளிப்படுத்தினார் (உண்டாக்குவோமாக, ஆதியாகமம் 1:26). இவ்வாறு திரித்துவத்தைப் பற்றி வேதாகமத்தின் ஆரம்பம் முதலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதை நாம் பார்க்கலாம். 

திரித்துவத்தைப் பற்றிய துர்உபதேசங்கள் / வேத புரட்டுகள் / திரிபுகொள்கைகள் :

வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டு, அப்போஸ்தலரால் கற்பிக்கப்பட்டு, மரபுவழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திரித்துவ சத்தியங்களுக்கு எதிராக போதிக்கப்படுகிறவைகளை திரித்துவ வேதபுரட்டுகள் அல்லது திரிபு கொள்கைகள் (Trinity Heresies) என்று அழைக்கிறோம். அவற்றில் சிலவற்றை இந்தப் பாடத்தில் பார்ப்போம். 

முறைக் கொள்கை (Modalism): இந்த கொள்கை, தேவன் “சிருஷ்டிப்பின்போதும் நியாயப்பிரமாணத்தை கொடுத்தபோதும் பிதாவாக வெளிப்பட்டார், பிறகு இயேசு கிறிஸ்துவில் குமாரனாக வெளிப்பட்டார், கிறிஸ்து பரலோகத்திற்கு சென்ற பிறகு பரிசுத்த ஆவியாக வெளிப்பட்டார்” என வாதிடுகிறது. வேதாகமத்தில் இந்த கொள்கைக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதை நாம் எளிதில் கண்டு கொள்ளலாம். இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றபொழுது பிதா சாட்சி கொடுத்தது, சிலுவையில் இயேசு கிறிஸ்து பிதாவிடம் விண்ணப்பித்தது, இயேசு கிறிஸ்து நான் போய் பரிசுத்த ஆவியாகிய வேறோரு தேற்றரவாளனை அனுப்புவேன் என்று கூறினது எல்லாமே திரித்துவத்தை நிரூபிக்கும் நிகழ்வுகளாகும். முறைக்கொள்கைகளை நம்புபவர்கள் “ஒருமைவாத கொள்கைகளை (Unitarian Beliefs) நம்புபவர்கள்” என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

எடுத்துக்காட்டு: இந்த கொள்கைகளை நம்புகிற சில சபைகளுக்கான எடுத்துக்காட்டு  கிறிஸ்துவின் சபையார் (Church of Christ), Jesus Only, Oneness Pentecostals.

மூன்று கடவுள் / முக்கடவுள் / மூவிறை கொள்கை (Tritheism): இந்த கொள்கையின்படி பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இம்மூவறும் மூன்று வித்தியாசமான தன்மைகளையுடைய மூன்று கடவுள்கள் என்று போதிக்கிறது. இது பரிசுத்த வேதாகமத்திற்கு எதிரான மிகவும் தவறான ஒரு கொள்கையாகும். கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையையோ, பரிசுத்த வேதாகமத்தையோ, தேவன் தம்மைப் பற்றி வெளிப்படுத்தினவைகளையோ ஏற்க மறுப்பவர்கள் கிறிஸ்தவ மதத்தினர் மூன்று கடவுள்களை வணங்குகிறார்கள் என்று தவறான கருத்துக்களைப் பரப்புகிறார்கள். (திரித்துவத்தை சரியாக புரிந்து கொள்ள முந்தின பாடத்தை, பாடம் - 2 வாசிக்கவும்) 

ஆரியனிசக் கொள்கை" (Arianism): இயேசு கிறிஸ்து துவக்கத்திலிருந்தே இறைத்தன்மை கொண்டவர் அல்லவென்றும், அவரைப் பிதாவாகிய தேவன் படைத்தார் என்றும், அவர் பிதாவுக்கு சமநிலையில் இல்லை என்றும் போதித்தது. ஆனால் யோவான் 1:1-14, இது உண்மை அல்ல என்று நிரூபிக்கிறது. 

தத்துக் கொள்கை (Adoptionism): இயேசு கிறித்து நித்திய காலத்திலிருந்தே குமாரனாய் இருந்தார் என்பதை மறுத்து, இயேசு தமது ஞானஸ்நானம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் ஆகிய ஏதோ ஒரு நிகழ்வின்போது பிதாவாகிய தேவனால் "குமாரனாக" தத்தெடுக்கப்பட்டார் என்று கூறுகிறது. (1) 

கீழ்நிலைக் கொள்கை (Subordinationism): இறைத்தன்மையில் குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய இருவரும் பிதாவாகிய தேவனை விட கீழ்நிலையில் உள்ளவர்கள் என்று போதிக்கிறது. இது, மனிதனாக அவதரித்த இயேசு கிறிஸ்துவுக்கு திரித்துவத்தில் இருந்த பங்கை தவறாக புரிந்து கொள்ளுவதினால் வருகிற கூற்றாகும். 

நிசேயா முதலாம் கிறிஸ்தவப் பொதுசங்கம்:

கிறிஸ்து பரமேறி சென்றபின், கிறிஸ்துவின் சபை துவங்கின காலத்திலிருந்தே கிறிஸ்துவின் உபதேசங்களையும், அப்போஸ்தலருடைய போதனைகளையும், அவர்களுடைய எழுத்துக்களையும் எந்தவொரு மாறுதலும் இல்லாமல் பாதுகாக்க வேண்டுமென்பதில் ஆதி அப்போஸ்தலர்களும், சபைப்பிதாக்களும் மிகவும் கவனமாயிருந்தனர். அப்படி ஏதேனும் ஒரு மாற்று கொள்கை சபைகளுக்குள் நுழைந்தால் அதைத் தடுப்பதற்கு அவர்கள் ஜாக்கிரதையாயிருந்தனர். இப்படி கிறிஸ்தவக் கொள்கைகளை எந்த ஒரு பிழையும் இல்லாமல் பாதுகாப்பதற்காகவும், கிறிஸ்தவத்தின் பல்வேறு காரியங்களை விவாதித்து முடிவெடுப்பதற்காகவும் பல்வேறு கிறிஸ்தவப் பொதுசங்கங்கள் கூட்டப்பட்டன. 

இவ்வாறு கூட்டப்பட்ட முதலாவது பொதுசங்கம் தான் “நிசேயா கிறிஸ்தவப் பொதுசங்கம்”. தற்போதைய துருக்கி தேசத்தில் இருக்கிற நிசேயா என்கிற பட்டணத்தில் இந்த பொது சங்கம் கி.பி. 325 ஆம் ஆண்டு, ரோம அரசனாகிய கான்ஸ்டன்டைன் மன்னனால் கூட்டப்பட்டது. இதில் பங்கேற்பதற்கு, அந்த காலத்தில் கிறிஸ்தவ பேராயர்களாக இருந்த 1800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 1000 பேர் கிழக்கு தேசங்களிலிருந்தும், 800 பேர் மேற்கத்திய தேசங்களிலிருந்தும் அழைக்கப்பட்டனர். 

உலகத்திலே தலைசிறந்த வரலாற்றாசிரியர்களான ஜெரோம், தியோனீசியுஸ் ஆகியோர் 300க்கும் அதிகமான பேராயர்கள் நிசேயா பொதுசங்கத்தில் பங்கேற்றதாக எழுதியுள்ளனர். இந்தியா -பெர்சியா தேசங்களின் பேராயராக இருந்த பேராயர் ஜான் இந்த முதல் பொதுசங்கத்தில் கலந்து கொண்டதாகவும் வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ரோம பேராயராக இருந்த ஹோசியஸ் இதற்கு தலைமை தாங்கினதாகவும் அறிய முடிகிறது. இந்த பொது சங்கத்தில் பங்கேற்ற பேராயர்களுக்கு பயணச் செலவுகள், தங்கும் வசதிகள் போன்றவை செய்து கொடுக்கப்பட்டதாக வரலாற்று சுவடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 

இந்த பொது சங்கத்தில் கிறிஸ்துவின் தெய்வீக தன்மையை மறுதலித்த ஆரியனிச (Arianism) கொள்கை வேதப் புரட்டாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள திரியேக தேவனுடைய தெய்வீகத் தன்மைகளை விசுவாசப் பிரமாணமாக வடிவமைத்து கொடுத்தனர். இதை நிசேயா விசுவாச பிரமாணம் என்று அழைக்கிறோம். இந்த விசுவாசப் பிரமாணங்களை உருவாக்கினவர்கள் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் உபதேசிக்கப்பட்டு, ஆதி திருச்சபையை உருவாக்கி நடத்தின ஆதி சபைப்பிதாக்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். (2) 

மனப்பாட வசனம்: தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். ……………… ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர். (1 யோவான் 5:4-6). 

நிசேயா விசுவாசப் பிரமாணம்

வானத்தையும் பூமியையும் காணப்படுகிறதும் காணப்படாததுமான எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன். 

ஒரே கர்த்தருமாய், தேவனுடைய ஒரே பேறான குமாரனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்; அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே தமது பிதாவினாலே ஜெனிப்பிக்கப்பட்டவர்; தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர், மெய்த்தேவனில் மெய்த்தேவனானவர், உண்டாக்கப்படாமல் ஜெனிப்பிக்கப்பட்டவர், பிதாவோடே ஒரே தன்மையுடையவர், சகலத்தையும் உண்டாக்கினவர்; மனிதராகிய நமக்காகவும் நமக்கு இரட்சிப்பு உண்டாகவும் பரமண்டலத்திலிருந்து இறங்கி, பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் அவதரித்து மனிதனானார்; நமக்காக பொந்தியுபிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, அடக்கம் பண்ணப்பட்டார்; வேத வாக்கியங்களின் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்; பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க மகிமையோடே திரும்ப வருவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை. 

கர்த்தருமாய் ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும்கூட தொழுது தோத்தரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். 

ஒரே பரிசுத்த பொதுவான அப்போஸ்தல திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும் மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன். ஆமென். 

அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம்

(உலகத்தின் பழமையான கிறிஸ்தவ விசுவாசப் பிரமாணம் இது. முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களால் அறிக்கையிடப்பட்ட விசுவாசப் பிரமாணம் இதுவே ஆகும்)

வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்.

அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசுகிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார்: மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்: பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்; அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.

பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன், பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும்; பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும்; பாவ மன்னிப்பும்; சரீரம் உயிர்த்தெழுதலும்; நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.

 ஆதார நூற்களின் பட்டியல்:

1.      HaNaviy A. B. (2019 December 7).  Exploring the Shema (Paper Two): YHVH and Yeshua. (Retrieved 9th August 2020 from http://www.tetzetorah.com/exploring-the-shema)

2.     First council of Nicaea (Retrieved 9th August 2020 from

https://www.newworldencyclopedia.org/entry/First_Council_of_Nicaea)

        (மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களிலிருந்து இந்த புஸ்தகத்தை ஆக்கியோர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது

3. நிசேயா விசுவாசப் பிரமாணம், அப்போஸ்தல பிரமாணம் ஆகியவை, மூல

 பாஷையாகிய கிரேக்க மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, 

பாரம்பரியமாக தமிழ் கிறிஸ்தவ சபைகளில் அறிக்கையிடப்படும் விசுவாசப் 

பிரமாணங்கள்.

பாடப் பயிற்சிகள் 

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1)     முறைக்கொள்கைகளை நம்புபவர்கள், “…………………………. கொள்கை”களை நம்புபவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.  

2)     பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே ………………………………..

3)     நிசேயா முதலாம் கிறிஸ்தவப் பொதுசங்கம் ………………………………… மன்னனால் கூட்டப்பட்டது.

4)     நிசேயா முதலாம் கிறிஸ்தவப் பொதுசங்கத்தில் பங்கேற்ற இந்தியா -பெர்சியா தேசங்களின் பேராயரின் பெயர் ………………………………. 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1)     வேதப்புரட்டுகள் அல்லது திரிபுகொள்கைகள் என்றால் என்ன?

 

2)     முறைக் கொள்கையை விளக்கவும்?

 

3)     முக்கடவுள் அல்லது மூவிறை கோட்பாடு என்றால் என்ன?

 

4)     “கீழ்நிலைக் கொள்கை” என்றால் என்ன? 

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1)     நிசேயா கிறிஸ்தவ பொது சங்கம் எங்கு, எப்பொழுது, எதற்காக கூட்டப்பட்டது என்பதைப் பற்றியும், அங்கு நடந்த சம்பவங்களைப் பற்றியும் எழுதவும்.

 

 

No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...